ஆங்கிலத்தில்
Sandwich என்பதைத் தான் தவறுதலாக தமிழில் ”சான்வி” என்று எழுதி விட்டேனோ என்று குழம்ப வேண்டாம்
நண்பர்களே. இன்று நாம் பார்க்கப் போகும்
ஒரு இனிப்பின் பெயர் தான் இந்த சான்வி. இதற்கு “பர்வல் கி மிட்டாய்” என்ற பெயரும் உண்டு. இந்த இனிப்பு பெரும்பாலும் பீஹார்/ஜார்க்கண்ட்
மாநிலத்தில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை.
எங்கள் அலுவலகத்தில் பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு
இளைஞர் சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்திருக்கிறார். அவரது அன்னை கிராமத்திலிருந்து
இந்த வாரம் தில்லிக்கு மகனைப் பார்ப்பதற்காக வந்தார். அப்படி வரும்போது
கிராமத்திலிருந்து செய்து எடுத்து வந்திருந்த இனிப்பு தான் இந்த சான்வி எனப்படும்
பர்வல் கி மிட்டாய். நிறையவே எடுத்து வந்திருந்த காரணத்தினால் அலுவலகத்திற்கும்
கொண்டு வந்து எங்களுக்கும் கொடுத்தார். பார்க்கும்போது “எப்படி இருக்குமோ? என்ற
எண்ணம் இருந்தாலும் சாப்பிட்ட பிறகு ”இன்னும் ஒன்று கிடைக்குமா?” என்ற கேள்வி மனதிற்குள் பிராண்டியது!
முதலில் பர்வல் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்!
இது ஒரு காய்கறி. தமிழகத்தில் இந்த காய்கறி கிடைப்பதாகத் தெரியவில்லை. புடலங்காய்,
பாவக்காய் போன்று இதுவும் “Gourd”
வகையைச் சார்ந்தது. பார்க்க,
கோவைக்காய்க்கு பெரியக்கா மாதிரி இருக்கும்! இந்த காய்கறியை சப்ஜி/பொரியலாக சமைத்துச்
சாப்பிடுவதுண்டு. ஆனால் இதிலும் இனிப்பு
செய்யலாம் என்பது இப்போது தான் தெரிந்தது! சரி எப்படிச் செய்ய வேண்டும் என
பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்:
பர்வல் – 250 கிராம் [தோலெடுத்து, குறுக்கே வெட்டி
[துண்டு பட்டுவிடாமல்], உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
கோயா/மாவா – 1 கப்
சர்க்கரை – 1½ கப்
பச்சை ஏலக்காய் பொடி – ¼ ஸ்பூன்.
பாதாம் – 10 [உடைத்தது]
பிஸ்தா – 10 [உடைத்தது]
பால் பவுடர் – 2 ஸ்பூன்.
ஆப்பசோடா - 1
சிட்டிகை
குங்குமப்பூ – சில இதழ்கள்.
Silver Warq – அலங்காரம் தேவையெனில்!
எப்படிச் செய்யணும் மாமு?
முதலில் பர்வல் உள்ளே வைத்து Stuff செய்ய கோயாவை மிதமான சூட்டில் வதக்க வேண்டும்.
மிருதுவாக ஆனதும் அதில் அரை கப் சர்க்கரையைச் சேர்த்து வதக்கவும்.
மீதி இருக்கும் சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து
மிதமான சூட்டில் மெல்லிய பாகாக செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வதங்கிய கோயாவில் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி அதில் உடைத்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா
ஆகியவற்றை கலக்கவும். அதில் பால் பவுடரையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த
கலவையை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.
ஒரு வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஆப்ப சோடா
சிறிதளவு சேர்த்து வெட்டி வைத்திருக்கும் பர்வல்களை வேக வைக்கவும். இரண்டு மூன்று
நிமிடங்களில் வெந்து விடும். பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு, அவற்றை
தயாரித்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு சூடு செய்யவும். நன்கு வெந்த
பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.
பிறகு தயாரித்து வைத்திருக்கும் கோயாவினை வெட்டி
வைத்திருக்கும் பகுதிகளில் Stuff
செய்யவும். ஒவ்வொரு பர்வல் மீதும் குங்குமப் பூவினைத் தூவி,
தேவையெனில் Silver Warq கொண்டு அலங்கரிக்கலாம். அதன் பிறகு நன்கு குளிர
வைத்து [Fridge-ல்] வைத்து சாப்பிட்டுப் பாருங்கள்! ”வாவ்! என்னவொரு சுவை!” என்று நிச்சயம் நீங்களும் சொல்வீர்கள்.
பர்வல் கிடைக்கவில்லையே என்று சொல்லக் கூடாது.
கிடைக்கும்போது செய்து பாருங்கள்! இல்லையெனில் பீஹார் பக்கமாகச் செல்லும்போது
மறக்காமல் இந்த சான்வி என்று அழைக்கப்படும் பர்வல் கி மிட்டாய் நிச்சயம்
சாப்பிட்டுப் பாருங்கள்!
அடுத்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் வேறு ஒரு அனுபவம்
பற்றிப் பார்க்கலாம்!
மீண்டும்
சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.



