ஞாயிறு, 9 டிசம்பர், 2012

ராஜ பவனி போகலாமா?




சாதாரணமாக இந்தியாவில் ரயில் பயணம் செய்தவர்கள் அனைவருக்கும், அழுக்கான ரயில்களில் செய்த பயணம் ஒரு வித கசப்பான அனுபவத்தை தான் தந்திருக்கும்.  இந்தியாவில் இரண்டு சிறப்பான ரயில்கள் இருக்கின்றன. அவை PALACE ON WHEELS என்று அழைக்கப்படும் ரயில்கள். பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணிகள் தான் அதில் பயணம் செய்ய முடியும் – காரணம் பணம் தான்.



இந்தியாவின் Palace on Wheels




இந்தியாவின் Palace on Wheels பற்றிய விவரங்கள் இந்த தளத்தில் இருக்கிறது.
 
சரி பார்த்தாவது அனுபவிப்போமே. அதுவும் பாரிஸ் நகரில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பயணிகள் ரயில் Palace of Versailles போலவே உள்ளே அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.  இதோ அந்த ரயிலின் உட்புறக்காட்சி உங்கள் பார்வைக்கு.



























என்ன நண்பர்களே பார்த்து ரசித்தீர்களா! பலரது பெருமூச்சு தில்லி வரை கேட்கிறது.  கேட்க வேண்டியவர்களுக்குக் கேட்டால் நன்றாக இருக்கும்!


அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களுடன் சந்திக்கும் வரை....


நட்புடன்



வெங்கட்

புது தில்லி.


வெள்ளி, 7 டிசம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 24 – கார்கில் 2 கன்யாகுமரி – குறுஞ்செய்தி வயது 20 – சூப்பர் சிங்கர்





இந்த வார செய்தி:

சில நாட்கள் முன்னர் எனது நண்பர் அருண் பரத்வாஜ் கார்கிலிலிருந்து கன்யாகுமரி வரை இரண்டு மாதங்களில் ஓடியே கடக்க இருப்பதை எழுதி இருந்தேன். சென்ற வாரம், அதாவது சென்ற வெள்ளிக்கிழமை நண்பர் அருண் கன்யாகுமரியைச் சென்றடைந்தார். 

கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி கார்கிலில் ஆரம்பித்தது அருணின் ஓட்டம். இடைவிடாது 61 நாட்கள் ஓடி, நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று மாலை 04.50 மணிக்கு அவர் கன்யாகுமரியின் கடற்கரையை வந்து சேர்ந்தார்.  இந்த 61 நாட்களில் அவர் கடந்த தூரம் 4000 கிலோ மீட்டருக்கு மேல்.

இந்தியாவின் வரலாற்றிலேயே இந்த தூரத்தினை ஓடியே கடந்திருப்பது இவர் மட்டுமே.  செல்லும் வழியெல்லாம், பள்ளி மாணவர்கள், கிராமத்தினர், வழிப் போக்கர்கள், வண்டி ஓட்டுனர்கள் என எல்லோரிடமிருந்தும் தனக்குக் கிடைத்த அன்பினை மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் அருண்.

நண்பர் அருண் பரத்வாஜ் அவர்களுக்கு உங்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு தேனியிடம் ஒரு பறவை கேட்டது. ‘ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனைத் தயாரிக்கிறாய். ஆனால் மனிதன் அந்தத் தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான். அதற்காக நீ வருந்துவதில்லையா?அதற்குத் தேனி பதிலளித்தது. இல்லவே இல்லை! மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் அவன் என்னிடமிருந்து திருடமுடியாது!


இந்த வார குறுஞ்செய்தி

குறுஞ்செய்தி பற்றிய ஒரு தகவல்.  குறுஞ்செய்திக்கு 03.12.2012 அன்று 20 வயது முடிந்துவிட்டது.  முதன் முதலில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி ஒரு கணினியிலிருந்து அலைபேசிக்கு அனுப்பப் பட்டது. செய்தி என்ன தெரியுமா? “Merry Christmas’.  சரி இன்றைய குறுஞ்செய்தியைப் பார்க்கலாம்!

DIFFICULTIES ARE AN ATTEMPT BY GOD TO CHANGE OUR MINDS. BUT PRAYERS ARE AN ATTEMPT BY US TO CHANGE GOD’S MIND!

ரசித்த புகைப்படம்: 



விளக்கம் வேண்டுமா என்ன?
  
ரசித்த பாடல்

மூன்றாம் பிறை படத்தில் வரும் பூங்காற்று புதிரானது யாருக்குத்தான் பிடிக்காது?  நான் ரசித்த இப்பாடலை நீங்களும் மீண்டுமொரு முறை பார்த்து/கேட்டு ரசிக்க இங்கே தந்திருக்கிறேன். கானகந்தர்வன் யேசுதாஸ் குரலில் இனிமையான பாடல் இதோ!





ரசித்த காணொளி: சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என தொடர்ந்து விஜய் டி.வி.யில் கண்டுகளித்துக் கொண்டிருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு, இந்த சூப்பர் சிங்கர் பாடலையும் கேட்டு ரசிங்கன்னு சொல்லிக்கிறேன்....  :)



படித்ததில் பிடித்தது:
-           
கழுதையும் கோழியும்: கழுதை ஒன்று வைக்கோல் களத்தில் இருந்தபோது பசித்த சிங்கம் அங்கு வந்தது. ‘நான் எல்லாம் கழுதையை அடித்துச் சாப்பிடுகிற வம்சம் இல்லை, என்ன பண்ணுவது பசிக்கொடுமை!என்று கழுதையைத் தாக்க வந்தது. அப்போது கோழி கூவியது. சிங்கத்துக்கு, கோழியின் ‘கொக்கரக்கோ!என்றால் ஒரு அலர்ஜி. அதைக் கேட்ட மாத்திரத்தில் பிடரியெல்லாம் சிலிர்த்து உள்ளுக்குள் என்னமோ பண்ணும். நாராசமாக இருக்கும். அந்த இடத்தை விட்டு உடனே விலகிப் போய்விடும்.

இந்த முறை கோழி விசேஷ அபசுரமாக ஏறக்குறைய சுருட்டி ராகத்தில் கூவ, சிங்கம் தன் முன் பாதங்களால் காதை மூடிக்கொண்டு, பின் பாதங்களில் ஓடிப்போனது. இதைப் பார்த்து கழுதை தைரியமடைந்து, ‘சிங்கம் பயந்தாரிஎன்று அதை உற்சாகமாக விரட்டியது. சிங்கம், கோழி கூவல் நின்றதும் திரும்பி, கழுதையை ஒரு அறை அறைந்து கொன்று உண்டு பசியாறியது.

நீதி: தைரியம் வேண்டும் தான்; அசட்டு தைரியமல்ல!

-          சுஜாதாவின் நீதிக்கதைகளிலிருந்து.


மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


 

புதன், 5 டிசம்பர், 2012

பாம்புடன் போட்ட டீல்!





சமீபத்தில் “எங்கள் பிளாக்”-ல் நல்ல பாம்பு என்று ஒரு பதிவினை எழுதி இருந்தார். அந்தப் பதிவில் நான் இப்படி பின்னூட்டம் அளித்திருந்தேன்.  

அட நாகராஜன் உங்க வீட்டுக்கு வந்தாரா.... சொல்லவே இல்லை :) அதான் இப்ப சொல்லிட்டேனேன்னு சொல்லப்படாது!

நெய்வேலியில் நிறைய பாம்பு அனுபவங்கள்... கையால் பிடித்த கதையெல்லாம் இங்கே சொன்னால் அடித்து விடுவார்கள்.... :)     

இந்த பதிலைப் பார்த்துட்டு வல்லிம்மா @ வெங்கட் உங்கள் நல்ல அனுபவங்களைச் சொல்லவும்.:) அப்படின்னு கேட்க, ஒருத்தர் நம்ம கிட்ட கேட்டா, உடனே சொல்லாம விட்டுடலாமா? அதான் இந்தப் பதிவு.

ஒரு நாள் நெய்வேலியில் அதிகாலையில் எழுந்து பேஸ்டும் – பிரஷும் கையுமா வீட்டை விட்டு வெளியே வந்தேன். வீட்டைச் சுத்தி தோட்டத்தினைப் பார்த்தபடியே பல்துலக்குவதில் இருக்கும் ஆனந்தம் வாஷ்பேசின் முன் கண்ணாடி பார்த்து பல்துலக்கி, நம்ம மூஞ்சிய நாமே பார்த்து பயப்படுவதில் இல்லை. அப்படியே வெளியே வந்தா ஒரு பாம்பு அடிச்சு போட்டு இருக்கு. ‘அடடா ராத்திரியோட ராத்திரியா யார் வீட்டுலயோ இதை கைமா பண்ணிட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டே வீட்டுக்குள் வந்து காபியை குடித்தபடியே யார் வீட்டுலயோ ராத்திரி பாம்பு வந்திருக்குன்னு சொன்னேன்.

சொல்லி வாயை மூடல, அதுக்குள்ள பொட்டுன்னு பொடரில ஒரு அடி – யாருன்னு பார்த்தா எங்கப்பா! “யார் வீட்டுலயோ அடிச்சாங்களாம்!, அப்படி என்னடா ஒரு கும்பகர்ண தூக்கம் உனக்கு?" அப்படின்னு கேட்டார்.  சினிமாவுல மட்டும்தான் Flash Back காமிக்கணுமா என்ன.  நானும் மோட்டுவளைய பார்க்கறேன் – அட Flash Back சொல்லதான்!



ராத்திரி ஐயா தூங்கிட்டேன். வீட்டுல அத்தை பாட்டி [அம்மாவோட அத்தை] மட்டும் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்க, அப்பா, சகோதரிகள் எல்லாரும் தூக்கத்தைத் தழுவ முயற்சித்துக் கொண்டிருந்தனர்.  சிறிது நேரத்தில் தங்கை நடுக்கூடத்தில் தூங்க, அப்பா, மூத்த சகோதரி படுக்கை அறையில் தூங்கி விட்டனர். அம்மா, பெரியம்மாவோடு பன்ரூட்டி சென்றிருந்தார் – அடுத்த வாரம் நடக்க வேண்டிய பூஜைக்கு ஏற்பாடு செய்ய.

சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த அத்தைப் பாட்டிக்கு தங்கை தூங்கிக்கொண்டிருந்த அறையில் ஏதோ மினுமினுவென தென்பட்டிருக்கிறது. என்னன்னு புரியலையேஎன்று யோசித்தபடியே, சத்தமில்லாது வந்து கூடத்தில் விளக்கை போட்டுப் பார்க்க, தங்கை தலைமாட்டில் “நல்ல பாம்புபடமெடுத்து நின்று கொண்டிருக்கிறது.  என்ன வேகம் வந்ததோ தெரியாது – தங்கையின் காலைப் பிடித்து ஒரு இழு, அவள் நேரே சமையலறையில்...  எழுந்து உட்கார்ந்து “நான் எப்படி இங்க வந்தேன்என முழித்துக் கொண்டிருந்தாள்.

அத்தைப் பாட்டி மெதுவாக அப்பாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல, பாம்பு அங்கேயே இருந்தது.  “நாகராஜா, சமத்தா போயிடுப்பா, பாலும் பழமும் கொடுக்கறேன்என்று எங்க அப்பா நாகராஜன் பாம்பு கிட்ட டீலிங் பேச, ாகாஜுக்க அந்த டீலிங் பிடித்தது போல! வாயில் கதவு இடுக்கு வழியே வெளியே வந்தது. வந்தது நேரா அதோட வீட்டுக்குப் போகக் கூடாதோ, நேரே வராண்டால இருக்கற திண்ணைக்குக் கீழே போய் அடைக்கலம் ஆயிடுச்சு.

தலைவருக்குப் பின்னாடியே போகிற தொண்டர்கள் மாதிரி, அப்பா, அத்தைப் பாட்டி, சகோதரிகள் எல்லாம் பின்னாடியே வராண்டாவுக்கு வந்து பாம்போடு பேச்சுவார்த்தை நடத்த, சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு சாமிநாதன் அண்ணன் வந்து விஷயம் தெரிந்து கையில் கழி எடுத்து பாம்பை அடித்து வெளியே போட்டு விட்டார்! இத்தனை விஷயம் நடந்து ஏரியாவே எழுந்து பாம்பு கதை பேசிருக்கு. ஆனா ஐயா மட்டும் தூங்கிட்டே இருந்திருக்கேன். அப்படி ஒரு கும்பகர்ண தூக்கம்.  அதே பாம்பு தான் நான் காலையில் பார்த்தது! அதைக் கேட்டு அடி வாங்கியது.

அது சரி, கையால் பிடித்த கதையெல்லாம் இங்கே சொன்னால் அடித்து விடுவார்கள்.... :)  அப்படின்னு சொல்லிட்டு தூங்கின கதைய சொல்றீங்க! எனக் கேட்பவர்களுக்கு, அதெல்லாம் சப்பை மேட்டர்...  :) காலையில கேட்டு திறக்க, கை வச்சேன் ஒரு நாள் – வழக்கத்தை விட கேட் வழவழன்னு இருக்க, என்னன்னு தடவிப்பார்த்தா, பாம்பார் கேட் மேலே தாச்சிண்டு தூச்சிண்டு இருக்கார். தடவிக்கொடுத்தது சுகமா இருந்ததோ என்னமோ புஸ்... புஸ்...சத்தம் கொடுக்க, அப்படியே பிடிச்சு தூக்கிப் போட்டுட்டேன்! அப்புறம் அதிர்ச்சியில அப்படியே சிலையா நின்னுட்டேன்என்பது உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அதை யாருகிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்!

இன்னும் சில பாம்பு கதைகள் என் பக்கத்தில் முன்பே எழுதி இருக்கேன்.  விருப்பமிருந்தால் அதையும் படிக்கலாம்.



வேறு சில நெய்வேலி அனுபவங்களோடு அடுத்த ‘மனச் சுரங்கத்திலிருந்துபகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.