நம்ம ஊர்ல எல்லா அரசியல்வாதிக்கும் சிலை இருக்கறதுனால காக்கா, குருவிக்கெல்லாம் பிரச்சினையே இல்லை. உத்திரபிரதேசத்தில அவ்வளவா காக்கா இல்லை, ஆனா லட்சக்கணக்கில புறாக்கள் இருக்கு, அத்தனை புறாவும் காலைக் கடன் கழிக்கணும்னா எவ்வளவு சிலை வச்சாலும் பத்தாது. அதுனாலதான் மாநிலம் முழுசும் கன்ஷிராம் சிலையையும் தன்னோட சிலையையும் கிடைக்கிற எல்லா இடத்திலேயும் வைச்சு புறாக்களுக்குத் தன்னால ஆன உதவி செய்யறாங்க. அந்த புறாக்கள் போன ”கக்காவ” சுத்தம் செய்ய “கக்கா க்ளீனிங் ஃபோர்ஸ்” உருவாக்கி நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வேற கொடுத்திருக்காங்க. இதையெல்லாம் பாராட்டாம எல்லோருமா சேர்ந்து அவங்களை திட்டறாங்க. சே! அவங்களெல்லாம் ரொம்ப மோசம்.
செல்வி மாயாவதிக்கு போட்ட நோட்டு மாலை விஷயம் மேல சொன்னத விட இன்னும் மோசமுங்க. நம்ம ஊர்ல நிறைய பெண்கள் ”காசு மாலை” தங்கத்துல செஞ்சு போட்டுக்கறாங்க. இங்க வடக்கில் நடக்கும் எல்லா கல்யாணத்துலயும் மாப்பிள்ளை குதிரை மேல ”ஜாம் ஜாம்”னு ஒக்காந்துக்கிட்டு ரூபாய் நோட்டு மாலையையும் போட்டுக்கிட்டு, போற வழியெல்லாம் ”ட்ராஃபிக் ஜாம்” உண்டாக்கறாருங்கோ. அவங்களையெல்லாம் யாருமே ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்களே. குமாரி மாயாவதி என்ன அவங்களாவே நோட்டு மாலையை செய்யச் சொல்லி போட்டுக்கிட்டாங்க? தொண்டர்கள் போட்ட மாலையைத்தானே பணிவா ஏத்து போட்டுக்கிட்டாங்க? அதுக்கு எதுக்கு எல்லோருமா சேர்ந்து ரகளை பண்ணுறாங்க? இந்த செய்தியை படிச்ச உடனே எனக்கு ஒரே அழுகாச்சியா வந்துடுச்சு தெரியுமா?
நேத்திக்கு அவங்க பண்ணுன ஒரு விஷயம் மாதிரி யாரால செய்ய முடியும். பெரிய பெரிய மகான்களால தான் இப்படி அப்பட்டமா உண்மையை ஒத்துக்க முடியும். உத்திர பிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் 1980 மெ.வா மின் நிலையத்தினை திறந்து வைத்தது பற்றி எல்லா தினசரிகளிலும் ஒரு விளம்பரம் போட்டு இருக்காங்க. ”An Significant Step to ensure interrupted power supply…”. உண்மைய இப்படி ஒத்துக்கற தைரியம் நம் நாட்டுல வேறே யாருக்காவது இருக்கான்னு நீங்களே சொல்லுங்க.

உண்மையா இருக்கறத கூட நிறைய பேரால தாங்க முடியாததால அடுத்த நாளே திரும்ப ஒரு விளம்பரத்தைப் போட்டு அதுல ”A Significant Step to ensure Uninterrupted power supply…” என்று பொய் சொல்லிட்டாங்க குமாரி மாயாவதி!.