செவ்வாய், 19 டிசம்பர், 2017

கனவில் வந்த காளி - பலேய் மாதா மந்திர் – வெள்ளை சரக்கொன்றை


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 21

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


CHசமேரா ஏரி.....


பலேய் மாதா மந்திர் - வெளிப்புறத் தோற்றம்..... 

CHசமேரா ஏரியிலிருந்து புறப்பட்டு அதே மலைப்பாதையில் நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு கோவில் – Bபலேய் மாதா மந்திர். சமேரா ஏரி இருக்கும் பகுதியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3800 அடி உயரத்தில் இருக்கும் இந்தக் கோவிலின் கீழே இருக்கும் வாகன நிறுத்தத்தில் எங்கள் ஓட்டுனர் இறக்கி விட மலை மீது இருக்கும் கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும் – சுமார் 100 படிகள் ஏறிச் சென்றால் பலேய் மாதா மந்திர்.  இந்தக் கோவிலில் குடி கொண்டிருப்பது எந்த தேவி, இக்கோவிலின் வரலாறு என்ன, கோவில் பற்றிய கதை என்ன என்பதையெல்லாம் பார்க்கலாம் வாருங்கள். 100 படிகள் ஏறிச் செல்லும் போதே உங்களுக்குக் கதையும் சொல்லி விடுகிறேன்.


வெள்ளை சரக்கொன்றை.....


வெள்ளை சரக்கொன்றை பூக்களும் மரமும்.....

படிகள் வழியே ஏறிச் சென்ற போது பக்கத்தில் இருந்த பூக்கள் வித்தியாசமாக இருந்தன. பெரும்பாலும் சரக்கொன்றை பூக்களை மஞ்சள் நிறத்தில் தானே பார்த்திருக்கிறோம்! இங்கே பார்த்த பூக்கள் சரக்கொன்றை பூக்கள் போலவே இருந்தாலும் வித்தியாசமாக வெள்ளை நிறத்தில் இருந்தன. பூக்களைப் படம் பிடித்துக் கொண்டிருக்க, கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் சிலர் எங்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள்! கோவிலுக்கு வந்துவிட்டு, இவர்கள் என்ன பூக்களைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே என எங்களைப் பார்த்து புன்னகைத்தபடியே முன்னேறினார்கள். நாங்கள் புகைப்படங்கள் எடுத்தபடியே முன்னேறினோம்.  இந்தக் கோவில் இங்கே எப்போது அமைக்கப்பட்டது, அதன் பின்னே எதும் கதை உண்டா? என்ற கேள்விக்கு பதில் - உண்டு. அக்கதை…

கனவில் வந்த காளி!


Bபலேய் மாதா [எ] Bபதர் காளி.....

Bபதர்காளி – அதாவது பத்ரகாளி குடிகொண்டிருக்கும் கோவில் தான் இந்த பலேய் மாதா மந்திர். 18-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த ராஜா ப்ரதாப் சிங் அவர்கள் பக்தி மிகுந்தவர். சம்பா பகுதியை ஆண்டு வந்த இவர் அவரது ஆட்சிக்குட்பட்ட சம்பா பகுதிகளில் பல கோவில்களை கட்டியிருக்கிறார். அப்படி அவரால் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்று தான் இந்த பலேய் மாதா மந்திர். ராஜா ப்ரதாப் சிங் அவரது கனவில் தோன்றிய காளி, தான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதைபட்டு இருப்பதாகவும், தன்னை வெளிக்கொணர்ந்து கோவில் அமைத்து வழிபடும்படியும் சொல்ல, ராஜா தனது பரிவாரங்களுடன் காளி மாதாவின் சிலையைத் தேடி புறப்பட்டார்.  தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் காளியின் சிலை கிடைக்க, அதை அழகிய பல்லக்கில் ஏற்றிக் கொண்டு புறப்படுகிறார் ராஜா, தனது பரிவாரங்களுடன்.


கோவில் அருகே இருந்த கடையில் விற்பனைக்கு வைத்திருந்த சாக்குப் பை! தமிழும் மலையாளமும் எழுதியிருக்க புகைப்படம் எடுத்தோம்.......



கோவில் பகுதியில் பார்த்த முதியவர் - புகைப்படம் சரியாக எடுக்க முடியவில்லை! - Discrete Photo!.....


மாலை நேரம் ஆகிவிடவே, சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படலாம் என்ற எண்ணத்தோடு ராஜாவின் ஊர்வலம் நிற்கிறது. ஓய்வெடுத்துக்கொண்டு புறப்பட, காளியின் சிலை வைக்கப்பட்ட பல்லக்கினை அசைக்கவே முடியவில்லை! ராஜாவின் ஆசை, காளியின் சிலையை சம்பா நகருக்கு எடுத்துச் சென்று அங்கே கோவில் கட்டவேண்டும் என்பது! காளியின் எண்ணம் வேறாக இருந்திருக்கிறது. பண்டிதர்களின் ஆலோசனையைக் கேட்க, காளி இங்கேயே கோவில் கொள்ள ஆசைப்படுகிறாள் போலும், எனச் சொல்கிறார்கள். காளியின் விருப்பம் எதுவோ, அப்படியே என மன்னனும் கோவில் கட்ட ஆணையிடுகிறார். காளியின் சிலை அப்படி வைக்கப்படும் இடம் தற்போதைய Bபலேய்! அங்கேயே கோவில் அமைத்து வழிபடுகிறார்கள்.   


அடர் மேகங்களும் CHசமேரா ஏரியும்.....


பக்தர்கள் அழைத்து வந்த கலைஞர்.....

திருட்டுப்போன காளி சிலை

1973-ஆம் ஆண்டு – பலேய் மாதா அதாவது பதர் காளியின் சிலையை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தோடு இரவோடு இரவாக சிலையை திருடி எடுத்துக் கொண்டு சென்றார்கள் சிலர். அவர்கள் சிலையோடு கோவிலிருந்து புறப்பட்டுச் செல்ல, சிறிது தூரத்திலேயே அவர்களுக்கு கண் தெரியாமல் போயிற்றாம்! பிறகு சிலையைக் கீழே வைத்துவிட, கண் தெரிந்ததாம். அடடா, கடவுளிடமே நம் கைவரிசையைக் காட்டிவிட்டோமே என்ற தங்கள் தவறு உணர்ந்து அங்கேயே சிலையை வைத்துவிட்டு நடையைக் கட்டினார்களாம் சிலை திருடர்கள். பிறகு சிலையை அங்கே இருந்து மீட்டுக் கொண்டு வந்து கோவிலில் பிரதிஷ்டை செய்து புனர் நிர்மாணம் செய்திருக்கிறார்கள். கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள். 


கோவிலின் கீழே சில கடைகளும் வாகன நிறுத்துமிடமும்.....


CHசமேரா ஏரிக்கருகே வீடுகள் - மேல் வீடு எனக்கு....... மற்ற இரண்டும் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்!

நாங்களும் 100 படிக்கட்டுகளைக் கடந்து கோவிலின் அருகே செல்ல, அங்கே ஏதோ அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. இன்னும் சில குறுகிய படிகள் வழியே மேலே செல்ல, பதர் காளி [அ] பலேய் மாதாவினை நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. அத்தனை பக்தர்கள் கூட்டம் இல்லாததால் கொஞ்சம் நிதானமாக தரிசனம் செய்ய முடிந்தது. நவராத்ரி சமயங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்றும், அச்சமயங்களில் தரிசனம் கிடைப்பது அரிது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் சில பக்தர்கள். கோவிலில் தரிசனம் செய்த பிறகு, வட இந்திய கோவில்கள் பெரும்பாலானவற்றில் பிரசாதமாகக் கிடைப்பது போலவே இங்கேயும் சர்க்கரை மிட்டாய்கள் கிடைத்தது. வாங்கிக் கொண்டு கீழே இறங்க, அன்னதானம் விநியோகம் செய்து கொண்டிருந்தவர்கள் எங்களையும் உணவு உண்ண அழைத்தார்கள்.


கோவிலில் இருந்து CHசமேரா ஏரி.....

கொஞ்சமாக பழங்களை பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு படிக்கட்டுகளில் கீழே வர, அங்கிருந்து பறவைப் பார்வையில் சமேரா ஏரியைப் பார்க்க முடிந்தது. அந்த காட்சியையும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பக்தர்கள் சிலர் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வரும்போது மேள தாளத்தோடு வருகிறார்கள் – கூடவே நடனமும். அப்படி வந்த பக்தர்களைப் பார்த்தபடியே எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  இங்கேயுள்ள பெண்கள் தங்களுடைய மூக்கில் பெரிய வளையங்களை அணிந்து அதனோடு நீண்ட செயின் அணிவார்கள் – அது தான் அவர்கள் தாலி! வளையங்கள் வாய் வரை இருக்க, அவற்றை விலக்கிப் பிடித்தவாறு தான் உணவு உண்பார்கள் – எவ்வளவு கஷ்டம் என்று பேசிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். 

பலேய் மாதா என அழைக்கப்படும் காளியை தரிசித்த பிறகு நாங்கள் எங்கே சென்றோம், எங்கள் அடுத்த திட்டமென்ன என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்!
  
தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


26 கருத்துகள்:

  1. ச்சமேரா ஏரி முதல் படம் வாவ்!!! மனதை அப்படியே ஸ்டில் ஆக்கிவிட்டது!!!!

    மீண்டும் வரேன் பதிவு வாசிக்க..பிற படங்களைக் காண..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. படங்களும் பகிர்வும் அருமை
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. படங்கள் அழகு. கனவில் வந்து சொல்லும் காளி - எனக்கொரு சந்தேகம் வரும். மேலே இருக்கும் வீடுதான் எனக்கும் வேண்டும்! (இப்போ என்ன பண்ணுவீங்க...இப்போ என்ன பண்ணுவீங்க...!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்களுக்கும் மேலே இருக்கும் வீடு தான் வேணுமா? நான் ஏற்கனவே வாங்கிட்டேன் - விற்கும் ஐடியா இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சமேரா ஏரி ஒவ்வொரு புகைபப்டமும் போட்டி போடுகின்றது...ஒன்றோடொன்று....சரக் கொன்றை வெள்ளை வாவ்!!!! அழகு ஜி!!!

    நானும் புகைபப்டம் எடுக்கும் போது சிலர் கொஞ்சம் நக்கல் கேலிச் சிரிப்பு சிரித்துத் தங்களுக்குள் பேசிக் கொண்டு என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டு போவது வழக்கம் அப்படிச் செய்பவர்கள் எங்கள் வீட்டருகில் இருக்கும் பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர் கூட்டம்!!!!!!!!

    ஜி எனக்கு உங்கள் வீட்டிற்குக் கிழ் இருக்கும் நடு வீடு!!!!!! ரிசேர்வ்ட்...ஹா ஹா ஹா

    பலே மாதா கதை பலே பலே !!! ஸ்வாரஸ்யம்..

    எல்லா படங்களும் வழக்கம் போல பலே பலே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இரண்டாவது வீடு எனக்குதான். முடியாதுன்னா, வெங்கட் அண்ணா வீட்டுக்கு மேல ஒரு வீடு கட்டி எனக்கு கொடுங்க. என் கனவு வீடு இது.. இதுமாதிரியான ஒரு இடத்தில் வீடு கட்டனும்ன்னு ஆசை

      நீக்கு
    2. ஆஹா மூணு வீட்டுல ரெண்டு தான் மீதி இருக்கு! அதுக்கு நிறைய போட்டி இருக்கு போலவே! :) எல்லாம் சமத்தா இருந்தா இன்னும் வீடு கட்டலாம் சரியா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    3. சரி சரி சண்டை போடக்கூடாது... பார்த்து செய்துடுவோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  5. பலேய் மாதா பலே மாதா என்று வந்துவிட்டது....பலே பலே என்று அடிப்பதில்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலே பலே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. காளி கோவிலின் விடயம் ஆச்சர்யமளிக்கிறது.
    புகைப்படங்கள் மிகவும் தெளிவு, அழகு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. முதல் மற்றும் கடைசி இரண்டு படம் என்னை கவர்ந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  8. இங்கு விற்பனையாகும் இட்லி அரிசி அங்கேயும் விற்பனையாகிறாதா என்ன? நான் வாங்கும் இட்லி அர்சி இதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே வெறும் பை மட்டும் தான் இருந்தது. அரிசி இல்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  9. அழகிய படங்கள்..
    காளி கோயிலுன் முகப்பு நம்ம ஊரை நினைவுபடுத்துகின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  10. பலரது கனவுகளில் வந்து தனக்கு கோவில் கட்டச் சொல்லும் இன்னொரு தெய்வம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. காளியின் தரிசனம் அருமை. மலைமுகட்டில் வீடுகள். பச்சை நிற ஏரி. எல்லாமே நல்லா இருக்கு. அங்கெல்லாம் அன்னதானம் என்றால் என்ன கொடுப்பார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிமாச்சலப் பிரதேசத்தில் சாதம், சப்பாத்தி என இரண்டுமே உண்டு. ஹிமாச்சலில் ராஜ்மா சாவல் - Kidney Beans with rice is a popular dish there!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. என்ன அழகு எத்தனை அழகு என்று சொல்லுக்கு ஏற்றது சமேரா ஏரி அழ்க்கனி வ்யூவில் படம் அமைந்தது சிறப்பு
    பத்ரகாளியும் பெண்களின் தாலியும் பற்றி அறிந்தேன் தெய்வமாய் கும்பிடுவாங்க பயப்படுவாங்க நிஜத்தில் கஷ்டப்படுத்துவாங்க விசித்திரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜத்தில் கஷ்டப்படுத்துவாங்க.... :( அப்படியும் சிலர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....