செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஸ்வச்ச் பாரத் செஸ்

முகப்புத்தகத்தில் நான் – 13

ஸ்வச்ச் பாரத் - எங்கும் குப்பை போடுவேன்….
21 ஃபிப்ரவரி 2017



இரண்டு நாட்களுக்கு முன்னர் எங்கள் பகுதியில் ஒரு நிகழ்வு. இரண்டு நாட்கள் – ஐந்து வேளை உணவு – எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் கழிவுகள் – அதையும் அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பைகளில் போடாமல் ஆங்காங்கே போட்டு வைத்தார்கள் மக்கள்! கொஞ்சம் ஏமாந்தால், அசையாமல் நின்று கொண்டிருந்தால் உங்கள் மேலும் குப்பைகளைப் போட்டு விடும் அபாயம் உண்டு. நிகழ்வு நடக்கும் இடத்திலேயே சிலர் செய்த விஷயம் பார்த்த போது – “வாழைப்பழ சோம்பேறி” என்பதற்கு புதியதோர் அர்த்தம் கிடைத்தது!

தூண் பக்கத்தில் அமர்ந்து நிகழ்வினைப் பார்த்துக் கொண்டிருந்தவர் கிடைத்த வாழைப்பழத்தினைச் சாப்பிட்டு, அதன் தோலைக் கொண்டு போய் குப்பைக் கூடையில் போடாமல், தூண் பக்கத்திலேயே போட்டு வைத்திருந்தார்! சரி, எழுந்து செல்லும்போதாவது அதைக் கொண்டு போய் போட்டிருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. எங்கே போட்டாரோ, அங்கேயே இருந்தது – நாங்கள் சுத்தம் செய்யும் வரை…. என்ன மனிதர்களோ….

இந்தியா கேட் பகுதியில் பார்த்த/கேட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது – இதை ராஜா காது பகுதியில் எழுத நினைத்தாலும், இங்கேயே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கேயே!

“இரண்டு இளம் ஜோடிகள்… புல்வெளியில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் பிளாஸ்டிக் பெப்சி பாட்டில்கள், சாப்பிட்ட குர்குரே பாக்கெட்டுகள் என நிறைய குப்பை. ஜோடிகளிலிருந்த ஒரு பெண், ஆணிடம் “குப்பையை எல்லாம் எடுத்து குப்பைக் கூடையில் போடு!” அதற்கு அந்த ஆண்சிங்கம் சொன்னது – “நான் ஸ்வச்ச் பாரத் செஸ் கட்டுகிறேன். அதனால் எங்கு வேண்டுமானாலும் குப்பை போடுவேன்!”  - இவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வாடகை குடுக்கிறார் என்பதால், வீட்டு ஹாலில் குப்பையைப் போட்டுக் கொள்வாரா? குப்பைகளை சுத்தம் செய்யும் மனிதரும் தான் செஸ் கட்டுகிறார் – அதனால் அவரும் நான் செஸ் கட்டுகிறேன், குப்பைகளை எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டால் நாடு நாறிவிடாதா….. 

இன்னுமொரு மனிதர் பூட்டியிருக்கும் சாலையோரக் கடை அருகே உள்ள நடைபாதையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்.  சில மணித்துளிகளில் அந்தக் கடை திறக்கும்போது கடைக்காரருக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் சில அடி தூரத்திலேயே இலவசக் கழிப்பிடம், அதுவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் இலவசக் கழிப்பிடம் இருக்க, இப்படி செய்வது கொஞ்சம் கூட நல்லதல்லவே.  நடைபாதை வழியே வந்தவர் அவரிடம் “ஏன் இப்படிச் செய்கிறாய்?” எனக் கேட்க, “உனக்கென்ன வந்தது, உன் மேலா சிறுநீர் கழித்தேன்!” என எகத்தாளமாகக் கேட்கிறார்.

சுத்தமாக வைத்திருப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நாமும் அதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் வரை குப்பைக் கூடமாகத்தான் இருக்கப்போகிறது நம் தேசம்…..

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

16 கருத்துகள்:

  1. சுய விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் தேவை. சிங்கப்பூரைப் பார்... அமெரிக்காவைப் பார்... சீனாவைப் பார் என்றெல்லாம் மட்டும் சொல்லிப் பயனில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசுவது மட்டுமே வழக்கமாகக் கொண்டவர்கள்... என்ன செய்வது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சுத்தம் என்பதானது தனி மனிதரிடமிருந்து தொடங்கப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு தனிமனிதரும் கடைபிடித்தால் நிச்சயம் நாடு சுத்தமாகும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பே சிவம்.

      நீக்கு
  4. >>> அவரிடம் “ஏன் இப்படிச் செய்கிறாய்?” எனக் கேட்க, “உனக்கென்ன வந்தது!” என எகத்தாளமாகக் கேட்கிறார்.. <<<

    இதைப் போன்ற கழிசடைகள் தான் பெருகி விட்டன..
    இவற்றை முதலில் பெருக்கித் தள்ள வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழிசடைகள்... சரியான வார்த்தைப் பிரயோகம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. சுத்தம் சுகாதாரம் இதையெல்லாம் குழந்தையிலிருந்தே கற்றுத்தரவேண்டும். ஆனால் அதற்கு பெற்றோர் முன்மாதிரியாக இருக்கவேண்டும்.. அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் தாங்களும் அதே தவறைத்தான் செய்வார்கள். என் பிள்ளைகள் சிறுவயதில் வெளியிடங்களில் சாக்லேட் சாப்பிட்டால் அங்கே குப்பைத்தொட்டி இல்லாதபட்சத்தில் அதன் தாளை என்னிடம் தரச்சொல்வேன். கைப்பையில் வைத்திருந்து வீட்டில் குப்பைக்கூடையில் போடுவேன். அதைப் பார்த்து வளர்ந்த பிள்ளைகளுக்கு அதுவே பழக்கமாகிவிட்டது. இவ்வளவு குப்பை கிடக்கு.. ஒரு சாக்லேட் தாளால் என்ன ஆகிவிடப்போகிறது என்று சிலர் கேலி செய்வார்கள். நாங்கள் அதைப் பொருட்படுத்துவதிலைல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேருந்து பயணச் சீட்டினை பலரும் கீழே போட, நான் மட்டும் குப்பைக்கூடையில் சென்று போடுவது பார்த்து, பலரும் சிரிப்பதுண்டு!

      பெற்றோர்களும் சரியான முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதும் சரி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி!

      நீக்கு
  6. இதுபோல, பஸ்ல போகும்போது அங்கிருந்து எச்சி, புகையிலை துப்புவது, சிகரெட்டை வீசி எறிவது இப்படி எத்தனைவிதமான தொல்லைகளை இந்த மக்கள், சக மனிதர்களுக்குக் கொடுக்கிறார்கள். இங்க ஒரு ஹோட்டல்ல ஒருத்தர், சாப்பிட்டுக்கொண்டே, காலுக்குக் கீழ துப்பிக்கொண்டே இருந்தார். என்னைக்கேட்டா அறிவியல், கணக்கு என்று 1ம் வகுப்பிலிருந்தே ஆரம்பிக்கறதைவிட, முதல் 5 வகுப்புகள், சுத்தம், நல்ல குடிமகனாய் (? டாஸ்மாக் இல்லை. சிடிசன்) இருப்பது போன்ற அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தந்தால் அவர்கள் பெரியவர்களை மாற்றலாம்.

    மக்கள்தான் மாறணும். அவங்க மாறும்போது, அவங்களுக்கு நல்ல தலைவர்கள் கிடைப்பாங்க. தலைவர் கிடைக்கும்போது நாடு முன்னேறும். அதுவரை, ஸ்ரீராம் சொன்னதுபோல், 'அமெரிக்காவைப் பார்', 'சிங்கப்பூரைப் பார்' என்று சொல்லிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். இங்கே நிறைய மாற்றங்கள் தேவை.......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. ஆமாம் ஜி! இந்தச் சுத்தம் எல்லாம் சிறு வயதிலிருந்தே கற்றுத் தர வேண்டும். மேலை நாடுகளில் அப்படியே வந்து விடுகிறது. இங்கு பள்ளியில் சிவிக் சென்ஸ் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் மட்டுமல்ல உதாரணமாக இருக்க வேண்டும். அதே போன்று பெற்றோரும்....உதாரணமாக இருக்க வேண்டும்.

    கீதா: உங்கள் அனுபவம் எனக்கும் உண்டு ஜி. ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு கவரில் போட்டு வைப்பதைப் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். அது போல சீட்டைக் குப்பைத் தொட்டியில் போடுவதைப் பார்த்து. அப்புறம் கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவதைப் பார்த்தும் வினோதமாகப் பார்ப்பார்கள்...என்ன செய்ய? நம் மக்களின் விழிப்புணர்வும் புரிதலும் அவ்வளவுதான்...நல்ல பதிவு ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....