வியாழன், 21 டிசம்பர், 2017

பதிவு எண் 1500 – பதிவுலகமும் நானும் – நன்றி சொல்லும் நேரம்




இன்றைக்கு வெளியிடும் இப்பதிவு “சந்தித்ததும் சிந்தித்ததும்” வலைப்பூவில் 1500-ஆவது பதிவு! இத்தனை தூரம் நான் கடந்து வருவேன் என்ற சிந்தனை வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கும் போது எனக்குள் சத்தியமாக இல்லை. இந்த வலைப்பூவில் தான் நான் முதன் முதலாக எழுத ஆரம்பித்தேன் என்றாலும், நடுநடுவே ”ரசித்த பாடல்” என்ற வலைப்பூவும், “Venky’s Thoughts” என்ற ஆங்கில மொழி வலைப்பூவும் ஆரம்பித்து எழுதிக் கொண்டிருந்தேன். ரசித்த பாடல் வலைப்பூவில் என் இல்லத்தரசியும் எழுதிக் கொண்டிருந்தார். 23 டிசம்பர் 2013-க்குப் பிறகு அந்த வலைப்பூவில் எந்த பதிவும் வெளியிடவில்லை.  ஆங்கில வலைப்பூவில் மூன்றோ நான்கோ பதிவுகள் எழுதியபிறகு தொடரவில்லை. சில மாதங்களில் அதனை மொத்தமாக அழித்துவிட்டேன்! தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது இங்கே மட்டும் தான்!


30 செப்டம்பர் 2009-ல் ஆரம்பித்த இந்த வலைப்பயணம் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒன்பது லட்சத்தி ஐம்பதாயிரம் பக்கப் பார்வைகளுக்கு மேலே [ஆரம்ப நாட்களில்  இந்த எண்ணிக்கையைக் கணக்கில் வைக்கும் வசதி பிளாக்கரில் இல்லை!] என்று சொல்கிறது பிளாக்கர் கணக்கு! 365 தொடர்பவர்கள் – அத்தனை பேரும் எனது பதிவுகளைப் படிப்பதும் இல்லை! ஆனால் தொடராமல் பதிவுகளை படிக்கும் நண்பர்களும் உண்டு. இப்போதெல்லாம் நாளொன்றுக்கு சராசரியாக அறுநூறுக்கு மேலான நண்பர்கள் வலைப்பூவில் உள்ள ஏதோ ஒரு பதிவையாவது படிக்கிறார்கள்.  கருத்துரைகளும் வருவது குறைந்து விட்டது என்றாலும் இன்னமும் தொடர்ந்து கருத்து எழுதுபவர்கள் உண்டு.  தொடர்ந்து ஊக்கம் தரும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.

பதிவுலகில் நான் தொடர்ந்து வாசிக்கும் பல பதிவர்கள் எனது பதிவுகளைப் படிக்கிறார்களா எனத் தெரியாது, ஆனால் அவர்கள் படித்தாலும் கருத்துரை எழுதுவதில்லை என்பது நிச்சயம். என்னாலும் பலரது பதிவுகளை படிக்க முடிவதில்லை – முடிந்த நேரத்தில் விடுபட்ட பதிவுகளை படித்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இந்த எட்டு வருடத்தில் பதிவுலகில் பலர் எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள். புதிதாக சிலர் எழுத வந்தாலும் தொடர்ந்து எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைந்த வண்ணமே இருக்கிறது. முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் என பலரும் சென்றுவிட, வலைப்பூவில் எழுதுபவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருந்தாலும் நான் இன்னமும் இங்கேயே இருக்கிறேன். தொடர்ந்து இருப்பேன்.

இந்த எட்டு வருடங்களில் சந்தித்த பதிவர்கள் பட்டியல் நீளமான ஒன்று தான்! இன்னும் பலரை சந்திக்க விருப்பம் உண்டு! தமிழகம் வரும்போது சந்திக்க நினைத்தாலும் நேரமும் வாய்ப்பும் அமைவதில்லை. இனி வரும் போது ஒரு பதிவரையாவது புதியதாகச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.  பார்க்கலாம் எந்த அளவிற்கு அது சாத்தியப்படுகிறது என! ஒரே ஒரு முறை சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பிற்குச் சென்ற போது நிறைய பதிவர்களைச் சந்தித்தேன். வரும் வருடத்தில் மீண்டும் சந்திப்பு வைத்துக்கொள்ள புதுக்கோட்டை நண்பர்கள் முயற்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். அப்படி நடக்கும் சந்தர்ப்பத்தில் நானும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

எனது வலைப்பூவில் நான் மட்டும் எழுதிக்கொண்டிருக்க, சமீபமாக எனது இல்லத்தரசி மற்றும் மகளின் சில பதிவுகளும் அவர்களது வலைப்பூவில் வெளியிடாமல் இங்கேயே வெளியிட ஆரம்பித்து இருக்கிறார்கள். தனித்தனியாக மூன்று வலைப்பூக்கள் வைத்துக் கொள்வதில் சில நடைமுறை சிக்கல்கள் என்பதால் இங்கேயே வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

பயணக்கட்டுரைகள் நிறையவே நான் எழுதுவது எனக்கும் தெரிகிறது. நான் ரசித்தவற்றை, நான் பார்த்த இடங்களை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாகவும், எனது சேமிப்பாகவும் இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன். சில பயணத் தொடர்கள் மின்னூல்களாகவும் வெளியிட்டு இருக்கிறேன். எனது பயணங்கள் போலவே, தொடரும் இந்த வலைப் பயணத்தில் உங்கள் ஆதரவு என்றென்றும் இருக்கட்டும்….



மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லியிலிருந்து….. 


65 கருத்துகள்:

  1. உங்கள் தளம் திறக்கும்போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும் பாடல் "சந்தித்த வேளையில்... சிந்திக்கவே இல்லை... தந்து விட்டேன் என்னை..."

    1500 வது பதிவுக்கு வாழ்த்துகள். மென்மேலும் உயர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா தளம் திறக்கும்போதெல்லாம் இந்த பாடல் நினைவுக்கு வருகிறதா! :) நாம் இன்னமும் நேரில் சந்திக்க வில்லை என்பது எனக்கும் அடிக்கடித் தோன்றும்! அடுத்த முறையாவது தமிழகம் வரும்போது சந்திக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

  2. வாழ்த்துக்கள் வெங்க்ட்ஜி ,ஆதி வெங்க்ட்ஜி & ரோஷி குட்டி.. இந்த தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த தளத்தில் அடுத்த ஜெனரேஷன் ஆளும் சேர்ந்து இருப்பதால் நெடுங்காலம் நீடித்து இருக்கும் ஒரே வலைத்தளம் இதுவாகத்தான் இருக்கும்...அதனால் இது மேலும் மேலும் தொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெடுங்காலம் நீடித்து இருக்கும் ஒரே வலைத்தளம் - நன்றி நண்பரே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. கருத்துக்கள் நமக்கு ஊக்கம் தரக் கூடியது என்றாலும் பலரால் நம் தளங்களில் வந்து கருத்து சொல்ல நேரம் இருக்காது..அப்படியே அவ்ர்கள் சொன்னாலும் அவர்களுக்கு பதில் கருத்து சொல்ல நமக்கும் நேரம் இல்லாததால் அவ்ர்களுக்கும் நம்ம சொல்லி என்ன ஆகப் போகிறது என்று நினைத்து கடந்து சென்றுவிடுவார்கள். ஒரு சிலர் தொடர்ந்து நம் பதிவுகளை படித்து வந்தாலும் நமக்கு அப்ப அப்ப வந்து இமெயில் மற்றும் இன்பாகஸில் வந்து உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது எல்லாம் படித்து வருகிறென் தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு சொல்லுவார்கள்... நம் பதிவுகளுக்கு கருத்து சொல்லுபவர்கள் யார் என்று பார்த்தால் நம் சக பதிவர்கள் மட்டும்தான்... அதனால் கருத்துக்கள் பற்றிக் கவலைப்பட வேண்டாம் . இதை ஒரு ஹாபியாக அல்லது பொழுது போக்காக நினைத்து தொடரந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மட்டுமே எனக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு! தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. கருத்துகள் பற்றிய கவலை வேண்டாம் - உண்மை தான் பலருக்கும் கருத்து சொல்லும் அளவு நேரம் இருப்பதில்லை - எனக்குட்பட!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. 1500 மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி தொடர்ந்து எழுதுங்கள் பேஸ்புக், ட்விட்டரைவிட எனக்கும் இதுதான் பிடித்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபேஸ்புக், ட்விட்டரை விட - உண்மை. ட்விட்டர் கணக்கு நானும் ஆரம்பித்தேன் - அதோடு சரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. பயணப்பதிவுகள் என்ற நிலையில் நாங்கள் பார்த்திராத, பார்க்க முடியாத இந்தியாவின் பல மாநிலங்களுக்கு எங்களை அழைத்துச்சென்றதைச் சிறப்பாகக் குறிப்பிட விழைகிறேன். நீங்கள் புகைப்படங்களைப் பகிரும் பாணியும் நுட்பமும் ரசிக்கும்வகையில் உள்ளது. அதே சமயத்தில் சமூகப்பிரக்ஞையையும் உங்கள் எழுத்தில் காணமுடிகிறது. எழுத்துப் பயணத்தில் உங்களுடைய குடும்பத்தாரும் உடன் பயணிப்பது அறிந்து மகிழ்ச்சி. நாம் எழுதுகிறோம் என்பதைவிடவும் நம் குடும்பத்தாரும் எழுதுகின்றனர் என்பது மன நிறைவைத் தரும். தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து வருகிறோம். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. 1500 பதிவுகள்
    சாதனை படைத்துள்ளீர்கள் ஐயா
    தொடர்ந்து எழுதுங்கள்
    இப்பொழுது வலைப்பூவில் எழுதுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து
    கொண்டே இருக்கிறது. காரணம்,எழுதுபவர்களைக் கருத்துக் கூறி, உற்சாகப் படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதுதான்.
    முக நூலில் உடனடியாக லைக் கிடைத்துவிடுகிறது.எனவே அதை விரும்புகிறார்கள்.
    வலைப் பூவில் எழுதுகிறர்கள் அனைவரும் பலரது தளங்களுக்குச் சென்று, கருத்துக்களைப் பதிவிட்டு ஊக்கமளிப்பார்களேயானால், வலைப் பூ மீண்டும் வாசம் வீசுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
    வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.கரந்தையார் அவர்களின் கூற்று மிகச்சரியானது.

      நீக்கு
    2. 1550 - பதிவுகள் சாதனை என கருதவில்லை ஐயா. என்னை விட அதிகம் எழுதியவர்கள், எழுதிக் கொண்டிருப்பவர்கள் இங்கே உண்டு - துளசி டீச்சர் போல.

      //அனைவரும் பலரது தளங்களுக்குச் சென்று கருத்துகளைப் பதிவிட்டு ஊக்கமளிப்பார்களேயானால்// உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. ஆயிரத்து ஐநூறாவது பதிவு!..

    மகத்தான சாதனை.. அதன் பின்னே கடுமையான உழைப்பு..

    அன்பின் பாராட்டுகளுடன் மீண்டும் நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகத்தான சாதனை என்றெல்லாம் இல்லை ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. பயணம் தொடரட்டும்.

    மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. தலைநகர் டெல்லியில் இருந்து கொண்டு, பல்வேறு பணிச் சுமைகளுக்கும் 1500 பதிவுகளை தந்திட்ட தங்களுக்கு எனது வாழ்த்துகள் ... பாராட்டுகள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
    2. பல்வேறு பணிச் சுமைகளுக்கும் இடையில் என்று படிக்கவும்.

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  11. 1500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். சூப்பர் கிரேட்...

    பயணகட்டுரைகள் அனைவருக்கும் மிகவும் பயன் அளிக்கும்.நான் இங்க கமண்ட் போட வரேனோ இல்லையே சில உங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு நீஙக்ள் வந்து கருத்து தெரிவிப்பது ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து ஆதரவு தரும் படி கேட்டு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரேனோ இல்லையோ... :) பெரும்பாலும் நான் தொடரும் பதிவர்களின் பதிவுகளை படித்து, முடிந்த அளவு வருகையையும் அங்கே பதிவு செய்கிறேன். சில சமயம் முடிவதில்லை - பணிச்சுமையும் ஒரு காரணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜலீலா ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. இரண்டு மூன்று தளங்கள் உண்டு. உங்கள் மின்னஞ்சலிலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் [venkatnagaraj@gmail.com]. என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா ஜி!

      நீக்கு
  13. வாழ்த்துக்கள். இன்னும்நீ சில பல ஆயிரங்கள் தொட வாழ்த்துகிறோம்.

    உங்கள் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் 'என்றும் இருபத்தியெட்டு' என்று என் இடை அழகை புகழ்ந்து(??) எழுதியது நினைவுக்கு வருகிறது. இந்த இடைப்பட்ட ஒன்பது வருடத்தில் இருபத்தியெட்டு கொஞ்சம் அதிகரித்து முப்பது -முப்பத்தி ஒன்று ஆகிவிட்டது. ஆனால் அந்த முடிதிருத்தும் தொழிலாளி இன்னும் அதே ஐம்பது ரூபாய் தான் வாங்குகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றும் இருபத்தி எட்டு - இன்றைக்கும் நினைவில் நிற்கும் பதிவு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

      நீக்கு
  15. அட 1500 வது பதிவு ....எனது வாழ்த்துகளும்....

    நான் மிக விரும்பி படிக்கும் தளத்தில் உங்களதும் ஒன்று.. பல இடங்களை உங்கள் படங்களின் வழி நாங்களும் பார்க்கிறோம்...

    உங்கள் பயணங்கள் இங்கு மேன் மேலும் வளரட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  16. வாழ்த்துகள் நண்பரே! இன்னும் பல ஆயிரம் பதிவுகள் எழுதி, பல இடங்கள் பயணித்து, பல சிகரங்கள் தொட மனதார வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே!

    வாழ்க நலமோடு வாழ்த்துகிறேன்! நற்புகழ்
    சூழ்கவே மேலும் தொடர்ந்து!

    ஒப்பிட முடியாத சாதனை!
    நல்ல பல விடயங்களின் பதிப்பு இங்கே.
    அதற்கான தேடல்களும் உங்களின் முயற்சியும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று!
    மேலும் பன்மடங்காகப் பெருகட்டும் உங்கள் படைப்புகள்.

    இயன்றவரை வந்து கருத்திட முயல்கிறேன் நானும்!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ இளமதி.

      நீக்கு
  18. வாழ்த்துக்கள் சகோ, நீங்கள் பயண கட்டுரைகள் எழுதும் பாங்கு மிக சிறப்பு தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  19. எனக்கு நன்றி என்னவோ இருவழிப் பாதை என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவழிப்பாதை.... இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  20. இனிய வாழ்த்துகள்!தொடரட்டும் பதிவுகள்
    வெற்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  21. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ வெங்கட் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  22. ஆகா...மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார் ஜி!

      நீக்கு
  23. வாழ்த்துக்கள்.. மேன்மேலும் பல பதிவுகள் போட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  24. 1500வது பதிவிற்கு வாழ்த்துகள்ண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  25. 1500 வதுபதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். தொடர்ந்து பத்தாயிரம் பதிவுகளுக்கும் மேல் எழுதிக் குவிக்கவும் பிரார்த்தனைகள். எல்லாமே அர்த்தமுள்ள பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  26. Congrats Venkat for your 1500th blog. Wish you for more and more blogs to come from you all. All the best and happy new year 2018. We will be shifting from Gole Market now. Will inform you the new address etc. Pl do visit us.
    Vijayaraghavan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு மாற்றப் போவது அறிந்தேன். உங்களோடு அலைபேசி மூலம் பேசுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்டு @ நொரண்டு.

      நீக்கு
  28. வாழ்த்துக்கள் ஜீ. தொடர்ந்தும் எழுதுங்கள் ஓய்வின் போது உங்கள் பதிவுகளுக்கு நிச்சயம் பின்னூட்டம் இடுவேன் இடையிடையிடையே என் தொடர்களில் மூழ்கிப்போவதால் நேரக்குறைவு. தொடர்ந்தும். பயணிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரக் குறைவு - எனக்கும் அந்தப் பிரச்சனை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  29. இடைக்கிடை கவிதைப்போட்டிக்கும் முக்கியம் கொடுத்து பலர் போட்டியிட கவிதைக்கு படம் கொடுத்து நீங்கள் களம் அமைக்க வேண்டும் இது ஒரு வேண்டுகோள் மட்டுமே!)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைக்குப் படம் - நடுவில் இப்படி பகிர்ந்து கொண்டிருந்தேன். வரவேற்பு அத்தனை இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  30. வாழ்த்துக்கள் சார்.2017ஆம் ஆண்டு என்னால் சரிவர வலைப்பதிவு எழுதவும் பதிவுகளை வாசிக்கவும் முடியவில்லை,பத்திரிக்கைகளுக்கு எழுத முயற்சித்தது,குடும்ப சூழலால் வலைப்பக்கம் வரமுடியவில்லை,உங்கள் பதிவுகளை மிஸ் செய்கிறேன்.2018 ல்வழி பிறக்கும் என்று நினைக்கிறேன்,நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      வரும் நாட்களில் எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

      நீக்கு
  31. 1500வது பதிவிற்கு வாழ்த்துக்கள் வெங்கட்-ஜி. தற்போதைய நிலையில் ஆர்வம் குறையாமல் நீங்கள் தொடர்ந்து எழுதி வருவது ஒரு பெரிய சாதனை ஆகும்.

    நான் கடந்த வருடத்திலிருந்துதான் சிலரது பதிவுகளை நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து படித்து வருகிறேன். அதில் பலர் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவிடுவதை குறைத்துக்கொண்டு தற்போது நிறுத்தியும்விட்டனர்.

    இந்த தளம் மற்றும் கோவை2தில்லி தளத்தில் உள்ள பதிவுகளை கடந்த சில வாரங்களாக நேரம் கிடைக்கும்போது படித்து வருகிறேன். அவ்வப்போது கருத்துக்களையும் பதித்திருக்கிறேன்.

    பலர் வெளியேறிய நிலையில் நான் இப்போதுதான் பதிவிட துவங்கியிருக்கிறேன். உங்கலைப்போலவே தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். என் வலைத்தளம்: www.onlinethinnai.blogspot.com. நேரம் கிடைக்கும்போது படித்து உங்கள் கருத்துக்களை தெரிவுக்கவும். நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....