திங்கள், 9 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்






அழகிய பொம்மைகள் விற்பனைக்கு....
புஷ்கர் நகரத்தில்....


//இடம் கிடைக்க கொஞ்சம் தேட வேண்டியிருந்தது. நான்கு ஐந்து தங்குமிடங்களில் விசாரிக்க, எங்கேயும் இடம் இல்லை. எங்களுக்கு நாள் முழுவதற்குமான அறைகளும் தேவையாக இல்லை – காலைக் கடன் முடித்து, குளித்து புறப்பட வேண்டும் – அவ்வளவு தான். ஆனால் அதற்கே நிறைய தேட வேண்டியிருந்தது – இடம் கிடைத்ததா? இல்லையா என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!//


விதம் விதமாய் கத்திகள்....
புஷ்கர் நகரத்தில்.... 


அழகிய கைபைகள் விற்பனைக்கு....
புஷ்கர் நகரத்தில்....

தொடரின் இரண்டாம் பகுதியினை மேலே சொன்னபடி தான் முடித்திருந்தேன். ஐந்தாறு இடங்களில் நானும் நண்பர் ஒருவரும் ஏறி இறங்கினோம். பெரும்பாலான இடங்களில் அறைகள் இல்லை என்று சொன்னார்கள் – சில இடங்களில் சிப்பந்திகள் உறங்கிக் கொண்டிருக்க, உள்ளே பார்த்தால் அந்தத் தங்குமிடங்கள் நன்றாகவும் இல்லை. சரி இன்னும் தேடுவோம் என சிலரிடம் விசாரிக்க, இரண்டு மூன்று தரம்ஷாலாக்களின் பெயர்களைச் சொன்னார்கள். அதைக் கேட்டு விசாரித்துச் சென்றோம். எங்கள் தேடல் யாதவ் அஹிர் தரம்ஷாலா எனும் இடத்தில் முடிந்தது. நிறைய அறைகள் இருந்தன என்றாலும் எங்களுக்காக இரண்டு அறைகள் தந்தார்கள். ஐநூறு ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தால் போதும் எனச் சொல்ல, நன்கொடை கொடுத்து ரசீது பெற்றுக் கொண்டோம்.  



நண்பர்கள் இருவர் - நகர ஆட்டோ ஒன்றில்....
புஷ்கர் நகரத்தில்....


தேநீர் கொடுப்பதற்கான மண் கோப்பைகள்...
புஷ்கர் நகரத்தில்....


ஆண்கள் ஒரு அறையும் பெண்கள் ஒரு அறையுமாக பிரித்துக் கொண்டு அவரவர் வேலைகளை முடித்தோம். அனைவரும் தயாராவதற்குள் தரம்ஷாலா வாசலில் இருந்த ஒரு கடையில் தேநீர் குடித்தோம் – ஏன் குடித்தோம் என்று எங்களையே நொந்து கொள்ளும் அளவிறகு அந்தத் தேநீர் இருந்தது. மஹா மட்டமான ஒரு பிளாஸ்டிக் கப் வேறு – அதை சிலர் இரண்டு கப் வாங்கிக் குடிப்பதைப் பார்க்க முடிந்தது! நம்ம நாக்கு முழ நீளம் என்று நினைத்துக் கொண்டு தேநீர் குடிக்க வந்த நண்பர்களிடம் நன்றாக இல்லை என்பதைத் தெரிவிக்க அவர்களும் வேண்டாம், வேறு எங்காவது அருந்தலாம் என உள்ளே சென்றார்கள். அனைவரும் தயாரான பிறகு எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வாகனத்திற்கு வந்தோம். ஓட்டுனர் ஜோதி அதற்குள் ஒரு தூக்கம் போட்டு எழுந்து இருந்தார். 



சிறுவர்களுக்கான அழகிய உடை...
புஷ்கர் நகரத்தில்....


சுத்தமான புஷ்கர் - சுகாதாரமான புஷ்கர்...
புஷ்கர் நகரத்தில்....

வாகனத்தில் அமர்ந்து பிரஹ்ம சரோவர் சென்றோம். வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திக் கொண்டு ஜோதி இன்னும் கொஞ்சம் உறங்கச் சொல்லி பிரஹ்ம சரோவர் நோக்கி, கடை வீதி வழியே நடந்தோம். இரண்டு பக்கங்களில் கடைகள், கடைகள், கடைகள் – பல விதமான பொருட்களை விற்பனை செய்கிறார்கள் – ராஜஸ்தானி உடைகள், கத்தி, இரும்புப் பொருட்கள், மண் குடுவையில் தேநீர், இனிப்புகள் என பலவும் விற்கிறார்கள். காலை நேரத்திலேயே புஷ்கர் நகரம் சுற்றுலாப் பயணிகள்/பக்தர்கள் வருகையில் திணறிக் கொண்டிருந்தது.  கூட்டத்தோடு கூட்டமாக, மனிதர்கள் மட்டுமல்லாது, மாடுகளும் உலவும் கடை வீதியின் வழியே பிரஹ்ம சரோவர் என அழைக்கப்படும் புஷ்கரத்தினை நாங்கள் சென்றடைந்தோம். புஷ்கரத்தினை சுத்தமாக வைத்துக் கொள்வோம் என பதாகைகள் பிடித்த பள்ளி மாணவர்கள் வீதியில் வந்து கொண்டிருந்தார்கள் – திரும்பிப் போகும்போது அந்தப் பதாகைகளும் குப்பையாக!


சிறுமிகளுக்கான அழகிய உடைகள்....
புஷ்கர் நகரத்தில்....


காலை நேரத்திலேயே குழுமி இருந்த மக்கள் கூட்டம்...
புஷ்கர் நகரத்தில்....

புஷ்கரத்தில் பலரும் குளித்துக் கொண்டிருபார்கள் என்பதால் இங்கே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. என்றாலும் சிலர் தங்களது அலைபேசி மூலம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கேமராக்கள் பிடுங்கிக் கொள்ளப்படும் என எழுதி வைத்திருந்தால் பயன்படுத்தவில்லை! எதற்கு வம்பு? இந்த பிரஹ்ம சரோவர் பற்றி சில கதைகள் உண்டு.  அவற்றில் ஒன்றிரண்டை இங்கே பார்க்கலாம்! பிரஹ்ம சரோவர் எப்படி உருவானது என்பதை முதலில் பார்க்கலாம். பிரஹ்ம சரோவர் என்றும், பிரஹ்மாவுடன் சம்பந்தம் இருப்பதாகத் தோன்றினாலும், சிவபெருமானின் மூலமாக உருவானது என்ற கதையும் சொல்கிறார்கள். அந்தக் கதை….


அழகான ஆபத்து - கைப்பிடிகளுடன் கத்திகள்...
புஷ்கர் நகரத்தில்....

சதி தேவியின் மரணத்தினால் கோபம் அடைந்த சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதும், சதி தேவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அவை விழுந்த இடங்கள் அனைத்துமே சக்தி பீடங்களாகப் போற்றப்படுவதும் நாம் அறிந்த விஷயம். இப்படியான சக்தி பீடங்கள் பற்றி முந்தைய சில பயணத் தொடர்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் தனது தேவியின் மரணத்தினால் சஞ்சலம் அடைந்து, சிவபெருமான் கண்ணீர் வடித்தார் என்று கேள்விப்பட்டதுண்டா? சிவபெருமான் அப்படி வடித்த இரண்டு சொட்டுக் கண்ணீரில் ஒரு சொட்டு ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் விழுந்ததாகவும், மற்றொரு சொட்டு தற்போதைய பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாபில் உள்ள கேதாக்‌ஷா எனும் இடத்தில் விழுந்ததாகவும் சொல்கிறார்கள். புஷ்கர் நகரத்தில் விழுந்த, சிவனின் கண்ணீர் சொட்டுதான் இந்த புஷ்கரம்!


வால் வைத்த தலைப்பாகையுடன் ஒருவர்....
புஷ்கர் நகரத்தில்....

இல்லை இல்லை இந்த புஷ்கரம் உண்டானது பிரஹ்மாவினால் தான் – அதனால் தான் பிரஹ்ம சரோவர் என அழைக்கிறார்கள் என்று போகும் கதையும் உண்டு – அந்தக் கதை – படைக்கும் கடவுளான பிரஹ்மாவின் குழந்தைகளை வஜ்ரநாபா எனும் அரக்கன் தொடர்ந்து துன்புறுத்தி கொலை செய்து வர, பிரஹ்மாவிற்கு அளவில்லாத கோபம் – உன்னை என்ன செய்கிறேன் பார், என, தன்னிடத்தில் இருக்கும் நீலத் தாமரையையே ஆயுதமாக வீசி எறிய வஜ்ரநாபா இறந்து போனான் – ரொம்பவே உடல்பலமில்லாத அரக்கன் போலும் – பூவினால் அடிபட்டு இறக்க முடியுமா என்று தோன்றாமல் இல்லை! கதை என்பதால் அப்படியே கேட்டுக் கொள்வது தான் நல்லது.


விதம் விதமாய் அலங்காரம்....
புஷ்கர் நகரத்தில்....

அப்படி வீசிய நீலத் தாமரையிலிருந்து விழுந்த இதழ் ஒன்றினால் பூமி அதிர்ந்து தண்ணீர் பொங்கியது – அப்படிப் பொங்கிய தண்ணீர் தான் பெரிய சரோவராக ஆனது – அதற்கு புஷ்கர் சரோவர் எனப் பெயர் வைத்தாராம் பிரஹ்மா – புஷ்கரம் என்றும், பிரஹ்ம சரோவர் என்றும் அழைக்கப்படும் அந்த சரோவரில் பலரும் குளித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அங்கே தங்கள் முன்னோர்களுக்காக, தர்ப்பணமும், பிண்ட தானமும் செய்கிறார்கள்.  பிரஹ்ம சரோவர் உள்ளே செல்ல கிட்டத்தட்ட 52 Gகாட் எனப்படும் படித்துறைகள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர். ஒவ்வொரு படித்துறைக்கும் கதைகள் உண்டு. சரோவரைச் சுற்றி நிறைய கோவில்களும் உண்டு.  எல்லாவற்றையும் நின்று நிதானித்து, பார்க்க வேண்டும் என்றால் இரண்டு மூன்று நாட்கள் இங்கே தங்க வேண்டும்.


வெண் சாமரம் தயார்.... வீச வருவார் யாரோ?
புஷ்கர் நகரத்தில்....

பிரஹ்ம சரோவரில் குளிக்கவில்லை, தண்ணீர் எடுத்து தலையில் புரோக்ஷித்துக் கொள்ளலாம் என குழுவினர் அனைவரும் உள்ளே செல்ல, நான் செருப்புகளுக்குப் பாதுகாவலாக நின்று கொண்டிருந்தேன். அனைவரும் அங்கிருந்து வந்த பிறகு நான் உள்ளே தனியே சென்று சிறிது நேரம் நின்று புஷ்கரத்தின் அழகினையும் அதன் அழகைக் கெடுக்கும்படி சிலர் செய்யும் வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அங்கே குளிக்கலாம் எனத் தோன்றியது – அழுக்காக இருக்கிறதே என்று மனம் சொல்ல, அங்கிருந்து புறப்பட்டேன். அடுத்தது எங்கே? அடுத்த பதிவில் சொல்கிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. கத்தி படங்கள் அழகு ஜி இவைகளை வாங்கி கொண்டு தமிழ் நாட்டு பார்டர்களுக்குள் வரும்போது அனுமதிப்பார்களா ?

    தேநீர் குவளை பானை அளவில் இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமதிக்கலாம். இது வரை கொண்டு வந்ததில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. நமக்கு இரண்டு டஜன் வாள் அவசியம் இருக்கு.

      தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் பெருகி விட்டனர்.

      நீக்கு
    3. இரண்டு டஜன் வாள்கள்..... ஹாஹா....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட்... புஷ்கர் நகரம்.... மறைந்த சுனந்தா புஷ்கர் இந்த ஊர்தானோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம். சுனந்தா புஷ்கர் இந்த ஊரா? :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தேநீர் - இவ்வளவு பெரிய கோப்பைகளிலா! நீங்கள் சொல்வதிலிருந்து தேநீரும் அசுவையாக இருந்தது என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் பெரிதாகத் தோன்றுகிறது. ஒரு கப் அளவு தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நகரம் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யமானவை. அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கத்தி (குறுவாள்) படங்கள் அருமை. நகரத்தின் கசகசப்பைப் படங்கள் சொல்லுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. ராஜஸ்தானியர்களுக்கு அடர் நிறங்கள் விருப்பமென்று தெரிகிறதுபல இடங்களில் தேனீர் கோப்பைகள் யூஸ் அண்ட் த்ரோ இருந்தாலும் இத்தனை பெரிய கோப்பைகளா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோப்பைகள் படத்தில் பெரியதாகத் தோன்றுகிறது. ஒரு கப் அளவு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  7. படங்களும் விவரங்களும் அருமை.
    குவளை படத்தில் பெரிதாக தெரிகிறது சின்ன குவளைதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன குவளை தான் கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  9. படங்களும், புஷ்கர் பற்றிய கதைகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. பிரஹ்ம சரோவர் என அழைக்கப்படும் புஷ்கரத்தினை நாங்கள் சென்றடைந்தோம். புஷ்கரத்தினை சுத்தமாக வைத்துக் கொள்வோம் என பதாகைகள் பிடித்த பள்ளி மாணவர்கள் வீதியில் வந்து கொண்டிருந்தார்கள் – திரும்பிப் போகும்போது அந்தப் பதாகைகளும் குப்பையாக!
    இதுதான் இந்தியா.

    படங்களும், வர்ணனைகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தான் இந்தியா... உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  11. ராஜஸ்தான் எம்போரியக் கடைகளில் பார்த்த அத்தனைவிர்க உடௌகளும் உங்கள் பதிவில் வெங்கட்.வண்ணக்கலவை தெளித்த ஊரில் ,வெள்ளை யூனிஃபார்ம் பளிச்சென்று தெரிகிறது.

    நம் இந்தியா இதுதான். முன்பு சுற்றுலா குறைவாக இருந்தது.. மக்கள் தொகை அதிகமாக எல்லொரும் எல்லா இடங்களிலும் தூய்மை பார்த்தால்
    நன்றாகத்தான் இருக்கும். இதனால் பரவக் கூடிய வியாதிகள் எத்தனை என்று
    உணர்வார்களோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடங்களிலும் தூயமையாக இருந்தால் நல்லது தான். ஆனால் உணர்ந்து கொள்வதில்லையே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

      நீக்கு
  12. புஷ்கர் நகரம் பற்றிய தகவல்கள் அருமை ஜி. படங்களும் மிக அழகாக இருக்கின்றன. தொடர்கிறோம்

    கீதா: அக்கருத்துடன்...மண் டீ கப் செமையா இருக்கு ஜி. படங்களும் கத்தி பைகள் ட்ரெஸ் எல்லாமே அழகாக இருக்கின்றன. முதல் படம் செம...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....