ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திரும்பிப் பார்க்கிறேன் - புத்தாண்டு நல்வாழ்த்துகள்




2017 – ஆம் ஆண்டு முடிவடைந்திருக்கிறது. நாட்கள் வேகமாகவே கடந்து கொண்டிருக்கிறது. மிகச் சமீபமாகத் தான் இந்த ஆண்டு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது என்றாலும் அதற்குள் வருடத்தின் முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்த வருடம் மட்டுமல்ல எல்லா வருடங்களுமே இப்படித்தான் வேக வேகமாகவே கடந்து விடுகிறது – கல்லூரி முடித்து 1991-ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தது நேற்று போல இருக்கிறது – அதற்குள் 26 வருடங்கள் முடிந்து 27 ஆம் ஆண்டுகளாக தில்லி வாசம்! காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே! எல்லா வருடங்கள் போல இந்த வருடம் நன்றாகவே கடந்திருக்கிறது.



இந்த ஆண்டும் சில பயணங்கள் வாய்த்திருந்தன.  ஒரு பயணத்தினை கடைசி நேரத்தில் தவற விட நேர்ந்தது. பயணங்கள் ரொம்பவே பிடித்தவை என்றாலும், நேரமும், விடுமுறையும் கிடைக்க வேண்டும் – கூடவே தகுந்த சேமிப்பும் இருக்க வேண்டும்! அடுத்த வருடத்திலும் பயணங்கள் அமைந்தால் நல்லது! பார்க்கலாம்! சில பயணக்கட்டுரைகள் இந்த ஆண்டில் மின்புத்தகமாக வெளி வந்தன. சில கட்டுரைகள் ஹாலிடே நியூஸ் இதழில் வெளி வந்தன. வலைப்பூவில் இந்த ஆண்டு வெளியிட்ட பதிவுகளின் எண்ணிக்கை [இந்தப் பதிவினையும் சேர்த்து] 258! ஒவ்வொரு மாதமும் சராசரியாக 21 பதிவுகள்! இந்த ஆண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவல் உண்டு. பார்க்கலாம்!

தில்லி வாழ்க்கையும், மாற்றம்/முன்னேற்றம் இல்லாத வேலையும் அலுத்து விட்டது. தமிழகத்தினை விட தலைநகரில் தான் வாழ்நாளின் பாதிக்கு மேல் கழித்திருக்கிறேன். தலைநகர் போரடித்துவிட்டது. இங்கே இருக்கும் மக்களும், தட்பவெப்பமும், சூழலும் அவ்வளவாக பிடித்தம் இல்லாத அளவுக்கு மாறி இருக்கிறது. பிடிக்கிறதோ, இல்லையோ இன்னும் சில வருடங்களுக்கு இங்கே இருந்து தான் ஆக வேண்டும் – வேறு வழியில்லை! மாறி மாறி வரும் தட்பவெப்பம், ஏறிக்கொண்டே இருக்கும் வயதுக்குத் தகுந்ததாய் இல்லை. இப்போதெல்லாம் குளிர் அதிகமாக உடலுக்குத் தெரிகிறது! வந்த புதிதில் குளிர் அதிகம் இருந்தது என்றாலும் பச்சைத் தண்ணீரில் குளித்திருக்கிறேன் – இப்போது முடிவதில்லை!

வயது ஏறிக்கொண்டே போகிறது – உடலுக்குத் தான் – மனதுக்கு அல்ல! மனது இன்னும் இளமையாகவே இருக்கிறது. அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது! அதனைக் கடிவாளம் போட்டு காக்க முடிவதில்லை – காக்க முயற்சிப்பதும் இல்லை! இன்னும் ஒரு வருடம் அதிகமாகப் போகிறது! அவ்வளவு தான்.

மீண்டும் வலைப்பூக்களுக்கு வருகிறேன். நிறைய பேர் வலைப்பூக்களில் எழுதுவதை விட்டு, முகநூலிலும், வாட்ஸப்பிலும் மூழ்கிவிட்டார்கள்.  தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த சிலரும் இந்த வருடம் காணாமல் போயிருக்கிறார்கள். புதியதாக எழுத வருபவர்கள் ஒரு சில பதிவுகளுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. வரும் வருடத்திலாவது வலைப்பூக்கள் பூத்துக் குலுங்கட்டும். அர்த்தமுள்ள பதிவுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் இங்கே இருக்கட்டும். தேவையில்லாத விவாதங்கள், தனிமனிதத் தாக்குதல்கள் இன்றி நல்லதொரு தளமாக இருக்கட்டும்.

அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.   






மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

22 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வலைப்பூவை எல்லோரும் எழுதவும் வேண்டும்.. அதேநேரம்.. அனைவருக்கும் அனைவரும் கொமெண்ட்ஸ் போட்டு ஊக்குவிக்கவும் வேண்டும் என புது வருடத்திடம் கேட்டுக் கொள்கிறேன்:)...

    உங்களுக்கு வயசு ஏறிட்டே போகுதோ?:) ஹா ஹா ஹா எனக்கெல்லாம் இறங்கிட்டே போகுதே:)) ஹா ஹா ஹா:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதுக்கு வயது இறங்கிட்டே போகுது அதிரா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  2. இனிய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட்ஜி!

    இந்த ஆண்டில் எழுத முயற்சிக்க வேண்டும் முன்பு போல் என்ற எண்ணம் உள்ளது பார்ப்போம்...

    வயது ஏற ஏற குளிரும் வெப்பமும் கூடத் தெரிகிறதுதான் ஜி...மனசு இளமைதான்...அது போதுமே ஜி!!! எல்லாம் நல்லபடியாக அமையும்..

    வாழ்த்துகள்!

    துளசியும் எல்லோருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கச் சொன்னார்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஆண்டில் நீங்களும் பதிவுகள் எழுத வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!

      நீக்கு
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தில்லிக் குளிர் தனித்தன்மை வாய்ந்தது! :) தனியாகத் தாக்குப் பிடிப்பது கஷ்டம் தான்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள். குடும்பத்தைவிட்டுத் தனியா இருப்பதே மன அயர்வு தரும். வலைப்பூக்களுக்குத்தான் என்ஓட்டு😊

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  6. மனப்பூர்வமான பதிவு! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த புத்தாணடில் உங்கள் மனோ ரதங்கள் பூர்த்தி ஆக வாழ்த்துக்கள்!💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  7. நண்பரே !கடந்த ஒரு வாரமாக பலமுறை முயன்றும் திறக்கவில்லை ! இன்றுதான்
    திறந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு சிலரும் இந்தப் பிரச்சனை இருப்பதாகச் சொன்னார்கள் புலவர் ஐயா. என்ன காரணம் எனத் தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்(மூவருக்கும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  9. நண்பருக்கு நன்றி.
    எனது உளங்கனிந்த 2018 - ஆங்கிலப் புத்தாண்டு – நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  10. வரும் வருடம் சிறப்பாக அமையட்டும். தொடர்ந்து அயராமல் அளித்திருக்கும் பதிவுகளுக்காக வாழ்த்துகள். அதிகம் இல்லாவிட்டாலும் வலைப்பூவில் தொடர்ந்து இயங்கவே எனக்கும் ஆசை.

    பெங்களூரிலும் குளிர் முன் எப்போதையும் விட இந்த டிசம்பரில் அதிகமாகவே உள்ளது. ஊருக்கு வந்த புதிதில் இருந்த ஆரோக்கியத்தை எதிர்பார்க்கவே முடியாது:). வயதும் காரணமே.

    உங்களுக்கும், ஆதி, ரோஷ்ணிக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர் இப்போது தமிழகத்திலும் அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  11. தாங்கள் கூறிய படியே நடக்கட்டும்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....