புதன், 8 நவம்பர், 2023

கதம்பம் - பாஸிடிவ் மனிதர்கள் - வாக்காளர் அட்டை - புரிதல்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


WHEN LIFE GIVES YOU A HUNDRED REASONS TO CRY, SHOW LIFE THAT YOU HAVE A THOUSAND REASONS TO SMILE.


******


பாஸிடிவ் மனிதர்கள்:




அக்கா! 20ரூக்கு பூ குடுங்களேன்.


இதோ தரேண்டா! உங்களுக்கு டா?


அருகில் இருந்த தோழியிடம் கேட்க....


துளசியும் வெத்தலை மாலையும் குடுங்க!


இந்தாடா! கூடையோட எடுத்துட்டு போங்க! போய் சாமிய பார்த்துட்டு வரும் போது தாங்க!


ஆஞ்சநேயரிடம் மனமுருக பிரார்த்தித்துக் கொண்டு அர்ச்சனை செய்ததும் பிரசாதங்களை வாங்கிக் கொண்டு அக்காவின் பூக்கடைக்கு வந்தோம்.


சாமிய பார்த்தியாடா! அப்புறம் ஹோமம் எல்லாம் நடக்கும் போது வாங்கடா! நான் இங்ஙனயே தான்  இருப்பேன்!


சீரங்கத்துக்கு வந்து 31 வருசம் ஆச்சு! பொண்ணு புள்ளையெல்லாம் கட்டி குடுத்து பேரன் பேத்தியெல்லாம் பார்த்துட்டேன்! கடவுள் என்ன நல்லா வெச்சிருக்காரு! ஒரு கொறவும் இல்ல! என்னால முடிஞ்ச கைங்கர்யத்த செஞ்சுட்டு வரேன்!


அக்கா! நீங்க சொன்னத கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு! கடவுள் உங்களுக்கு நல்லதே செய்யட்டும்!


இப்படியெல்லாம் யாரு சொல்றாங்க இப்ப! எல்லாரும் அது இல்ல  இது இல்லன்னு ஒரே பொலம்பல் தான்!


அத ஏண்டா கேட்கறீங்க! பேசவே பயப்படறாங்க! எல்லாத்தையும் மனசுக்குள்ளயே அழுத்தமா வெச்சிகிட்டு அவஸ்தப்படறாங்க!


மனசு விட்டு பேசணும்! எல்லாரோடயும் பழகணும்! என்ன சொல்ல இந்தப் புள்ளைங்கள!


சரிடா! பார்த்துப் போங்க!


சரிக்கா! பை!


&*&*&*&**&*&*


வாக்காளர் அட்டை முகாம்:


என் பொண்ணுக்கு 18 கம்ப்ளீட் ஆயிடுச்சுங்க மேம்! பேர் சேர்க்கணும்! என்றேன்.

ப்ஃரூப் எல்லாம் கொண்டு வந்திருக்கீங்களா? இந்தாங்க அப்ளிகேஷன்!


உங்களுக்கு இங்க ஓட்டு இருக்கா?


இருக்கே! நானும் இங்க தான் ஓட்டு போடுவேன்! ஆனா அடுத்த க்ளாஸ்ல! என்றதும் சிரித்தார் அந்த பெண்மணி!


லிஸ்ட்ல என் பெயரை பார்த்ததும், இதில எப்படி இருக்கீங்க! இப்போ எப்படி இருக்கீங்க!! என்றார் உரிமையுடன்...🙂


அதுவா! அது பத்து வருஷம் முன்னாடி எடுத்ததும்மா!


ஓகே! உங்களோட வாக்காளர் அட்டை  ஜெராக்ஸும் குடுக்கணும்! அப்போ தான் ரெண்டு பேருக்கும் ஒரே பூத்தா வரும்!


ஓகே மேம்! இவ கிட்ட எல்லாத்தையும் குடுத்து விடறேன்! எத்தனை மணி வரை இருப்பீங்க?? என்று கேட்டேன்!


இன்னிக்கும் நாளைக்கும் இங்க தான் இருப்போம்! சாயந்திரம் நாலு மணிக்குள்ள வரணும்!


வாக்காளர் அட்டைக்கு பேர் சேர்ப்பதற்கான முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது! 18, 19 தேதிகளில் கூட முகாம் தான்! தேவைப்படுபவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம்!


&*&*&*&**&*&*


புரிதல்



ஏலக்காய்! ஏலக்காய்! அம்மா ஏலக்காய் கேட்டேனே போட்டுட்டியா!


Gillette presto மூணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ!


இதெல்லாம் என்னோடது தானே!


கவுண்ட்டரில் பில் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் இடைவிடாமல் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தார் பெரியவர் ஒருவர்!


இல்லங்கய்யா! இது அவங்களோடது! அவங்களுக்கு பில் போட்டுட்டு இருக்கேன்! முடிச்சிட்டு உங்களுக்கு போடறேன்!


அடுத்து 'என்னோடது எல்லாத்தையும் தனியா வைம்மா! அவங்க எடுத்துட்டு போயிடப் போறாங்க'! என்றார் பதட்டத்துடன்!


ரெண்டு பை கொண்டு வந்திருக்கேன்! ரெண்டுலயும் சமமா போட்டுத் தரணும் என்ன!


பேக் செய்து கொண்டிருந்த பெண் இவரை பார்த்து முறைக்க...


அந்தப் பெரியவரை பொறுத்தவரை அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை! தன்னுடைய வேலைகள் அவர் விரும்புவதைப் போலவே perfect ஆக நடக்கணும்! அவ்வளவு தான்!


சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருகில் நின்று பில் போட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு அம்மாவைச் சுற்றி சுற்றி வந்து ஏதேனும் ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருக்கும் குழந்தை போன்று இருந்த இந்தப் பெரியவரின் செய்கைகளை பார்த்த போது சிரிப்பு தான் வந்தது!


வீட்டிற்கு வந்து நினைத்து பார்த்ததில் அவரிடம் கோபமும் இல்லை! ஆர்ப்பாட்டமும் இல்லை! எல்லாம் சரிவர நடக்கணும்! நாம் நினைக்கின்ற படி நடக்கணும்! என்ற எண்ணங்கள் தான் அவரின் செயல்களில் தென்பட்டது! என்பதை புரிந்து கொள்ள முடிந்தது! நிதானமாக சன்னமான குரலில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்பதும் புரிந்தது!


ஒருபுறம் இவரின் செயல்கள் குழந்தை போன்று இருப்பதால் புன்னகையை வரவழைத்தாலும் உடனிருப்பவர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் தான் வரவழைக்கும்! இல்லையா!


சிலநாட்களுக்கு முன்னர் என்னவர் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தது தான் எனக்கு நினைவுக்கு வந்தது!


'நாம என்ன பண்ணிக் கொடுத்தாலும் அவளே பண்ணிண்டா தான் அவளுக்கு திருப்தி! என்று என்னைப் பற்றி தான் சொன்னார்...🙂


உண்மை தான்! என்னிடம் உள்ள கெட்ட பழக்கம் அது! எல்லாமே நான் செய்வது போலவே perfect ஆக இருக்கணும் என்று நினைப்பேன்! ஏனோ தானோவென்று இருக்க என்னால் முடிவதில்லை! சுத்தம் நேர்த்தி என்று அப்பாவிடமிருந்து ஒட்டிக் கொண்டு விட்டது!


எவ்வளவு முடியலைன்னாலும் நாமே செய்யணும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளணும் என்று நினைத்திருக்கிறேன்...🙂


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

22 கருத்துகள்:

  1. வாக்காளர் அடையாள அட்டை நாங்கள் முகவரி மாற்றம் செய்ய வேண்டும். தீபாவளி முடிந்து அடுத்த வாரம் இங்கு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 18,19 தேதிகளில் நடக்கும் முகாமிலும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. தெருவோர வியாபாரிகள் அன்பானவர்கள்.  நம் குடும்பத்தில் ஒருவர் போல பழகுவார்கள்.  அவர்கள் வியாபாரத்துக்கு அது உபயோகபப்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். உண்மை தான். தொழிலுக்கு உதவும் வகையிலும் இருக்கலாம். அவர்களின் இயல்பாகவும் இருக்கலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. அந்தப் பெரியவர் மனதைக் கவர்ந்தார்.  ஏனோ நமக்கு அடுத்தவர் செய்வதைவிட நாம் செய்யும் செயல்கள் சரியாக இருப்பதாக எண்ணம்.  அவர்களை செய்யவிடாமல் நாமே செய்து விடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நாம் என்றுமே சரி தான்..:)

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. நிர்மலா ரெங்கராஜன்8 நவம்பர், 2023 அன்று AM 10:16

    பூக்கார அம்மாவுக்கு நிறைந்த மனசு.
    நாம் செய்யும் வேலை மட்டுமே perfect என்று நினைக்கும் குணம் நிறைய பெண்களுக்கு உண்டு. அதில் நானும் உண்டு 😀
    மாற்றி கொள்வது நல்ல விஷயம் தான்.
    நானும் முயற்சி செய்கிறேன் 👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. உண்மை தான். நாம் செய்வது தான் என்றும் சரி..:) இனி மற்றவர்களுக்கும் வாய்ப்பு குடுக்க முயற்சி செய்வோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நிர்மலா ரெங்கராஜன் ஜி.

      நீக்கு
  5. நடைபாதை விற்பனைக்காரர்கள் நம்மிடம் ஒரு பிரியத்துடன் ஆத்மார்த்தமாக இருப்பது போன்று எனக்குப்படும். அதுவும் நாம் வாடிக்கையாளர் என்றால் ரொம்பவே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இங்கே வார சந்தையிலும் கூட பிரியமுடன் பழகும் பெண்மணிகள் இருக்கிறார்கள்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. பெரியவர் பாவம். இது வயதானால் பலருக்கும் இருக்கும் ஒன்று. தங்கள் சாமான்கள் பத்திரமாக வர வேண்டும்...ஒரு in secured பதற்றம்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பத்திரமாக இருக்குமா என்ற பதற்றம் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. பார்க்க்ப் போனால் perfect எனும் சொல் அகராதி வார்த்தை. மனிதர்கள் நாம் அவரவர் மனதிற்கு ஒரு ஃப்ரேம் இதுதான் நேர்த்தி என்று உருவாக்கிக் கொள்ளும் ஒன்று. ஒருவருக்கு நேர்த்தி என்று தெரிவது மற்றவரின் பார்வையில் இன்னும் ஒரு படி கூட மேலேயோ வேறு வ்டிவமோ பெறலாம். அலல்து இல்லை என்றும் கூடத் தோன்றலாம். நேர்த்தி திருப்ப்தி என்பது எல்லாம் ஒவ்வொருவர் மன அளவுகோலும் வெவ்வேறு.

    அதிலிருந்து வெளிவருவது மிகவும் நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு எண்ணம் தான் perfect. நம்மை விட சிறப்பாக செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர மறுக்கிறோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. உங்கள் எண்ணங்கள் அருமை... அத்துடன் கற்றும் தரலாம்... இது எதையும் விட மகிழ்வு தரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ. கற்றுத் தந்துவிட்டால் நமக்கும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  9. எல்லாம் நாமே செய்யணும் -மேனேஜர் ஆன புதிதில் அட்ஜஸ்ட் பண்ணிக்க கஷ்டப்பட்டேன். மத்தவங்களைச் செய்யச் சொல்வதைவிட நானே வேகமாகவும் பெர்ஃபக்டாகவும் செய்துடுவேன் என்ற எண்ணம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் எல்லோரிடமும் உள்ள குணம் தான் இந்த perfect. மாற்றிக் கொள்வதும் சற்று சிரமம் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  10. என்ன இருந்தாலும் நமக்கு திருப்த்தித்தரும் வகையில் , நாம் எதிர்பார்க்கும் வகையில் நம்மை தவிர வேறு எவராலும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. பெரியவரின் முந்தைய shopping and packing அனுபவம் இப்படி சொல்லவேண்டி இருந்திருக்கும், தவறில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். முந்தைய அனுபவங்களால் இப்படியான பதற்றம் உண்டாகி இருக்கலாம். நாம் விருப்பப்படுவதை போல் நம்மால் மட்டும் தான் செய்ய முடியும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி koilpillai ஜி.

      நீக்கு
  11. கதம்பம் அருமை. முகநூலில் படித்தேன், இங்கும் படித்தேன்.
    பாஸிடிவ் மனிதர்கள் மனம் கவர்ந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. எனக்கும் அந்த அக்காவை மிகவும் பிடித்திருந்தது! நிறைவான மனது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....