செவ்வாய், 17 டிசம்பர், 2019

கதம்பம் – தமிழ்நாடு தினம் – கொண்டக்கடலை பிரியாணி – வெங்கலப் பானை – விருந்தாளி - ஆரஞ்சு தேநீர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.





தமிழ்நாடு தினம் – 1 நவம்பர் 2019:


காலையில் வழக்கத்துக்கு மாறாக பண்பலையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், திருக்குறளும் இன்று கேட்டவுடன், எதற்காக என்று கூர்ந்து கவனித்தேன். இன்று தமிழ்நாடு தினமாம். தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு சார்பில் இன்று முதல் நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட உள்ளது. 1956 நவம்பர் 1 தனி மாநிலமாக ஆனதென்றாலும் இதுவரை விழா எதுவும் அனுசரிக்கவில்லை என்று தகவல்.

செம்மொழியாம் தமிழ்மொழியில் திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, புறநானூறு, அகநானூறு, காப்பியங்கள் என்று தமிழின் சிறப்புகள் சொல்ல எத்தனையோ உள்ளன. அவற்றில் இல்லாத வாழ்க்கை தத்துவங்களா?

தமிழரின் பண்பாடு, உணவுமுறைகள், கலாச்சாரம், கலைகள் இவை போற்றுதலுக்குரியது. பண்டைக்கால தமிழரின் நாகரீகம் கீழடி அகழாய்வில் பிரமிப்பைத் தருகிறது. எத்தனை திட்டமிடல்கள்!

தமிழரென்று பெருமையாய் சொல்லிக் கொள்வோம். வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்!

ஆதியின் அடுக்களையிலிருந்து – கொண்டைக்கடலை பிரியாணி  – 3 November 2019:



புது முயற்சி தான். இணையத்தில் பார்த்தது. மீல் மேக்கர் போட்டும் இப்படி பிரியாணி செய்யலாம் எனக் கேள்விப்பட்டேன். அதன் வாடை பிடிக்கலை :) மஷ்ரூம் போட்டும் செய்யலாமாம். இதுவரை சாப்பிட்டதில்லை. அது சைவம் தானா என்ற சந்தேகமே இன்னும் எனக்கு தீரலை :)

சரி இன்று இது தான். மகள் சாப்பிட்டு ஓகே எப்பவாவது சாப்பிடலாம் என்று சொல்லி விட்டாள். செய்முறை எப்போதும் போல் பிரியாணி செய்வது போல் தான். காய்கறிக்கு பதிலாக வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்துள்ளேன். செய்து சுவைத்து பார்த்துட்டு சொல்லுங்க.

விதம் விதமாய் பொடிகள்  – 4 November 2019



இப்போதெல்லாம் எதற்காகவும் மெனக்கெட வேண்டாம். எல்லாமே ரெடிமேடாகக் கிடைக்கிறது. நம் முன்னோர்கள் சோப்புக்கு பதிலாக பயத்தமாவு, மஞ்சள் போன்றவற்றை தேய்த்து குளித்தார்கள் எனக் கேள்விப்பட்டிருப்போம். இது குளியலுக்காக விற்கும் பயத்தமாவு தான். இதனுடன் 'உசிலம் பொடி' என்று காதியின் தயாரிப்பாக ஒன்று கூட கடையில் இருந்தது. அது எதற்கென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் இங்கு சொல்லலாம். குப்பைமேனி இலை சரும நோய்களுக்கு நிவாரணம் தரும் என்று வாசித்திருக்கிறேன். இங்கு எங்கள் குடியிருப்பு அருகே தோப்பு இருக்கிறதென்றாலும் அன்றாடம் குப்பைமேனியை தேடிச் செல்ல முடியுமா?

நாட்டு மருந்து கடைகளில் எல்லா விதமான மூலிகைப் பொடிகளும் இருக்கின்றன. அங்கு கேட்டு வாங்கி வந்தேன். மகளுக்கும், எனக்கும் பரு பிரச்சனை நிறைய உண்டு (எத்தனை வயது வரை தான் இந்த பருக்கள் வரும்!) குப்பைமேனி இலைப் பொடியுடன் மஞ்சள் சேர்த்து இருவரும் போட்டுக் கொள்கிறோம்.. நிவாரணம் இருக்கிறது. யாரும் எங்களைப் பார்த்து பயந்து வேப்பிலை அடித்துக் கொள்ளாமலிருக்க இரவில் மட்டுமே உபயோகிக்கிறோம் :)

அந்தக் கடையிலேயே செம்பருத்திப் பூவின் பொடி வாங்கி வந்தேன். அவ்வப்போது தேநீராக தயாரித்து சுவைக்கிறோம். உடலுக்கு நன்மை செய்யக்கூடியது. நீங்களும் உங்கள் பகுதிகளில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் இது போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தி நன்மை பெறலாம்!

குளிர்காலத்திற்கு மஃப்ளர் – 7 November 2019:



சென்ற வார கதம்பம் பகிர்வில் பொழுது போக்க மஃப்ளர் பின்னிக் கொண்டிருப்பதாக பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம். ஆமாம் அது தான் இப்போது தயாராகி விட்டது.

2011 ல் டெல்லியில் இருந்த போது ஒரு குளிர்காலத்தில் ஆரம்பித்தேன். சிறிது பின்னியதோடு சரி :) அதன் பிறகு இந்த வருடம் மே மாதம் டெல்லிப் பயணத்தில் வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்தது. நினைவிருக்குமா என்று ஒரு வரிசை பின்னிப் பார்த்தேன். கை தானாக தன் வேலையை செய்யத் துவங்கியது:) அடடடடடா!!!

அப்புறம் என்ன!! அதை எடுத்து வந்தாச்சு :) கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பின்னிக் கொண்டிருந்தேன். இப்போது குளிர்கால மஃப்ளர் தயார் :) இதை போட்டுக் கொள்ளும் அளவு திருவரங்கத்தில் குளிர் வருமா? இந்த மஃப்ளர் பின்னுவதில் இருந்த ஆர்வம், ஆரம்பித்து விட்டு அப்படியே வைத்த வயர் கூடையிலும், கட் பண்ணி வைத்த ப்ளவுஸிலும் வருமா என்பது சந்தேகம் :)

என்ன ஃப்ரெண்ட்ஸ்! அழகாக இருக்கிறதா மஃப்ளர்?

வீட்டுக்கு வந்த விருந்தாளி – 12 November 2019:



இப்போது வசிக்கும் வீட்டில் குடியேறி நான்கு வருடங்களாயிற்று. இதுவரை மொட்டை மாடியிலும், கீழே சுற்றுச் சுவரிலும் மட்டுமே பறவைகள் வந்து அமர்ந்து பார்த்திருக்கிறேன். இரண்டு ப்ளாக்குகளுக்கு நடுவில் பால்கனி இருப்பதால் எந்த பறவைகளும் வருவதில்லை போலிருக்கிறது.

மாடியில் ஏதேனும் காயவைத்து விட்டு வந்தால், எடுக்கச் செல்லும் போது பலவித நிறங்களில் கும்பலாக புறாக்கள், மைனா, தவிட்டுக்குருவி என்று உலாவிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். எதிரே மாந்தோப்பும், தென்னந்தோப்பும். அங்கே மயில்களின் நடமாட்டம் இருக்கும். சற்றே அருகில் ஒரு இடம். அங்கே ஒரு மரத்தில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் வசிக்கிறது. யாரும் அதை துன்புறுத்துவதில்லை. மாலை வெளவால்கள் இரை தேடிப் பறக்கத் துவங்கினால் மணி சரியாக 6:30 இருக்கும் எனச் சொல்லலாம். அந்த மரத்தடியில் ஒரு எல்லை தெய்வம். ஒருமுறை சென்றிருக்கிறேன். கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ஒவ்வொரு இலையிலும் வெளவால்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

சரி!! இன்று ஒரு சின்னஞ்சிறு சிட்டுக்குருவி பால்கனியில் வந்து அமர்ந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பறக்க இப்போது தான் கற்று வருகிறது போல. வெகுநேரம் அமர்ந்து என் க்ளிக்குகளுக்கு முகத்தை காட்டி விட்டு பின்பே பறந்தது :) நாளையும் வா குருவி!! உனக்கு உணவும், நீரும் தருகிறேன்.

அம்மாவின் வெங்கலப் பானை – 21 November 2019:


பரணிலிருந்து எடுத்த அம்மாவின் வெங்கலப் பானை இது. அம்மாவிற்குப் பிறகு பல வருடங்களாக உபயோகிக்கவே இல்லை. இரண்டு நாட்களாக உப்பிலும், புளியிலும் குளித்ததில் பளிச் பளிச்! இன்று அதில் அரிசி உடைசல் உப்புமா செய்தாச்சு. வாங்க வாங்க! சாப்பிடலாம்.

ஆதியின் அடுக்களையிலிருந்து – ஆரஞ்சு தேநீர்22 November 2019:



ஆரஞ்சுப் பழத்தின் தோலில் செய்த ஊறுகாய் மற்றும் வத்தக்குழம்பு சுவைத்திருக்கிறீர்களா? நான் சிறுவயதில் எங்கேயோ சாப்பிட்டிருக்கிறேன். மிகவும் சுவையாக இருந்தது. அது போல இதுவும் ஒன்று.

சமீபத்தில் இணையத்தில் உலாவும் போது கிடைத்தது. நமக்குத் தான் விஷப்பரீட்சை செய்யாமல் இருக்க முடியாதே :) வாங்க! எப்படி செய்வது என்று பார்க்கலாம். செய்முறை மிகவும் எளிது.

ஒரு தம்ளர் நீரை கொதிக்க வைத்து அதில் ஆரஞ்சு தோலை பிய்த்து போடணும். ஒரு தம்ளர் நீருக்கு இரண்டு பழத்தின் தோல் சேர்க்கலாம். நடுத்தர தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். கொதிக்கும் போது நீரின் நிறமே மஞ்சளாகி விடும். இனிப்புக்கு தகுந்தாற்போல் சர்க்கரையோ, நாட்டு சர்க்கரையோ சேர்த்துக் கொள்ளலாம். இதில் இஞ்சி, ஏலக்காய் போன்றவற்றை சேர்ப்பது உங்கள் விருப்பம். ஆனால் ஆரஞ்சின் சுவை அதை மட்டுமே கொதிக்க வைத்தால் தான் கிடைக்கும்.

இந்த மழைநாளில் சூடான தேநீரை தயாரித்து பருகி புத்துணர்வு பெறுங்கள். ஆரஞ்சு வாங்கும் போது தோலை தூக்கிப் போடாமல் உபயோகப்படுத்திப் பாருங்களேன்.

டிஸ்கி:- சென்ற வாரத்தில் ஒருநாள் சன்னா மசாலா செய்யும் போது வெள்ளைக் கொண்டக்கடலையுடன் சிறிதளவு மாதுளம்பழத்தின் தோல் சேர்த்து வேகவைத்தேன். ஆச்சரியம்! நிறத்திலும், சுவையிலும் நல்ல வித்தியாசம் தெரிந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

32 கருத்துகள்:

  1. நாம் நினைப்பது நடக்கவேண்டும், நடக்கும் என்கிற பிரார்த்தனையுடன் தொடர்வோம்.

    நவம்பர் ஒன்று தமிழ்நாடு தினமா?  செய்தி எனக்கு!

    அடுக்களை பகுதிகளை சுவைத்தேன்.   விருந்தாளியை வியந்தேன்.  அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாடு தினம் - எனக்குமே இது செய்தி தான் ஸ்ரீராம்.

      நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

      கதம்பம் தொகுப்பின் அனைத்து பகுதிகளையும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஹை.. தமிழ்நாடு தினமா.. வாழ்த்துகள்.

    ஆரஞ்சு ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்.. வித்தியாசமாய்.. பாதி கட் செய்து சுளைகளை எடுத்து விட்டு ஐஸ்க்ரீம் பேக் செய்து தந்தார்கள். செம்ம டேஸ்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரஞ்சு ஐஸ்க்ரீம் - அட புதிதாக இருக்கிறதே - எனக்கும் சுவைக்க ஆசை வந்து விட்டது ரிஷபன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வழக்கம் போலவே கதம்பம் மணத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழமை போல தங்களுடைய வருகை மகிழ்ச்சி அளித்தது கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கதம்பம் சிறப்பு.

    பொடி வகைகள் - நாமே அரைத்துக்கொள்வது போல வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நாமே அரைத்துக் கொள்வது போல நிச்சயம் இருக்காது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கதம்பம் மிக அருமை.
    ஆதியின் பதிவுகளை முகநூலில் படித்தேன்.
    இங்கும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் இங்கே ஒரு தொகுப்பாக - முகநூலில் வந்தவையே கோமதிம்மா...

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கதம்பம் அருமையாகவும் ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. முதலில் தொடக்கிய நல்லெண்ணம் சிந்திக்கவைக்கிறது.
    கதம்பம் அருமையானது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் தந்த நல்லெண்ணம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி யாழ்பாவண்ணன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தமிழ்நாடு தினம் என்பது தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிறேன். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்படாத பொழுது மெட்ராஸ் ராஜதானியில் சேர்ந்திருந்த கர்நாடகா, ஆந்திரா போன்றவை மெட்ராஸ் ராஜதானியிலிருந்து பிரிந்து புது மாகாணமாக உருவான நாளை கொண்டாடுவதில் அர்த்தம் இருக்கிறது. தமிழ் நாடு எதனிடமிருந்தும் பிரிந்து புதிதஹக உருவாகவில்லை. எதற்கு தமிழ்நாடு தினம்? ஒரு நாள் விடுமுறை கிடைப்பதற்காகவா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாடு தினம் - இப்படி ஏதோ ஒரு காரணம் கொண்டாவது தமிழகத்தினைக் கொண்டாடுகிறார்களே என்றும் தோன்றுகிறது பானும்மா... தனியாக விடுமுறை தருவதில்லை என்றே தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மஃளர் பிரமாதம்! என்ன ஸ்டைலாக டெடி பேர் போர்த்திக் கொண்டிருக்கிறது! ரஜினி கெட்டார் போங்கள். அரிசி உப்புமா வெங்கல பானையில்தான் செய்ய வேண்டும். ஆரஞ்சு தோல் பச்சிடி நான் எ.பி.கிச்சனில் பகிர்ந்திருந்தேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஃப்ளர் ஸ்டைல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

      அரிசி உப்புமா என்றாலே வெங்கலப் பானை தான் - வாணலியில் செய்வது எனக்கும் பிடித்ததில்லை.

      ஆரஞ்சு தோல் பச்சடி - செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னமும் கை வரவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வழக்கம்போல சிறப்பான கதம்பம். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அன்பு வெங்கட், அருமையான பழமொழிக்கு நன்றி.

    எழுதி இருக்கும் உண்மை உரைக்கிறது.
    ஆதியின் கதம்பம் மிக அருமை.
    கொண்டைக் கடலை பிரியாணி சூப்பர்.

    நிட் செய்த ஸ்வெட்டர் இந்த ஊருக்குப் பிரயோஜனப்படும்.
    எடுத்துக்கிறேன் மா:)

    ஆரஞ்சு டீ மருமகள் செய்வார். இங்கே ஆரஞ்சுக் காலம்.
    பறவைகள் வரும் காலம் இல்லையா.
    இத்தனை வண்ணங்களுடன் பற்வைகள் வந்தால் பேசத்தோன்றும் எனக்கு.

    அருமைமா ஆதி.
    மிக மிக நல்ல நாளுக்கான வாழ்த்துகள்.
    அம்மாவின் பானையில் அமுதம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      ஆரஞ்சு டீ இங்கே இன்னும் நான் செய்து பார்க்கவில்லை.

      அம்மாவின் பானையில் அமுதம் - உண்மை தான் வல்லிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கதம்பம் வழக்கம்போல் பால் சுவையுடன் இருந்தது. பாராட்டுகள்.

    உசிலம் பொடி என்பது அரப்பு மரம் என சொல்லப்படும் மரத்தின் இலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதை தலையில் தேய்த்துக் குளிக்க பயன்படுத்துவார்கள். உசில மரத்தை ஊஞ்ச மரம், கருவாகை என்றும் சொல்வார்கள். இதனுடைய தாவரப் பெயர் Albizia lebbeck ஆகும். இந்த கருவாகை என்பது தூங்கமூஞ்சி மரம் அல்ல. போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு சூட்டப்படும் வாகை மலர் இந்த மரத்தின் மலர் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      உசிலம் பொடி பற்றிய மேலதிகத் தகவல்கள் சிறப்பு. பயன்தரும் செய்திகளைத் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    கதம்பம் அருமை. தங்கள் நினைவுகள் என்றுமே அழகாக உள்ளது. அம்மாவின் வெண்கலப் பானையை உபயோகிக்கும் போது அனைவருக்கும் ஒரு மகிழ்வு உண்டாவது இயற்கை. வெங்கலப் பானையில் செய்யும் சுவையே தனி.. அரிசி உப்புமா நன்றாக வந்துள்ளது.

    கொண்டைக்கடலை பிரியாணியும் அருமையாக உள்ளது. மப்ளர் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்.. பகிர்வுகள் அனைத்திற்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      கொண்டைக்கடலை பிரியாணி உங்களுக்கும் பிடித்திருந்ததா? ஆஹா மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. கதம்பம் தொகுப்பின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....