திங்கள், 7 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே



இரு மாநில பயணம் – பகுதி – 35

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காட்டு ராஜா...

இரவு நேரத்தில் வனப்பகுதியில் உலா போகலாமா என்று மோஹித் கேட்க, போகலாம் என்று சொல்லி விட்டோமே தவிர, அதற்கு அனுமதி கிடையாதே, எப்படிச் செல்ல முடியும் என்று தோன்றியது. வனப் பகுதி என்றால் வனப்பகுதி அல்ல. இந்தப் பகுதியில் நிறைய கிராமங்கள் – Bபோஜ்டே கிராமம் போலவே நிறைய கிராமங்கள் உண்டு – வனப்பகுதிக்கு வெளியே அமைந்துள்ள இந்த கிராமங்களில் அவ்வப்போது சிங்கத்தின் நடமாட்டம் இருப்பதுண்டு. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அப்படி வெளியே நடமாடும் சிங்கத்தினைப் பார்க்க முடியும் என்று சொன்னார் மோஹித். இப்படி நடமாட்டம் இருந்தால் அதைப் பார்த்து தகவல் சொல்லிக் கொள்கிறார்கள் – இங்கே இருக்கும் தங்குமிட உரிமையாளர்கள்.
 
உணவு தயாராகும் சமயத்தில் நாங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம். மோஹித் அவ்வப்போது அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். எட்டு மணிக்கு மேல் உடனே புறப்படுங்கள் – சிங்கம் ஒன்று இரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதாம், இப்போது தான் தகவல் வந்தது – போகலாம் என்று சொல்ல, எங்கள் வாகனத்தில் கிராமத்திற்குள் சென்றோம். கும்மிருட்டில் குறுகிய சாலைகளில் வாகனம் செல்கிறது – செல்லும் வழியில் பல தங்குமிடங்கள். அப்படி ஒரு தங்குமிடம் சென்று வாகனத்தினை நிறுத்தி விட்டு கொஞ்சம் காத்திருந்தோம். நாங்கள் தங்கியிருந்ததை விட கொஞ்சம் பெரிய தங்குமிடம். நிறைய வாகனங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன. விளக்கு வெளிச்சம் அவ்வளவாக இல்லை.


படம்: இணையத்திலிருந்து....

அந்தத் தங்குமிடத்திலிருந்து கைகளில் டார்ச்சோடு எங்களை அழைத்துச் சென்றார் ஒருவர். கூடவே இன்னும் சிலரும். புறப்படுவதற்கு முன்னரே அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தந்தார். சப்தமாக பேசவோ, சிரிக்கவோ கூடாது. அமைதியாக என் பின்னே வர வேண்டும் என்பது தான் அந்த எச்சரிக்கை! சில வயல்வெளிகள் – காய்ந்து போன வயல்வெளிகள் வழியே இருட்டில் நடந்து கொண்டிருக்கிறோம் – கீழே ஏதாவது பூச்சிகளோ, விலங்கோ இருந்திருந்தால் கூட எங்களுக்குத் தெரிந்திருக்காது! டார்ச் பிடித்தபடி அவர் முன்னே சென்று கொண்டிருக்க, எங்களுக்கு அந்த வெளிச்சம் மட்டுமே தெரிகிறது! வெளிச்சத்தைத் தொடர்ந்து நாங்களும் சென்று கொண்டிருந்தோம். கொஞ்சம் நடந்த பிறகு பார்த்தால் ஒரு பெண்மணி தைரியமாக அந்த இருட்டில், தனது நிலத்தில் போர்வை விரித்து படுத்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணியின், சற்று தள்ளி இருக்கும் நிலத்தில் தான் நேற்று கூட சிங்கம் சுற்றிக் கொண்டிருந்தது என்று தகவல் சொன்னார் விளக்கு மனிதர்! சுற்றிலும் இருட்டு. அங்கே இருந்த மனிதர்களின் உருவங்கள் மட்டுமே எங்களுக்குத் தெரிந்தது. எல்லோரும் அமைதியாக இருக்க எங்கிருந்தோ உறுமல் சப்தம் கேட்கிறது. எங்களை ஓரிடத்தில் நிற்க வைத்து விட்டு விளக்கு மனிதர் மட்டும் எங்கோ சென்றார். சற்று தள்ளி ஒரு சிங்கம் இருப்பதாகவும் அது எதையோ வேட்டை ஆடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது என்றும், இப்போது அருகே செல்வது சரியல்ல என்றும் சொன்னார். இன்னும் சிறிது நேரம் காத்திருந்தால் அருகே சென்று பார்க்க முடியும் என்று சொல்ல, சிங்கமே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் எப்படி? என்று தங்குமிடம் திரும்பினோம்.

தங்குமிடம் திரும்பினால், அந்தப் பெண்மணி சமைத்து முடித்திருந்தார். சென்ற பகுதியில் சொன்னது போல, பேங்கன் கா பர்த்தா, Dhதால், தவா ரொட்டி, கிச்டி, வெஜிடபிள் ராய்தா, கடி, சாலட், மோர் என அனைத்தும் தயார். கூடவே Bபாஜ்ரே கி ரொட்டியும் தயார் செய்து இருந்தார். சில நாட்களாகவே ஹோட்டல் உணவு – இன்றைக்கு கிடைத்த உணவு எல்லா இடங்களில் கிடைத்த உணவை விட அதிக சுவையாக இருந்தது. திவ்யமாக சாப்பிட்ட பிறகு, கொஞ்சம் காத்திருங்கள், அழைப்பு வந்தால் மீண்டும் காட்டுக்குள் செல்லலாம் என மோஹித் சொல்ல, எங்களுக்கு இருந்த அலுப்பில் வேண்டாம் என்று சொல்லி விட்டோம்.

அலுப்பினை விட இந்த மாதிரி இரவு நேரத்தில் வனப்பகுதியில் சுற்றுவது சரியல்ல என்றும் தோன்றியது.  அதனால் தான் அவரிடம் மறுத்து விட்டோம். அப்படிச் சென்று சிங்கத்தினை நீங்கள் பார்க்க முடிந்தால் ஆளொன்றுக்கு இவ்வளவு என பணமும் கொடுக்க வேண்டும்! பாகவத சப்தாஹம் நடந்த இடத்தில் இரவு Gகர்Bபா நடனம் இருக்கிறது என்றும், அங்கே செல்வதென்றால் நான் அழைத்துச் செல்கிறேன் என்று மோஹித் சொல்ல, அதையும் மறுத்து விட்டோம். அதிகாலையில் வனத்துக்குள் செல்ல முன்பதிவு செய்திருப்பதால் இரவு நேரத்துடன் உறங்குவது நல்லதல்லவா…. அடுத்த பதிவில் உங்கள் வனத்துக்குள் அழைத்துச் செல்கிறேன். அங்கே சிங்கங்களைப் பார்க்க முடிந்ததா என்பதையும் சொல்கிறேன்.  

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து...

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தொடர்ந்து படிப்பதில் மகிழ்ச்சி 😃 மதுரைத் தமிழன்.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!!

    சிங்கம் ஒன்று புறப்பட்டதே!!!! ஹா ஹா ஹா ஹா அந்தச் சிங்கம் அழகாக இருக்கிறது!!

    இதோ பதிவிற்குப் போய் வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கம் ஒன்று புறப்பட்டதே.... ஹாஹா.

      காலை வணக்கம் 🙏 கீதா ஜி.

      நீக்கு
  3. அந்தத் தங்குமிடத்திலிருந்து கைகளில் டார்ச்சோடு எங்களை அழைத்துச் சென்றார் ஒருவர். கூடவே இன்னும் சிலரும். புறப்படுவதற்கு முன்னரே அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தந்தார். சப்தமாக பேசவோ, சிரிக்கவோ கூடாது. அமைதியாக என் பின்னே வர வேண்டும் என்பது தான் அந்த எச்சரிக்கை!//

    ஆஹா த்ரில்லிங்காக உங்க பின்னாடி வந்தால்..... நோ சிங்கம்!!! ஹா ஹா ஹா ஹா

    அந்தப் பெண்மணிக்கு நிஜமாகவே செம தைரியம் தான்...அந்தச் சிங்கம் அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது விலங்கோ அல்லது மனிதரோ....

    ம்ம்ம் அருகில் சென்றும் பார்க்க முடியாமல் போய்விட்டதே. நல்ல தைரியமாகத்தான் அழைத்துச் செல்கிறார்கள். பழக்கமாக இருந்திருக்கும்....இந்தச் சிங்கம் படம் மறுநாள் சென்ற போது எடுத்த படமோ...ஆவலுடன் தொடர்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம த்ரில்லிங்கான விஷயமாகத் தான் இருந்தது ரொம்பவும் ஜாலியாக இருந்தது அந்த சமயம்.

      நன்கு ஜாயாக அமர்ந்து இருந்தார் அந்த பெண்மணி.

      நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. குட்மார்னிங் வெங்கட். முதல் படத்தில் "முகத்தைக் காட்டு ராஜா" என்று கொஞ்சியதும் காட்டு ராஜா போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. நிறைய போஸ் கொடுத்தார். அடுத்த நாள். நிறைய படங்கள் எடுத்தேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  5. சிங்கத்தைக் காட்டினால் காசா கேட்கிறார்கள்? அடப்பாவிகளா... இந்த விஷயம் சிங்கத்துக்குத் தெரியுமாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி நிறைய விஷயங்கள் அங்கே நடக்கின்றன. அனைத்தையும் எழுத முடியாது ஸ்ரீராம். சில விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் ஒன்றும் செய்வதில்லை.

      நீக்கு
  6. Bபாஜ்ரே கி ரொட்டின்னா என்ன?

    பதிலளிநீக்கு
  7. என்ன என்ன, பெண்மணி தூங்குகிறாரா. சாமி......
    அந்த கைடுக்கு நிறையப் பண ஆசைதான். நல்ல வேளை திரும்பி வந்தீர்கள்.
    அடுத்த நாள் பார்க்கலாம். மெனு சூப்பர். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெனு மட்டுமல்ல உணவும் நன்றாக இருந்தது வல்லிம்மா.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    கடைசியில் அவ்வளவு தூரம் கஸ்டப்பட்டு நடந்து சென்றும் காட்டு ராஜா சாப்பிடும் அழகை பார்க்க இயலவில்லையா? ஆனால் காட்டுப்பகுதியில் நடந்து சென்றது கொஞ்சம் திரில்லாகத்தான் இருந்திருக்கும். இல்லையா?

    அதன் பின் வழி நடத்துபவர் அழைத்தும் நல்லவேளை.. தாங்கள் மறுத்தது நல்ல விசயந்தான். ஏனெனில் விலங்குகளை தள்ளி நின்று பார்ப்பதுதான் சிறந்தது.
    ஆனாலும் சிங்கம் உலாவும் இடத்தில் பயமில்லாமல் படுத்துறங்கும் பெண்ணிற்கு மிகவும் தைரியம்தான். எப்படித்தான் உறக்கம் வருமோ?
    சாப்பாட்டு மெனுவும் அருமை.

    அடுத்து வனப்பகுதியில் கண்டு ரசித்த பகுதிகளை காண ஆவலாயிருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலங்களை தள்ளி நின்று பார்ப்பது தான் சரி குறிப்பாக காட்டு விலங்குகள். அந்த நேரம் ஏதோ ஒரு தைரியம் வந்து விடுகிறது சமயங்களில்...

      நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  9. சுவாரஸ்யமாக செல்கிறது நிகழ்வுகள்
    சிங்கங்களை பார்த்தீர்களா ஜி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த நாள் நிறைய சிங்கங்கள் பார்த்தோம் கில்ல்ர்ஜி.

      நீக்கு
  10. அந்த பெண்மணி தைரியம் நிறைந்தவர் தான்.
    சிங்கத்தை அதன் இருப்பிடத்தில் சென்றுப் பார்க்க நல்ல தைரியம்தான்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. இந்த அட்வெஞ்சருக்குலாம் நான் வரலண்ணே

    பதிலளிநீக்கு
  12. சிங்கம் ஒன்று புறப்பட்டு விட்டதே சிங்கம் காண

    பதிலளிநீக்கு
  13. சரிதான் இங்கே இருக்கா அந்தப் பதிவு? ஆனால் கடைசியில் சிங்கம் என்ன சாப்பிட்டதுனு தெரியாமல் போச்சே! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே தான் இருக்கு? ஏதோ ஒரு விலங்கு தான்! வடை பாயசம் சாப்பிடுமா என்ன கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....