திங்கள், 7 ஜூன், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 12

தில்லியா இல்லை சஹாரா பாலைவனமா என்று தெரியாத அளவிற்கு வெயில் இங்கே. தினமும் 44 – 46 டிகிரின்னு ஏறிட்டே போகுதே… ஸ்ஸ்ஸ்…. வெயில் தாங்கலை போங்க…



பார்க்க வேண்டிய இடம்: இந்தியா கேட்: தில்லியில் மிக முக்கியமான பொழுது போக்கு இடமே இது தான். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தொடங்கும் ராஜ்பத் [அதுதாங்க ராஜபாட்டை] முடியற இடத்தில் இருக்கும் ஒரு நினைவுச் சின்னம் தான் இந்தியா கேட். முதலாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படை சார்பாக போராடி மடிந்த 90,000 படை வீரர்களின் நினைவுச் சின்னமாக எழுப்பப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தில் அவர்கள் அனைவரின் பெயரும் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. உள்ளே 1971-ஆம் ஆண்டு முதல் உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக “அமர் ஜவான் ஜோதி” எரிந்து கொண்டு இருக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தில்லி வாசிகள் குடும்பத்தோடு வந்து இங்கே உள்ள புல்தரையில் உட்கார்ந்து அளவளாவி வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவை நிலாச் சோறு போல உண்டு மகிழ நாடும் ஒரே இடம் இது. இங்கே அரவாணிகளின் தொல்லையும் உண்டு. நாங்கள் சென்றபோது காசு கொடுக்காத எல்லோரையும் திட்டிக்கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. அது போல சிறுவர்களைக் கவரும் விளையாட்டுப் பொருட்களை விற்கும் வியாபாரிகளையும் பார்க்கலாம். நிறைய குழந்தைகள் தலையில் விளக்கு எரியும் கொம்புடன் கிங்கரர்களைப் போல அலைந்து கொண்டு இருக்கிறார்கள். மொத்தத்தில், மாலை நேரத்தில் அமைதியான சூழலில் அனுபவிக்க வேண்டிய ஒரு அழகான இடம்.

சாப்பிட வாங்க: தில்லியில் பொதுவாக எந்த உணவுப் பண்டமாக இருந்தாலும் மசாலாப் பொடி போடாமல் கொடுப்பதில்லை. இங்கே பெரும்பாலான இடங்களில் நடைபாதைகளில் கூடை நிறைய வாழைப்பழம் வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கத்தியால் வாழைப்பழத்தின் குறுக்கே கீறி மசாலா போட்டு தருவதையும் நிறைய பேர் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

இந்த வார ஹிந்தி: சில காய்கறிகளின் பெயர்கள் – உருளைக்கிழங்கு – ஆலு; வெங்காயம் – ப்யாஜ்; கத்திரிக்காய் – பேங்கன்; வெண்டைக்காய் – பிண்டி [bhindi]; பாவற்காய் – கரேலா; பூசணி – பேட்டா [Peta]; பரங்கிக்காய் – சீதா ஃபல்; சுரைக்காய் – கியா [Ghiya]. இந்த வாரம் இவ்வளவு போதும்னு அங்கே யாரோ அலறுவது இங்கே கேட்டுடுச்சு. அதுனால அடுத்த பதிவுல இன்னும் சில காய்கறிகள் பெயரைப் பார்க்கலாம். அதுவரைக்கும் இதையே மனப் பாடம் பண்ணிக்கிட்டு இருங்க… சரியா?

இன்னும் வரும்…

9 கருத்துகள்:

  1. வாழைப் பழத்துக்கும் மசாலாவா? அம்மாடியோவ்!

    பதிலளிநீக்கு
  2. வாழைப்பழத்தின் குறுக்கே கீறி மசாலா போட்டு

    நிஜம்மாவா.. டேஸ்ட் எப்படி இருக்கும்?

    பதிலளிநீக்கு
  3. anna.. yeppidi irukkum antha taste.. itha munnadiye solliruntha naanum try pannirupen.. btw yenna masala athu.. chennai-la try panni pakkaren ;-)

    பதிலளிநீக்கு
  4. விண்ட்டரில் நண்பர்களை சந்திக்க சிறந்த இடம் இந்தியா கேட். நடுங்கும் குளிருக்கு இந்தியா கேட் வெயில் தான் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  5. வாழைபழம் மற்றும் முள்ளங்கியில் மசாலா பொடி சேர்த்து சாப்பிடுவது இங்கே சாதாரணமான விஷயமாச்சே.
    இந்தியா கேட் மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் பற்றிய குறிப்புகள் மிகவும் உபயோகமான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. அய்யா, நம்ப ஊரிலே நல்ல தூக்கம் வரணும்னா, சீரகத்தை வறுத்து பின்பு பொடிசெய்து வாழைப்பழத்தின் நடுவில் வைத்து இரவில் படுக்கும் முன்பு உண்ணச்சொல்வார்கள். அது சரி, இந்த இந்தி பெயர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள ஒரு சுலபமான வழியை சொல்லுங்க அண்ணாச்சி! எப்படியும் ஹிந்தியை உங்களிடம் படித்து விட்டுத்தான் நான் டெல்லி வருவதாக உள்ளேன்.குருவுக்கு, அன்பளிப்பு நிச்சயம் உண்டுன்னேன்.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  7. @@ KBJ

    வாங்க சார்! இங்க எது சாப்டாலும், மசாலா போட்டுதான்! :)

    @@ ரிஷபன்

    ஆமாம் சார், மசாலாவோடு வாழைப்பழம் டேஸ்ட் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது, சாப்பிட்டு தான் பாருங்களேன். :)

    @@ ப்ரியா,

    அடுத்த தடவை தில்லி வரும்போது வாங்கித் தரேன் சரியா? :)

    @@ விக்னேஷ்வரி

    ஆமாம். நல்ல குளிர்காலத்துல அங்க வெய்யிலுக்காகவே போகலாம்.. :)

    @@ ரங்கராஜன்

    வாங்க ரங்கராஜன், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. :)

    @@ VKN

    வாங்க, ஹிந்தி கத்துக்கிட்டு தான் இங்க வரணும்னு இல்ல, எப்ப வேணும்னாலும் வாங்க! :)

    பதிலளிநீக்கு
  8. நம்ம மக்கள் 12 அரை ஆனாலும் ராத்திரி இந்தியா கேட் ல் குடும்பமும் நண்பர்களுமாக எஞ்சாய் செய்வது நல்லா இருக்கும்..

    நான் அந்த பொருட்காட்சி அப்பளம் வாங்குவேன் .. :)

    பதிலளிநீக்கு
  9. வாங்க முத்துலெட்சுமி, இந்தியா கேட் தான் தில்லி மக்களுக்கு ஒரே பொழுது போக்கு தலம். அதை விட்டா வேற என்ன இருக்கு. வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....