செவ்வாய், 29 அக்டோபர், 2013

லங்கோட்டியா யார்......




ஞாயிறு மாலை அலைபேசியில் ஒரு அழைப்பு.... 

நான்: “ஹலோ...

அலைபேசிக் குரல்: “என்னடா பண்ணறே.....

நான்: சொல்லுடா....

அலைபேசிக்குரல்: வெளியே எங்கும் சுத்தக் கிளம்பிடாத, அம்மா வந்திருக்காங்க, அழைச்சிட்டு வரேன்.

நான்: எங்க அம்மா, அப்பாவும் இங்கே தான் இருக்காங்க.... நிச்சயம் அழைச்சுட்டு வா!  ரொம்ப நாள் கழிச்சு பார்க்கப் போறோம். நான் வீட்டிலேயே இருக்கேன்

அந்த அழைப்பு வந்தது என்னுடைய நெய்வேலி நண்பர் ஒருவரிடமிருந்து.  பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்த குடும்பங்கள் எங்களுடையது. எங்கள் வீட்டில் மூன்று பேர். அவர்கள் வீட்டில் மூன்று பேர், அதற்கடுத்த வீட்டில் ஒரு பெண். ஏழு பேர் கொண்ட அணி எங்களுடையது. பெண்கள் நால்வரும் ஒரு அணி. வால்கள் மூவரும் ஒரு அணி! எத்தனையோ நாட்கள் விளையாடியிருக்கிறோம். அவர்களது பெற்றோர்கள் வெளியூர் சென்றுவிட்டால், எங்கள் வீட்டில் சாப்பாடு. என் பெற்றோர்கள் வெளியூர் சென்றால் எங்களுக்கு அவர்கள் வீட்டில் சாப்பாடு.



அவர்கள் வீட்டில் எப்போது புட்டு கடலை செய்தாலும் எங்களுக்கும் நிச்சயம் வரும். எங்கள் வீட்டில் வற்றல் குழம்பு செய்தாலும் அவர்கள் வீட்டுக்கும் கொஞ்சம் போகும். கிட்டத்தட்ட எனது பெற்றோர்களுக்கும் அவர்களுக்கும் 35 வருட பழக்கம். நாங்களும் பிறந்ததிலிருந்து ஒன்றாகவே இருந்திருக்கிறோம். படித்த பள்ளிகள் வேறாக இருப்பினும், வீடு வந்துவிட்டால் நிறைய விளையாடி இருக்கிறோம்.



இந்த எழுவர் அணி சேர்ந்து நாவல் பழம் பறிக்கப் போய் அடி வாங்கிய கதை ஏற்கனவே இந்த வலைப்பக்கத்தில் டவுசர் பாண்டி எனும் தலைப்பில் எழுதி இருக்கிறேன். அன்று மரத்திலிருந்து கீழே விழுந்த முரளி தான் மாலை அலைபேசியில் அழைத்துப் பேசியது. தில்லியிலேயே அவர் வசித்தாலும், பணிச்சுமை, இருக்கும் இடங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி போன்ற பல விஷயங்களால் அடிக்கடி சந்திப்பதில்லை. இப்படி ஏதாவது ஒரு நாளில் – சில வருடங்களுக்கு ஒரு முறை சந்திப்பது வழக்கம். அப்படிச் சந்திக்கும் போது நெய்வேலியின் நினைவுகளும், சொந்த விஷயங்களும் பேச ஆரம்பித்து விட்டால், நேரம் போவது தெரியவே தெரியாது.



நேற்றும் ஐந்தரை மணிக்கு வந்த பின் தொடர்ந்த பேச்சு தான். முடிவுக்குக் கொண்டு வர யாருக்கும் மனதில்லை. நடுவில் எனக்கு வேறொரு அழைப்பு வர கொஞ்சம் அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழல். நான் வெளியே சென்று வீடு திரும்ப ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அப்பொழுதும் நெய்வேலி கதை தான் வீட்டில் ஓடிக்கொண்டிருந்தது. நானும் வெளியே சென்றுவிட்டாலும் அதே நினைவுகள் தான் எனது மனதிற்குள்ளும்.



நண்பரின் மகன் தனது பாட்டியிடம் “நீ ரொம்ப நாள் கழிச்சு உன்னோட ஃப்ரண்டை பார்க்கப் போற, பேச்சு சுவாரசியத்துல மறந்து போய் அங்கேயே இருந்துடாத, ராத்திரிக்குள்ள வீட்டுக்கு வந்துடு. அப்பாவுக்கு நாளைக்கு ஆஃபீஸ் போகணும்என்று சொல்லி தான் அனுப்பினானாம்.  நிஜமாகவே மறந்து தான் போய் விட்டார்கள். உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பவர்கள், திடீரென நினைவு வந்து எழுவதும், நின்றபடியே சில விஷயங்கள் பேசுவதும், வேறு ஒரு விஷயத்திற்கு தாவும்போது சுவாரசியத்தில் மீண்டும் அமர்ந்து பேசுவதும் என தொடர்ந்தது பேச்சு.

நடுவே எங்களது வீர பராக்கிரம செயல்கள் பற்றிப் பேசும்போது நான் அவர்களது பல் செட்டினை காக்கையிடமிருந்து தட்டிப் பறித்து வந்த விஷயமும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள் நண்பரின் அம்மா.  அட அது என்ன விஷயம்னு?தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா இங்கே போய் படிங்க! – அண்டங்காக்கையை வென்ற பல்லவன்

நான், அப்பா, மற்றும் நண்பர் ஒரு இடத்தில் பொது விஷயங்கள் பேச, அம்மாவும், நண்பரின் அம்மாவும் தேநீர் தயாரித்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இடைவிடாத பேச்சு. ஓய்வில்லாத பேச்சு.....  முடிக்கத்தான் மனசில்லை – மைக் கிடைத்த அரசியல்வாதி போல தொடர்ந்த பேச்சு. ஆனால் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஹிந்தியில் லங்கோட்டியா யார் எனச் சொல்வார்கள் – அதாவது குழந்தைப் பருவ நட்பு. லங்கோட் என்பதற்கு அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். அந்த வயதில் தொடர்ந்த நட்பிற்கு கொஞ்சம் பலம் அதிகம் தான் என நினைக்கிறேன். இத்தனை வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே. வருடங்கள் பல கடந்து, படிப்பு முடித்து அவரவர் வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் நேரிலே பாக்காது இருந்தாலும், மனதிற்குள் இந்த நட்பு தொடர்கிறது என்பதை இது போன்ற சந்திப்புகளின் போது தான் உணர முடிகிறது. 

இனிமையான நினைவுகளோடு பேசிப் பேசிய கழித்த இந்த மூன்றரை மணி நேரமும் இன்னமும் பல நெய்வேலி நினைவுகளை மீட்டெடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இனிய நினைவுகளோடு, இன்னும் சில நாட்கள் இருந்தாலும் தொடர்ந்து பேச விஷயங்கள் இருந்தாலும், செல்ல வேண்டிய இடம் தூரம் என்பதால் மனதில்லாது வீட்டை விட்டு கிளம்பினார்கள் நண்பரும் அவரது அம்மாவும்.  இது போன்ற சந்திப்புகள் என்றுமே சந்தோஷ நினைவலைகளை கட்டுக்கடங்காது ஓட வைத்து விடுகிறது அல்லவா. அவர்கள் சென்ற பிறகும் இந்த பேச்சு எங்களுக்குள் தொடர்ந்தபடியே......

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

படங்கள்: கூகிளாண்டவர் இருக்க பயமேன்?     

திங்கள், 28 அக்டோபர், 2013

ஏற்றி விடப்பா... தூக்கி விடப்பா.....


[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 6]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

பம்பையில் தண்ணீர் ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டு எங்களை வரவேற்றது. மாலை நேரமாக இருந்தாலும், பயணத்தின் அலுப்பு தீரவும், சபரிமலை ஏற்றத்திற்கு முன் அங்கே நீராடுவது வழக்கம் என்பதாலும் அங்கே நீராடினோம்.

அலுப்பு தீர நீராடிவிட்டு மலையேற்றத்திற்கு தயாரானோம். நான் தயார் ஆகும் வரை நீங்களும் உங்களது வேலைகளை முடித்து வாருங்களேன்…..


உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

நீங்களும் அடுத்த பகுதியைப் படிக்க தயாராக வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நீர்நிலைகளில் நீராடுவதில் இருக்கும் சுகம் நமது வீடுகளில் பைப் அடியில் பக்கெட் வைத்து சிறிய குவளைகளில் மொண்டு குளிப்பதில் இருப்பதில்லை. பம்பையில் தண்ணீர் நிறையவே ஓடுவதால் அங்கே குளிப்பதில் இருந்த ஆனந்தம் என்னையும் நண்பரின் நண்பரையும் பம்பையிலிருந்து வெளியே வர விடவில்லை. தொடர்ந்து நீராடிக்கொண்டிருக்க நினைத்தாலும் இரவுக்குள் மலையேறிவிட்டால் இரவிலேயே சபரிமலை ஐயப்பனை தரிசித்து விடலாம் என்பதால் மனதில் இஷ்டமில்லாது பம்பையிலிருந்து வெளியெறினேன்....

 பட உதவி: கூகிள்.....
 
மலையேறும்போது சற்றே வியர்க்கும் என்பதால், மேல் சட்டையில்லாது ஏறுவோம் என நண்பர் சொல்ல, மூவரும், ஒற்றை வேட்டியும் மேல் துண்டுமாக ஒரு சிறிய பையில் மாற்றுத் துணியும் எப்போதும் கூடவே இருக்கும் கேமரா பையோடும் [அதில்லாது பயணங்கள் போவதில்லை!] கிளம்பினோம்.  பம்பைக் கரையோரம் நடந்து சென்றால் சில மீட்டர் தொலைவு சென்றாலே படிக்கட்டுகள்....  மலையடிவாரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் வந்துவிடும்.

பிள்ளையார் கோவில் வாசலில் மலையேற்றம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்பதற்காக ஆனைமுகனை வேண்டிக்கொண்டு சூரைத் தேங்காய் உடைக்கிறார்கள். நம் ஊர் கோவில் போல சிறு தொட்டிகள் கிடையாது. பெரிய பள்ளம். சுவர் முழுக்க பாறைகள். பாறைகளில் தேங்காயை அடித்து உடைத்து விட்டு, சிலர் அங்கேயே மாலை போட்டுக் கொள்கிறார்கள். நாற்பத்தி எட்டு நாள் கடுமையான விரதம் இருப்பது என்பதெல்லாம் இப்போதைய கால கட்டத்தில் நிறைய பேரால் முடிவதில்லை என்பதால் மாற்றிக் கொண்டு விடுகிறார்கள்.

அங்கே மாலை போட்டுக்கொண்டு இருமுடி கட்டிக்கொண்டு மலையேற்றம் தொடங்குகிறார்கள். நானும் நண்பர்களும் விரதமோ, இருமுடியோ கட்டிக் கொள்ளாததால் சாதாரணமாக தரிசனம் மட்டுமே செய்ய நினைத்திருந்ததால் ஆனைமுகனையும் மற்ற சன்னதிகளில் இருந்த ஹனுமனையும் மற்ற தெய்வங்களையும் தரிசித்துக் கொண்டு மலையேறத் துவங்கினோம்.  பொதுவாக சபரிமலையில் இருக்கும் பதினெட்டு படிகள் வழியாக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல இருமுடி கட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்பது விதி. அப்படி இருமுடி கட்டிக்கொண்டு செல்லாதவர்கள் பதினெட்டு படிகள் ஏறிச் செல்ல முடியாது. வேறு வழியாக கோவிலுக்குச் செல்ல முடியும்.

நாங்கள் சென்றது மகர ஜோதி சமயத்தில் இல்லாது, பொதுவாக மாதப் பிறப்பு சமயத்தில் என்பதால் அவ்வளவு மக்கள் கூட்டம் இல்லை. இருந்தாலும் கும்பல் விரும்பாத பலர் இது போல ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில்  முதல் ஐந்து நாட்கள் திறக்கும் சமயத்தில் விரதம் இருந்து சபரிமலைக்கு வருகிறார்கள். சிலர் குழுவாக வருகிறார்கள் – அவர்கள் எல்லோரும் குழுவாகவே மலையேறுகிறார்கள். அப்படிச் செல்பவர்கள் பாடல்கள் பாடிக்கொண்டும் சபரிகிரிவாசனின் பெயரைச் சொல்லியபடியே வருகிறார்கள்.

பொதுவாகவே ஆந்திர மாநிலத்தினைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தினைச் சேர்ந்தவர்களும் தான் அதிகம் இங்கே செல்கிறார்கள். இக்கோவிலுக்குச் செல்லும் மலையாளிகளின் எண்ணிக்கை அத்தனை அதிகமில்லை என நண்பர் சொல்லிக் கொண்டு வந்தார். இப்போதெல்லாம் சில வட இந்தியர்களையும் பார்க்க முடிகிறது எனச் சொல்லிக் கொண்டு வரும்போதே கோவிலில் தரிசனம் முடித்து சில வட இந்தியர்கள் சபரியின் நாமத்தினைச் சொல்லி மலையேறும் பக்தர்களுக்கு ஊக்கம் அளித்தபடியே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

பொதுவாக எருமேலி வழியாகச் செல்லும் பாதை மிகவும் கடினமானது என்று சொல்கிறார்கள். பம்பை வரை வாகனத்தில் வந்து அங்கிருந்து மலையேற்றம் தொடங்கினாலும் சற்றுக் கடினமானதாகத் தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். வட இந்தியாவில் உள்ள மலைகளில் – ஜம்மு மாநிலத்தின் வைஷ்ணவ தேவி கோவிலுக்கும், கேதார்நாத் கோவிலுக்கும் நடந்து பழக்கம் இருந்ததால் இந்த மலையேற்றம் எனக்குக் கடினமாகத் தெரியவில்லை.

கர்நாடகத்திலிருந்து வந்திருந்த ஒரு கோஷ்டி எங்கள் முன்னே சென்று கொண்டிருந்தார்கள் – சிலர் தமிழர்கள் – ஆனாலும் கன்னடத்திலோ அல்லது ஹிந்தியிலோ தான் பேசிக்கொண்டு சென்றார்கள். குழுவிலேயே கொஞ்சம் பெருத்த சரீரம் இருந்த ஒரு நபர் தான் சபரிகிரிவாசனின் நாமத்தினைச் சொன்னபடியே வந்து கொண்டிருந்தார் – “ஏற்றிவிடப்பா, தூக்கி விடப்பா “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைஎன்று எல்லோருமாகச் சொல்லிக்கொண்டே மலையேற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து மலையேறிக் கொண்டிருக்கிறோம் நாங்கள் – அட உங்களுக்கும் என்னுடன் மலை ஏறி வந்ததில் கொஞ்சமாகக் கால் வலிக்க ஆரம்பித்து இருக்குமே....  அதனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோமா? வழியில் ஒரு இடத்தில் சுடுவெள்ளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயே நின்று நானும் கொஞ்சம் சுடுவெள்ளம் குடித்து விட்டு மலையேற்றத்தினைத் தொடங்குகிறேன். நீங்களும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்களேன்!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கொலு பொம்மைகள்…..




நவராத்திரி சமயத்தில் பல வீடுகளில் கொலு வைப்பது வழக்கம் அல்லவா? அப்படி தில்லியில் கொலு வைத்திருந்த சில நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றபோது [வேற எதுக்கு சுண்டல் சாப்பிடத்தான்!] அங்கிருந்த கண்கவர்ந்த சில பொம்மைகளை படம் எடுத்தேன். அவற்றின் படங்கள் தான் இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சில பொம்மைகள் மிகவும் பழமையானவை. அதைப் போன்ற பொம்மைகள் வேறெங்கும் நான் பார்த்ததில்லை. அதனால் அவற்றையும் புகைப்படம் எடுத்தேன். வேறெதற்கு, உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான்!


அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…… 
பேண்ட் வாத்தியங்கள் முழங்க….
கல்யாணம்…  ஆஹாஹா கல்யாணம்……


இங்கும் அம்மியும் அருந்ததியும் உண்டு!
ஆனால் பேண்ட் வாத்தியம் மிஸ்ஸிங்…..
அந்தக் காலத்து கல்யாணம் போல!


”கெட்டி மேளம்…. கெட்டி மேளம்….” பலரும் குரல் கொடுக்க….
அது கேட்டவுடனே வாசிக்கத் தயாராக இருக்கிறோம்!


கல்யாண சமையல் சாதம்… காய்கறிகளும் பிரமாதம்……


காந்தி தாத்தா சொன்ன குரங்கு பார்த்து இருப்பீங்க…. 
அதையே சொல்லும் எங்களைப் பார்த்ததுண்டா?


விஷ்ணுவைத் தாங்கியபடி கருடன்….
வீதியுலா போகத் தயாராக!


சிவன் – பார்வதி……
எதிரே பணிவுடன் கார்த்திகைப் பெண்கள்…..
தாமரை மலர்களில் ஆறுமுகன்!


தமிழகமும் ஒடிசாவும்….
தமிழகத்திலிருந்து மரப்பாச்சி பொம்மைகள்…..
ஒடிசாவிலிருந்து பூரி ஜகந்நாத் பொம்மைகள்…..


பத்து அவதாரங்கள்……
அஷ்ட லக்ஷ்மி பொம்மைகள்…..


நர்த்தன கிருஷ்ணர்கள்…..
[கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு மேல் பூஜிக்கப்பட்ட விக்ரஹங்கள் இவை.….. தலைமுறை தலைமுறையாக காப்பாற்றி வந்திருக்கிறார்கள்….]

என்ன நண்பர்களே, இந்த வார புகைப்படங்களை ரசித்தீர்களா? அடுத்த வாரம் ஞாயிறன்று வேறு சில புகைப்படங்கள் தொடரும்….. 

மீண்டும் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

சனி, 26 அக்டோபர், 2013

யார் குற்றவாளி?




நிகழ்வு-1: சென்ற செவ்வாய் கிழமை இரவு. தலைநகர் தில்லியின் பதினேழு வயது பெண் மூன்று காட்டுமிராண்டி இளைஞர்களால் சீரழிக்கப்பட்டார். இது ஊடகங்களில் வந்த செய்தி. 

நிகழ்வு-2: வெளி வராத ஒரு செய்தியும் இருக்கிறது – அதே நாளில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவி – பள்ளியில் படிப்பது தவிர மேற்படிப்புக்காக பயிற்சி வகுப்பிலும் படித்து வருகிறார். அங்கே பன்னிரண்டாவது படிக்கும் ஒரு மாணவனுடன் சற்றே நெருங்கி நட்புடன் பழகியிருக்கிறார் போல.  

இரவு எட்டு மணிக்கு இந்தப் பெண்ணை அலைபேசியில் அழைத்து பாடத்தில் ஏதோ சந்தேகம் இருக்கிறது – சேர்ந்து படிக்கலாம் என அழைத்ததாக தெரிகிறது. தெரிந்த பையன் தானே என அந்த நேரத்தில் இந்தப் பெண்ணும் செல்ல, ஒரு காரில் அழைத்துக் கொண்டு போய், ஏதோ மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை சீரழித்திருக்கிறார்கள். பாடத்தில் சந்தேகம் என அழைத்து உடலியலில் அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த வெறியர்கள்.

வெளியே தெரிந்தால் அவமானம் என இதை மூடி மறைத்து விட்டார்கள் பெற்றவர்கள். கூடவே அந்த இளைஞன் படங்கள் எடுத்திருப்பதாகவும் போலீஸுக்குச் சென்றால் அவற்றை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதால் போலீஸுக்கு போகவில்லை பெற்றோர்கள். பெற்றோர்களிடம் சொல்வதற்கு முன்னரே தோழி ஒருத்தியிடம் சொல்ல அதன் மூலம் விஷயம் வெளிவந்திருக்கிறது. எதையோ செய்து விஷயத்தினை அடக்கி வைத்திருக்கிறார்கள்.

நிகழ்வு-3: ஹைதை நகரில் ஒரு தெலுங்கு பெண். 22 வயது. ஏதோ எம்.என்.சி. யில் வேலை. போய் வரும் போது ஒரு 25 வயது ஆணுடன் பழக்கம் ஏற்பட, நட்பு காதலாக கனிந்து இருக்கிறது. ஒன்றிரண்டு வருடங்கள் காதலித்து, “இப்போ கல்யாணம், அப்போ கல்யாணம்” என இழுத்தடிக்கப்பட்டு, பின்னர் தெரிய வந்திருக்கிறது அந்த ஆண் ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என. உடனே அவருடன் தொடர்பினை முறித்துக் கொண்டு பெற்றோர்கள் பார்த்த மணமகனை [அமெரிக்க மணமகனை] கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடந்திருக்கிறது.  எப்படியோ விஷயம் தெரிந்து கொண்ட அந்த காதலன், இவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தபோது எடுத்துக்கொண்ட படங்களை அமெரிக்க மாப்பிள்ளைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருக்கிறார். விளைவு – நிச்சயித்த திருமணம் நின்றுவிட்டது.

நிகழ்வுகள் மூன்று விதமாக இருந்தாலும், இந்த இரண்டு மூன்று தினங்களில் கேட்டவை/படித்தவை.  இது போல தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. 

இந்த செய்திகள் வந்து சில நாட்களுக்குள் மறந்து போய்விடக் கூடிய அபாயம் நிறைந்தவை. அடுத்த பெண் இது போல அவஸ்தைக்கு ஆளானாலோ, வேறு ஏதாவது அரசியல் நிகழ்வு நடந்தாலோ பத்திரிகைகளும், ஊடகங்களும் மறந்து விடக்கூடிய செய்தி.

பள்ளியில் பதினொன்றாவது படிக்கும் பெண் பற்றி மற்றொரு பெண் சொல்லும் போது நன்கு படிக்கக் கூடியவள் என்றும் புத்திசாலி என்றும் சொல்கிறார். ஆனாலும் படிப்பதில் இருந்த புத்திசாலித்தனம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் இல்லையே என்பது தான் வருத்தப்பட வேண்டிய செய்தி.

இந்த விஷயத்தில் புரியாத சில விஷயங்கள் – யார் குற்றவாளி?

மகளுக்கு சுதந்திரம் தருகிறேன் என்ற பெயரில் எந்த நேரத்திலும் வெளியே செல்ல அனுமதி அளித்த பெற்றோர்களா? இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே செல்லும் போது, “தனியே போவது அவசியமா?, எங்கே செல்கிறாய்” என்று கேட்காது இருப்பது தில்லியில் மிக சாதாரணம். பத்து பதினோரு மணிக்குக் கூட பெண்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காக்களில் தனியாக சுற்றுவது இங்கே வழக்கம்.  அந்த அளவிற்கு இங்கே பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். இந்த சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகளா?

படிப்பில் இருக்கும் புத்திசாலித்தனம், நாட்டு நடப்பில் – குறிப்பாக தில்லி போன்ற பெரு நகரங்களில் பெண்களுக்கு இரவில் இருக்கும் அபாயங்களை தெரிந்து கொள்வதில் இல்லாதது அந்த பெண்ணின் குற்றமோ? பெண்களிடம் பழகுவது போலவே ஆண் நண்பர்களிடமும்/ மாணவர்களிடமும் பழகுவது எந்த தைரியத்தில்? இது அசட்டு தைரியம் என தெரியாது போய்விட்டதே இந்த பெண்ணிற்கு? இது இந்த பெண்ணின் குற்றமா?

தொடர்ந்து இது போன்ற பல குற்றங்கள் நிகழ்ந்து விட்டாலும், இரவு நேரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தாத காவல் துறை, அரசாங்கத்தின் குற்றமா? வரும் முன் காப்போம் என்பதை மக்களுக்கு மட்டுமல்ல, காவல் துறையும் செய்ய வேண்டுமென உணரவில்லையே. போதிய ஊழியர்களோ, இருக்கும் ஊழியர்கள் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு பயன்படுகிறார்கள் என்பதையோ சொல்லி தப்பித்து விடுவது சாதாரணமான ஒன்றாக இருக்கிறதே.

இப்படி ஒரு குற்றம் நடந்து குற்றம் இழைத்தவருக்கும் முன்னுதாரணமான ஒரு தண்டனை கொடுக்க முடியாத நமது அரசியல் சட்டத்தின் குற்றமா?

இல்லை ஆண்மகவினைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் அவர்களை நல்ல படியாக வளர்க்காது – அவர்களுக்குத் தகுந்த விஷயங்களைச் சொல்லித் தராதது குற்றமா?

யார் குற்றவாளி? ஒன்றுமே புரியவில்லை. இளம் குருத்துகளை  இப்படி அழித்து விட்டார்களே என வருத்தப் படுவதைத் தவிர வேறொன்றும் புரியவில்லை.

என்னவோ போங்க! படிக்கும்போதே வெறுப்புத்தான் வருகிறது எல்லா விஷயங்களின் மீதும்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.