வெள்ளி, 17 ஜூலை, 2015

ஃப்ரூட் சாலட் – 138 - தில்லியில் ”அம்மா” உணவகம் – சங்கு - வைரம்


இந்த வார செய்தி:

 படம்: இணையத்திலிருந்து....

தமிழகத்தில் செயல்பட்டு வரும் “அம்மாஉணவகம் தில்லி அரசாங்கத்தினையும் கவர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மலிவு விலை உணவகங்களைப் போலவே தலைநகர் தில்லியிலும் உணவகங்கள் திறக்க திரு அர்விந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு முடிவு செய்திருக்கிறது. முதல் கட்டமாக 10 உணவகங்கள் திறக்கப்பட உள்ளதாக இன்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 

அங்கே அம்மா உணவகம் என்றால் இங்கே பெயர் மட்டும் வித்தியாசம் – “ஆம் ஆத்மி உணவகம்”.  முதல் கட்டமாக 10 இடங்களில் தொடங்கப்படவுள்ள இவை, படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  அங்கே ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்தால், அதையே இங்கே கொடுக்க முடியாது. இங்கே அதிகமான மக்கள் உண்பது சப்பாத்தி என்பதால், சப்பாத்தி, சப்ஜி கொடுக்கப் போகிறார்கள். 

ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விலையில் உணவுகள் வழங்கப்பட இருக்கின்றன.  முந்தைய அரசாங்கத்தினால் “ஜன் ஆஹார்என்ற பெயரில் 20 ரூபாய்க்கு உணவு சில இடங்களில் வழங்கப்பட்டாலும் அவற்றின் தரம் பற்றிய எந்த கட்டுப்பாடும் இல்லாது இருந்தது. ஆம் ஆத்மி உணவகங்களில் தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு, தரமான உணவு வழங்கப்படப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.  கூடவே இந்த உணவகங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் [RO] கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

வெகு விரைவில் திறக்கப்படவுள்ள இவ்வுணகங்கள் தொடங்குமுன்னர், தமிழகத்தின் அம்மா உணவகங்களையும் ஒடிசா மாநிலத்தில் அரசு நடத்தும் உணவகங்களையும் சென்று பார்த்து அதன் பின்னரே இம்முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. 

தில்லியில் இருக்கும் பல ரிக்‌ஷா ஓட்டுனர்கள், கூலித் தொழிலாளர்கள், நடைபாதையில் வசிக்கும் பல ஏழைகள் ஆகிய அனைவருக்கும் இத்திட்டம் மூலம் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.  உணவகங்கள் திறந்த பிறகு தான் அவற்றில் கிடைக்கும் உணவின் தரம் எப்படி இருக்கும் என்று தெரியும்.

பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என!

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:

எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை. ஆனால் எல்லா பிள்ளைகளுமே, இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் வளர்க்கப்படுகிறார்கள்...

இந்த வார காணொளி:

சின்ன முதலீடு பெரிய லாபம்!

窩心小狗哪裡找! - 鍾意請廣傳/Please SHARE
<窩心小狗哪裡找!> - 鍾意請廣傳/Please SHARE//Very Sweet Puppy Dog...//那麼體貼,小編想要呀!Source: Kiatnakin Bank#dog #pet #bestfriend #love #happypeople“The best way to cheer yourself is to try to cheer someone else up” - Mark Twain
Posted by 開心快活人 on Thursday, May 21, 2015



ஒரு கவிதை......

சங்கு
°°°°°°°°



அலை ஒதுக்கிய சங்கு அறியும்
பிறப்பும் இறப்பும்
உடலின் வடிவத்துக்கு தான்
உயிரின் உருவத்துக்கு அல்ல என்று !

அடியாழத்தில் உணர்ந்த
பிரபஞ்சத்தின் அமைதியும்
அலை ஆர்ப்பரிக்கும்
அண்டத்தின் ஓசையும்
ஒரே மூலத்திலிருந்து
உதித்தவை தான் !

சூரியச் சுள்ளலும்
நிலவின் தண்மையும்
ஒரே நிகழ்வின் இரு
தன்மைகள் தான் !

கடலிலே பிறந்து
கடலிலே அழியும்
அலையை வேடிக்கை பார்க்கிறது
கரை ஒதுங்கிய சங்கு !!!

~~~~~
ஸ்ரீ ~~~~~

அருமையான கவிதை. எழுதிய தோழி ஸ்ரீமதிக்கு வாழ்த்துகளும் பூங்கொத்தும்!

படித்ததில் பிடித்தது:

மலைகளினூடே பயணம் செய்து கொண்டிருந்தார் ஒரு மூதாட்டி. அங்கே ஒரு அருவியின் அருகே அவருக்கு விலைமதிப்பில்லாத உயர்ந்ததோர் வைரக்கல் கிடைக்க, அதை எடுத்து தனது துணி மூட்டைக்குள் வைத்துக்கொண்டார். அடுத்த நாள், அவரது பயணத்தில் பசியோடிருந்த ஒரு மனிதரைக் கண்டார். அவர் மூதாட்டியிடம் ஏதாவது கொடுக்கச் சொல்லிக் கேட்க, தனது துணி மூட்டையிலிருந்து தேடி அந்த வைரக்கல்லைக் கொடுத்தாராம். 

என்கிட்ட இது மட்டும் தான் இருக்கு.... எடுத்துக்கோ..... இதை வைத்து உன் வாழ்வில் முன்னேறு....” 
வைரக்கல்லை, அதிலிருந்து வீசும் ஒளியைக் கண்ட அந்த வழிப்போக்கர், தனக்குக் கிடைத்த வைரம் கொண்டு வாழ்நாள் முழுவதும் சுகமாக இருக்க முடியும் என்று சந்தோஷத்தோடு மூதாட்டியிடம் விடை பெற்றுச் சென்று விட, மூதாட்டி எந்த வித உணர்வுகளும் இல்லாது தன் வழியே சென்று கொண்டிருந்தார். 
சில நாட்களுக்குப் பிறகு, அந்த வழிப்போக்கர், மூதாட்டியிடம் வந்து, “தாயே...  இந்த விலைமதிப்பில்லாத வைரத்தினை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து வாங்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டேன். ஆனால் பிறகு யோசித்துப் பார்க்கும்போது இந்த கல்லின் விலையை விட, அதன் விலை தெரிந்தும், மிகச் சாதாரணமாக எடுத்து என்னிடம் கொடுக்க உங்களால் முடிந்ததே...  அந்த குணத்தினை எனக்கும் கொடுங்கள். அது தான் இந்த கல்லின் விலையை விட பல மடங்கு உயர்ந்தது. எனக்கும் அந்த ஈகை குணத்தினையும், அறிவையும் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

 ஓவியம்: ரோஷ்ணி.

அனைத்து நண்பர்களுக்கும் ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 15 ஜூலை, 2015

சங்கத்தில் நீங்களும் இருக்கீங்களா?



பல சமயங்களில் போதும் என்கிற மனம் இல்லாது எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். பணம், புகழ், வீடு, வசதி, என எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். எத்தனை கிடைத்தாலும், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என தொடர்ந்து நிம்மதியில்லாத ஒரு தேடல்.  ஓட்டம் முடிவதே இல்லை – நம் மூச்சு நிற்கும் வரை.

எல்லோராலும் பட்டினத்தார் போல இருந்து விட முடிவதில்லையே.... அவருக்கென்ன சுலபமாய்ச் சொல்லி விட்டார்.  அப்படி என்ன சொல்லி விட்டார்னு தானே கேட்கறீங்க! கேளுங்க!

உடை கோவணம், உண்டு உறங்கப் புறந்திண்ணை, உண்டு உணவிங்கு
அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே விடை ஏறும் ஈசர் திருநாமம் உண்டு, இந்த மேதினியில் வடகோடு உயர்ந்தென்ன, தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே.


அதாவது, “இந்த பூவுலகில் வாழ்வதற்கு வழியா இல்லை? உடுக்க கெளபீனம், படுத்து உறங்குவதற்கு வீட்டின் வாயிற்புறத் திண்ணை, பசிக்கிறதா கவலை இல்லை உண்பதற்கு இலைகள், காய்கள் இவைகள் உண்டு, தாகமெடுத்தால் அருந்துதற்குத் தண்ணீர் உண்டு, உற்ற துணையாக ரிஷப வாகனம் மீது அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருமந்திரமுண்டு, ஆதலினாலே இவ்வுலகில் எனக்கு என்ன கவலை. அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனுடைய வடகோடு உயர்ந்தால் என்ன, தென்கோடு தாழ்ந்தால்தான் எனக்கென்ன கவலை. (மூன்றாம் பிறையின் வடகோடு உயர்ந்து, தென்கோடு தாழ்ந்திருந்தால் மழைக்கு அறிகுறி. இப்படி உடுக்க, இருக்க, உண்ண, அருந்த, எண்ண எல்லாம் இலவசமாய்க் கிடைக்கும்போது சந்திரன் காட்டும் குறிகளின்படி மழை பெய்தால் என்ன, பெய்யாவிட்டால்தான் என்ன, நன்மைகள் விளைந்தாலென்ன, தீமைகள் விளைந்தால் என்ன). [பாடலும் பொருளும் வல்லமை தளத்திலிருந்து]

என்னடா, திடீர்னு, இப்படி ஒரு பதிவு என சந்தேகம் வந்துடுச்சா உங்களுக்கு. சமீபத்தில் மின்னஞ்சலில் ஒரு நண்பர் ஆங்கிலத்தில் ஒரு செய்தியை பகிர்ந்து இருந்தார். அது படித்த பிறகு தோன்றிய விஷயம் தான் இப்பகிர்வு.

அப்படி என்னய்யா அனுப்பினார் நண்பர்?

ஒரு நாட்டோட ராஜா - வசதியான வாழ்க்கை, ஆடம்பரமான மாளிகை, கையைத் தட்டினால், வேலை செய்ய ஓடோடி வந்து நிற்கும் வேலைக்காரர்கள் – என இத்தனை இருந்தும், ஏனோ வாழ்வில் மகிழ்ச்சியோ, திருப்தியோ இல்லை. அப்படி இருக்கும் போது, அவரிடம் வேலை பார்க்கும் ஒரு வேலைக்காரன், மிகுந்த மகிழ்ச்சியுடன், பாட்டுகளை பாடியபடியே வேலை செய்வதைப் பார்த்தாராம். எப்படி இவனுக்கு மட்டும்  இவ்வளவு மகிழ்ச்சி எப்படி என சந்தேகம் வர, அவனையே கேட்டாராம்.

அதற்கு அவன், அரசே நான் சாதாரண வேலைக்காரன் தான். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பெரிதாய் தேவைகள் ஒன்றுமில்லை. உறங்க ஒரு இடமும், உண்ண உணவும் இருக்கிறது. அதனால் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்என்று சொல்ல, அரசனுக்கு அந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை.  அது எப்படி அவன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் என்று யோசனையில் ஆழ்ந்தார்.

 இப்பதிவிற்கான ஓவியம் - வரைந்தது என் மகள் ரோஷ்ணி.  இணையத்தில் இருந்த ஒரு படம் பார்த்து வரைந்தது.....

அவரது மந்திரியை அழைத்து விஷயத்தினைச் சொல்ல, அவர் சொன்னாராம், “அடடே இந்த வேலைக்காரன் இன்னும் 99-சங்கத்தில் சேரவில்லை போலும்என்றாராம்.

அது என்ன 99-சங்கம் என நீங்களும் அரசனைப் போலவே கேள்விக்குறியோடு பார்ப்பது தெரிகிறது! மேலே படியுங்கள்.

அந்த வேலைக்காரனின் வீட்டு வாசலில் ஒரு பொன்முடிப்பை வைக்கச் சொல்லி உத்தரவு போட்டார் மந்திரி.  அந்த பொன்முடிப்பில் மொத்தமாக இருந்தது 99 தங்கக் காசுகள் மட்டுமே. வீட்டு வாசலில் இருந்த பொன்முடிப்பில் தங்கக்காசுகளை பார்த்ததும் வேலைக்காரனுக்கு மனதிலே ஆனந்தம். ஆனால் எத்தனை முறை எண்ணினாலும், அதில் 99 தங்கக் காசுகள் மட்டுமே இருக்க, அட இதில் மேலும் ஒரு தங்கக்காசு இருந்தால் நம்மிடம் 100 தங்கக் காசுகள் இருக்குமே....  எப்பாடு பட்டாவது ஒரு தங்கக் காசு வாங்க வேண்டும் என முடிவு செய்தான்.

அன்றிலிருந்து இன்னும் அதிகமாய் உழைக்க ஆரம்பித்தான். வீட்டாரிடம் அதிகமாக செலவு செய்யக்கூடாது என சண்டை போட ஆரம்பித்தான். பாடல், மகிழ்ச்சி என அனைத்தும் போனது. முகத்தில் எப்போதும் ஒரு வித கோபம்.  அவன் சுத்தமாக மாறிப் போனான். அப்படி மாறிப் போன அவனைப் பார்த்த ராஜா, தனது மந்திரியிடம் ஏன் இப்படி எனக் கேட்க, மந்திரி சொன்னது நம்மில் பலருக்கும் பொருந்தும். ஆஹா, அவனும் 99-சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிட்டான்!

நாம் அனைவருமே இந்த 99-சங்கத்தில் உறுப்பினர்களாக ஆகிவிட்டோம். மேலும் மேலும் தேவைகளை அதிகரித்துக் கொண்டோம். அதற்காக மேலும் மேலும் உழைக்க ஆரம்பித்து மகிழ்ச்சியை தொலைத்து விட்டோம்.  ஆனாலும் எத்தனை கிடைத்தாலும், நம் மனதில் இப்படி சொல்லிக் கொள்கிறோம் – இன்னும் இது மட்டும் கிடைத்து விட்டால் போதும், அதற்குப் பிறகு எதற்கும் ஆசைப்பட மாட்டேன்!”.  ஆனால் மேலும் மேலும் ஆசைகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறதே தவிர போதும் என்ற மனமே நமக்கு வருவதில்லை!

99-சங்கத்தில் சேர எந்த வித கட்டணமும் இல்லை. ஆனால் அதில் இருக்க வாழ்நாள் முழுவதும், ஏதோ விதத்தில் கட்டணம் செலுத்திக் கொண்டே இருக்கிறோம்.

இந்த 99-சங்கத்தில் நீங்களும் ஒரு உறுப்பினரா? சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

திங்கள், 13 ஜூலை, 2015

தள்ளாடும் தமிழகம் – சென்னை 200 ரூபாய் மட்டும்



சமீபத்தில் சில வேலைகளுக்காக தமிழகம் வந்திருந்தேன். தில்லியிலிருந்து நேரடியாக திருச்சிக்குச் செல்லும் திருக்குறள் விரைவு வண்டியில் பயணம்.  அதில் கிடைத்த அனுபவங்கள் பிறிதொரு சமயத்தில் பதிவாக வெளி வரலாம்! இப்போதைக்கு திருச்சியிலிருந்து தில்லி திரும்பும்போது, சென்னை வரை பேருந்தில் பயணம் செய்ததில் கிடைத்த சில அனுபவங்கள் இங்கே பதிவாக! 

Neat-ஆ வீட்டுக்குப் போங்க:

சென்னையிலிருந்து காலையில் புறப்பட வேண்டும் என்பதால் திருச்சியிலிருந்து இரவுப் பேருந்தில் பயணம் செய்ய முடிவு செய்தேன். திருவரங்கத்திலிருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில் அமர்ந்து கொள்ள, புறப்பட்ட சற்று நேரத்திலேயே சத்திரம் பேருந்து நிலையம் வந்துவிட்டது. இரவு நேரம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. எனது பக்கத்து ஜன்னலோர இருக்கை காலியாக இருக்க, சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒரு மனிதர் அதில் அமர்ந்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்து அவரை வழியனுப்ப வந்திருந்த இருவரிடம் “தம்பிகளா, Neat-ஆ வீட்டுக்கு போயிடணும்... எதுவும் ரவுசு பண்ணக்கூடாது! சொல்லிட்டேன்என்றார். பேருந்து புறப்பட, அடித்த காற்றில் அவர் சொன்ன Neat-இன் அர்த்தம் எனக்குப் புலப்பட்டது! ஒவ்வொரு முறையும் காற்றடிக்கும் போதெல்லாம் எனது நாசிகளிலும் டாஸ்மாக் வாசம் ஏற மத்தியப் பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது எனது நடையிலும் தள்ளாட்டம்!

மருத்துவக் குறிப்பு புத்தகம்:

பேருந்துகளில் புத்தகம் விற்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். இரவு பத்து மணிக்கு மேல் புத்தகம் விற்கும் ஒருவரை திருச்சி நகரப் பேருந்தில் பார்த்தேன். சூரியத் தொலைக்காட்சியில் மூலிகை மருத்துவக் குறிப்புகள் சொல்பவர் எழுதிய புத்தகம் என்று சொல்லி பத்து ரூபாய்க்கு புத்தகம் விற்றார் ஒரு இளைஞர்.  எந்தப் புத்தகம் விற்கிறதோ இல்லையோ, மருந்துகள் பற்றிய புத்தகம் விற்பனையாகிறது! இரவு பத்து மணிக்கு மேலும் புத்தகம் விற்ற அந்த இளைஞரிடமிருந்து ஆறு – ஏழு பேர் புத்தகம் வாங்கினார்கள். புத்தகம் விற்ற இளைஞரிடமிருந்து பேருந்தின் நடத்துனரும் ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு [காசு கொடுத்தாரா?] அதை என்னிடம் கொடுத்து படிச்சுட்டு வாங்க, வாங்கிக்கிறேன்என்றார்! ஒரு வேளை புத்தகம் படிப்பது எனக்குப் பிடிக்கும் என அவருக்கும் தெரிந்து விட்டதோ! இல்லை இப்படியும் இருக்கலாம் – “மருத்துவ குறிப்புகள் உங்களுக்கு அவசியம் தேவைஎன அவருக்குத் தோன்றியிருக்கலாம்! Neat-ஆக இருந்தவரின் பக்கத்தில் இருந்ததால் என்னையும் அப்படி நினைத்திருக்கலாம்! புத்தகத்தில் போட்டிருந்த விலை – ரூபாய் 50/-.  பத்து ரூபாய்க்கு எப்படி கட்டுப்படி ஆகிறது? இல்லை அடக்க விலையே ஐந்து ரூபாய் தானா? கடைகளில் விற்கும்போது ரூபாய் 50/- பத்து சதவீத தள்ளுபடி போக 45/- என நாமும் சந்தோஷமாக வாங்குவோம்.....

200 ரூபாய்க்கு சென்னை!

மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ளே நுழைந்ததும் தனியார் பேருந்துகளுக்கு ஆள் பிடிக்கும் கும்பல்கள் உங்களைச் சூழ்ந்து கொள்வது வழக்கம். AC Bus, Sleeper Bus என்று பலரும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள் – அதிலும் இரவு நேரங்களில் இவர்களது நடமாட்டம் அதிகம்! சென்னைக்குப் போக இவர்கள் சொல்லும் கட்டணத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை – வாய்க்கு வந்த கட்டணம் தான் – எவ்வளவு அதிகம் கேட்கிறார்களோ, அவ்வளவு அதிக Commission யாருக்கோ போகிறது! இவர்களைக் கடந்து அரசுப் பேருந்துப் பக்கம் வந்தால் 200 ரூபாய்க்கு சென்னை, 200 ரூபாய்க்கு சென்னைஎன்று கூவிக் கூவி சென்னையை திருச்சியில் விற்றுக் கொண்டிருந்தார் ஒரு அரசுப் பேருந்து நடத்துனர்! நானும் 200 ரூபாய் கொடுத்து சென்னையை வாங்கி விட்டேன்!

கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும்:

எனது இருக்கைக்கு இரண்டு இருக்கைகள் முன்னால் ஒரு இளைஞர் – முகத்தில் ஒரு மாத தாடி! அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியது பேருந்தில் இருந்த அனைவருக்கும் கேட்டது! இரவு பதினோறு மணிக்கு, யாரையோ கொஞ்சிக் கொண்டிருந்தார். “அப்படி என்ன நேரமாச்சு, தூங்க இன்னும் நேரம் இருக்கே, பேசு, பேசு செல்லம்!அதற்குப் பிறகு பேசிய பலவும் இங்கே எழுத முடியாத அளவு இருந்தது! “நாராயணா, இந்தக் கொசு தொல்லை தாங்க முடியலையேMoment பேருந்தில் இருந்த பலருக்கும்!

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதே!:

திருச்சியிலிருந்து பெரம்பலூர் வரை வந்தாயிற்று. பெரம்பலூரில் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். எனக்கு முன்னால் இருந்த இருக்கையில், ஜன்னலோர இருக்கையில் ஒரு இளைஞர் இருக்க, பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. பெரம்பலூரில் ஏறியவர், நேராக வந்து, ஜன்னலோர இருக்கை தனக்கு வேண்டுமெனக் கேட்க, அதில் அமர்ந்திருந்தவர் தரமுடியாது எனச் சொல்ல, “இவர் தனக்கு வாந்தி வருமெனச் சொன்னதோடு கொஞ்சம் சத்தமும் எழுப்பினார்!ரொம்ப பழைய Technique என்றாலும் Effective Technique! இரவு முழுவதும் வாந்தி எடுக்கவே இல்லை என்பதை உங்களுக்குச் சொல்லணுமா என்ன... 

அவர் செய்த இன்னுமொரு Atrocity.  பக்கத்து இளைஞர் நன்கு உறங்க, அவர் வைத்திருந்த அம்மா குடிநீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இவர் குடித்துக் கொண்டே இருந்தார் – அதுவும் வாயினுள் பாதி பாட்டில் போகும்படி வைத்து! இறங்கும்போது இது எதுவும் தெரியாமல் மீதி இருந்த தண்ணீரோடு அம்மா குடிநீர் பாட்டில் முதல் இளைஞரின் Back-pack ஓரத்தில் தஞ்சம் புகுந்தது!

சிங்கம் ஒன்று புறப்பட்டதே!:

பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பேருந்தின் சத்தத்தினை மிஞ்சுகிற அளவிற்கு பின்னாலிருந்து ஒருவர் கர்ஜித்துக் கொண்டிருந்தார். கூடவே என்னை யாருன்னு நினைச்சே....  பொலி போட்டுடுவேன்....கூடவே சில வசவுகள்.  அவ்வப்போது கர்ஜனை....  திரும்பிப் பார்க்க, அவர் பேருந்தில் அமர்ந்திருந்தாலும் ஆடிக்கொண்டிருந்தார் – பேருந்து தரும் அதிர்வுகள் காரணமல்ல என்று சொல்லவும் வேண்டுமோ?  இரவு முழுவதுமே கர்ஜனை கேட்ட படியே இருந்தது! சிங்கம் எங்கே இறங்கப்போகுதோ என நினைத்துக் கொண்டிருக்க, நடத்துனரின் குரல் வந்தது! சிங்கம் தள்ளாடியபடியே கையில் பையோடு முன்னேறியது! இறங்கிய இடம் எவ்வளவு Apt-ஆ இருக்கு பாருங்க! – சிங்கம் இறங்கிய இடம் – சிங்கபெருமாள்கோவில்!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்:

இரவு நேரப் பேருந்து பயணம் எனில் பேருந்தில் இருக்கும் பலரும் உறங்குவது வழக்கம். பாவம் – ஓட்டுனரும் நடத்துனரும் தான். நடத்துனராவது சில சமயங்களில் உறங்கிவிடுகிறார்.  ஓட்டுனர் உறங்கிவிட்டால், பேருந்தில் உள்ள பலரும் நீங்காத்துயிலில் ஆழ்ந்துவிட வாய்ப்பு அதிகம்! அதனால் தானோ என்னவோ, நான் சென்ற பேருந்தின் ஓட்டுனர் பாடல் கேட்டபடியே வந்தார். தூக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவு தராத அளவு குறைந்த ஒலியில் தான் பாடல்கள் ஒலித்தது.  இளையராஜா பாடல்கள் பலவும் கேட்டபடியே வந்தார். நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்! அவருக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று முறை வந்தது அப்பாடல்....  என்ன பாடல்?  கொஞ்சம் பழைய பாடல்.  Situation Song போல! பாடல் என்னன்னு தானே கேட்கறீங்க! இதோ கேளு[பாரு]ங்களேன்!




இப்படியாக நானும் சென்னை வந்து சேர்ந்த போது காலை மணி 05.00.  சென்னை கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக் கொண்டிருக்க, நான் உறங்கத் தயாரானேன்! தில்லி செல்ல, கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அதுவரை உறக்கம்! 

மீண்டும் சந்திப்போம்.....

வெள்ளி, 10 ஜூலை, 2015

ஃப்ரூட் சாலட் – 137 – மருமகள் மெச்சிய மாமியார் – வீட்டு சாப்பாடு - மெட்ரோ



இந்த வார செய்தி:



தில்லியின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு இடம் உத்தம்நகர்.  அங்கே வசிக்கும் கவிதா என்பவருக்கு அடிக்கடி வாந்தி வந்தது மட்டுமன்றி உடல் எடையும் தொடர்ந்து குறைந்து வரவே, மருத்துவமனைக்குச் சென்று பல சோதனைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.  அப்போது தான் தனக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரிய வந்திருக்கிறது.  சிறுநீரக மாற்றுச் சிகிச்சை ஒன்று தான் வழி என்று சொல்லி விட, கவிதாவின் தாயார் தனது சிறுநீரகத்தைத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்.

அறுவை சிகிச்சைக்கான நாளும் வர, கடைசி நேரத்தில் கவிதாயின் தாயார், தனது மகளுக்கு சிறுநீரகம் தர முடியாது என்று சொல்லிவிட சிக்கல் கவிதாவிற்கு.... தனது வாழ்க்கை அவ்வளவு தான் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் குரல் ஒன்று கேட்டது! உங்கம்மா உனக்கு சிறுநீரகம் தராவிட்டால் என்ன, உடைந்து போகக்கூடாது.... நானும் உனக்கு அம்மா தான்என்று சொல்லி, தனது சிறுநீரகத்தினை தானம் செய்ய முன்வரவே அவருக்கும் சோதனைகள் மேற்கொள்ள அவர் தானம் செய்ய முடியும் என்று மருத்துவர்களும் கூறி விட்டார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை முடித்து சில நாட்கள் வரை மருத்துவமனையில் இருந்தார்கள்.  தற்போது இருவரும் வீட்டிற்கு திரும்பியாச்சு! மாமியார், மருமகள் இருவரும் நலம்!  

இந்த சிகிச்சை செய்த மருத்துவர்கள், இது வரை இது போன்று மருமகளுக்கு சிறுநீரகம் கொடுக்க முன் வந்த மாமியார்களை கண்ட்தில்லை என்று சொல்லி மாமியாருக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்கள். 

மருமகள் மெச்சிய இந்த மாமியாருக்கு நமது சார்பிலும் ஒரு பூங்கொத்து!

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:

ஆண்கள் எல்லாம் தெரிந்த மாதிரி நடிப்பதிலும், பெண்கள் எதுவுமே தெரியாத மாதிரி நடிப்பதிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்!

-          யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் உண்மை மாதிரி தான் தோணுது! :)

இந்த வார காணொளி:

அம்மாவின் கையால் சாப்பாடு...... 


One of the best videos you will ever see... Dedicated to all those who are away from home... Tears !!!
Posted by Shashank Thala on Monday, April 27, 2015



இந்த வார புகைப்படம்:

நல்ல மனம் வாழ்க! அடிக்கும் வெயிலில் மனிதர்களுக்காவது தண்ணீர் வாங்கி குடிக்க முடிகிறது.... இவை என்ன செய்யும் என யோசித்து இப்படி ஏற்பாடு செய்திருக்கும் அந்த நல்ல மனம் வாழ்க!



படத்தினை தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்த சென்னை பித்தன் ஐயாவிற்கு நன்றி.


மெட்ரோ மேனியா:



சென்னையில் மெட்ரோ வந்தாலும் வந்தது, முகப்புத்தகத்திலும், செய்திகளிலும் மெட்ரோ மாட்டிக்கொண்டு முழிக்கிறது! அனைத்து கட்சிகளும் தாங்களே மெட்ரோ கொண்டு வந்ததாக சொல்லிக் கொள்ள, மெட்ரோவில் பயணம் செய்கிறோம் என பல அலப்பறைகள் கொடுக்க, ஒரு சில பயணிகள் மெட்ரோவில் பயணக் கட்டணம் என்று சொல்கிறார்கள்.  கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும், தில்லியில் பயணித்த எங்களுக்கு இக்கட்டணம் அதிகமாகத் தெரியவில்லை. 

தில்லியில் கடந்த சில வருடங்களாகவே குறைந்த பட்ச கட்டணம் ஒன்பது ரூபாய் [ஒரு நிலையத்தில் புறப்பட்டு அடுத்த நிலையத்திலேயே இறங்கினாலும்!]. இந்த கட்டணத்தை ஏற்ற வேண்டுமென மூன்று நான்கு வருடங்களாகவே மெட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது! இன்னும் சில நாட்களில் ஏற்றப்போவதாக செய்தியும் உண்டு! அதிக பட்ச தொலைவு செல்லும் போது ஆட்டோ அல்லது Call Taxi-ஐ விட நிச்சயம் குறைவான கட்டணமாகவே இருக்கும். அதுவும் சூடு வைத்த சென்னை ஆட்டோக்களுக்கு இது எவ்வளவோ மேல்! செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்றுவிடலாம் என்பது கூடுதல் வசதி.


படித்ததில் பிடித்தது
வாடகைக் கார் ஒன்றில் பயணிக்கும் போது ஏதோ கேட்பதற்காக ஓட்டுனரைத் தொட்டாராம் பயணி.  அவர் தொட்டவுடன், அலறிய ஓட்டுனர், தட்டுத்தடுமாறி, சாலையிலிருந்து விலகி நடை பாதையில் சென்று சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு கடையை கிட்டத்தட்ட மோதும் நிலைக்கு வந்து வண்டியை நிறுத்தினாராம்.
அடடா....  நான் சாதாரணமா தொட்டதுக்கே இப்படி ஆயிடுச்சே...  என்று பயணி, ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்க.....  அப்போது அந்த ஓட்டுனர் சொன்னாராம்......
....
....
....
....
உங்க மேல தப்பு ஒண்ணும் இல்ல! நேத்து வரைக்கும் நான் சவ ஊர்திஓட்டிட்டு இருந்தேன். இன்னிக்கு தான் பயணிகள் வாகனம் ஓட்டறேன்! பழைய நினைப்புல பயந்துட்டேன்! 
யோசிக்கும் போதே டெரரா இருக்குல்லே!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.