பட உதவி: நன்றி பால் ஹனுமான் ஜி!
”பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப்
படங்களில் ‘மட்ரா’ என்று
காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!”
சுவர்களில் ஓரடி உயர எழுத்துகளில்
விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை – ஆ.கே. கட்பாடிகள் –
எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள் – ஹாஜி மூசா ஜவுளிக்கடை [கடல்] –
30.9.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.
மதுரையின் ஒரு சாதாரண தினம்.
எப்போதும் போல ‘பைப்’ அருகே
குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன்கள் ‘டெட்டானஸ்’ கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக்
கழக பஸ்கள் தேசியம் கலந்த டீஸல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விரைப்பான கால் சராய்
சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்கார்ர்கள் ‘இங்கிட்டும் அங்கிட்டும்’ செல்லும் வாகன – மானிட போக்குவரத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரௌனியன் இயக்கம் போல் இருந்த்து. [பௌதிகம்
தெரிந்தவர்களைக் கேட்கவும்] கடர் சட்டை அணிந்த, மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம்
ஒன்று, சாலையில் இடது புறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காகத் திட்டிக்
கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள், மீனாட்சி கோயிலின்
ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகைப் பாலம்.... மதுரை!
இப்படித்தான் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது தலைவரின் நகரம் சிறுகதை. இச்சிறுகதை
இன்றைக்கு முப்பத்தி எட்டு - நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. ஊர்
பற்றிய ஒரு கண்ணோட்டத்தினை முதல் மூன்று நான்கு பத்திகளிலேயே தரும் இந்த வித்தை
வாத்தியாரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இச் சிறுகதையை சமீபத்தில் படித்தேன். தில்லி தமிழ்ச் சங்கத்தின்
நூலகத்திலிருந்து எடுத்த புத்தகங்களுள் “நகரம் – சுஜாதா” என்ற
தலைப்பிட்ட புத்தகமும் அடக்கம். இத் தொகுப்பில் மொத்தம் 14 கதைகள். முன்னுரையில்
இந்த பதினான்கு கதைகளும் சென்ற இரு வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி,
சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை என்று சுஜாதாவே 04.03.74 அன்று
சொல்லி இருக்கிறார்!
இத்தொகுப்பில் இருக்கும் பதினான்கு கதைகள் – [1] நகரம் [2] பார்வை [3]
சென்றவாரம் [4] கள்ளுண்ணாமை [5] தலைப்பு என்ன? [6] மகன் தந்தைக்கு [7] உறுமீன் [8]
இளநீர் [9] காணிக்கை [10] முரண் [11] காரணம் [12] அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடன்
அல்ல [13] ஒரே ஒரு வரம் [14] வாட்டர் கார் விவகாரம்.
அனைத்து கதைகளுமே எனக்குப் பிடித்தது. இதில் சென்றவாரம் கதை – தினமணி
நாளிதழில் 28.12.73 அன்று வெளிவந்த ஒரு விபத்துச் செய்தியை வைத்து ஒரு கதையை
அழகாய் பின்னியிருப்பார்.
ஒரே ஒரு வரம் – ஆசாமியிடம்
வித்தியாசமாக என்னவோ இருந்தது. என்ன என்று சுலபமாகச் சொல்ல முடியவில்லை. சட்டை
பட்டன் ஒன்றை மாற்றிப் போட்டிருந்தாரே, அதுவா? இந்த 1973-ல் காதில் கடுக்கன் போல்
போட்டுக் கொண்டிருந்தாரே, அதுவா? அல்லது வலது கை சுட்டு விரலில் மோதிரம்?
குடுமியா, கிராப்பா என்று சொல்ல முடியாத சிகை, நிச்சயம் அவர் சென்னைக்குப்
புதிது... சீனிவாசலு நாயுடு தெரு, இரண்டாம் சந்து.....
கதவு எண்களைப் பார்த்துக்கொண்டே ஒரு வீட்டு வாசலில் நின்றார்.
அதன் முகப்பில் தெரிந்த மாடிப் படிகளில் ஏறி ஒரு தண்ணீர் டிரம்மைத் தாண்டி ஓர்
அறையின் வாசற் கதவை லேசாகத் தட்டினார். பதிலில்லை. சுற்று முற்றும் பார்த்தார்.
ஒருவருமில்லை. உடனே அவர் ஒரு அமானுஷ்யமான காரியம் செய்தார். மூடி இருந்த அந்த
அறைக் கதவின் ஊடே, புகை போல் ஊடுருவி உள்ளே சென்றார்.”
உள்ளே
சென்று பார்த்தால் ஒரு பெண், தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அவளைத் தடுத்து
அவளுக்கு ஒரே ஒரு வரம் அளிக்கிறார். அந்த வரம் அளித்த பிறகு தனது வேலையை ராஜினாமா
செய்ய நினைக்கிறார் - காரணத்தை மிக அழகாய்ச் சொல்லி இருக்கிறார் “ஒரே ஒரு வரம்” என்ற இக்கதையில்.
அனைத்து
கதைகளுமே அருமை. நான் படித்த புத்தகம்
குமரி பதிப்பகம் 1974-ல் வெளியிட்டது. வெளி வந்த கதைகளில் சிலவற்றை இணையத்தில்
படிக்கலாம். நகரம் கதை சுஜாதாவின் தீவிர ரசிகர் திரு. பால் ஹனுமானின் தளத்தில் இருக்கிறது.
மீண்டும்
வேறொரு ”படித்ததில் பிடித்தது” பகிர்வில்
சந்திக்கும் வரை...
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.