வெள்ளி, 8 டிசம்பர், 2017

கஜ்ஜியார் – இந்தியாவின் மினி ஸ்விஸ்….


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 17

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கஜ்ஜியார் - இந்தியாவின் மினி ஸ்விஸ்....


கஜ்ஜியார் - இந்தியாவின் மினி ஸ்விஸ்....
நண்பர் எடுத்த படங்களில் ஒன்று....


CHசம்பா நகரில் உள்ள லக்ஷ்மி நாராயண் மந்திர் மற்றும் Bபுரி சிங் அருங்காட்சியகத்தினை பார்த்த பிறகு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். அன்றைய இரவு தங்க வேண்டிய இடத்தினை நோக்கி மதியத்திலேயே புறப்பட்டோம். அங்கே தங்க வேண்டும் என முடிவு செய்திருந்தாலும், தங்குமிடம் ஏதும் முன்பதிவு செய்திருக்கவில்லை. எங்கள் ஓட்டுனர் வழக்கமாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் சில தங்குமிடங்கள் உண்டு என்றும் Off Season என்பதால் தங்குமிடம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது என்று சொன்னாலும், இரவு நேரம் செல்வதைத் தவிர்த்து பகலிலேயே அங்கே சென்று விட முடிவு செய்தோம். செல்லுமிடம் சுமார் 44 கிலோமீட்டர் தொலைவு தான் என்றாலும் மலைப்பாதை என்பதால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகலாம்! அப்படி எந்த இடத்திற்குச் செல்லப் போகிறோம்?


CHசம்பாவிலிருந்து கஜ்ஜியார்...


கஜ்ஜியார் - செல்லும் பாதையில்....


கஜ்ஜியார் - செல்லும் பாதையில்....
Step Farming....  நண்பர் எடுத்த படங்களில் ஒன்று....

இந்தியாவின் மினி ஸ்விட்ஸர்லாந்து என அழைக்கப்படும் ஒரு இடத்திற்குத் தான் நான் இப்போது உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன். அழகிய பூங்கா, பூங்காவின் நடுவே சிறு குளம், நான்கு பக்கமும் தேவதாரு மரங்கள், குழந்தைகளுக்கு பல விளையாட்டு வாய்ப்புகள் என எல்லாம் இருக்கும் இடம். பனிக்காலங்களில் முழுவதும் பனியால் மூடியிருக்கும் என்றாலும் நாங்கள் சென்றபோது இதமான தட்பவெப்பம்.  அந்த இடத்திற்கு சம்பாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது பாதை முழுவதும் மலைப்பாங்கானது. வழியில் மலைப்பகுதிகளில் Step Farming எனப்படும் விவசாய முறையில் பயிரிடப்படும் பகுதிகளும் பார்க்க பச்சைப் பசேலென ரம்மியமாக இருக்கும். அந்தப் பகுதிகளையும், மலைப்பாதை பயணத்தினையும் தொடர்ந்தால் நாம் முதலில் பார்க்கப் போவது ஒரு கோவில்!


85 அடி சிவன் சிலை....
கஜ்ஜியார் - செல்லும் பாதையில்....


ஜகதம்பா கோவில்....
கஜ்ஜியார் - செல்லும் பாதையில்....


கஜ்ஜியார் - நாங்கள் தங்கிய இடம்....
வாசலில் இருப்பவை ஆப்பிள் மரங்கள்....

அப்படி என்ன சிறப்பு அந்த கோவிலில்? ஜகதம்பா மாதா மந்திர் என அழைக்கப்படும் அந்த கோவிலில் 85 அடியில் ஒரு சிவன் சிலை உண்டு! பித்தளை குழம்பில் வார்த்து எடுத்த சிலை – தூரத்திலிருந்து பார்க்கும்போதே பளபளவென ஜொலிக்கும் அந்தச் சிலை! எதிரே ஜகதம்பா மாதாவிற்கு ஒரு கோவில். 2008-ஆம் வருடம் அமைக்கப்பட்ட இந்த கோவிலில் அவ்வப்போது திருவிழாக்கள் நடத்துகிறார்கள். நாங்கள் செல்லும் வழியில் தான் இக்கோவில் இருந்தது என்பதால், உள்ளே நுழைந்து, ஜகதம்பா மாதாவினை வழிபட்டு, சிவன் சிலையையும் படம் பிடித்துக் கொண்டு கஜ்ஜியார் நோக்கி பயணித்தோம். இந்தக் கோவிலிலிருந்து கஜியார் ஒரு கிலோமீட்டர் தொலைவு தான். குறுகிய மலைப்பாதை – இரண்டு புறமும் தேவதாரு மரங்கள் என ரம்மியமாக இருந்த பயணத்தில் வலப் புறத்தில் ஒரு சிறு தங்குமிடம் – பெயர் Gautam Guest House.


கஜ்ஜியார் - தங்குமிடம் அருகே இருக்கும் மலைப்பாதை....


சம்பாவிலிருந்து கஜ்ஜியார் செல்லும் மலைப்பாதை....

பாதையிலிருந்து விலகி, சற்றே மேடான வழியில் வாகனத்தினைச் செலுத்தி நிறுத்தினார் ஓட்டுனர். தங்குமிடம் இருக்கிறதா எனக் கேட்க, எங்கள் ஐந்து பேருக்கும் இரண்டு அறைகள் ஒதுக்கித் தந்தார்கள் – ஒன்றில் இருவரும், மற்ற அறையில் மூன்று பேரும் தங்கிக் கொள்ள முடிவு. அறைக்கான நாள் வாடகையைச் செலுத்தி, உடைமைகளை வைத்த பிறகு குளிருக்கு இதமாக தேநீர் கேட்டோம். ஏப்ரல் மாதத்திலும் குளிர் இருந்தது. தேநீர் குடித்த பிறகு தான் மதிய உணவு உட்கொள்ளாததும் நினைவுக்கு வந்தது. மதிய உணவு கிடைக்குமா எனக் கேட்க, ஒரு மணி நேரத்திற்கு மேலாகும், அதனால் நீங்கள் வேறு இடத்தில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், இரவு இங்கேயே சாப்பிடலாம் எனச் சொன்னார் தங்குமிடச் சிப்பந்தி – இளைஞராக இருந்தவரிடம் பிறகு பேசலாம் என்ற எண்ணம்……


கஜ்ஜியார் - ஏரியும் புல்வெளியும்.......


கஜ்ஜியார்......


கஜ்ஜி நாக்G....


கஜ்ஜியார் - குளிர் காலத்தில்...


கஜ்ஜியார் - குளிர் காலத்தில்...

இந்த இடத்திற்கு கஜ்ஜியார் என்ற பெயர் ஏன் வந்தது? அந்த கதை என்ன? இந்தப் பகுதி மக்கள் வணங்கும் ஒரு தெயவம் கஜ்ஜி நாக் – நாகர் – அந்த தெய்வத்தின் பெயரிலேயே இந்த ஊருக்கும் கஜ்ஜியார் என்ற பெயர்! கஜ்ஜியார் பகுதிக்கு வந்திருந்த ஒரு ஸ்விட்ஸர்லாந்து நபருக்கு இந்த ஊர் ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். அவரே இந்த ஊரை இந்தியாவின் மினி ஸ்விட்ஸர்லாந்து என்று சொல்லிவிட அந்தப் பெயரே நிலைத்து விட்டது.  நாங்கள் சென்ற போது பனிப்பொழிவு இல்லாமல் பச்சைப் பசேலென இருந்த இந்த ஊர் பனிப்பொழிவு நாட்களில் மிகப் பெரிய வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியது போல இருக்கும். உங்கள் வசதிக்காக, இணையத்திலிருந்து பனிக்காலத்தில் கஜ்ஜியார் படம் இணைத்திருக்கிறேன்.


கஜ்ஜியார் - திரண்டு நிற்கும் கருமேகக் கூட்டம்.......


 கஜ்ஜியார் - நீர் நிலையில் மழை பொழிந்த போது......

கஜ்ஜியாரில் என்ன இருக்கிறது எனப் பார்த்தால், பெரிதாக ஒன்றுமில்லை - ஒரு சிறு ஏரி [இப்போது குளம் அளவுக்குத் தான் இருக்கிறது!], அந்த ஏரியைச் சுற்றி ஒரு பெரிய புல்வெளி, சில கடைகள், விளையாட்டு வசதிகள், காஜி நாக் கோவில், கோல்டன் தேவி கோவில் [தங்கத்தில் கோபுரம் இருப்பதால் கோல்டன் தேவி!], குதிரை ஏற்றம் அவ்வளவு தான். ஆனால் ஓய்வு வேண்டுபவர்களும், நகர்புறத்தின் தொல்லைகளிலிருந்து விலகி இருக்க விரும்புபவர்களும் இங்கே சென்று சில நாட்கள் தங்கலாம்.  மிகவும் அமைதியான இடம். எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது அந்த இடம். வாய்ப்பு கிடைத்தால் அங்கே சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கும் எண்ணம் உண்டு. தங்குமிடத்திலிருந்து அப்படியே நடந்து புல்வெளிக்கு வந்து சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மதிய உணவினை முடித்துக் கொண்டோம். 


கஜ்ஜியார் - அடாது மழை பெய்தாலும்....
ஒரு வியாபாரி....


கஜ்ஜியார்....



கஜ்ஜியார் - முயல்குட்டியோடு...
படம்: நண்பர் பிரமோத்.


கஜ்ஜியார் - நண்பர்களோடு...
படம்: நண்பர் பிரமோத்.
கஜ்ஜியாரில் ஒரு விஷயம் – எப்போது மழை வரும் எனச் சொல்லவே முடியாது – நாங்கள் சென்றபோதும் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு மழை – அந்த மழையிலும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிக் கொண்டிருக்க, விற்பனையாளர்களும் தங்கள் விற்பனையை பார்த்துக் கொண்டார்கள். குதிரை சவாரி செய்பவர்கள், பாரா க்ளைடிங்க், Zorbing என நிறைய விளையாட்டுகள். கூடவே கூடையை முதுகில் வைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வசதி கூட உண்டு. மேலும் சில சிறுவர்கள் கூடைகளில் பெரிய பெரிய மலைப்பகுதி முயல்கள்! அவற்றை நம் கையில் வைத்துக் கொண்டும், மேலே அமர வைத்தும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்! சிறுவனுக்கு பத்து ரூபாய் கொடுக்க வேண்டும்! நாங்களும் அப்படி சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம் – இப்படிச் செய்வது அச்சிறுவனுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே!


கஜ்ஜியார் - கூடையில் முயலோடு சிறுவன்....


கஜ்ஜியார் - வெட்டிய மரத் தண்டு ஒன்றின் மேல் நின்று தட்டாமாலை சுற்றும் பெண்கள்....


கஜ்ஜியார் - தேவதாரு மரங்கள்....

சிறிது நேரம் விஸ்ராந்தியாக அங்கே அமர்ந்து இயற்கையை ரசித்தோம். பிறகு அறைக்குத் திரும்பி தேநீர். நண்பர்கள் ஓய்வு எடுக்கப் போகிறோம் எனச் சொல்லி விட நான் அப்படியே வெளியே நடக்கலாம் என புறப்பட்டேன். நடைப்பயணமும், அப்போது கிடைத்த அனுபவங்களும் அடுத்த பகுதியாக……

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

18 கருத்துகள்:

  1. ஏப்ரல் மாதத்திலும் குளிரா!

    எப்படி அந்த முயல் குட்டி தோளிலிருந்து குதிக்காமல் ரொம்பப் பழகியது போல இருக்கிறது?!!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோளில் ஒன்று, கையில் ஒன்று என இரண்டு முயல்கள் வைத்திருந்தேன். பழக்கி வைத்திருப்பார்கள் போலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கோவிலின் வடிவமைப்பு வித்தியாசமாக இருக்கிறது தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான வடிவமைப்பு தான் - இரண்டு கோபுரங்களுக்கு நடுவே கோவில் - சில படிகள் ஏறிதான் கோவிலுக்குள் செல்ல வேண்டியிருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. சில புகைப்படங்கள் Switzerland-ஐ ஞாபகப்படுத்துகின்றன.அந்த சிவன் சிலை, எத்தனை அழகு! முக‌த்தில் அருளை அப்படியே வடித்திருக்கிறார்கள்!!
    உங்கள் அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமாக தொடர்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  4. மினி சுவிட்சர்லாந்தினை ரசித்தேன். தோளில் முயல், மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. அழகு எத்தனை அழகுன்னு பாடலாம் போல் இருந்தது படங்களை பார்த்ததும் சிவன் சிலை எதோ ஒரு சிறுவனின் தோற்றத்தில் அருமை நாக ராஜ் சிலையும் மிகவும் சிறப்பு கோவில் அமைப்பு புதுமை பயண கட்டுரையையை மிகவும் அழகா எழுதவருகிறது உங்களுக்கு முக்கியமாய் அங்கு இருக்கும் சூழ்நிலைகளை விளக்கங்கள் அருமையா சொல்லிறீங்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  6. தெரிந்து கொள்ள நிறைய செய்திகள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம். பி. ஐயா.

      நீக்கு
  7. 44 மூன்று கிலோமீட்டர்??

    படங்களும் இடங்களும் அருமை. எப்படித்தான் வீட்டுல, அவங்களைக் கூட்டிக்கொண்டு இந்த அபூர்வ இடங்களுக்குச் செல்லாத்தைப் பொறுத்துக்கறாங்களோ. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

      எப்படி பொறுத்துக்கறாங்களோ? இக்கேள்விக்கு என் பதில் ஒரு புன்னகை மட்டுமே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் அருமை வெங்கட்ஜி, தகவல்களும். தொடர்கிறோம்..

    கீதா: ஜி! படங்கள் அப்படியே சொக்க வைத்துவிட்டன!! ஏரி குளமாய்...ம்ம் சீசன் இல்லையோ அதனாலோ??!!

    44 கி மீ என்று நீங்கள் சொல்லியிருப்பது வரைபடத்தில் ரொம்ப தூரம் போல் தெரிகிறத் இல்லையா..அதுவும் சம்பாவிலிருந்து நேராகக் கோடு போட்டால் கிட்ட இருக்கிறது வரைபடத்தில் ஆனால் மலை என்பதால் சுற்றிப் போக வேண்டும் போல் தெரிகிறது..!! அருமையான தகவல்கள். ஜி இடமும் அழகு!! தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. இப்படியும் இடங்களா நமது நாட்டில்!..

    படங்களும் பதிவும் அருமை.. அருமை..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இப்படி இடங்கள் நிறையவே உண்டு ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....