அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடைப்பயிற்சி - 9 மார்ச் 2025:
அனைவருக்கும் வணக்கம்!
ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது மாலைநேரத்து ஆகாயத்தை பார்த்து வியந்து போகிறேன்! எத்தனை எத்தனை வர்ணஜாலங்களும், பரிமாணங்களும்!! பேரண்ட வெளியில் நான் மட்டுமே நிற்பது போல நினைத்துக் கொள்கிறேன்! நிச்சயம் அது ஒரு புதுவிதமான அனுபவம்! உடன் அந்தச் சூழலை இனிமையாக மாற்ற இசைஞானியின் இசை! இதை விட வேறு என்ன வேண்டும்..🙂
அன்றாடம் இயந்திரம் போன்று விறுவிறுப்பாக வேலைகளைச் செய்வதும் அடுத்தடுத்து வகுப்புகளை அட்டெண்ட் செய்வதுமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே மனம் ரிலாக்ஸ் மோடுக்குச் சென்று விடுகிறது..🙂 இந்த வாரம் ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும்! வீட்டில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்திட வேண்டும் என்றெல்லாம் தான் என் சிந்தனைகள் செல்கின்றன!
நினைவலைகள் - மார்ச் 8:
மார்ச் மாதத்தில் வந்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை தான் பெண் பார்க்கும் படலம். அன்று பேபி பிங்க் நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தேன். எப்போதும் போல பின்னல் தான் என்றாலும் கூடுதலாக தலையில் மல்லிகை சூடிக் கொண்டிருந்தேன். கைகளில் கண்ணாடி வளையல்கள். இவ்வளவு தான் என் ஒப்பனை... 🙂
பெண் பார்க்கும் படலத்தில் எல்லோரையும் நமஸ்கரித்துக் கொண்டேன். அப்போது தான் முதல்முறையாக இருவரும் பார்த்துக் கொண்டோம். அன்று நீல நிறத்தில் முழுக்கை சட்டையும், ஜீன்ஸும் அணிந்திருந்தார். அவரின் ஆறடி உயரமும், அடர்த்தியான கேசமும், மீசையும் என்னைக் கவர்ந்தது! அன்று ஏற்பட்ட ஈர்ப்பு இன்று வரை குறையவில்லை… 🙂
‘அவரும் நானும்’ மின்னூலில் இருந்து..!!
திருமணமானது முதல் மார்ச் 8 என்றால் எங்கள் இருவருக்கும் அது ஒரு ஸ்பெஷலான நாளாக ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்ளும் ஒரு நாளாக தான் இருக்கும்! ஆம்! அன்றிலிருந்து தான் எங்கள் இருவரின் தலையெழுத்தும் மாறியது..🙂
நாங்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்ட நாளாயிற்றே! பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிடுவதோடு மட்டும் விட்டு விட முடியாது! காலம் முழுவதும் கரம் கோர்த்து பயணிப்போம்! இன்பமோ துன்பமோ இருவரும் பகிர்ந்து கொள்வோம் என்று உறுதி செய்து கொண்ட நாள்…:)
மனது!
மனது என்னும் பொக்கிஷத்தை மிக பத்திரமாக பாதுகாக்க வேண்டும்! மனது நன்றாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக புத்துணர்ச்சியுடன் செயல்படும்! என்ற வரிகளை காலையில் விழித்தெழிந்ததும் ஓரிடத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது! இந்த வரிகள் சொல்வது உண்மை தானே!
மனது எப்படி சோர்வடையும் என்றால் எதிர்பார்ப்பில்லா நம் அன்பை உணராமல் நிராகரிப்பது, வார்த்தைகளால் நம்மை காயப்படுத்துவது என்று எத்தனையோ சொல்லலாம்! மனதில் கீறல் ஏற்படுத்திக் கொள்ளாமல் சகஜமாக வாழ்வது இங்கு சவாலான விஷயம் தான்!
நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
******
மாசித் தெப்பம் - 10 மார்ச் 2025:
மகளும் நானும் ரங்கனின் மாசித் தெப்பத்தினைக் காணச் சென்றிருந்தோம்! நீர் ததும்பும் தெப்பக்குளத்தைச் சுற்றியும், நீராழி மண்டபம் என்று எல்லா இடங்களிலும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக இருந்தது!
தெப்பத்திற்கு முன்பு தெப்பக்குளத்தின் எதிரேயுள்ள மண்டபத்தில் ரங்கன் உபயநாச்சியாருடன் கொலுவிருப்பார் என முதலில் அங்கே தான் சென்றோம்! வழக்கம் போல இங்கும் தள்ளுமுள்ளு தான்! இரண்டு நிமிடம் முன்னே பின்னே செல்லவோ அல்லது காத்திருக்க யாருக்கும் பொறுமை என்பது இல்லை!
எல்லோரும் ஒருவரையொருவர் நசுக்கிக் கொண்டிருந்தனர்! பொதுவாக படிகளில் அமர்ந்து கொள்ள எனக்கு மிகவும் பிடிக்கும்! என்னுடைய தொடர்களில் கூட எழுதியிருக்கிறேன்! ஆனால் இப்போது arthritisனால் கடந்த இரண்டு வருடங்களாக படியேறுவது என்பது மிகுந்த சிரமமாக உள்ளது! அதுவும் உயரமாக இருக்கும் கோவில் கற்படிகள் என்றால் கேட்கவே வேண்டாம்!
அன்று கருடசேவை பார்த்து விட்டு வந்த பின் என்னவரிடம் கூட இதைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன்! பல ஆயிரம் மைல்களுக்கு நீங்க ட்ரெக்கிங் போறீங்க! என்னால இங்கே எண்ணி நாலே நாலு படியேற முடியல என்று…:) சரி! இங்கே என்ன நடந்தது??
அந்த தள்ளுமுள்ளில் நின்றிருக்கும் என்னை பின்னாலிருந்து ஒரு பாட்டி கையைப் பிடித்து இழுத்து படியேற முயன்றார்! முதலில் நான் ஒரு நிலையில் நின்று கொண்டதும் அவருக்கும் படியேறி வர உதவி செய்தேன்! எனக்கு முன்னால் குள்ளமாக நைட்டியுடன் ஒரு பாட்டி கையில் திருமண வீடுகளில் தரும் தாம்பூலப் பை ஒன்று வைத்திருந்தார்!
அவரின் அருகில் நடுத்தர வயதில் ஒரு பெண்மணி! அவர் அந்த நைட்டி பாட்டியிடம் ‘ரொம்ப கும்பலா தான் இருக்கு! அங்கே போனதும் பயப்பட்டு சத்தமெல்லாம் போட்டு கத்தக்கூடாது சரியா! நீங்க இருக்கிற ஹோம்ல இருக்கிற எல்லாரும் இப்படி யாராவது வந்து நம்மள வெளியே கூட்டிட்டு போக மாட்டாங்களான்னு ஏக்கமா பாக்கறாங்க!’ என்று அவர் சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யப்பட்டேன்!
அந்த பெண்மணியிடம் விசாரித்ததில் விவரங்கள் தெரிய வந்தது! நைட்டி பாட்டி நிராதரவான நிலையில் தற்சமயம் ஹோமில் இருப்பதாகவும், அந்த நடுத்தர வயது பெண்மணியின் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு பாட்டி வேலை செய்ததாகவும் அந்த நன்றிக் கடனுக்காக அவ்வப்போது அவரை இப்படி அழைத்து வந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம்!
பாட்டி சற்று மனநிலை பிறழ்ந்தவர் என்றும் சொன்னார்! பாட்டியை அவரின் உற்றார் உறவினர்களே கைவிட்ட நிலையில் என்றோ தன் வீட்டில் சமைத்துப் போட்டவருக்காக மெனக்கெடுவது பெரிய விஷயமல்லவா!! அவரிடமும் அதைச் சொல்லி பாராட்டினேன்!
பாட்டிக்கு 80 வயது இருக்குமா?? என்று அந்த பெண்மணியிடம் நான் கேட்டுக் கொண்டிருந்த போது அது பாட்டியின் காதிலும் விழுந்திருக்கிறது போலும்! என்னைப் பார்க்காமலேயே கணீரென்ற குரலில் 67 என்றார். அந்தப் பெண்மணி ஜாடையில் இல்லை என்று சொல்லி கையில் 1945ல் பிறந்தவர் என்று எழுதிக் காண்பித்தார்..🙂
அன்பு சூழ் உலகில் ஒருபுறம் அன்பைக் வெளிக்காட்டும் மக்களும் இருக்க அந்த அன்பை உணராமல் எப்போதும் குறை சொல்வோரும் இருக்கத் தான் இருக்கிறார்கள்!
பலத்த தள்ளுமுள்ளுவுக்கு இடையிலும் சிறிது சிறிதாக நகர்ந்து ஒருவழியாக நாங்கள் ரங்கனைக் கண்குளிரக் கண்டோம்! சடாரியும் பெற்றுக் கொண்டோம்! அங்கே கயிறு ஒன்றை தடுப்பு போல் வைத்து நிறுத்தி நிறுத்தி தான் எல்லோரையும் தரிசனம் செய்ய வைத்தார்கள் என்றாலும் சிலர் இடையிலும் பக்கவாட்டிலும் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தனர்!!
அதன் பின்பு படிகளில் இறங்கி நசுக்கி வெளியே வருவதற்குள் ஒருவழியாகி போனது..! தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் இடம் வெளியே வரும் வழியில் இருந்தது! எல்லோரும் இந்த நிமிடமே தீர்த்தம் வாங்கிக் கொண்டு மோட்சம் கிட்டி விட எண்ணி மொத்தமாக சேர்ந்து ஒருவரையொருவர் தள்ள முயலவும் என்னால் அங்கு பேல்ன்ஸ் பண்ண முடியவில்லை..!!
அப்போது பின்னாலிருந்து ஒரு பெண்மணி எல்லோரையும் தள்ளிக் கொண்டு வர முயற்சி செய்ய…’ எனக்கு தீர்த்தமே வேண்டாம்! நீங்களே அடிச்சிக்கோங்க! தயவு செய்து என்னை வெளியே மட்டும் போக விட்டுடுங்க!’ என்று சொல்லி நசுக்கி தள்ளிய கூட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன்! வரிசை என்றால் என்ன? தனி மனித ஒழுக்கம் என்றால் என்ன? என்பது இங்கு கேள்விக்குறி!
தெப்பக்குளத்தைச் சுற்றி போடப்பட்டுள்ள கடைகளை பார்வையிடலாம் என்று எண்ணி இதமான காற்று உடலை வருட நடக்கத் துவங்கினோம். பொம்மைக் கடைகள், பலாச்சுளை, சுடச்சுட வேர்க்கடலை, விதவிதமான பைகள், அலங்காரப் பொருட்கள் என்று வரிசையாக கடைகள் போடப்பட்டிருந்தது!
இரண்டு மூன்று கடைகளில் ப்ளக் பாயிண்ட்டில் போட்டுக் கொள்ளும்படி சிறிய விளக்குகள் அழகாக இருந்தது! ஓரிடத்தில் அதை விற்றுக் கொண்டிருந்த தம்பியிடம் ‘எவ்வளவு ரூபா தம்பி!’ என்று கேட்டதும் 100 ரூ என்றான்! இது பிளாஸ்டிக் தானே? விலை சரி தானே? என்று நான் வரிசையாக கேட்கும் போது அதை புரிந்து கொள்ள சற்று தடுமாறினான்! எனக்கு புரிந்து விட்டது…:)
கஹான் சே ஆ ரஹே ஹோ பையா???
அஸாம் சே! என்றான்!
தேரா நாம் க்யா ஹை??
இத்னி சோட்டீ தியா ஹை ஏ! ரேட் சஹி ஹை க்யா?? என்றதும்..!
பச்சாஸ் ருப்யே தீஜியே! என்றான்!
தம்பி அஸாமிலிருந்து வந்து வியாபாரம் செய்கிறார் என்று அவரிடம் பேசிப் பார்த்ததில் தெரியவந்தது! மற்றொரு கடையில் இருந்தவரும் அஸாமிலிருந்து வந்தவர் தான்! நேரிடையாக ஹிந்தியிலேயே விசாரித்து தெரிந்து கொண்டேன்!
இப்படியாக அன்றைய மாலைப்பொழுது ஆன்மீகமும் வேடிக்கையுமாக இனிமையாகவே சென்றது!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
23 ஜூன் 2025
பெண் பார்க்கப்பட்ட வைபவம் நினைவுகள் சுவாரஸ்யம். ஏற்கனவே யும் சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆதரவற்ற, அதுவும் மனநிலை பிறழ்ந்த வயதான பெண்மணியை அழைத்து வந்தவர் பாராட்டப்பட வேண்டியவர். பொதுவாகவே நம்மிடம் ஒரு ஒழுங்கற்ற தன்மை நிலவுகிறது. பொது இடங்களில் வரிசையில் செல்லலாம், ஒழுக்கத்தைப் பேணலாம் போன்ற வழக்கங்கள் மறைந்து வருகின்றன.
தனி மனித ஒழுக்கம் வரிசைப்படி வருவது என்பதேகிடையாது அதனால்தான் நிறைய மக்கள் கூடும் இடத்தில் மரணம் நிகழ்கின்றது நானும் வடபழனி சூரசம்ஹார நிகழ்ச்சியில் மூச்சு திணறல் எற்பட்டு வெளியில் வந்து விட்டேன் ரங்கனை தரிசித்து அருமை
பதிலளிநீக்குஅந்தி வானம் எப்பவுமே இயற்கை வரையும் மேகத் ஓவியங்கள்! அதுவும் மாறிக் கொண்டே இருக்கும். அந்த அழகு.
பதிலளிநீக்குமனதின் ஆரோக்கியம் மிக மிக முக்கியம். அப்போதுதான் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் நிலையைக் கூட மன ஆரோக்கியம் மாற்றும் வல்லமை படைத்தது!
மாசி மாத தெப்பம் புகைப்படம் அழகு.
கீதா
நைட்டி பாட்டி நிராதரவான நிலையில் தற்சமயம் ஹோமில் இருப்பதாகவும், அந்த நடுத்தர வயது பெண்மணியின் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு பாட்டி வேலை செய்ததாகவும் அந்த நன்றிக் கடனுக்காக அவ்வப்போது அவரை இப்படி அழைத்து வந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம்! //
பதிலளிநீக்குமனம் நெகிழ்ச்சி அடைந்தது. இப்படி அன்பானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நம் கண்ணில்தான் படுவதில்லை. கெட்டவைதான் கண்ணில் முதலில் படுவது அதாவது நம் மனம் அதைத்தான் பற்றிக் கொள்கிறது.
அப்பெண்மணியைப் பாராட்டுவோம். நல்ல உள்ளம்.
கீதா
பொதுவெளியில் வரிசை என்பதெல்லாம் அளவிற்கு நம் மக்கள் இல்லை ஆதி! அது சிறு வயதிலிருந்தே வர வேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குகீதா