சனி, 23 டிசம்பர், 2017

தலைநகரில் தமிழகக் குடிமகன்கள் - நான் செய்தது சரியா தவறா


இவர்கள், அவர்களல்ல!
படம்: இணையத்திலிருந்து....

அலுவலகத்திலிருந்து சமீபத்தில் ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டினருகே இருக்கும் ஒரு சாலையில் தொடர்ந்து அரசு நடத்தும் மூன்று சரக்கு/சாராய விற்பனை நிலையங்கள். காலை பத்து மணிக்குத் திறந்தால் இரவு ஒன்பது, ஒன்பதரை மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும் – எப்போதும் இந்தக் கடையில் மட்டும் நுகர்வோர் கூட்டம் அதிகமாகவே இருக்கும்! வாசலிலேயே சில கடைகள் – காரசாரமாக மிக்ஸர் விற்பவர்கள், ஆம்லேட் விற்பவர்கள் என அனைவருக்கும் இந்த இடம் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது. இவை போதாதென்று இக்கடைகளுக்கு அருகிலேயே அசைவ உணவு வகைகள் விற்கும் கடைகளும் உண்டு.

இப்பகுதியில் தினம் தினம் திருவிழா தான். எப்போதும் நுகர்வோர்கள் வருவார்கள் – நான்கு சக்கர/இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி வாங்கிக் கொண்டு செல்ல, சிலர் நடந்து வந்து வாங்கிக் கொண்டு செல்வார்கள் – பெரிய பெரிய பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், குப்பை பொறுக்குபவர்கள் என எல்லோருக்கும் இங்கே விற்பனை உண்டு! வாங்கும் சரக்கின் விலை மாறுபடுமே தவிர, இங்கே வாங்கப்பொடும் பொருளில் மாற்றமில்லை – இங்கே பணக்காரர், ஏழை என்ற பேதமே இல்லை! அனைவரும் ஓர் இனம் – குடிகாரர் இனம்.

பொதுவாக இங்கே சரக்கு வாங்குபவர்கள் தங்கள் அலுவலகத்திலோ, வீட்டிற்கோ சென்று சரக்கடிப்பவர்கள். மற்றவர்கள் பக்கத்திலேயே இருக்கும் ஏதாவது ஒரு சாலையில் வண்டியை நிறுத்தி சரக்கடித்து விட்டு அதே வாகனத்தில் வீடு செல்பவர்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் கூட வண்டியை ஓரமாக நிறுத்தி சரக்கடிப்பார்கள்! நம் ஊர் போல இங்கே சரக்கு விற்பனை நிலையத்திற்கு அருகே கீற்றுக் கொட்டகைகளோ, இரண்டாம் தர பார்களோ இல்லை. சாலையில் வெளிப்படையாக சரக்கு அருந்துபவர்கள் இல்லை என்றே சொல்லலாம்! பெரிய பெரிய பார்கள் உண்டு என்றாலும் அங்கேயே தான் சரக்கு வாங்க வேண்டும். இப்படி தான் நான் இங்கே பார்த்திருக்கிறேன்.

அன்றைய தினம் அலுவலகத்திலிருந்து இரவு வந்து கொண்டிருந்த போது மூன்று தமிழர்கள், பக்கத்தில் ஒரு காவல்துறை நண்பர்! தமிழர்கள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறார்கள் போலும், உதவலாம் என்ற நினைப்பில் கொஞ்சம் நின்றேன். பார்த்தால், அவர்கள் கடையில் சரக்கு வாங்கி, பக்கத்துக் கடையில் சோடாவும், பிளாஸ்டிக் டம்ப்ளர்களும் வாங்கி அங்கேயே கலந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்த போலீஸ் காரர் – அவர்களிடம் ஹிந்தியில், “பொது இடத்தில் சரக்கடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது” எனச் சொல்ல, சரக்கு அடித்துக் கொண்டிருந்த தமிழர்களில் ஒருவர் – “தமிழ் என் மூச்சு” என்பது போல, “தமிழ், தமிழ், நோ ஹிந்தி” என்று சொல்ல, அந்த காவல் காரர் ஆங்கிலத்திற்கு மாறினார்.

பொது இடத்தில் சரக்கடிப்பது குற்றம், இப்படி சரக்கடித்தால் ஒரு ஆளுக்கு 5500/- ரூபாய் அபராதம் [சட்டப்படி ரூபாய் ஐந்தாயிரம் அபராதம்!] – நீங்களோ மூன்று பேர் – அதனால் 16500/- ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் தெரியுமா? என ஹரியான்வி ஆங்கிலத்தில் அதாவது ஹிங்க்லீஷுக்கு மாறினார். இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தபோதும் அந்த தமிழர்கள் அசர வேண்டுமே, “கருமமே கண்ணாயினார்” என்பது போல சரக்கை, ரசித்து ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டிருந்த போது சரக்கு முழுவதும் முடிந்து விட, அவர்கள் போலீஸ்காரருடன் பேரம் பேசத் துவங்கினார்கள். அங்கே சரக்கு வாங்க வந்திருந்தவர்களும் சேர்ந்து கொண்டார்கள் – “போனா போகுது விடுய்யா, நம்ம ஊருக்கு வந்து சரக்கு அடிக்க வந்தவர இப்படி படுத்தறயே!” என சகக் குடிமகன் ஒருவர் வக்காலத்து வாங்க, போலீஸ்காரர் அந்த தமிழர்களை அந்தப் பக்கம் தள்ளிக் கொண்டு போனார்!

எப்படியும் கொஞ்சம் காசு கறக்காமல் விடப்போவதில்லை அந்த போலீஸ்காரர் என நானும் அங்கிருந்து நகர்ந்தேன். வேறு சமயமாக, வேறு விஷயத்தில் பிரச்சனை என்றால் நான் உதவி செய்திருக்கலாம்! இந்த விஷயத்தில் எதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அங்கிருந்து நகர்ந்தேன். ஆனாலும் மனதில் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது – “அந்த போலீஸ்காரர் நம் தமிழ்க் குடிமகன்களை ஏமாற்றி இருப்பாரோ, எவ்வளவு காசு வாங்கி இருப்பாரோ, ஹிந்தி தெரியாமல் திண்டாடிய அவர்களுக்கு நான் உதவி செய்திருக்க வேண்டுமோ?” என்றெல்லாம் எண்ண ஓட்டம்! நான் உதவி செய்யாமல் வந்தது, சரியா தவறா நீங்க சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி



20 கருத்துகள்:

  1. நீங்கள் போலீஸ்காரருக்கு உதவி செய்திருக்கவேண்டும்.

    தம கண்ணுக்குப் படவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலீஸ்காரருக்கு உதவி செய்திருக்க வேண்டும்! :))) நல்ல ஐடியா!

      தமிழ் மண வாக்கிற்கான சுட்டி கீழே சேர்த்து விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராமின் பதில்தான் சரியான பதில்:)

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  2. அந்த போலீஸ்கார்ர் உங்களுக்கும் ஒரு 5500 கேட்டிருக்கப்போகிறார். இந்த மாதிரி இடங்களில் நமக்கு என்ன வேலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல இல்லையா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அதானே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. பாண்டிச்சேரியில் ஏன் இந்த மாதிரி காட்சிகளை பார்க்க முடியவில்லை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  5. தெரியாத ஊருக்கு வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில் சரியாக
    நடக்கத் தெரியவில்லை என்றால் யாரிடம் தப்பு இருக்கிறது. நீங்கள்
    விலகினதே உத்தமம். இது போன்ற இடங்களில் நியாயம் பேசி
    பயனில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற இடங்களில் நியாயம் பேசி பலனில்லை - உண்மை தான்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  6. வந்த இடத்தை செய்யப்போகும் விஷயத்தை பற்றி தெரிந்து கொண்டு செயலில் இறங்க வேண்டும் அது அவர்கள் தப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  8. தலையிடாமல் வந்தது தான் நல்லது. அவங்க குடிபோதையில் ஏதாவது செய்து விட்டார்கள் என்றால்? எப்படியும் அவங்க செய்தது தப்புத் தானே! போலீஸ்காரர் பணம் வசூலித்தால் வசுலித்துவிட்டுப் போகட்டும். இங்கே எல்லாம் போய்ப் பேசுவதே சரி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. வெங்கட்ஜி! நீங்கள் செய்தது மிகவும் சரியே! அவங்களோ குடி போதையில். போலீஸ் காரர் உங்களையும் தவறாக நினைத்துவிட்டால்? போட்டும் போட்டும் நல்லா பணம் அழுவட்டும்...நல்ல விஷயமாக இருந்தால் நீங்கள் உதவ முடிந்தால் நல்லது இது மாதிரி விஷயத்தில் எல்லாம் நாம் கண்டுக்காம போவதே மிகவும் நல்லது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டு கொள்ளாமல் போவதே நல்லது! உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....