செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ராஜா ராணி ராஜா ராணி - மனச் சுரங்கத்திலிருந்து



என் நெய்வேலி வாழ்க்கையின் போது சந்தித்த மனிதர்கள், நடந்த நிகழ்வுகளைப் பற்றி "மனச் சுரங்கத்திலிருந்து "  என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து வருகிறேன்.  இந்த பதிவில் அதை ஒட்டிய ஒரு சம்பவத்தை  பார்ப்போமா

நானும் சகோதரிகளும் சிறு வயதில் யாரைப் பார்த்தாலும் பயந்து விடுவோம்.  அதுவும் ஒரு நபரைப் பார்த்து மிகவும் பயப்படுவோம்.  அது எங்கள் அம்மாவுக்கு எங்களை மிரட்ட வசதியாகப் போய்விட்டது என்பதை இப்போது நினைத்தாலும் எங்களுக்கெல்லாம்  சிரிப்புதான்.

நாங்கள் குடியிருந்த தெருவில் அடிக்கடி ஒரு மனிதர் வருவார்.  அழுக்கடைந்த உடைகள், ஒன்றல்ல, இரண்டல்ல, அவரிடம் இருக்கும் எல்லா உடைகளையும் ஒன்றாய் போட்டுக்கொண்டு நீண்ட தாடியுடன் தலையில்  எண்ணை கண்டு பல திங்களான தலைமுடிக்கற்றை என்று பார்க்கவே  அருவருப்பான உருவத்துடன் இருப்பார்.  அவர் தெருமுனையில் வரும்போதே அவர் போடும் சத்தத்தைக்  கேட்டு நாங்கள் ஓடி ஒளிந்து கொள்வோம்.

அவர் பேசுவதே ஐந்து-ஆறு வார்த்தைகள் தான்.  அதையே திரும்பத் திரும்பச் சொல்வார்.  அதையும்   ஒருவித ரிதத்துடன் கோர்வையாகச் சொல்வார். அவர் சொல்லும் ஆறு வார்த்தைகள்தில்லி, இந்திரா, ராஜா, ராணி, நாலு, பொண்டாட்டி!  இந்த வார்த்தைகளை அவர் கோர்வையாக்கி, ”தில்லி இந்திரா, தில்லி இந்திரா, ராஜா ராணி, ராஜா ராணி, நாலு பொண்டாட்டி, நாலு பொண்டாட்டிஎன்று அவருடைய கரகர குரலில் உயர்த்திச் சொல்லும்போது எங்களுக்கெல்லாம் குலை நடுங்கும்.  அவர்தில்லி இந்திராஎன்று ஆரம்பிக்கும்போதே ஓடிவிடுவோம்.

கொஞ்சம் விவரம் தெரிந்து பின்னாளில் அவர் ஏன் இப்படி கத்துகிறார் என்று விசாரித்தபோதுதான்  எங்களுக்குத் தெரிய வந்தது அவரின் சோகக் கதை!

அவர் ஒரு  பெரிய பணக்காரர் என்றும் அவருக்கு நான்கு பெண்டாட்டிகள் இருந்தார்கள் என்றும்,  எல்லோருமாகச்  சேர்ந்து அவரின் பணத்தை எல்லாம் பிடுங்கிக்கொண்டு அவரை அடித்து, விரட்டி விட அந்த அதிர்ச்சியில் அவருக்கு சித்தம் பிசகி இப்படி கத்த ஆரம்பித்து விட்டாராம்!  ஒரு பெண்டாட்டி இருந்தால் பரவாயில்லை, நான்கு இருந்தால் தில்லியை ஆண்ட ராஜா, ராணி [இந்திரா]யே  ஆனாலும் இதுதான் கதி என்று அனைவருக்கும் சொன்னார் போல

அப்போது  அவரைப் பார்த்த அல்லது நினைத்த போதிலெல்லாம் பயந்து நடுங்கினாலும் அவரைப் பற்றி தற்போது நினைக்கும் போதெல்லாம் அவருக்காக  மனசு வருத்தப்படுகிறது. இன்னும் என் மனச் சுரங்கத்தில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார் அவர்

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போமா? (இந்த பாரா மட்டும் சாலமன் பாப்பையா குரலில்).


22 கருத்துகள்:

  1. எத்தனையோ மனிதர்கள் இந்த மாதிரி சுற்றிக் கொண்டுள்ளனர்

    பதிலளிநீக்கு
  2. பாவம் அந்த மனுஷர்:(

    எங்க வத்தலகுண்டு வாழ்க்கையிலும் ஒரு மனநிலை பிறழ்ந்த பெண் எங்க வீட்டுத் திண்ணையிலேயே இருப்பார்.

    என்ன பேச்செடுத்தாலும்....'அந்த ராமர் காலத்துலே............'ன்னுவார். என்ன கேள்வி கேட்டாலும் ராமரு ராமருதான்.

    அந்த ராமனாவது அனுகிரஹம் பண்ணி இருக்கக்கூடாதா.......

    அந்தம்மாவையும் யாரோ ஒரு அயோக்கியப்பயல் ......ப்ச்...:(

    நிறைமாசக் கர்ப்பிணியா இருந்தவங்களை நம்ம ஆஸ்பத்திரியில்தான் (அம்மா மருத்துவர்)கொண்டு சேர்த்துக் கவனிச்சதுலே.... அந்த வயித்துப்பிள்ளை செத்துப்பிறந்துச்சு. அப்புறம் என்ன ஆச்சோ......

    நாங்க ஊர் மாத்திப்போயிட்டோம்.

    அப்போ மனநிலை மருத்துவ மனைகளோ தொட்டில் குழந்தை திட்டமோ ஒன்னும் இல்லாத காலம்.

    பதிலளிநீக்கு
  3. மன சிதைவிலிருப்பவர்கள் கூறுவது சில சமயம் மிக ஆழ்ந்த சிந்தனைதளத்தை விதைவிடும். நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  4. எல்லா ஊர்களிலுமே ஆங்காங்கே ஒரு சிலர் இதுபோலத் தான் திரிந்து வருகிறார்கள். மிகவும் பாவமாகத் தான் உள்ளது. ஒவ்வொருவர் வாழ்விலும் எவ்வளவு சோதனைகளோ, வேதனைகளோ நினைக்கவே மனதுக்குக் கஷ்டமாகத் தான் உள்ளது.
    தாங்கள் என்ன செய்கிறோம், பிறர் நம்மைப் பார்த்து என்ன நினைக்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியாது. சிலர் பசிக்கு ஏதாவது உணவளித்தாலும் கூட வாங்கிக்கொள்ள மாட்டார்கள். குப்பைத் தொட்டிகளைக் கிளறிக்கொண்டிருப்பார்கள் - அது தான் மிகப் பெரிய கொடுமை. நம்மில் கூட யாருக்கு எந்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாது. பொதுவாக இது போன்ற ஆசாமிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாமலும், அடித்துத் துரத்தாமலும், இரக்கம் காட்டி அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் அனைவரும்.

    பதிலளிநீக்கு
  5. அவனவன் ஒரு பெண்டாட்டி கட்டிக்கிட்டே பைத்தியமாகத் திரிகிறார்கள். அதாவது, கல்யாணமான புதிதில் மனைவியிடம் பைத்தியமாக! பின்னர் பைத்தியமாக....

    (எனக்குத் தெரிந்த மூன்று பெண்டாட்டிகாரர் ஒருவர், ரொம்ப விவரமானவர், “தில்லி, ஏ... ராசா...” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.)

    பதிலளிநீக்கு
  6. மனிதன் பித்தாவதற்கு ஏதாவது காரணம் இருக்கும்.

    வேறொரு பதிவில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  7. சின்ன வயது பயங்களை எதார்த்தமாக பகிர்கிறிர்கள்..

    உண்மையில் மனநிலை பிறழ்ந்தவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்...

    எனது சிறுவயதில் ஒரு நபர் ``அய்யாசாமி கொய்யாப்பழம்``என்பதை அடிக்கடி சொல்வார்..எதோ எதோ பேசுவார் விவரம் இல்லாத சிறுவர்களிலிருந்து விவரம் தெரிந்த பெரியவர்கள் வரை அவரை சீண்டுவதிலேயே குறியாய் இருப்பார்கள்... அவரது மனப்பக்குவத்திற்கோ மன அமைதிக்கோ யாரும் வழிசெய்யவில்லை என்பதை இப்பொழுது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  8. தில்லி ராஜா....ராணி இந்திரா... நாலு பொண்டாட்டி!
    இப்படி புரட்டிப் போட்டா ஏதோ கதை மாதிரி வருதே!! அது சரி! எப்போ அந்த பயம் தெளிஞ்சுது. ;-)

    பதிலளிநீக்கு
  9. கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. தனித்தனியாக பதில் எழுத முடியவில்லை! பிடுங்க வேண்டிய, அடிக்க வேண்டிய ஆணி அதிகம் :(

    இண்ட்லியில் வாக்கு அளித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    நல்ல கனவு! ஆனால் நிஜம்?

    ////என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
    என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
    See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

    பதிலளிநீக்கு
  11. கடைசி பாராவெல்லாம் இல்ல, எனக்கு
    // இந்த பதிவில் அதை ஒட்டிய ஒரு சம்பவத்தை பார்ப்போமா? //
    இந்த லைன்லயே மா.நன்னன் ஞாபகம் வந்தது... ஹெ ஹெ... ஏன்ண்ணா இப்படி?? :))

    பதிலளிநீக்கு
  12. @@ கருன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @@ அன்னு: மா. நன்னன் ஞாபகம் வந்ததா? ஹி.ஹி.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @@ DrPKandaswamyPhD: நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஆஸ்திரேலியாவில் வீட்டிற்கு அருகாமையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை ,வாரம் ஒருமுறை மருத்துவ சோதனை, தனி வீடு, உணவுப்பொருள்கள், வீடு தூசிஉறிஞ்சியால் சுத்தம் செய்ய ஆள் என்று ராஜ போகமாக அரசாங்க செலவில் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தேன்!!

    பதிலளிநீக்கு
  14. @@ இராஜராஜேஸ்வரி: ஓ அப்படியா? அவர்களுக்கு நல்ல சிகிச்சைதான் முக்கியம். தகவலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வெங்கட் அவர்களே, நல்ல பகிர்வு. ஒன்றுக்கு மேலே என்றால் என்றும் துன்பம்தான். நான் வங்கியில் பணி புரிகையில், உங்கள் பெயர்கொண்ட எனது அதிகாரி இரு மனைவியை சமாளிக்கப் பட்டபாடு, இன்றும் என் மனத்தில் நிழல் படம்போல ஓடுகிறது!! இது பற்றி, எனது கருத்தினை உங்கள் ""மாசிலா உண்மை காதலே.." என்ற பகிர்வில் குறிப்பிட்டுள்ளேன் சமயம் கிடைத்தால் பார்க்கவும்.நன்றி.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  16. @@ வி.கே.என்.: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. ரசித்த வாசகம் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
    ஜுகல்பந்தியை ரசித்தேன். என் கணவரும் ' நன்றாக இருக்கிறது ' என்று சேர்ந்து ரசித்தார்கள். மனச்சுரங்கத்தினுள் ஒளிந்து கொண்டிருக்கும் ராஜா ராணி கதையையும் படித்தேன். நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு தான் இந்தக் கருத்துரையை பார்த்து, பதிலுரைக்க மறந்தது தெரிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....