சனி, 16 டிசம்பர், 2023

கரங்கள் கோர்த்து.. - சிறுகதை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கெமிஸ்ட்ரி - சிறுகதை பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



******




என்ன உமா ஜன்னல்ல வேடிக்கை பார்த்துட்டே ஏதோ பலமா யோசிச்சுட்டு இருக்க போலிருக்கு??


மனைவியின் முகத்தை பார்த்தபடியே வெளியிலிருந்து கேட்டுக் கொண்டு வந்தார் சிவராமன்!


அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க!


சும்மா சொல்லு உமா! இவ்வளவு வருஷமா உன்ன  பார்த்துட்டு இருக்கேன்! என்கிட்ட சொல்லாம நீ ஏதோ நினைச்சு குழப்பிக்கிறன்னு மட்டும் நல்லாவே தெரியுது…!


அது வந்து…! நாம ரெண்டு பேர் மட்டும்  எங்கேயாவது போயிட்டு வரலாமாங்க??


மேடம் எங்க போகலாம்னு சொல்றீங்க?? உற்சாகமாக கேட்டார் சிவராமன்!


அதெல்லாம் தெரியலங்க! சட்டுனு ஒருநாள் கிளம்பணும்! அப்படியே கிடைக்கிற பஸ்ஸ பிடிக்கணும்! அது எங்க வரைக்கும் போகுதோ அங்க இறங்கணும்!


இறங்கி???


அங்க இருக்கிற கோவிலுக்கு போவோம்! நிம்மதியா கோவில்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு அங்கேயிருந்து வேற இடத்துக்கு போவோம்!


இப்படியே எத்தன நாள்??


மனசுக்கு போதும்னு தோணற வரைக்கும் போகணும்! அது என்னமோ உங்களோட கைய பிடிச்சிட்டு போகணும்னு தோணுது!


அவ்வளவு தானே! போனா போச்சு!


நீங்களும் ரிடையர் ஆயிட்டீங்க இல்ல! நாம நம்ம கடமையெல்லாம் முடிச்சிட்டோம்! ஒடற வரைக்கும் ஓடியாச்சு! அதான் இப்படி எங்கேயாவது போலாம்னு…!!


ஆனா என்ன! மனசுக்கு இருக்கிற வேகம் உடம்புக்கு இல்ல! அது தான் ஒத்துழைக்க மாட்டேங்குது!!


இந்த கால்வலி தான் எனக்கு இருக்கே! இதோட என்னால ரொம்ப தூரம் நடக்க முடியுமான்னு தெரியல! அதைத் தான் யோசிச்சுட்டு இருந்தேங்க! என்றாள் உமா!


நீ ஒண்ணும் கவலைப்படாதம்மா! நான் தான் உன் கூடவே வருவேனே! நா உன்னை பத்திரமா பார்த்துக்கறேன் போதுமா! அதேமாதிரி  நீயும் என்ன பத்திரமா பார்த்துக்கோ!


என்ன மேடம்! என்ன பார்த்துப்பீங்க தானே?? ….🙂


கூடிய சீக்கிரம் நாம ரெண்டு பேரும் மட்டும் எங்கேயாவது போறோம்! சரியா!


புன்னகையுடனும் நாணத்துடனும் தலையசைத்தாள் உமா!


அப்படித்தான் சட்டென ஒருநாள் இருவரும் திருவண்ணாமலைக்கு சென்று வரலாம் என கிளம்பி விட்டார்கள்! அன்று பெளர்ணமி!!


என் கைய பிடிச்சிட்டு பொறுமையா இறங்கு உமா! வேகமா இறங்கணும்னு நினைக்காத! ஒண்ணும் அவசரம் இல்ல! சரியா!


அம்மா! இந்த கால் தான்! வலியில் முனகினாள் உமா!


ஒண்ணும் இல்ல! ஒண்ணும் இல்ல! சரி வா! இந்தப் பக்கமா போவோம்!


இன்னிக்கு கொஞ்சம் கும்பல் தான்! பெளர்ணமி இல்லையா! ஆனா நல்ல தரிசனம் கிடைச்சது!


ஆமாங்க! மனசுக்கு நிறைவா இருக்கு! ரொம்ப வருஷத்துக்கப்புறம் நா இங்க வரேன்! நான் சின்னப் பொண்ணா இருந்தப்போ எங்கப்பா மாசம் தவறாம வந்து கிரிவலம் பண்ணுவாரு! அப்பாவோட கால் பாதம் எல்லாம் கொப்பளிச்சு போயிருக்கும்!


ஒருதடவை எங்களையெல்லாம் கூட கூட்டிட்டு வந்தாரு! ஆனா கிரிவலம் எல்லாம் பண்ணலை! கோவில்ல சாமிய தரிசனம் பண்ணிட்டு ரமணாஸ்ரமம் எல்லாம் பார்த்துட்டு போனோம்! அதெல்லாம் இன்னும் எனக்கு மனசுல பசுமையா பதிஞ்சுருக்கு பாருங்களேன்!


அப்பாவ பத்தி சொல்ல ஆரம்பிச்சா தான் உனக்கு வயசே கொறைஞ்சு போயிடுமே! அந்த நேரம் சின்னப் பொண்ணா மாறிடுவ…:) என்று அவளை கேலி செய்தார் சிவராமன்!


சரி! சரி! அதெல்லாம் இருக்கட்டும்! அந்த பொண்ணு வெச்சிட்டிருக்கிற குழந்தை எவ்வளவு அழகா சிரிக்குது பாருங்களேன்! குழந்தையோட சிரிப்புல எல்லாமே மறந்து போயிடுது!


உண்மை தான் உமா! எதுவுமே தெரியாத நிலை! இப்படியே இருந்திருந்தா நல்லா தான் இருந்திருக்கும்! ஆனா  நாம குழந்தையும் இல்ல! இங்க அரூபமா நடமாடும் சித்தர்களும் இல்ல!


சரி! நேரமாயிட்டே இருக்கு! அப்படியே  நாம கிரிவலத்தை ஆரம்பிப்போமா உமா!


பொறுமையா என் கைய பிடிச்சிட்டு வா!


இப்போ இந்த இடத்துல நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம்னு நினைச்சுக்கோ!


நம்ம வாழ்க்கைய இப்போ தான் ஆரம்பிச்சிருக்கோம்! சரி தானே!


இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு! பாதைல கல்லும் முள்ளும் இருக்கும்! பார்த்து வா!


நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!


கணவனுடன் கரங்கள் கோர்த்து ஜோதிரூபமாய் இருக்கும் அண்ணாமலையாரை வலம் வரத் துவங்கினாள் உமா!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

8 கருத்துகள்:

  1. முன்னால் கொஞ்சமும், பின்னால் கொஞ்சமும் குறைகிறதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை சார்! தேர்ந்த எழுத்தாளர் அல்லவே! முயற்சி தான்..:) பொறுத்துக் கொள்ளவும்!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. //நீ ஒண்ணும் கவலைப்படாதம்மா! நான் தான் உன் கூடவே வருவேனே! நா உன்னை பத்திரமா பார்த்துக்கறேன் போதுமா! அதேமாதிரி நீயும் என்ன பத்திரமா பார்த்துக்கோ!//

    அருமை. கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிம்மா.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. கதை நன்று, ஆதி. வயதாகும் போது ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு துணையாக இருப்பது மிக நல்ல விஷயம்.

    அப்பாவைப் பற்றி நினைக்கும் இடங்களில் ஆதி தெரிகிறார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி கீதா சேச்சி!

      முற்றிலும் கற்பனையால் சித்தரித்து கதாபாத்திரங்களை உருவாக்கும் அளவுக்கு நான் தேர்ந்த எழுத்தாளர் அல்லவே! சிறு முயற்சி தான்..:)

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  4. ரத்தினச்சுருக்கம்..
    ஒருவருக்கு ஒருவர் ஆதரவு..
    அருமை.

    கதை நன்றாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....