வியாழன், 4 ஏப்ரல், 2024

மகளுக்கு ஒரு கடிதம்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட உத்யான் உத்ஸவ் 2024 - புகைப்பட உலா - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******





அன்பு மகள் ரோஷ்ணிக்கு….


வருடங்கள் மின்னல் வேகத்தில் சென்றதைப் போன்ற உணர்வு என்னுள் ஏற்படுகிறது கண்ணா! உன் பிஞ்சுக் கரங்களை ஸ்பரிசித்த தடம் இன்னும் மறையாத போது வாழ்க்கை நம் இருவரையும் அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் சென்ற மாயமென்ன!


பருவப் பெண்ணாக வளர்ந்து விட்டாலும் இன்னும் ஒரு சில விஷயங்களில் உன் குழந்தைத்தனம் மாறாது இருப்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்! என்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் என்னைச் சுற்றி இருந்த அருமையான மனிதர்களை பற்றிச் சொல்லி தான் உன்னை வளர்த்துள்ளேன்!


வாழ்வில் உள்ள நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு தினந்தோறும் நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் துணிச்சலுடன் நீ கடந்தாக தான் வேண்டும்! பிடித்த துறையில் கல்வி கற்பது என்பது எல்லோருக்கும் கிட்டுவதில்லை! 


நம் குடும்பத்தில் உள்ள யாருக்குமே  இல்லாத ஆர்வம் உனக்கு ஏற்பட, அதற்கு ஆதரவு தெரிவித்து உன்னை வழிநடத்தி உற்சாகப்படுத்தும் பெற்றோராய் நாங்கள் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்! அப்படி கிடைத்துள்ள இந்தத் துறையில் நீ சாதித்து மிளிரணும் கண்ணா!


ஏற்றங்களும் இறக்கங்களும் கொண்டது தான் வாழ்வு! சின்னச்சின்ன விஷயங்களுக்கும் சோர்ந்து போய் வாழ்வை சுருக்கிக் கொண்டு விடும் இளைய தலைமுறையினரை பார்க்கும் போது வேதனை கொள்கிறேன்! எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும், அதை மனப் பக்குவத்துடன் கடந்து வருவது தான் நல்லதொரு மனிதனாய் நம்மை கொண்டு செல்லும்!


வீட்டிற்கு மட்டுமல்ல சமுதாயத்துக்கும் நம் தேசத்துக்கும் கூட நம்மால் இயன்றதை நிச்சயம் செய்யணும்! எனக்கென்ன என்ற சுயநலம் இல்லாமல் எப்போதும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் கொண்டிருக்க வேண்டும்! நேர்மறையான எண்ணங்கள் தான் நம்மை முன்னேற்றும்!


20 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் உனக்கு பெற்றோராய் எங்கள் மனப்பூர்வமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா! ஆரோக்கியமான அழகான வாழ்க்கை கிடைத்திட எங்கள் பிரார்த்தனைகள்!


அன்புடன்


அம்மாவும் அப்பாவும்.❤️


22 கருத்துகள்:

  1. மகளுக்கு அருமையான வாழ்த்து மடல்.  ரோஷ்ணிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    தங்கள் மகளுக்கு பாசம் மிகும் தெள்ளிய நீரோடை போன்ற அழகான கடிதம்.படித்து மகிழ்ந்தேன். தங்கள் அன்பு மகள் ரோஷிணிக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல சிறப்புகளோடும் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்து மடல் குறித்த கருத்துக்கும் மகளுக்கு அன்பான வாழ்த்துகளை தெரிவித்ததற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் கமலா ஜி.

      நீக்கு
  3. அருமை! ரோஷ்ணிக்கு எங்கள் மனமுவந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடிதம் குறித்த கருத்துக்கும் மகளுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் சிறப்பு ஜி

    தங்களது மகளுக்கு கடிதம் வழியாக வாழ்த்து சொன்ன விதம் அருமை ஜி.

    எமது வாழ்த்துகளும்கூடி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்து மடல் குறித்த பாராட்டுக்கும் மகளுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. ஐந்து வயதோ ஆறு வயதோ இருக்கும்போது கைவண்ணம் மூலம் அறிமுகமானாள் ரோஷ்ணி. இன்று இருபதை எட்டுகிறாள் என்பது வியப்பாக உள்ளது. அருமையான பெற்றோருக்கு அருமையான மகள். ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எண்ணிய யாவும் ஈடேறவும் விரும்பிய துறையில் சாதிக்கவும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். காலம் அதிவேகமாக கடந்து செல்கிறது. திரும்பிப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.

      மகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  7. மகளுக்கு அழகிய வாழ்த்து மடல் .

    எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ரோஷிணி விரும்பிய துறையில் பயில்வது மகிழ்ச்சி. திறம்பட பிரகாசித்து வெற்றிகள் பலவும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்து மடல் குறித்த பாராட்டுக்கு மிக்க நன்றிங்க மாதேவி. வருடாவருடம் மகளுக்கு இப்படித்தான் கடிதம் வழியே வாழ்த்து சொல்லி வருகிறேன்.

      மகளுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் பா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வாழ்த்து மடல் குறித்த கருத்துகளுக்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  9. அன்பின் பிறந்த நாள் வாழ்த்துகள்!.. அபிராம வல்லியின் அருளால் என்றும் நலமே நிறைந்தி வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.

      நீக்கு
  10. பதின்ம வயதைக் கடந்து பொறுப்பான பாதையில் அடியெடுத்து வைக்கும் மகளுக்கு எங்கள் வாழ்த்துகள். அடுத்த ஐந்தாண்டுகள், வாழ்க்கையை மாற்றும் காலம், படிப்பு அதைத் தொடர்ந்து மேல்படிப்பு/வேலை என்று பிற்கால நல் வாழ்க்கைக்கான படிகளைக் கடக்கும் காலம். இறைவன் மகளுக்குத் துணையிருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். முக்கியமான காலகட்டம் தான் இது!

      மகளுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் நெல்லை சார்.

      நீக்கு
  11. மிக அழகிய பிறந்தநாள் பரிசு. ரோஷ்ணிக்கு இங்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....