புதன், 20 டிசம்பர், 2023

கதம்பம் - இப்படியும் சில மனிதர்கள் - Dot Mandala on Cloth - மார்கழி கோலங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


*******


இப்படியும் சில மனிதர்கள் - 16 டிசம்பர் 2023:




சட்டென்று என் துப்பட்டாவை யாரோ பிடித்து இழுப்பதாகத் தோன்றவும் திரும்பி பார்த்தேன்! வயதான பெண்மணி ஒருவர் போஸ்ட் ஆஃபீஸில் என்னருகே அமர்ந்திருந்தார்!


இந்தத் துணி நல்லாருக்கு! கலரும் நல்லாருக்கு! அதான் பார்த்தேன்!


எங்க வாங்கினது?? என்று கேட்டார்!


ஆதார் அப்டேட்டுக்காக போஸ்ட் ஆஃபீஸில் காத்திருந்த நான்...'இப்போ 6ஆம் நம்பர் டோக்கன் தான் போகிறது! என்னோடது 52வது டோக்கன்! இப்படியே சும்மா உட்கார்ந்திருக்கிற நேரத்தில் ஏதாவது டைப் பண்ணலாமே என்று அலைபேசியை எடுத்த நிமிடத்தில் தான் இந்த உரையாடல் துவங்கியது..🙂


இங்க திருச்சில தாம்மா! என்றேன்!


அதான் கேட்டேன்! திருச்சில நூறு கடை இருக்கு! இது எந்தக் கடையில வாங்கினது?? என்றார்.


அந்த அம்மா கேட்டதும் சட்டென்று எனக்கு ஞாபகம் வரவில்லை..🙂 தோராயமாக 'சாரதாஸ்' என்றேன்!


ட்ரெஸ்ஸா வாங்கினதா? தெச்சதா?


இல்ல என் பாப்பாவுக்கு தான் வாங்கக் கேட்டேன்! அத நர்ஸிங் படிக்க வெக்கறேன்! நான் பூ வியாபாரம் தான் பண்றேன்!


அவ அப்பன் இருக்கான் பாரு அதான் எம் மவன் குடி குடின்னு காசே குடுக்க மாட்டான்! அந்த புள்ளைக்கு நா தான் எல்லாஞ் செய்யறேன்!


அதுவும் பாரு துணி எடுத்து குடுத்தா ஒரு மாசத்துலயா கிழிஞ்சு போகும்! இப்ப சேலை எடுத்து தரச் சொல்லி கேட்குது! வாங்கணும்!


இந்த புள்ளைங்க என்ன தான் ஃபோனில பேசுங்களோ தெரியலை! நின்னா உட்கார்ந்தான்னு எல்லாத்தையும் சொல்லிகிட்டு இருக்குதுங்க...!!


எனக்கு இந்த நொய்நொய்ன்னு பேசறதே பிடிக்காது..!!??


என்னை ஒருநிமிடம் கூட அலைபேசியை பார்க்க விடாமல் டைப் பண்ண விடாமல் இடைவெளி இல்லாமல் பேசிய அந்த வயதான பெண்மணியின் நிலையை எண்ணி வருத்தப்படுவதா? இல்லை இப்படி பேசியதற்காக கோபம் கொள்வதா? என்று தெரியாமல் விழித்தேன்..🙂


*****


என்ன ரோஷ்ணிம்மா! இந்தப் பக்கம்??


தெரிந்த பெண்மணி ஒருவர் அங்கு அமர்ந்திருக்கவே...


நல்லாருக்கீங்களா! ஆதார் அப்டேட்டுக்காக தாங்க! 52வது டோக்கன்! உங்களோடது?? என்றேன்.


46! என்றார்.


அப்படியா! நானும் எட்டு மணிக்கே வந்துட்டேன்! சரி! கொஞ்சம் வெளில வேலை இருக்கு! முடிச்சிட்டு வந்துடறேன்!  என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டேன்.


என் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு மீண்டும் அங்கு வரும் போது 35வது டோக்கன் சென்று கொண்டிருந்தது! இருக்கையை விட்டுவிட்டால் கிடைக்காது என்பதால் அங்கேயே அமர்ந்து விட்டேன்...🙂


ம்மா! ரெண்டு ஐநூறு ரூபாய் அக்கவுண்ட்ல போடணும்! இதுல எழுதிக் குடும்மா! என்று ஒருவர் slipஐ நீட்டவே எழுதிக் கொடுத்தேன்!


வரிசையாக ஒவ்வொரு டோக்கனாக வந்து கொண்டிருக்க என்னுடைய டோக்கன் வந்து வேலையும் முடிந்து விட்டது!


வெளியே வந்த பின் தான் என்னிடம்  பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் நினைவு வந்தது! நான் அங்கு மீண்டும் சென்ற போது அவரை அங்கு பார்க்கவும் இல்லை! அவர் சொன்ன 46ஆம் நம்பர் டோக்கன் அவருடையதும் இல்லை!!


ஒன்று அவருடைய டோக்கன் 20க்குள் இருக்கலாம்! அல்லது எனக்கு பின்பாகவும் இருக்கலாம்! எதற்காக இந்த பொய்?? இதனால் என்ன கிடைக்கப் போகிறது??


&^&^&^&^&^&


Dot Mandala on Cloth - ரோஷ்ணி கார்னர்:


மகள் தன் கல்லூரி ப்ராஜெக்ட்டுக்காக துணியில் வரைந்த Dot mandala ஓவியம்.


&^&^&^&^&^&


மார்கழி கோலங்கள்:





மார்கழி தொடங்கி விட்டது. எல்லா வருடங்கள் போலவே இந்த வருடமும் தினம் தினம் வீட்டு வாசலில் கோலம் போடுவது தொடர்கிறது.  முதல் சில நாட்கள் போட்ட கோலங்கள் உங்கள் பார்வைக்கு. மகள் ஒரு சிறு காணொளியாக (Youtube Shorts) அவரது Youtube பக்கத்தில் வெளியிடுவதும் தொடர்கிறது. அவரது Youtube பக்கத்திற்கான இணைப்பு கீழே.  முடிந்தால் பாருங்களேன்.


Roshni's Creative Corner - YouTube


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

14 கருத்துகள்:

  1. ஆமாம், அந்த பூ விற்பதாகச் சொன்ன பெண்மணி ஏன் பொய் சொன்னார்?  என்ன விவரங்கள் யார் யாரிடமிருந்து விசாரித்து சென்றாரோ!  அல்லது அவருக்கு வீட்டில் பேச ஆள் இல்லாது தனிமையில் இருந்திருக்க வேண்டும்!!

    ரோஷ்ணியின் ஓவியம், கோலங்கள்  டாப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பெண்மணிகளைப் பற்றி இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அதில் இரண்டாமவர் தான் பொய் சொன்னார்! பூ விற்கும் பெண்மணி அல்ல!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. நம் திறமைக்கு ஏற்ற படிப்பு படிக்கும்போது அதில் முன்னேறும் வாய்ப்பு மிக அதிகம். மகளின் கைத்திறன் பாராட்டத் தக்கது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. ஆதரவாகப் பேசவோ இல்லை பேசுவதைக் கேட்கவோ ஆளில்லாத ஒருவருக்கு உங்கள் நேரத்தைச் செலவழித்தோம் என சந்தோஷம் கொள்ளுங்கள். வாழ்க்கையில்தான் எத்தனை விதமான மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். ஆனால் அவர் தானே நொய்நொய்னு பேசினா பிடிக்காது என்று சொல்லி விட்டு பேசிக் கொண்டிருந்தார்..:)

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  4. ரோஷ்ணியின் மண்டலா ஓவியம் அழகாக உள்ளது. ஓவியத்தின் கலர் காம்பினேஷன் அருமை.

    மார்கழி கோலங்கள் ஒவ்வொன்றும் அழகு. எந்த அளவு ஈடுபாட்டுடன் நீங்கள்/ரோஷ்ணி வண்ணக் கோலமிடுகிறீர்கள் என்பதை கோலங்கள் பிரதிபலிக்கின்றன. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த ஓவியத்தைப் பற்றியும் கோலத்தை பற்றியும் தெரிவித்த கருத்துகளுக்கு மிக்க நன்றி. கோலம் மகள் தான் போடுகிறாள். வண்ணம் கொடுக்க நான் உதவுகிறேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி .

      நீக்கு
  5. ஆதி, சந்தோஷப்படுங்க!!!! இந்த மாதிரி மனிதர்களைச் சந்திக்க நேர்ந்து அதனால் கிடைக்கும் அனுபவத்திற்கு. இதிலிருந்துதான் நிறைய கதைகள் கிடைக்கின்றன. பதிவுகளுக்கும் வழி பிறக்கின்றது!!!! ஆனால் நமக்குப் பொறுமை வேண்டும். நம்மைச் சுற்றி உள்ளவர்களை, நிகழ்வுகளை வைத்துதானே எழுதுகிறோம். உங்கள் உடை பற்றிக் கேட்டவருக்கு என்ன பிரச்சனையோ...

    46 டோக்கன் பெண்மணி நான் நினைக்கிறேன் ஏதோ தெரியாமல் சொல்லியிருக்கலாம் நம்பர் நினைவில்லாமல் கூட அலல்து நாம் நினைப்பது ஒன்று நம் வாயில் டக்கென்று வருவது ஒன்று அப்படியும் இருக்கலாம்...இல்லை வேண்டுமென்றே கூடச் சொல்லியிருக்கலாம்,......அவருக்கும் முடிந்திருக்கலாம் அல்லது பின்னால் நம்பராக இருக்கலாம் வெளியில் போய் வரலாம் என்று போயிருக்கலாம்....

    இதுவும் உங்களுக்குக் கதை எழுத சௌகரியமாக இருக்கும் கொஞ்சம்யோசித்தால் கதை பிறக்கும். எனக்கு வருகிறது இந்த இரு பெண்மணிகளைப் பற்றிச் சொல்லியதிலிருந்து ஆனால் இப்போது எழுதுவதற்கான மனநிலை இல்லை வேறு வேலைகள் நிறைய இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அனுபவங்களிலிருந்து தான் கதைகள் பிறக்கின்றன.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. ரோஷ்ணியின் கோலங்கள், Project design எல்லாமே மிக அழகு. யுட்யூபிலும் பார்க்கிறேன், ஆதி. நமக்குப் பிடித்த விஷயத்தை நாம் அதில் ஆர்வத்துடனும் ஆழ்ந்தும் செய்யும் போது மிளிர்வதற்கான வாய்ப்புகள் நிறைய. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த ஓவியத்தைப் பற்றி தெரிவித்த கருத்துக்கு மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. நிறைய மனிதர்களுக்கு நம் காது போதும், காது கொடுத்து கேட்க ஆள் இல்லாமல் தவிக்கும் காலம். காது கொடுத்து கேட்டால் அவர்களின் மனது அமைதி அடையும்.
    அமைதியை நீங்கள் தந்து இருக்கிறீர்கள்.


    மகள் ஒரு சிறு காணொளியாக (Youtube Shorts) அவரது Youtube பக்கத்தில் வெளியிடுவதும் தொடர்கிறது. //

    மிக அருமையாக இருக்கிறது.
    ரோஷ்ணியின் கை வண்ணம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அம்மா. ஆனால் அந்த அம்மா தான் தனக்கு நொய்நொய்னு யாராவது பேசினால் பிடிக்காது என்று சொன்னார்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....