ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

குரோதி வருடம் - வாழ்த்துகள்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******




அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


பிறந்திருக்கும் இந்த புதுவருடமாம் குரோதி ஆண்டில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும்! நல்லதே நடக்கணும்! மனதில் உள்ள கசடுகள் யாவும் நீங்கி இன்பமும், நிம்மதியும், ஆரோக்கியமும் மேலோங்கி இருக்கணும்! 


நீர்வளம் மேம்பட்டு  பசுமையான சூழல் எங்கும் இருக்கணும்! நமது நாட்டிலும் சமுதாயத்திலும் எழுச்சி ஏற்பட்டு எங்கும் வளமையான வாழ்வு மலர்ந்து நிலைக்கணும்! 


நல்லதே நடக்கும்!

எல்லாம் நன்மைக்கே!


இந்த வருட தமிழ் புத்தாண்டுக்கு என்னவர் என்னுடன் இருப்பதால் சற்றே உற்சாகத்துடனும் அவரின் உதவிகளோடும் பண்டிகைச் சமையலை செய்தேன்! ரசித்து சாப்பிடுவோர் இருந்தால் தானே விதவிதமாக சமைக்க ஆர்வமும் ஏற்படும் இல்லையா..🙂





புத்தாண்டு சிறப்பாக மாங்காய் அறுசுவை பச்சடி, அரிசி தேங்காய் பாயசம், முப்பருப்பு வடை, முதல் தடவையாக பாரம்பரிய இனிப்பான சொஜ்ஜி அப்பமும் இன்று செய்திருந்தேன்! என் அம்மா செய்து தந்து சிறுவயதில்  ருசித்திருக்கிறேன்! என்னவர் இதுவரை சாப்பிட்டதில்லை என்பதால் இன்று செய்தேன்! 


சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் பெண் பார்க்க வரும் போது தருவான்னு கேள்விப்பட்டிருக்கேன்! இது என்ன! சொஜ்ஜி அப்பம்??


சூஜின்னா ரவை இல்லையா! அதனால அதை சொஜ்ஜின்னு சொல்லியிருக்கலாம்! அதை கேசரியா கிளறி போளி மாவுல வெச்சு தட்டி எண்ணெயில போட்டெடுத்தா அது தான் சொஜ்ஜி அப்பம்!


அது சரி! இந்த சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் நான் உன்னப் பார்க்க வந்த போது குடுத்தாளான்னு தெரியலையே...🙂


இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு கேளுங்கோ...🙂


இதனுடன் சாதம், வெண்டக்காய் சாம்பார், ரசம், கத்திரிக்காய் பொடித்தூவல் என இன்றைய சமையல் இருந்தது!


மீண்டும் அனைவருக்கும் ஒரு முறை குரோதி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


8 கருத்துகள்:

  1. கதம்பம் அருமை. வாசகம் உண்மை.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    //ரசித்து சாப்பிடுவோர் இருந்தால் தானே விதவிதமாக சமைக்க ஆர்வமும் ஏற்படும் இல்லையா..🙂//

    உண்மை. வெங்கட் இந்த புத்தாண்டில் உடன் இருந்தது மகிழ்ச்சி.
    புத்தாண்டு சிறப்பு உணவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றிம்மா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. குரோதி வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

    பண்டிகை சமயத்தில் சேர்ந்து இருப்பதே தனி உற்சாகம்தான். தனியாக இருந்தால் (பேச்சலர் போல), பண்டிகையின் உற்சாகம் வராது, யாராவது நண்பர்கள் வீட்டில் விருந்துக்குக் கூப்பிட்டால் செல்வோம், பிறகு மனதில் வெறுமை உணர்வு இருக்கும்.

    சேர்ந்திருப்பது ஒவ்வொரு பண்டிகைக்கும் தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். எங்களுடன் பண்டிகை நாளில் அவர் சேர்ந்திருந்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். எத்தனையோ பண்டிகை நாளில் தனித்தே இருந்திருக்கிறோம். விரக்தியும் வேதனையும் தான் அப்போது இருக்கும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. இணைந்து பண்டிகை கொண்டாடியதற்கு வாழ்த்துகள்.  சமையல் மெனு ஜோர்.  கத்தரிக்காய் பொடி தூவி கறி...  ஆஹா...  வேப்பம்பூ, மாங்காய் பச்சடிகள் செய்யவில்லையா?  உங்களுக்கும் மனமார்ந்த குரோதி வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்டிகை மெனுவில் முதல் இடம் பெற்றிருப்பதே அறுசுவை மாங்காய் பச்சடி தான் சார். அதுதான் புத்தாண்டு சிறப்பே! மற்றதெல்லாம் கூடுதல் தான்! எங்கள் வீட்டில் மாங்காயோடு, வேப்பம்பூவும் சேர்த்து தான் பச்சடி செய்வோம்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....