சனி, 5 நவம்பர், 2022

யாரிவள் - 100


100 ரூபாய் குடித்தனம்!




மனதிற்கு கட்டுப்பாடு என்பது இல்லாமல் போனால் அது எப்படி வேண்டுமானாலும் யோசித்துக் கொண்டேயிருக்கும்! எத்தனை வேலைகளை நாம் செய்து கொண்டிருந்தாலும் மனம் ஒருபுறம் ஆழ்ந்த யோசனைக்கு சென்று அதன் பணியை செய்து கொண்டிருக்கும்! மனதை அடக்குவது என்பது தவயோகிகளுக்கே உரித்தானது! 


சிறுவயதிலிருந்தே அவளுக்கு ஒரு புதுவிதமான மனோபாவம் உண்டு! அந்த மாதிரி இருப்பது என்பது அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்! அவ்வப்போது இந்த மாதிரி எண்ணங்கள் அவளுக்குள் தோன்றிக் கொண்டே தான் இருக்கும்! யாராவது இப்படியிருக்க நினைப்பார்களா என்பதே சந்தேகம் தான்! என்ன அது???


அதாவது கையிருப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது! இதை வைத்து தான் மீதியுள்ள நாட்களை கடத்த வேண்டும்! இவ்வளவு மளிகைப் பொருட்கள் தான் உள்ளது! இதை வைத்து தான் சமைக்க வேண்டும்! இந்த பைசாவில் தான் சந்தையில் காய்கறிகள் வாங்கி வர வேண்டும்! என்பது போன்ற நியதிகள் இருக்குமானால் அப்போது எப்படி உணர்வீர்கள்???


பொதுவாகப் பார்த்தால் இவை எரிச்சலையும், சங்கடத்தையும் தான் தரும்! இல்லையா! ஆனால் அவளுக்கு இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகள் ஒருவித ஆர்வத்தையும், உற்சாகத்தையும்  ஏற்படுத்தும் என்று சொன்னால் மிகுந்த ஆச்சரியமாகத் தான் இருக்கும்! ஆம்! அவள் அப்படித்தான்!!


சில நாட்களாக அவளின் மனதில் தோன்றிக் கொண்டிருந்த ஒரு எண்ணம் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது! அதாவது ஒருவருக்கு தினமும் 100ரூ தான் வருவாய் கிடைக்குமானால் அதை வைத்து குடித்தனம் செய்ய இயலுமா?? என்று சிந்திக்கத் துவங்கினாள்! ஏன் இந்த எண்ணம் அவளுக்குத் தோன்றியது என்று தெரியவில்லை!!! 


இன்றைய காலகட்டத்தில் 100 ரூபாய் என்பது சாதாரண விஷயம்! அப்படியிருக்க அன்றைய பொழுதில் கிடைக்கும் வருவாய்க்கு தகுந்தாற் போல் வேண்டியவற்றை வாங்கி உண்டு சுகமாக வாழ முடியுமா? வாழ்க்கைத் தரத்தை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முடியுமா?? முடியும் என்று தான் அவளுக்குத் தோன்றியது! 


இதுபோன்ற சிந்தனைகள் அவளிடம் இருக்கும் தன்னம்பிக்கையால் ஏற்படுகிறதா? சிறுவயதிலிருந்து  வாழ்வில் அவள் கடந்து வந்த நிகழ்வுகளால் இப்படி தோன்றுகிறதா? என்பது தெரியவில்லை! வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது போல் மனதிற்கும் அடுத்த கட்டம் என்பது உண்டா??


வயது ஏறிக் கொண்டே வருவதில் அவளின் மனதில் தோன்றும் எண்ண அலைகளுக்கு பஞ்சமே இல்லை! அவள் ஒன்றும் இப்போது குட்டிப்பெண் அல்லவே! குடும்பத் தலைவி! மனைவியாகவும், அம்மாவாகவும் அவளுக்கென்று செய்ய வேண்டிய கடமைகள் இருந்தாலும் பற்றுகள் அற்று இருக்கவே விரும்பினாள்! மனமும் அதை நோக்கித் தான் பயணிக்கிறது!


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.


பின் குறிப்பு - யாரிவள் தொடரின் 100வது பகுதி இன்று! இதுவரை இந்தத் தொடரை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 


#யாரிவள்

15 கருத்துகள்:

  1. சிறுவயதில் 20 தேதிக்கு அப்பா கையில் காசு இருக்காது.  அப்போது சமையவ் வித்தியாசமாய் இருக்கும்.  அப்பளம் வெந்தய குழம்பு, துவரம்பருப்பு துவையல், எலுமிச்சம்பழ சாதம் என்று ஓடும்.  கீரைக்கு தேங்காய் இருக்காது!  காபிக்கு சர்க்கரைக்கு பதில் வெல்லம். அரை லிட்டர் பாலில் ஐந்து பேர் காபி குடித்து உரை குத்தி மோராக்கி..  அந்த சுவாரஸ்யம் தனிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவமும் உணர முடிகிறது. அப்பா அம்மாவோடு நான் இருந்த காலத்திலும் இப்படியான அனுபவங்கள் எனக்கும் கிடைத்ததுண்டு! அவையெல்லாம் தான் இப்போதைய மனநிலைக்கு காரணமாகவும் இருக்கலாம்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. இந்தக்கட்டுப்பாட்டு வாழ்வுமுறை அவசியம் எல்லோருக்கும் தேவை.

    என்னிடமும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். தங்களுக்கும் இருப்பது குறித்து மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. யாரிவள் நூறாவது பகுதிக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு பகுதியையும் நன்றாக எழுதுகிறீர்கள். பண விஷயத்தில், அதிலும் அதைப்பொறுத்து செலவு செய்யும் விஷயத்தில் கட்டுக் கோப்பாக இருப்பது நல்ல விஷயம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களின் கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலாஜி.

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் !

    வயதோடு மனமிங்கு அறிவைப் பேணில்
    வளர்கின்ற நவீனத்தில் புரட்சி செய்யும்
    சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் கொள்ளும்
    சொற்பம்தான் இருந்தாலும் மகிழ்வில் துள்ளும்
    மயக்கங்கள் இல்லாத மாந்தர் தானே
    மன்பதையில் மேலோங்கிச் செல்வர்! அல்லால்
    தயக்கங்கள், அறியாமை, நவீனம் பேசித்
    தன்னிலையில் தாழ்வார்கள் உண்மை தானே !

    நூறாக இருக்கின்ற பதிவை மட்டும்
    நுகர்கின்ற எனக்குள்ளும் மாற்றம் உண்டேல்
    ஆறாகக் கடந்திட்ட பதிவை எல்லாம்
    அனுதினமும் கற்றிருந்தால் ! கையை விட்டு
    நீறாகப் பணம்கரைய வாய்ப்பும் இன்றி
    நித்தமொரு ரூபாவாய்ச் சேர்த்தி ருப்பேன்
    பேறாக உம்கருத்தைப் பேணி வாழ்வில்
    பின்தங்கி இர(ரு)ப்பார்க்கு உதவப் போறேன் !

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் முன்னைய பதிவுகளை கிடைக்கும் நேரத்தில் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களின் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  8. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்
    செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் அமைவது சிறப்பே . மாதாந்திர சம்பளத்தை அப்படியே செலவழித்துவிட்டு திண்டாடுபவர்களை பார்க்கும்போது இது மேல்.

    பதிலளிநீக்கு
  9. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
    சிக்கனம், சேமிப்பி அவசியம்.
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....