திங்கள், 4 நவம்பர், 2013

வெடி வழிபாடு…..


[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 7]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]


தொடர்ந்து மலையேறிக் கொண்டிருக்கிறோம் நாங்கள் – அட உங்களுக்கும் என்னுடன் மலை ஏறி வந்ததில் கொஞ்சமாகக் கால் வலிக்க ஆரம்பித்து இருக்குமே....  அதனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோமா? வழியில் ஒரு இடத்தில் சுடுவெள்ளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயே நின்று நானும் கொஞ்சம் சுடுவெள்ளம் குடித்து விட்டு மலையேற்றத்தினைத் தொடங்குகிறேன். நீங்களும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்களேன்!



உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

வழியில் சில இடங்களில் இப்படி சற்றே சூடான நீரில் சீரகம் போட்டு சீரக வெள்ளம் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறார்கள். கஷ்டப்பட்டு மலையேறி வரும் பக்தர்களுக்கு இப்படி நீர் கொடுத்து அவர்கள் தாகத்தினை தீர்த்தாலும் பரந்தாமனின் அருளைப் பெறலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். மலையேற்றத்தினால் ஏற்பட்ட களைப்பு கொஞ்சம் நீங்குவதற்கு இந்த சீரக வெள்ளமும் அங்கே சில நிமிடங்கள் நின்றதால் கிடைத்த ஓய்வும் உதவுகிறது.

வயதானவர்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் மலையேற்றம் சற்றே கடினம் தான். பல பெரியவர்கள் ஒரு கையில் குச்சியைப் பிடித்துக் கொண்டு, மறு கையில் முட்டியைப் பிடித்தபடி தான் ஏறுகிறார்கள். செங்குத்தான பாறை என்பதால் நிறைய பேர் மேல் மூச்சு முட்ட முட்ட, இறைவனின் நாமாக்களைச் சொன்னபடியே தான் மலையேறினார்கள். நானும் நண்பர்கள் இருவரும் விரைவாக மலையேறிக் கொண்டிருந்தோம்.

வழியில் மேலிருந்து கீழே இறங்கி வரும் பக்தர்களின் முகத்தில் சபரிகிரிவாசனை தரிசித்த சந்தோஷமும் அமைதியும் குடி கொண்டிருந்தது.  சபரிகிரிவாசன் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கையோடு இறங்கிக் கொண்டிருந்தார்கள். மேல் நோக்கி செல்லும் பக்தர்களை உற்சாகப்படுத்தவும் அவர்கள் தவறவில்லை. தாங்கள் அனுபவித்த பேரின்பம் மேல் நோக்கிச் செல்லும் பக்தர்களுக்கும் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணம்!

வழியில் ஒரு இடத்தில், மலைப்பகுதியில் ஒரு சிறிய கொட்டகை. அதிலிருந்து ஒலிபெருக்கி மூலம் மலையாளத்தில் ஏதோ பரைந்தார்கள் – ”வெடி வழிபாடு” – பெயரையும் அவர்களுடைய நட்சத்திரத்தினையும் சொல்லி ஒரு வெடி வெடிப்பார்கள் – அது தான் வெடி வழிபாடு. அங்கே மூன்று நான்கு மொழிகளில் வெடி வழிபாடு என எழுதியிருந்தார்கள் – தமிழில் “வெடி வழிபாட்!”



பத்து ரூபாய் கொடுத்து பெயரையும் உங்கள் பிறந்த நட்சத்திரத்தினையும் சொன்னால் மைக் மூலம் அறிவிக்க, பின்னால் மலையிலிருந்து ஒரு வெடி சத்தம் கேட்கும்….  எத்தனை பெயர் சொல்கிறோமோ அத்தனை பத்து ரூபாய்! அத்தனை வெடிகள் வெடிப்பார்கள். தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது சபரிமலை முழுவதும்.

இந்த வெடிவழிபாடு நடத்த சபரிமலை தேவஸ்தானம் வருடா வருடம் ஏலம் விடுகிறார்கள். சபரிமலை முழுவதும் ஐந்து இடங்களில் வெடி வழிபாடு நடத்தலாம் என நியமனம் செய்து அதற்கான ஏலத்தினை தேவஸ்தானம் வருடா வருடம் நடத்த அதில் யார் அதிகமான தொகையைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு வெடி வழிபாடுக்கான இடங்களை அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கிறார்கள்.

சென்ற வருடம் ஏலம் எடுத்த தொகை 25 லட்சத்திற்கும் மேல். ஏலம் எடுக்கும் போது அதில் ஒவ்வொரு வெடிக்கும் ஐந்து ரூபாய் மட்டுமே வாங்க வேண்டும் என எழுதியிருந்தாலும் பத்து ரூபாய் வாங்குகிறார்கள் எனவும் அதை தேவஸ்தானமோ அரசோ கண்டு கொள்வதில்லை எனவும் சொல்லிக் கொண்டு வந்தார் நண்பர்.

மலைப்பகுதியில் வெடி வெடிப்பதால் காய்ந்த சருகுகள் பற்றிக்கொண்டு தீவிபத்துகள் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் மிகவும் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  வெடி மருந்தினையும் மலையில் சேமித்து வைப்பதால் அதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரையும் நியமித்து இருக்கிறார்கள்.

சென்ற பதிவில் நாஞ்சில் மனோ பின்னூட்டத்தில் இப்படி கேட்டிருந்தார்….


அந்த காட்டுக்குள்ளே புலி எல்லாம் உண்டுன்னு சின்ன வயசுல சொல்லக் கேட்டு இருக்கேன் உண்மையா ?  


மலைப்பகுதி அதுவும் காட்டுப் பகுதி என்பதால் மிருகங்கள் இருப்பது நிச்சயம் தான். பொதுவாகவே அடர்ந்த காடு என்பதால் மிருகங்கள் நிச்சயம் இருக்கும். ஆனால் சபரிமலை செல்லும் பாதையில் மனித நடமாட்டம் அதிகம் என்பதால் இந்த மிருகங்கள் தற்போதெல்லாம் தென்படுவதில்லை. மேலாக, இப்படி நாள் முழுவதும் இந்த வெடி வழிபாடு மூலம் வெடிகள் வைத்து சத்தம் எழுப்புவதால் மிருகங்கள் வர வாய்ப்பில்லை. அவை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள்ளேயே இருக்கின்றன.

சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் போது கூட அங்கே அதிக அளவில் புலிகள் இருப்பது பற்றி தெரிந்து இருக்கிறது. அடர்த்தியான காட்டுப் பகுதியில் மட்டுமே மிருகங்கள் இருக்கின்றன என்று நண்பர் சொல்லிக் கொண்டு வந்தார். வாகனம் மூலமாக சபரிமலை செல்லும் போது பாதையிலிருந்தே அடர்ந்த காட்டுப்பகுதிகள் கண்ணுக்குப் புலப்படுகின்றன. அங்கே மிருகங்கள் இருக்கின்றன. மனிதர்கள் நடமாட்டம் கண்டு மிருகங்கள் கூட பயப்படுவது இயற்கை தானே!

நடந்து கொண்டே வெடி வழிபாடு பற்றியும் பார்த்தாயிற்று. நடந்தபடியே இருந்ததால் சன்னிதானம் என்று அழைக்கப்படும் சபரிகிரிவாசனின் கோவில் இருக்கும் இடத்திற்கு வந்தது தெரியவில்லை. சன்னிதானம் பகுதியை அடைந்து சபரிமலை வாசனை தரிசித்த அனுபவம் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்! சரியா?

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....

ஞாயிறு, 3 நவம்பர், 2013

நவராத்திரி கொண்டாட்டங்கள்….



என்னடா தீபாவளியே முடிந்து விட்டது, இப்ப நவராத்திரி கொண்டாட்டம் பற்றி இங்கே பிரஸ்தாபம் எதற்கு? :)

பொதுவாகவே நவராத்திரி சமயத்தில் வங்காளிகள் துர்க்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கொல்கத்தாவில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து ஒன்பது நாட்களும் கோலாகலமாக கொண்டாடும் வங்காளிகள், பெரும்பான்மையாக இருக்கும் இடங்களிலும் இப்படிக் கொண்டாட்டங்கள் உண்டு. தில்லியிலும் பல இடங்களில் துர்க்கா பூஜை பந்தல்கள் போட்டு காளி சிலைகள் வைத்து பூஜைகள், விழாக்கள் என குதூகலமாக இருக்கும்.

எனது வங்காளி நண்பர் ஒருவர் எல்லா வருடமும் அவர்களது வீடு இருக்கும் பகுதியில் நடத்தும் துர்க்கா பூஜைக்கு எனக்கு அழைப்பு விடுப்பார். ஆனாலும் இதுவரை போனதில்லை. இம்முறை சற்று கோபத்துடனே சொன்னார் – “இம்முறை வந்தே ஆகவேண்டும். இல்லையெனில் நான் உன்னுடன் கட்டி [காய்]!” என.  அதனால் இம்முறை அவர்களது துர்க்கா பூஜையில் கலந்து கொண்டு “ரொசகுல்லாவும், சந்தேஷும்” சாப்பிட்டு வந்தேன்! கூடவே சில புகைப்படங்களும் எடுத்தேன்.

அந்த புகைப்படங்கள் இந்த ஞாயிறில் உங்களுக்காக!


அஷ்ட புஜங்களுடன் காளி......  


பந்தலில் காட்சி தரும் தெய்வங்கள்....
 

அட நம்ம முருகப் பெருமான்! மயில் வாகனம் வைத்து தான் கண்டு பிடிக்க முடிந்தது! கொஞ்சம் பூசினால் போல வயிறு! புஷ்டியான முருகன்!
 

லக்ஷ்மி...
 

ஆனைமுகத்தான்! கூடவே வாகனமும்....
 

வங்காள வாத்திய கலைஞர்.....


குழந்தைகள் ஓவியப் போட்டிக்காக வரைந்த ஓவியம் - 1
 

குழந்தைகள் ஓவியப் போட்டிக்காக வரைந்த ஓவியம் -  2


சுற்றிச் சுற்றி வாத்தியம் வாசிக்கும் வாத்தியக் கலைஞர்கள்....
பக்தியோடு நிற்கும் வங்காளப் பெண்கள்....
 

கலைஞனின் முகத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும்....
காவலரின் முகத்தில் எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டுமே என்ற கவலை.....
 

மேளங்களில் இணைத்திருக்கும் குஞ்சலங்கள்! மேளத்தினை வாசித்தபடியே பார்வையாளர்களின் தலையில் குஞ்சலத்தினால் தட்டுவார்கள்.....  ஆசீர்வாதம்! 


காளி மந்திர் - அலங்காரம்.....

என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த ஞாயிறில் வேறு சில புகைப்படங்கள் பார்க்கலாம்!

மீண்டும் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..

சனி, 2 நவம்பர், 2013

அஞ்சீர் ரோல்ஸ்....



ஒரு படத்தில் விவேக் தனது காதலி வீட்டிற்குச் செல்லும்போது மேலிருந்து அந்த பெண் “ஆவாஸ் அஞ்சிங், ஆவாஸ் அஞ்சிங்என கதறுவாளே அது போல தில்லியிலிருந்து நான் ஏதோ கதறுகிறேன் என நினைக்க வேண்டாம் நண்பர்களே....  இன்று தீபாவளி....  [ஏதோ பெரிசா புதுசா விஷயம் சொல்ல வந்துட்டாரு! எங்களுக்குத் தெரியாதா?]

எல்லா வருஷமும் தான் தீபாவளி பலகாரமா அதிரசம், லட்டு, மைசூர் பாகுன்னு அலுத்துப் போன விஷயங்களையே சாப்பிடறது?ன்னு மனசுக்குள்ள உங்களுக்கு தோணுமே! அதனால தான் இந்த தீபாவளி திருநாளில் தீபாவளி வாழ்த்துகளோட, உங்களுக்கு வட இந்திய இனிப்பு வகைகளா இங்கே தரப்போறேன்!

சரி “ஸ்வீட் எடு.... கொண்டாடு....அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி உங்க எல்லோருக்கும் எங்களது மனமார்ந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள். பட்டாசு வெடிக்காம, டி.வீல சிறப்பு தீபாவளி திரைப்படமா 34-வது தடவையா ஏதாவது சினிமா பார்க்காம, சமர்த்தா வீட்டுல இருக்கறவங்க எல்லாம் சந்தோஷமா பேசி, மூக்கு முட்ட சாப்பிட்டு, பொழுதை நல்லா போக்குங்க! ஓகே!



வாழ்த்தியாச்சு.... அடுத்து என்ன....  இனிப்பு விநியோகம் தான்.....  கீழே விதம் விதமாய் இனிப்புகள் கூடவே அதன் பெயர்களையும் கொடுத்து இருக்கேன் [என்ன ஏதுன்னு முழிக்கக் கூடாதே!] யாருக்கு எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோங்க! அள்ள அள்ளக் குறையாது இருந்துட்டே இருக்கும் அட்சய பாத்திரம் இது! ஓகே...  அதனால நிதானமா எடுத்து சாப்பிடுங்க!


காஜு பர்ஃபி



காஜு கத்லி...


காஜு பிஸ்தா ரோல்...


காஜு - பிஸ்தா பர்ஃபி


கேசரியா பேடா.....



மாவா பேடா......

சரி அது என்னமோ தலைப்பில் ஒண்ணும் புரியாம ஒண்ணு எழுதி இருக்கே அது என்ன? அது வேற ஒண்ணும் இல்லீங்க முந்திரிப் பருப்பு அத்தியும் சேர்த்த ரோல்....  தீபாவளி சமயத்தில் இங்கே மிகவும் பிரபலம்.....  இதோ அதுவும் உங்களுக்காக.....  

அஞ்சீர் ரோல்ஸ்.....

எப்படி செய்யணும்னு கேக்கறீங்களா? அது தனிப்பதிவா வேணும்னா எழுதறேன் – அடுத்த தீபாவளிக்குள்ள!

மீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.....

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....


நட்புடன்

வெங்கட், ஆதி வெங்கட் மற்றும் ரோஷ்ணி வெங்கட்.
திருவரங்கம்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 65 – தில்லி தேர்தல் – நல்லதும் கெட்டதும் – மனைவி!


இந்த வார செய்தி:

இது வரை நடந்த தேர்தல்களில், வாக்காளர்களுக்கு தமது தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சென்ற சில தேர்தல்களாக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனச் சொல்லக்கூடிய 49 “ஓபடிவம் இருந்தது. அதனைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தது.

இப்போது நாம் வாக்களிக்கும் இயந்திரத்திலேயே இப்படி ஒரு வசதியை வைக்கச் சொல்லி இந்தியாவின் முதன்மை நீதிமன்றம் சொல்லியதன் பேரில் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலிலிருந்தே இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது தலைமை தேர்தல் அலுவலகம்.

பள்ளியில் படிக்கும்போது கேள்வி கேட்டு அதற்கு கீழேயே மூன்று விடைகளைக் கொடுத்து நான்காவதாக None of the Above என்று ஒன்றை கொடுத்திருப்பார்களே அது போல, வாக்கு இயந்திரத்தில் எத்தனை வேட்பாளர்கள் இருப்பார்களோ அத்தனை பொத்தான்களுக்கு அடுத்து இருக்கும் பொத்தான் எதிரே ‘NOTAஎன்று எழுதியிருக்கும். அதை அழுத்தினால் மேலுள்ள யாரையும் எனக்கு வேட்பாளராக தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்று உங்களது வாக்கு பதிவாகும்.

சரி... ஏதோ ஒரு தொகுதியில் இருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த NOTA பொத்தானை அழுத்தி விட்டால்? வேட்பாளர்களை விட NOTA எனும் பொத்தனை அழுத்தி, மேலுள்ள எவரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்பதை அதிக அளவில் வாக்கு பெறச் செய்து விட்டால்?என்ற கேள்வி எனக்குத் தோன்றியது. அதே கேள்வி தேர்தல் அலுவலகத்திலுள்ள அதிகாரிகளுக்கும் தோன்றியிருக்கிறது!

அதனால் அப்படி ஒரு சந்தர்ப்பம்/அசந்தர்ப்பம் ஏற்பட்டால், வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்றவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து விடுவோம் எனச் சொல்கிறார்கள் – அப்படியெனில், அந்த தொகுதி மக்களின் எந்த வாக்காளர்களின் மேலும் நல்ல அபிப்ராயம் இல்லை எனும் வாக்கிற்கு என்ன மதிப்பு.... 

என்னவோ போங்க, இந்த அரசியல் நமக்குப் புரியவே மாட்டேங்குதே!

இந்த வார முகப்புத்தக இற்றை:

GRANDMAS HOLD OUR TINY HANDS FOR JUST A LITTLE WHILE, BUT OUR HEARTS – FOREVER….. 

சில வீடுகளில் இது பொய்யாவதும் உண்டு!

இந்த வார குறுஞ்செய்தி

PEOPLE LOSE THEIR HEALTH CREATING WEALTH AND LOSE THEIR WEALTH TO REGAIN THEIR HEALTH……… FUNNY WORLD!

ரசித்த படம்: 



ரசித்த பாடல்:

புது நெல்லு புது நாத்து படத்திலிருந்து “கருத்த மச்சான் கஞ்சத்தனம்பாடல் – இளையராஜாவின் இசையில்.... உருமி மேளத்துடன் ரசித்த பாடலாக இங்கே! உங்களுக்கும் பிடிக்கும் தானே! :)




ரசித்த காணொளி:

சமீப நாட்களாக ஏசியன் பெயின்ட்ஸ் விளம்பரம் ஒன்று பார்க்க முடிந்தது. மணம் முடித்து ஒரு பெண் தனது கணவனுடன் செல்கிறாள். கணவன் வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாகப் பார்த்து வரும் அந்த மனைவி ஒரு அறையினுள் வந்ததும் ரொம்பவே ரசிக்கிறாள்....  இவ்விளம்பரத்தினை பார்த்தீர்களா? பார்க்கலைன்னா கஷ்டம் வேணாம்! இதோ அந்த விளம்பரம்....




படித்ததில் பிடித்தது!:

ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான், “நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளான். அதனால் நல்லதை ஏற்பது போல, கெட்டதையும் ஏற்றால் என்ன?

குரு சிரித்துக் கொண்டே, “அது அவரவர் விருப்பம்,என்றார்.

பகல் உணவு வேளை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட்ட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது.

சீடன் விழித்தான்.

குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார், “பால், சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும் போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?”    

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.