செவ்வாய், 11 நவம்பர், 2014

முற்றுப்பெறாத மனு – நெய்வேலி பாரதிக்குமார்





மனிதனாய் இருப்பது ஒரு சுகம். உயிரியல் படைப்பில் எதுவும் சும்மா இருப்பதில்லை. எல்லாவற்றுக்கும் எல்லா கணங்களும் எதேனும் ஒன்றால் நிரப்பப்பட்டிருக்கிறது. சிந்தித்தலும், சிருஷ்டித்தலும் எல்லா ஜீவனுக்கும் பொது. என்றாலும் கூடுதலாய் மனிதனால் மட்டும் எதையும் வேறொரு வடிவத்தில், வேறொரு கோணத்தில் எளிதாய் வெளிப்படுத்தவும் பதிவு செய்யவும் முடிகிறது. சிலருக்கு கனவுகள், சிலருக்கு அவர்களுக்கும் வாய்த்திருக்கும் தொழில், சிலருக்கு சிரிப்பு, சிலருக்கு கண்ணீர். என் போன்ற சிலருக்கு இலக்கியம்.....” 

“ஒரு சில பத்திரிகைகள் எழுதியவற்றை அப்படியே பிரசுரிக்கின்றன, ஒரு சில அவ்வாறு வெளியிட முடியாமைக்கு பல வணிக காரணங்கள் இருக்கலாம். அவை அரைகுறையாக மற்றும் ஜீவனற்று பிரசுரமாகும்போது ஒரு படைப்பாளியின் மூல கரு சிதைந்து பிண்டமாக பார்க்கவேண்டிய துர்பாக்கியம் நேர்கிறது.


”முற்றுப்பெறாத மனு” சிறுகதைத் தொகுப்பில் தன்னைப் பற்றி “சொல்வதற்கு சிலஎன்று சொன்னதிலிருந்து ஒரு பகுதி தான் மேலே நீங்கள் படித்தது.

நெய்வேலி பாரதிக்குமார் – எங்கள் ஊர்க்காரர்.  ஒரு பயணத்தில் நெய்வேலி சென்றிருந்தபோது அவரையும், அவரது மனைவி, சகோதரி நிலாமகள் அவர்களையும் சந்தித்தேன்.  நான் அங்கே இருந்த சுமார் ஒரு மணி நேரமும் வலையுலகம், வாசிப்பனுபவம், நெய்வேலி நினைவுகள் என்று பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அங்கிருந்து புறப்பட்டபோது நெய்வேலி நகருக்கே உரிய, வீட்டில் காய்த்த, பலாப்பிஞ்சு, மாங்காய், எலுமிச்சை என ஒரு பெரிய பை நிறைய கொடுத்து “அம்மாகிட்ட கொடுங்க. நெய்வேலி காரங்களாச்சே... இதையெல்லாம் நிச்சயமா இப்ப மிஸ் பண்ணுவாங்க!என்று சொன்ன சகோ நிலாமகளின் அன்பு, என மறக்க முடியாத ஒரு பயணம். 



அங்கிருந்து புறப்பட்ட எனக்கு அவர்கள் கொடுத்த இன்னுமொரு பொக்கிஷம் பாரதிக்குமார் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான “முற்றுப்பெறாத மனு அதில் இடம் பெற்றிருப்பது மொத்தம் பதினைந்து சிறுகதைகள். சிறுகதை என்பதைப் படிக்கும்போதே அவற்றில் வரும் கதாபாத்திரங்களின் நிலையில் படிப்பவர்கள் தன்னை வைத்துப் பார்த்தாலே அந்த சிறுகதை  எழுதப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறிவிடுகிறது என்று எனக்குத் தோன்றும்.  இத்தொகுப்பில் உள்ள பல சிறுகதைகளில் என்னை வைத்துப் பார்க்கத் தோன்றியது உண்மை.

தனது நிலை பற்றி புலம்பும் ஆறு பற்றிய “ஆறு மனமே ஆறுகதையாகட்டும், தனது மகள் அழகிப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அவளைப் பாடாய்ப் படுத்தும் அம்மா பற்றிய கதையான “மெழுகு பொம்மையாகட்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிவிட்ட நமது தேசத்தின் மாந்தர்களைப் பற்றிச் சொல்லும் “சேனல் தேசம்ஆகட்டும், தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுமே நிதர்சனம் சொல்லிச் செல்லும் அருமையான கதைகள்.   



அனைத்து கதைகளும் தொட்டுச் சென்றிருக்கும் விஷயங்களை இங்கே பார்ப்பது நல்லதல்ல! ஒரு சில கதைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்!

தெருக்கள் இல்லாத ஊர்: ஒரு கடிதத்தின் மூலமாக கதை சொல்லும் உத்தி.  நமது ஊருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்லும் போது இருக்கும் உணர்வு இக்கதையைப் படிக்கும் போது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். கதையிலிருந்து ஒருசில வரிகள் மட்டும் இங்கே....


“நான் பெங்களூருக்கும் நீ தில்லிக்கும் வேலை நிமித்தம் இடம் பெயர்ந்த பிறகு இப்பொழுது தான் சேர்ந்தாற்போல ஒரு வாரம் நம் ஊரில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நாம் நினைப்பது போல் உன்னையும் என்னையும் மாதிரி எல்லாமும் அப்படியே இருக்கவில்லை மகி.



மணல் வறண்டு நீண்ட மயானமாய் தெருக்கள், பொத்தான் பிய்ந்த அரை ட்ரவுசரை முடிந்தபடி, ஒற்றை சைக்கிள் டயரை காட்டாமணி குச்சியினால் லாவகமாய் ஓட்டிச்செல்லும் சிறுபையன்களை சன்னதி தெருவின் எந்த மூலையிலும் பார்க்கமுடியவில்லை. ஏன் பழைய டயரை நாலணாவிற்கு தரும் கட்டை ராமு சைக்கிள் கடை கூட இப்போழுது  இல்லை. எல்லோரும் புகை கக்கும் குட்டிராட்சசன் மீது உலா வருகையில் சைக்கிளுக்கு ஏது வேலை?


சுவாசிக்க கொஞ்சம் புகை: வேலைபார்த்து வந்த தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு அதை மூடிவிட, அந்த ஊரிலிருந்து போகப் பிடிக்காது, வறுமையில் உழலும் ஒரு தொழிலாளி.  தாயில்லாத தன் மகளை தான் வேலை செய்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது அவரது மனதில் ஓடும் எண்ணங்களே கதையாக – முடிவு எதிர்பாராத ஒன்று.  படித்துப் பாருங்களேன் உங்களுக்கே புரியும் எத்தனை கனமான கதைக்களன் என்று...  ஆரம்பமே சிறுமி மல்லியைப் பற்றி தான்....


மல்லிக்கு எல்லா தருணத்திலும் ரெட்டை ஜடை நன்றாக இருக்கும். வெண்பட்டு சருமம் மின்னும் ம்ருதுவான ஒரு பூனையின் கழுத்தை போன்ற அவளின் குட்டி முகத்தில் வறுமையை மிஞ்சி ஜொலிக்கும் கண்கள். இருட்டை ஊடுருவது போல இதயத்தின் உட்புகுந்து சட்டென்று சம்மணமிடும். என்றாலும் மல்லிக்கு ரெட்டை ஜடை மேல் அவ்வளவு நாட்டமில்லை. ஸ்டிக்கர் பொட்டை விட, செஞ்சாந்தை வார்கோல் குச்சியால் அளவாக எடுத்து நெற்றி மத்தியில் உருட்டுவாள்.


மரங்கள்: ஒரு நேர்மையான அரசு அதிகாரி – கிராமம் கிராமமாக அரசின் திட்டங்களைப் பற்றிய விவரங்களைக் கொண்டு சேர்க்கும் பணி. நேர்மைக்கு எதிரான மனிதர்களைச் சந்திக்கும் அவருக்குக் கிடைக்கும் அனுபவம் தான் கதை.  அதில் வரும் கவிதைகள் இரண்டினை இங்கே பார்க்கலாம்!


வானம் மேக மூட்டமாய் இருந்தது. திடீரென்று நீல ஆடையை உதறிவிட்டு, கறுப்பு அங்கியை அணிந்தது போலிருந்தது!



இந்த ஞாயிற்றின் கதிர்கள் பட்டே

கறுத்து போய்விடும்போது

நீ அதன் அருகிலேயே இருக்கிறாயே

அதனால் தான்

கறுத்துவிட்டாயா?

அடிக்கடி அலையாதே கறுத்துவிடுவாய்

என்றணைக்க அம்மா உண்டோ உனக்கு?

எனக்கிருப்பதை போல்!



ஒரு வகையில் சற்குணம் சொன்னதுபோல் எல்லோரும் மரங்கள் தான். சலனமற்ற மரங்கள். காற்றாக அரசியல்வாதிகள் இருக்கும் வரை, அவர்களுக்கு தலையாட்டி சேவிக்கும் மரங்கள்....



காற்றுசேவகன் கத்தினான்

நிறுத்து நிறுத்து

இந்த மனிதர்களை

காற்றோடு ஒப்பிடாதே!

மரங்கள் புறம்பாக பேசினாலோ

மௌனித்தாலோ

புயலாகி பிளந்துவிடுவோம்

காற்றோடு மனிதர்களை ஒப்பிடாதே!

நல்ல வேளை

நம்மூர் அரசியல்வாதிகள்

மரங்களாய் ஜனிக்கவில்லை

ஜனித்திருந்தால்

காற்றையே பிளந்திருப்பார்கள்

கட்சிகளை போல்! தேசத்தை போல்....


இக்கதைத் தொகுப்பினை படிக்கும் போது அருமையான ஒரு கதைத் தொகுப்பினை படித்த திருப்தி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.  டிசம்பர் 2002-இல் வெளிவந்த முதல் தொகுப்பின் விலை ரூபாய் 46/- மட்டும். புத்தகத்தினைப் பெற அணுக வேண்டிய முகவரி:

நெய்வேலி பாரதிக்குமார்
E-9,  பெருமாள் கோயில் தெரு,
வட்டம்- 27, நெய்வேலி-607803.
கடலூர் மாவட்டம். தமிழ்நாடு.

அலைபேசி எண்: 0-9442470573  

மின்னஞ்சல் முகவரி sbharathikumar@gmail.com.

வலைப்பூ: http://bharathikumar.blogspot.com

படித்ததில் பிடித்தது பகுதியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. படித்து ரசித்த புத்தகங்கள் நிறையவே என்றாலும் எழுதுவதில் கொஞ்சம் தடை.  விரைவில் வேறொரு புத்தகம் படித்த அனுபவத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.

மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.  

வலைச்சரத்தில் இன்று:   மதுவிலக்கும் சில பழக்கங்களும் - படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!

42 கருத்துகள்:

  1. -///நம்மூர் அரசியல்வாதிகள்

    மரங்களாய் ஜனிக்கவில்லை

    ஜனித்திருந்தால்

    காற்றையே பிளந்திருப்பார்கள்

    கட்சிகளை போல்! தேசத்தை போல்....///
    ஆகா அற்புதம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. முற்றுப்பெறாத மனு நூலறிமுகத்துக்கு நன்றி. கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரிகள் சிறுகதைகள் யாவும் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டிருப்பதைப் பறைசாற்றுகின்றன. தோழி நிலாமகளின் அன்போடு நண்பர் பாரதிகுமார் அவர்களின் இலக்கிய ஆர்வமும் அழகாய் பரிசளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி. நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு தொகுப்பு.....

      நீக்கு
  3. நெகிழ்வும் மகிழ்வும் சகோ.

    //புத்தகங்கள் மனிதப் பிறவிகள் அல்ல. ஆயினும் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன.//

    படைத்தவரையும், படித்தவரையும் புதுப்பித்துக் கொண்டு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திப்பின் மகிழ்ச்சி தருணங்கள் இன்னமும் மனதில் பசுமையாய்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  4. //வானம் மேக மூட்டமாய் இருந்தது. திடீரென்று நீல ஆடையை உதறிவிட்டு, கறுப்பு அங்கியை அணிந்தது போலிருந்தது!//

    இரசிக்கக்கூடிய வரிகள். கவிஞரின் கற்பனைக்கு பாராட்டுக்கள்! திரு நெய்வேலி பாரதிக்குமார் அவர்களின் படைப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. ஒரு நல்ல நூலினை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். சிறந்த விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  6. 2002-ல் வெளியான கதைத்தொகுப்பு என்பதால் அவரது வலைத் தளத்தில் இக்கதைகள் இடம் பெற்றிருக்குமா தெரியவில்லை. பாரதி குமாருக்குப் பாராட்டுக்கள். அறிமுகப் படுத்திய உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கதைகள் அவரது வலைப்பூவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  7. தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுமே நிதர்சனம் சொல்லிச் செல்லும் அருமையான கதைகள்.//

    அருமையான எழுத்துக்கு சொந்தக்காரர்.. பழகுவதிலோ மிக எளிமை.. என் நட்பின் வட்டத்தில் எனக்கு பெருமை சேர்க்கிற தம்பதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் - ஆதர்ச தம்பதிகள்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  8. வாவ்.. விரைந்து படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் ஆவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  9. புதிய அறிமுகம். நல்ல அறிமுகம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. Indha thoguppai padikkvendum pol ulladhu. Kurippittulla mugavarikku thodalbu kolgiren.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்வத்திற்கு நன்றி சித்தி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  11. Kuriipitta tholaipesi yennirku dial seidhal thodarbu kidaikkavillai.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் முயற்சித்து பாருங்கள் சித்தி. அலுவலகத்தில் இருந்திருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  12. அருமையான சிறுகதைகளுக்கு சிறப்பான விமர்சனம். கதைகள் படிக்கும் ஆவல் எழுகின்றது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  13. மிக அருமையான புத்தக விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி! எழுத்தாளரின் தள இணைப்பையும் தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  14. மிக்க நன்றி வெங்கட் சார் .. மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கின்றது, ஒரு புத்தகம் ஆழ்ந்த வாசிப்பாளரின் வாசிப்பில்தான் முழுமை பெறுகிறது. பொதுவாக நாங்கள் புத்தகத்தை தந்துவிட்டு படித்துவிட்டீர்களா எனக் கேட்டு துன்புறுத்த கூடாது என்ற கொள்கையில் இருக்கின்றோம் . ஒரு புத்தகம்தான் வாசகரை தூண்டவேண்டும். அவரை அப்புத்தகம்தான் புத்தகம் குறித்து பேசவும் வைக்க வேண்டும் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. உங்கள் அக்கறையான வாசிப்பும் அர்ப்பணிப்பான விமர்சனமும் மன நிறைவைத் தருகின்றன . புத்தகத்தின் அட்டை முதல் கதைகளின் வரிகள், தங்களைக் கவர்ந்த விஷயங்கள் ஆகியவற்றை சிறப்பாக பதிவிட்டிருக்கின்றீர்கள். ஒரு தேர்ந்த பதிவாளரின் திறனுடன், அனுபவத்துடன் , உங்கள் இன்றியமையாத நேரத்தை செலவிட்டு அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். அன்றைய கால வரலாற்று பதிவுகளுக்கு கல்வெட்டுக்கள்..இன்றைக்கு வலைப்பதிவுகள்.. உங்களுக்கு இருக்கும் அரசுப்பணி எத்தகைய நெருக்குதல்களுக்கு உரியது என்பதை உணர்வேன்.. அத்தனை வேலைகளுக்கு இடையில் உங்களின் எழுத்துப்பணி காலம் கடந்தும் கவனிக்கப்படும். எழுத்து என்பது வெறும் கற்பனையின் விரிவு மட்டுமல்ல நாம் வாழ்தலுக்கான அடையாளம் இல்லையா? நீங்கள் உங்கள் அடையாளத்தை ஒவ்வொரு பதிவிலும் நிரூபித்துக் கொண்டெ இருக்கிறீர்கள்... உங்கள் பயணக்கட்டுரைகள் எங்களை அறியாமல் உங்கள் பின் இழுத்து வருகின்றன. ஒப்புக்கொண்ட எழுத்துப் பணிகளை உரிய நேரத்தில் அனுப்பியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் நான் பல சமயம் பலருக்கும் பின்னூட்டம் இடாமல் சென்றிருக்கிறேன் .. ஆனாலும் நீங்கள் அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் உங்கள் பின்னூட்டத்தினால் என வலைப் பகுதியை நிரப்புவீர்கள். எல்லோரிடமும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன .. உங்களிடமிருந்து அக்கறையான அன்பையும்.. பலன் கருதா உழைப்பையும்... மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே.....

      உங்கள் புத்தகத்தினை படித்து முடித்து சில மாதங்கள் ஆனாலும், பதிவிடுவதில் சில சிக்கல்கள். நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் கிடைப்பதில்லை. அதற்குள் இங்கே முடிந்த அளவிற்கு பதிவிடுகிறேன் - மற்றவர்களின் பதிவுகளைப் படிக்கிறேன்.
      அதனால் தான் கொஞ்சம் தாமதம். சகோதரியின் புத்தகமும் படித்து முடித்து விட்டேன். பிறிதொரு சமயத்தில் அதன் வாசிப்பனுபவம் பகிர்ந்து கொள்வேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.....

      நீக்கு

  15. நெய்வேலி பாரதிகுமாரைப் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன். அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்றினை ஆழமாகவே விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கி படிக்கிறேன்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  16. அருமையான விமர்சனம். புத்தகம் படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது விம்ர்சனம்.
    பாரதிகுமாருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே!

    சிறந்த சிறுகதைகள் அடங்கிய நூலினை அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள். தங்கள் விமர்சனம் கதைகளை முழுமையாக படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. சிறப்பான கதைகளை எழுதிய தங்கள் நண்பருக்கும், தங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  18. நல்லதொரு பகிர்வு அண்ணா... திரு. பாரதிக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  19. தொகுப்பை படிக்க விரும்பும் தங்கள் சித்தியின் முகவரி தெரிந்தால் நானே அனுப்பி வைக்கிறேன்.. எனது மின்னஞ்சலுக்கு இயன்றால் அனுப்பி வையுங்கள் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்... அவர்கள் உங்களுக்கு மின்னஞ்சல் செய்வார்கள்....

      நீக்கு
  20. அருமையான விமர்சனம் நண்பரே தங்களை இவ்வளவு நாட்கள் தொடராமைக்கு வருந்துகிறேன்
    அன்புடன்
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      தொடர்ந்து சந்திப்போம் கில்லர்ஜி!

      நீக்கு
  21. மிக நல்ல அறிமுகம்! விமர்சனம்! நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய கதைகள்! வாசிக்கத் தூண்டுகின்றது! வலைத்தளம் அறிமுகப்படுத்தியதற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....