வியாழன், 8 ஏப்ரல், 2010

அப்புறம் என்ன ஆச்சு?




அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் ஒருவர் நல்ல வாட்டசாட்டமாக இருப்பார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ”பீம் பாய்” வேடத்தில் வரும் ப்ரவீன் குமார் மாதிரி பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ் எல்லாம் கிடையாது, ஒரே செப்ஸ் தான். தலையிலிருந்து கால் வரை ஒரே சைஸ். அங்கங்கே எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக சதை தொங்கிக்கொண்டு இருக்கும் ஒரு 102 கிலோ சிலிண்டர் உருவம். உருவம்தான் அப்படியே தவிர உள்ளத்தில் அவர் ஒரு குழந்தை போல.

நேற்று காலை அலுவலகத்துக்கு சிறிது தாமதமாக வந்த அவரிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்ட போது வெகு சோகமாக அவர் சொன்ன பதில் இது. ”என்னதுன்னு தெரியல, உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு, ஜலதோஷம், இருமல்ன்னு எதுவும் இல்லை, ஆனா ஜுரம் மட்டும் வர மாதிரி இருக்கு” என்று காலை சொரிந்து கொண்டே சொன்னார். காலில் பார்த்தால் ஏதோ கடித்தது போன்ற தடம்.

”என்ன ஆச்சு, ஏதாவது கடித்ததா? உங்க வீட்டுல நாய் இருக்கா?” என்று நான் கேட்கவும், ”ஓ எங்க வீட்டுல ஒரு நாய் இருக்கே!” என்று சந்தோஷமாக சிறு குழந்தை போல குதித்துக்கொண்டே சொன்னார். ”ஒருவேளை அது உங்க காலை பிராண்டி இருக்குமோ?” என்று நான் ஒரு குண்டைப் போட, ”அப்படி எல்லாம் அது கடிக்காது, ரொம்ப நல்ல நாய். எனக்கும் என் தம்பிக்கும் நடுவுல தான் அது படுத்து தூங்கும்னா பார்த்துக்கோங்க!” என்று சொன்னார். ”சரி எதுக்கும் ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிடுங்க!” என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

அடுத்த நாள் காலையில் அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. "உடம்புக்கு ரொம்ப முடியலை, அதனால வரமுடியாது" என்று. என்ன ஆச்சு என்று கேட்டதற்கு மருத்துவர் சொன்னதாக அவர் சொன்னது இது. ”கடிச்ச தடத்தை பார்த்தா அது நாய் கடிச்ச மாதிரி இல்லை எலி கடிச்ச மாதிரி இருக்கு, உங்க வீட்டுல எலி இருக்கா?” ”ஓ எலியும் எங்க வீட்டுக்கு வருகிற முக்கிய விருந்தாளிகளில் மிகவும் முக்கியமான நபர்” என்று இவரும் சந்தோஷமாக சொல்ல, டாக்டர் இவருக்கு ஐந்து ஊசி போட்டு அனுப்பி வைத்தாராம்.

“ஐயோ ஐந்து ஊசியா, உங்க எடைக்குத் தகுந்தாற்போலவா?” என்று பதறியபடி நான் கேட்க அதற்கு அவர் சொன்ன பதில் ”தெரியல, ஒரு வேளை கடிச்ச எலியும் என்னை மாதிரி பெருத்த உருவமாக இருந்திருக்கலாம்!’.

ஊசி போட்டு, மருந்து கொடுத்த டாக்டர் ”எதுக்கும் உன்னை கடிச்ச எலி மேல ஒரு கண் வெச்சுக்கோ” என்று சொல்லி அனுப்பினதுனால வீட்டுல இருக்குற எல்லா சந்து பொந்துலேயும் தன்னோட தலையை விட்டு எலியை தொடர்ந்து கண்காணிச்சிக்கிட்டு இருக்காராம்.

”எலிக்கு என்ன ஆச்சு, அந்த அலுவலக நண்பருக்கு அடுத்தது என்ன ஆகும்?” என்ற எதிர்பார்ப்புகளுடன் நான் காத்திருக்கிறேன். நீங்களும் காத்திருக்கமாட்டீங்களா என்ன?

10 கருத்துகள்:

  1. :) அடப்பாவமே..
    விருந்தாளிங்க வந்து கடிச்சி வச்சிட்டு போறாங்களா...

    பதிலளிநீக்கு
  2. நல்லவேளை.. எலி கடிச்சது..

    கன்னுக்குட்டி கடிச்சிருந்தா .. என்னா கதி ..?..

    அடுத்த தடவை, தூங்கும்போது, சாக்ஸ் போட்டுட்டு படுக்கச்சொல்லுங்க..

    பதிலளிநீக்கு
  3. எலி வந்து கிலியைக் கிளப்பிவிட்டதோ? சரிதான்! :-)

    பதிலளிநீக்கு
  4. //////ஊசி போட்டு, மருந்து கொடுத்த டாக்டர் ”எதுக்கும் உன்னை கடிச்ச எலி மேல ஒரு கண் வெச்சுக்கோ” என்று சொல்லி அனுப்பினதுனால வீட்டுல இருக்குற எல்லா சந்து பொந்துலேயும் தன்னோட தலையை விட்டு எலியை தொடர்ந்து கண்காணிச்சிக்கிட்டு இருக்காராம். ////


    அய்யோ ! அந்த எலிக்கு ஒன்றும் ஆகவில்லையே !

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... மறுபடியும் ப்ளேக் பீதியா... :(

    பதிலளிநீக்கு
  6. அய்யா ஒரே எலிக் "கடி" தொல்லை தாங்கலையப்பா.சின்ன்ன வயசில் எலி பிடிக்க நான் முயற்சித்தேன்.ஆனால் அது மசால் வடையை தின்றுவிட்டு ஓடிவிட்டது ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
  7. எலிக்கு எத்தனை ஊசி போட்டாங்களாம் :-))

    பதிலளிநீக்கு
  8. //ஊசி போட்டு, மருந்து கொடுத்த டாக்டர் ”எதுக்கும் உன்னை கடிச்ச எலி மேல ஒரு கண் வெச்சுக்கோ” என்று சொல்லி அனுப்பினதுனால வீட்டுல இருக்குற எல்லா சந்து பொந்துலேயும் தன்னோட தலையை விட்டு எலியை தொடர்ந்து கண்காணிச்சிக்கிட்டு இருக்காராம்.// .....ரொம்ப‌ பாவங்க‌ அவ‌ரு;(

    பதிலளிநீக்கு
  9. எலிய மருத்துவம் கிடையாது போல!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....