புதன், 8 மே, 2024

கதம்பம் - ஆரி ஒர்க் - ரங்கனின் பவனி - வாழ்க்கையின் ஓட்டம் - கருட சேவை - பலா - கோயில் உலா - கஸ்டர்ட் குல்ஃபி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் மாணவியாக…!! பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


ஆரி ஒர்க் - ரோஷ்ணி கார்னர் - 29 ஏப்ரல் 2024:


மகள் ஆன்லைனில் ஆரி ஒர்க் வகுப்பில் கற்று வருகிறாள்! அவள் செய்த வேலைப்பாடுகள் சில...



*******


ரங்கனின் பவனி - 30 ஏப்ரல் 2024:





இன்றைய காலை நடைப்பயிற்சியில்...


பல்லக்கில் பவனி வரும் ரங்கனை வரவேற்க செய்திருந்த ஏற்பாடுகள் - நிழற்படம் உங்கள் பார்வைக்கு!...


மாலை கருடசேவை.


*******


வாழ்க்கையின் ஓட்டம் - 1 மே 2024:




பெரிதாக மாற்றங்கள் ஏதுமில்லாத அன்றாட வாழ்க்கை தன் இயல்பான நடையில் கடந்து செல்கிறது! காலை நேரத்தில் இயற்கையை ரசித்தபடியே  நடைப்பயிற்சியும், பின்பு சமையல் சாப்பாடு என நாட்கள் நகர்ந்து செல்கின்றன! 


வெயில் எல்லா ஊரையும் போல இங்கேயும் வாட்டி வதைக்கிறது! சில நேரங்களில் வானம் காற்றும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் பிடிவாதத்துடன் அழுத்தமாக இருக்கிறது!


காலை நேர நடைப்பயிற்சியில் பலவிதமான மனிதர்களை பார்க்க முடிகிறது! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்! நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டு செல்லும் நபர்கள், ஜங்க் ஃபுட் கலாச்சாரத்தால் சீரழிந்து Obesity ஆல் உடலை பெருக்கிக் கொண்ட தன் மகளை வலுக்கட்டாயமாக நடைப்பயிற்சிக்கு அழைத்து வரும் தந்தை, மகளுக்கு பயிற்சியளிக்க தன் சைக்கிளின் வேகத்துக்கு அவளை ஓடி வரச் சொல்லும் தந்தை இப்படி!


செல்ஃபோனில் தான் இங்கு பலரின் வாழ்க்கையே நடக்கிறது என்று சொல்லலாம்! பேருந்தில் கூட செல்ஃபோன் பேசிக் கொண்டே ஏறி குறிப்பிட்ட நிறுத்தம் வரை பேசி பின் இறங்கிச் செல்லும் போதும் பேசிக் கொண்டிருப்பார்கள்! அந்த பேச்சுகள் எல்லாமே வீட்டுப் பிரச்சினைகளும் அடுத்தவர் குடும்பத் தகராறுகளும் தான் அதில் விவாதிக்கப்படும்!


இங்கும் அன்றாடம் ஒரு பெண்மணியை பார்க்க முடிகிறது! வயது முப்பதுக்குள் இருக்கலாம்! இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகள்! அவர்கள் தெருவில் உடை ஏதும் அணியாமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள்! 


வீட்டு வாசலில் உள்ள தெருக்குழாயில் வைக்கப்பட்ட குடம் நிரம்பி தண்ணீர் வீணாக ஓடிக் கொண்டிருக்கும்! அந்தப் பெண்மணி இதை எதையும் கவனிக்காமல் வாசல் திண்ணையில் அமர்ந்து  செல்ஃபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பார்!


இப்படியாக சிலரைப் பார்த்துக் கொண்டிருப்பதில் நமக்கான சில புரிதல்களும் கிடைக்கின்றன!


*******


கருட சேவை - 2 மே 2024:




வருடத்துக்கு ஒருமுறை சித்திரை திருநாளில் வீட்டு வாசலில் கருட சேவை காணும் பாக்கியம் இந்த முறையும் கிடைத்தது! எல்லோரையும் காத்து ரட்சிக்கணும் ரங்கா! மழை பெய்ய வைத்து பூமியை குளிர்விக்கணும்! நல்லதே நடக்கணும்!


*******


பலா (நடைப்பயிற்சி) - 3 மே 2024:



அதென்ன அவ்வளவு உயரத்துல காய்ச்சா வெயிட் தாங்காம கீழே விழிந்திடாது??


விழாது! பெரிசானதும் கயிறு கட்டி இறக்கிடுவாங்க!


பலாப்பழத்தோட வாசனை வேற கும்முனு வருதில்ல??


ம்ம்ம். ஏதாவது பழுத்திருக்கும்! பார்த்து பறிச்சிடுவாங்க! அங்க பாரு! மயில்! 


வீட்டுக்கு போனதும் சீக்கிரம் ரெடியாயிடுங்க ரெண்டு பேரும்! என்ன!


ஏன்?? என்ன விஷயம்?


முத்தரசநல்லூர்ல குருவாயூரப்பன் கோவில் கட்டியிருக்காங்களாம்! போயிட்டு வருவோம்!


அப்படியா! சரி! சரி!


*******


கோயில் உலா - 3 மே 2024:





குளித்தலை செல்லும் சாலையில் முத்தரசநல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ள குருவாயூரப்பன் ஆலயத்துக்கு சென்று வந்தோம்! புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் தனிச் சந்நிதிகளில் ஐயப்பன், கருப்பண்ணசாமி, வேட்டைக்கொரு மகன் போன்றவையும் இடம்பெற்றுள்ளன! 


குருவாயூரப்பன் சந்நிதியின் உள்ளே கிருஷ்ண லீலா ம்யூரல் பெயிண்ட்டிங்கில் அழகு ஓவியங்களாக கண்கொள்ளா காட்சியாக இருந்தது! இங்கு துலாபாரமும் இடம் பெற்றுள்ளது! 


கேரள பாணியில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் ஆண்கள் சட்டையின்றியே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்! பெண்கள் புடவை, பாவாடை தாவணி மற்றும் சுடிதார் அணிந்து செல்லலாம்!


வெளிப் பிரகாரத்தில் மஹாபெரியவாளுக்கும், ஷீரடி பாபாவுக்கும் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன! புல்வெளிகள், தெப்பக்குளம் சுற்றிலும் மரங்கள் என பார்க்க அழகான கோவில்! 


*******


கஸ்டர்ட் குல்ஃபி - 3 மே 2024:



அடிக்கிற வெயிலுக்கு  சூடாக எதையுமே சாப்பிட பிடிக்கல தான்! ஆனா அப்படியே இருக்க முடியுமா சொல்லுங்க! எப்பயாவது வேணா ஏதாவது  ஜில்லுன்னு சாப்பிட்டு மனச தேத்திக்க வேண்டியது தான்! என்ன நாஞ் சொல்றது?


வீட்டில் இருக்கும் கஸ்டர்ட் பவுடரில் ஏதாவது ஜில்லுனு செய்வோமான்னு நெட்ல பார்த்தப்போ தாங்க இந்த ரெசிபி கெடைச்சது! செய்யறது ரொம்ப சுலபம்!


அட! என்னம்மா! எல்லாத்தையுமே சுலபம் தான்னு தான் சொல்ற! ஆனா அந்த அடுப்படிக்கு போய் நிக்கறதே இப்ப டெர்ரரா இல்ல இருக்கு!! 


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

23 கருத்துகள்:

  1. சற்றே நீண்ட இடைவெளி.    கதம்பம் சுவாரஸ்யம்.  யானை ஆண்டாள் இல்லை அல்லவா?  அந்த இன்னொரு யானை பெயர் சட்டென மறந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த யானையின் பெயர் லஷ்மி. ஆண்டாளின் தோழி!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. காக்கை தன் குழந்தையிடம் சோளக்காட்டு பொம்மையைக் காட்டி சொன்னதாம். "அது நிஜ மனிதன் இல்லை. பொம்மை.  மனிதன் என்றால் இவ்வளவு நேரம் இப்படி செல்போன் நோண்டாமல் சும்மா இருக்காது"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். செல்ஃபோன் இல்லாத மனிதன் பொம்மை தான்..:)

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. குல்பி ஐஸ், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், பானைத்தண்ணீர்  சாப்பிடும் பாக்கியம் எனக்கு இல்லை.  உடனே தொண்டை கட்டி,  பதினைந்து நாட்கள் முதல் மூன்று மாதம் வரை படுத்தி விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா! ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு சிரமம் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. வாசகம் அருமை. கதம்பம் அருமை.

    ஆரி ஒர்க் - ரோஷ்ணியின் கை வண்ணம் அருமை.
    கோவில் வீதிஉலா வரும் போது போடும் கோலங்கள், தோரணங்கள் பார்க்க அழகு.

    கஸ்டர்ட் குல்ஃபி அருமை.
    கருடசேவையும், உங்கள் பிரார்த்தனையும் நன்று. நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து தாங்கள் கருத்து சொன்னது குறித்து மிக்க மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  5. இன்றைய கதம்பம் அருமை. ஆரி ஒர்க் என்றால் என்ன என்று எழுதியிருக்கலாம். அரங்கன் தேர் சமயம் எப்போதும் வரும் வெங்கட்டின் பதிவு மிஸ்ஸிங். மற்றவற்றை பிறகு வந்து எழுதறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரி ஒர்க் என்றால் சின்னஞ்சிறு மணிகள், சம்க்கிகள் கொண்டு ஆடைகளில் வேலைப்பாடு செய்வது. இதில் எம்பிராய்டரியும் உண்டு! இப்போதைய ட்ரெண்ட் ஆரி ஒர்க்! மணப்பெண்ணின் அலங்கார ஆடம்பர ப்ளவுஸ்கள் ஆரி ஒர்க் செய்யப்பட்டவை தான்.

      வெங்கட் அவர்கள் ஒரு மாத காலமாக இங்கே தான் இருக்கிறார்! எழுதச் சொல்லி எவ்வளவு முறை சொன்னாலும் என் பேச்சு எடுபடவில்லை..:)

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
    2. Oh.. ஆரி ஒர்க் என்பது இதுதானா? இதில் மிக நிறைய லாபம் உள்ள, தேவைகள் அதிகமுள்ள தொழில். ஒரு ப்லௌசுக்கு 8000 (துணி நாம் கொடுக்கணும்) ரூ வாங்கறாங்க. சமீபத்தில் பத்து வித வித ஒர்க்குக்குக் கொடுத்து வாங்கினார்கள் வீட்டில். நானும் அவங்க கடைக்குப் போயிருக்கேன். பண்ணறவன் கண் நிச்சயம் பணால்தான். எவ்வளவு கஷ்டமான வேலை. அதனால்தான் இவ்வளவு விலை.

      தில்லி வெங்கட் எழுதாதது ஆச்சர்யம்தான். ஒண்ணும் இல்லாட்டாலும், தேர் அன்னைக்கு வீட்டு வாசல்களில் இருந்த கோலங்கள், பெட்டிக் கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள் என்று தலைப்பில் பல படங்கள் போடுவார்.

      நீக்கு
  6. கதம்பம் சிறப்பாக உள்ளது.

    அலைபேசி வரவுக்கு பிறகு குடும்பச் சண்டைகள் விரிந்து கொண்டுதான் போகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். பொறுமையும், நிதானமும் செல்ஃபோனால் காற்றோடு போய்விட்டது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  7. பெயரில்லா8 மே, 2024 அன்று 10:30 AM

    வாசகம் அருமை.

    இப்படி படங்களில் வாசகம் எழுதி இணையத்தில் போடுபவர்கள் சொற்பிழையையும் கவனிக்கலாம். கனிவுடைமை - கணிவுடைமை!!!

    ஆஹா ரோஷ்ணி!!!! இப்படி என் பழைய நாட்களுக்குள் இழுத்துச் செல்கிறாரே!!!

    சூப்பரா இருக்கு ஆரி வேலைப்பாடு. நல்லா போட்டிருக்காங்க.

    இதற்கான பிரத்யேக ஊசி உண்டே. நான் இந்த வேலைப்பாடு செய்திருக்கிறேன் ஜரி நூலில், கற்கள் வைத்தும், பாசிகள் வைத்தும் என்று ஒரு புடவை முழுவதும். (எனக்கல்ல!!!!!! புடவை கட்டுவதே அபூர்வம்!!!) போட்ட பிறகு புடவை செம பளு!

    ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை. நீங்களும் இந்த வேலைப்பாடு செய்துள்ளீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. ரங்கன் பவனி. அவரை வரவேற்பதற்கான அலங்காரங்கள் கோலங்கள், ஐயப்பன் கோயில் எல்லாமே அருமை. ஐயப்பன் கோயில் பற்றி வெங்கட்ஜி விரிவாக எழுதியிருந்த நினைவு.

    குல்ஃபி!!! நல்லாருக்கு! கண்ணால பார்த்துக்கறேன். நிறைய செஞ்சது ஒரு காலம். விதம் விதமாக, சென்னையில் இருந்தப்ப.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவரும் இந்தக் கோயில் பற்றி எழுதியிருந்தார். ஆனால் அப்போது அவர் உள்ளே செல்லவில்லை!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. கேரள பாணி கோவில்னு சொல்லியிருக்கீங்க .. இத்தகைய ஓவியங்களை நான் கேரளாவில் பல கோவில்களில் பார்த்திருக்கிறேன், படங்களும் எடுத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார் இது கேரள பாணி கோவில் தான். சன்னிதியின் உள்ளே தான் இங்கு கண்கவர் ஓவியங்கள் இருந்தன. அதனால் படமெடுக்க இயலாது. இங்கே பகிர்ந்திருப்பது இணையத்தில் இருந்து எடுத்தது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  10. பலா... ராஜா காது கழுதைக் காதுன்னு தெரியும்... ஆனால் எழுதியிருப்பது ராணியாச்சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜாவும் ராணியும் தானே இங்கு பேசிக் கொண்டு சென்றார்கள்..:) ராஜாவோடு சேர்ந்து ராணிக்கும் ஒட்டிக் கொண்டு விட்டது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  11. ரோஷ்ணி கைவண்ணம் நன்றாக இருக்கிறது.

    அரங்கனின் வீதி உலாக் காட்சிகள் , கோலங்கள் அருமையாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....