
தமிழகத்தில் உள்ள சலூன்களில் கட்டிங், ஷேவிங், ஹேர் டை போன்ற ஒரு சில வசதிகளே உண்டு. பணி நிமித்தமாக தில்லி வந்த உடனே கட்டிங் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பின் ஒரு சனிக்கிழமை காலை ஹேர் கட்டிங்குக்காக டில்லியில் உள்ள ஒரு சலூனுக்கு சென்றிருந்தேன். அங்கே முடி திருத்துபவர் ஒருவரே இருந்தார். நான்கைந்து பேர் எனக்கு முன்பே காத்திருந்தனர்.
என்னுடைய முறை வந்ததும், அந்த பணியாளர் என்னிடம் "கட்டிங்?" என்று கேட்க, தலையை ஆட்டியபடி என் தலையை அவர் வசம் ஒப்படைத்தேன். தலையில் குளிர்ந்த தண்ணீர் பீச்சி அடித்து கத்திரிக்கோல் மற்றும் சீப்பு வைத்து, பாட்டு பாடியபடி ஒரு ஆனந்த நடனம் ஆடினார்.
ஒரு வழியாக ஹேர் கட்டிங் முடித்த பிறகு என்னிடம் "ஷேவிங்?" என்று கேட்க நான் வேண்டாம் என தலையை ஆட்டினேன். அதன் பிறகு ஹிந்தியில் ஏதேதோ கேட்டு கொண்டு இருக்க நான் எல்லாவற்றிற்கும் வேண்டாம் என தலையை ஆட்டி பதில் அளித்தபடி இருந்தேன். கடைசியில் "மாலிஷ்?" என்று கேட்க சரி எல்லாவற்றிற்கும் வேண்டாம் என சொல்ல வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில் "கர்லோ" [செய்] என்று கூறி உட்கார்ந்தேன். எனக்கோ மாலிஷ் என்றால் என்ன என்றே தெரியாது.
அதன் பிறகு நடந்ததுதான் இக்கட்டுரையின் ஹைலைட். என்னுடைய தலையில் இரண்டு கை அளவு கடுகு எண்ணெய் விட்டு நன்றாக தடவி, பிறகு இரண்டு கைகளை சேர்த்து மெதுவாக அடிக்க ஆரம்பித்தார். தலையை பிடித்து விட்டு ஏதேதோ செய்ய ஆரம்பித்து கோபம் கொண்ட சிவபெருமான் போல கைகளால் ருத்ர தாண்டவமே ஆடி விட்டார். தப்பிக்கவும் முடியாமல் கத்தவும் முடியாமல் ஒரு பத்து நிமிடம் இந்த தாண்டவத்தை பொருத்துக்கொண்டிருந்துவிட்டு அதன் மேலும் அடி நிற்காமல் போகவே வலி தாங்க முடியாமல் "போதுமடா சாமி! நிறுத்து உன் தாண்டவத்தை!" என்று தமிழில் கூறிவிட்டு அங்கிருந்து தப்பித்தேன் பிழைத்தேன் என ஓடினேன்.
கட்டிங்கிற்கும் என்னை அடித்ததற்கும் 1991 வருடம் அவர் வாங்கிய கூலி அதிகமில்லை ஜென்டில்மென் ஜஸ்ட் ஐம்பது ரூபாய்!