செவ்வாய், 24 செப்டம்பர், 2019

உதிரம்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்.

ஒரு சொட்டு கூட ரத்தம் வராமல் ஒருவரைக் கொன்றுவிடும் ஆற்றல் மிக்க கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு தான் புத்தர்.
 
****

படம்: இணையத்திலிருந்து...

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த அலுவலகம். ஒவ்வொரு இருக்கையிலும் அமர்ந்திருந்த அலுவலர்கள் தங்களது வேலைகளை “கருமமே கண்ணாயினார்” என்ற வாக்குக்கு ஏற்ப செய்து கொண்டிருந்தார்கள். மேலதிகாரி ஒரு பெண்மணி – உழைப்பு, உழைப்பு அசராத உழைப்பு மட்டுமே ஒருவரை, அவரின் தேசத்தை உயர்த்தும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் அந்தப் பெண்மணி சூசன். அவர் அலுவலகத்தில் இருக்கிறார் என்றால் ஒவ்வொரு அலுவலரும் தத்தமது இருக்கைகளில் அமர்ந்து பணியைச் செய்து கொண்டிருப்பார்கள் – வெட்டி அரட்டையோ, தேவையில்லாத சம்பாஷணைகளோ கிடையாது. காலையிலிருந்து மாலை அலுவலகம் முடியும் வரை வேலை மட்டுமே!

எந்த ஒரு பணியும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அன்றைக்கு வந்த வேலைகளை அன்றைக்கே முடித்து விட வேண்டும். அது தவிர மாலை ஐந்தரை மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்தால் அது வேலை பார்ப்பவரின் குறையைக் காண்பிக்கிறது என்று சொல்வார் சூசன். சரியாக ஐந்தரை மணிக்கு அலுவலகம் காலியாகி விடும் – அன்றைய பணி அனைத்துமே முடிந்திருக்கும்! அடுத்த நாள் அடுத்த பணிகள்! கட்டுப்பாடு அதிகம் என்றாலும் சரியான நேரத்தில் வீட்டுக்குச் செல்ல முடியும் என்ற விஷயமே சூசன் அவர்களை அனைவருக்கும் பிடிக்கச் செய்தது. அவரிடம் எடுத்துச் செல்லப்படும் அனைத்து பிரச்சனைகளையும் சுலபமாகத் தீர்த்து வைப்பதில் சமர்த்தர் சூசன். விடுமுறை தேவை என்ற கோரிக்கையோடு அவர் அறைக்குச் செல்வதென்றால் அனைவருக்குமே உதறல் எடுக்கும். விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை – அதுவும் அற்பக் காரணங்களுக்கு!  

அன்றைக்கு காலையிலேயே சூசனின் அறைக்கு வெளியே காத்திருந்தார் ஆனந்த். ஆள்காட்டி விரலில் ஒரு பேண்டேஜ்! அதை மேல் நோக்கி பிடித்தபடி அமர்ந்திருந்தார். சூசனின் உதவியாளரும் ஒரு பெண் தான் – மஹிமா! மஹிமாவிடம் சொல்லி சூசனைப் பார்க்கக் காத்திருந்தார். சிறிது நேரத்தில் மஹிமாவிடம் இருந்து அழைப்பு – சூசனை நீங்கள் பார்க்கலாம் என! உள்ளே சென்று கைவிரலைக் காட்டியபடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது வெளியிலிருந்து பார்த்தவர்களுக்குத் தெரிந்தது என்றாலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. சூசன் கோபமாகத் தன் இருக்கையை விட்டு எழுந்தார். என்ன விபரீதம் என அனைவரும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மஹிமாவை அழைத்து அலுவலகத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களையும் உள்ளே அனுப்பச் சொல்லி மஹிமாவையும் உள்ளே அழைத்தார். வெளியிலிருந்த ஆண்கள் அனைவரும் உள்ளே என்ன நடக்கிறது என்று புரியாமல் பதைபதைப்பு!

உள்ளே சென்ற பெண்களுக்கும் எதற்காகத் தங்களை அழைக்கிறார் சூசன் என்ற படபடப்பு. ஆனால் கண்ணாடி வழியே பார்த்தபோது அனைத்து பெண்களும் பேசினார்கள் – சூசன் கேள்வி கேட்க பதில் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வெளியே இருந்த ஆண்கள் அனைவருமே, உள்ளே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்! அடுத்தவர் விஷயம் தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஒரு ஆவல் இருக்கும் தானே! சிறிது நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆண்களுக்கும் அழைப்பு – சூசனின் அறையில் அலுவலகப் பணியாளர்கள் அனைவருமே கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் இருக்கிறார்கள். குற்றவாளி போல கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தார் ஆனந்த். அப்படி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள அனைத்து ஆண்களும் காத்திருக்கிறார்கள்.

சூசன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் – உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். ஆனந்த் கைவிரலில் கத்தியால் நறுக்கிக் கொண்டு விட்டாராம். கொஞ்சம் ரத்தம் வெளியேற, முதலுதவி செய்து கொண்டு கையில் கட்டுடன் வந்து இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கேட்கிறார்! உங்கள் வீடுகளில் அம்மா, சகோதரிகள், மனைவி என எத்தனை பெண்கள் – ஒவ்வொருவரும் மாதா மாதம் உதிரப் போக்கினால் எத்தனை கஷ்டப் படுகிறார்கள் என ஒருவராது உணர்ந்து இருக்கிறீர்களா? அவர்களுக்கு உதிரப் போக்கு இருக்கும் நாட்களில் ஒரு முறையாவது வீட்டு வேலைகளிலிருந்து விடுமுறை அளித்ததுண்டா? மாதாமாதம் கஷ்டப்படும் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு உங்களையும் கவனித்துக் கொள்கிறார்கள். அதுவும் வேலைக்குப் போகும் பெண்மணி என்றால் இரட்டை வேலை! வீட்டு வேலை அலுவலக வேலை இரண்டுமே செய்ய வேண்டும்.

உதிரப் போக்கு என்ற காரணத்தினால் விடுமுறை கேட்கும் பெண்மணி இங்கே உண்டா? இப்படி இருக்கையில் ஒரு சிறு காயம் பட்டு கொஞ்சம் உதிரம் போனதற்கு விடுமுறை கேட்கிறாரே ஆனந்த் இது சரியா? நீங்கள் சொல்லுங்கள்! சரி என்றால் விடுமுறை தருகிறேன். விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த எந்த ஆணும் வாயே திறக்கவில்லை – அனைவரது தலையும் தரையைப் பார்த்தபடி குனிந்து இருந்தது! தங்களது தவறு புரிந்த பிறகு இப்படி நிற்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். யாரும் பதில் சொல்வதற்கு முன்னர் ஆனந்த் வாய் திறந்தார் – ”எனக்கு விடுமுறையே வேண்டாம்! சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது – என் வீட்டிலும் மூன்று பெண்மணிகள் – அம்மா, சகோதரி, மனைவி என அனைவருமே தொடர்ந்து வேலை செய்பவர்கள் தான் – என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். இனிமேல் அப்படியான நாட்களில் நான் நிச்சயம் உதவி செய்வதோடு அவர்களுக்குத் தேவையான ஓய்வும் அளிப்பேன்” என்று சொல்ல, சூசன் “எல்லோரும் அவரவர் இருக்கைக்குச் சென்று வேலையைக் கவனியுங்கள்” என்று சொல்லி தனது இருக்கையில் அமர்ந்து வேலையைத் தொடங்கினார். 

கடைசி வரிசையில் இருந்த அம்ரீந்தர் சிங் தனது கைகளில் போட்டிருந்த கட்டை அவிழ்த்ததை கவனிக்கத் தவறவில்லை சூசன்.

****
நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின்குறிப்பு: இதுவும் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு தான். நிகழ்வை அப்படியே சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். நிறை குறைகள் இருந்தால் சொல்லுங்களேன்... வெங்கட், புது தில்லி.

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  2. நியாயமான கருத்து...
    மாற்று ஒன்றும் சொல்வதற்கில்லை.. அவரவர் சூழ்நிலை அப்படி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. ஆம்..   நாவினாற் சுட்ட வடு ஆறாதுதான்.  பதிவுக்குப் பொருத்தமான வாசகங்களை தேர்ந்தெடுப்பது (கிடைப்பது)  ஆச்சர்யம்.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகங்கள் நிறையவே இருக்கிறது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சூசன் போன்ற அதிகாரிகள் பார்த்திருக்கிறேன்.  அம்ரீந்தர்சிங் பொய்க்கட்டு போட்டிருந்தாரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொய்க்கட்டே தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நாக்கின் கூர்மையை உணர்பவன் தான் வெற்றி அடைவான் என்பார்கள். சத்தியமான உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  6. பெண்ணின் கஷ்டத்தை உணர்ந்து கொண்ட ஆண்களும், அவர்களுக்கு உணர்த்திய சூசனும் வாழ்க!
    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  8. சிறப்பான கருத்து.
    அவசியம் எல்லாரும் உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே குமார்.

      நீக்கு
  9. பெண்களின் கஷ்டத்தை உணர்திய சூசன்.

    இது நாள் வரை தெரியாமல் இருந்தால் இதை படிக்கும் ஆண்களும் புரிந்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  10. சூசன் சொல்வதில் நியாயம் இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. பழமொழியும் கதையும் ஒரு நடை போடுகின்றன.
    சூசன் போல அதிகாரிகள் எல்லோரையுமே நல்வழிப் படுத்தி விடுவார்கள்.

    அருமையான பெண்மணி. சாட்டை நாக்கு என்றாலும் உண்மையைச் சொன்னார்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  12. சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் ஆனந்த் போன்ற ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. அவர்களுக்கு சூசன் போன்றோரின் அறிவுரை தேவைதான். அருமையான பதிவு. இதை மீள் பதிவாக அடுத்த ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் வெளியிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா

      நீக்கு
  13. புத்தரின் பொன்மொழி அருமை. உண்மை. சூசன் போன்ற பெண்மணிகள் நாட்டுக்குத் தேவை. ஓர் மேலதிகாரியாக இருந்ததால் அவரால் அனைவருக்கும் புரிய வைக்க முடிந்தது. மற்றப் பெண்மணிகள் தங்கள் கஷ்டத்தை இதன் மூலம் வெளிப்படுத்தவும் முடிந்தது. இப்போதெல்லாம் ஆண்கள் புரிந்து கொள்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  15. சூசன்..போற்ற படவேண்டிய பெண்...

    இத்தகைய அருமையான வெளிப்படையான பேச்சு நம் சுற்றத்துக்கு மிக அவசியம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....