புதன், 28 மார்ச், 2018

குஜராத் போகலாம் வாங்க – த்வாரகாதீஷ் தரிசனமும் – இரவு உணவும்



இரு மாநில பயணம் – பகுதி – 18

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


குட்டி கிருஷ்ணரை தலையில் சுமந்து செல்லும் காட்சி....
த்வாரகா நகரில்...

Bபுஜ் நகரிலிருந்து த்வாரகா நகர் வரையிலான தூரத்தினை சுமார் ஏழரை மணி நேரத்தில் கடந்திருக்கிறோம் – இடையில் மதிய உணவுக்கான இடைவெளியும், மாலை நேர தேநீர் இடைவெளியும், பருத்தித் தோட்டத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கான இடைவெளியும் உண்டு! ஒவ்வொரு இடத்திலும் அரை மணி நேரத்திற்கு மேலாக நின்றிருப்போம் – சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து நாங்கள் த்வாரகா நகரம் சென்றடைந்த போது இரவு மணி 08.45! மதியம் 01.15 மணிக்குப் புறப்பட்டோம். த்வாரகா நகருக்கு நான் பயணிப்பது இரண்டாம் முறை. சில வருடங்களுக்கு முன்னர் பயணித்தபோது கிடைத்த அனுபவங்கள் பற்றி முன்னரே எழுதி இருக்கிறேன்.

 

த்வாரகாதீஷ் கோவில் முகப்பு.....


த்வாரகா நகரில் தான் இரவு தங்க வேண்டும் என்பதால், ஏதாவது தங்குமிடத்தில் வண்டியை நிறுத்த வேண்டும் என ஓட்டுனர் முகேஷ்-இடம் சொல்லி இருந்தோம். அவர் நேராக எங்களை அழைத்துச் சென்ற இடம் கோவில் அருகே இருந்த ”ஹோட்டல் ஸ்ரீஜி தர்ஷன்” என்ற இடம் தான். தங்குமிடம் இருக்கிறதா எனக் கேட்க, தாராளமாக இருக்கிறது. எத்தனை அறைகள் வேண்டுமெனக் கேட்டார். நாங்கள் ஐந்து பேர் என்பதால், இரண்டு அறைகள் கேட்க, அறைகளைக் காண்பித்தார். ஒரு அறையில் சுத்தம் – “ரொம்பவே சுத்தம்!” அதை வேண்டாம் எனச் சொல்லி, வேறு ஒரு அறையை எடுத்துக் கொண்டோம். எங்களுக்குக் கிடைத்த அறை நன்றாகவே இருந்தது.


த்வாரகாதீஷ் கோவில் முகப்பு - கிட்டப் பார்வை.....

”உடைமைகளை வைத்துவிட்டு, தரிசனத்திற்குக் கோவிலுக்குப் போக முடியுமா?” என்று உரிமையாளரிடம் கேட்க, ”இன்னும் பத்து-பதினைந்து நிமிடங்கள் திறந்திருக்கும், அதனால் விரைவில் செல்லுங்கள்” என்று சொன்னார். நீண்ட பயணம் செய்த களைப்பு – குளித்து விட்டுக் கோவிலுக்குச் செல்லலாம் என்றால் அதற்கு நேரம் இல்லை! சரி முகம் கழுவிக்கொண்டு செல்லலாம் என முடிவு செய்தோம். விரைவில் தயாராகி, கோவில் வாசலுக்கு நடந்து செல்ல, கோவில் திறந்திருந்தது. வேகவேகமாக உள்ளே சென்றால் நிம்மதியான தரிசனம் – அத்தனை கூட்டம் இல்லை என்பதால் நின்று நிதானமாக தரிசனம் செய்து கொண்டோம். இரவு நேரம் என்பதால் வெளியே புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள முடியாது – வெளிச்சம் அத்தனை இருக்காது! காலையில் மீண்டும் ஒரு முறை வர வேண்டும் என முடிவு செய்தோம்.


த்வாரகாதீஷ் கோவில் முன்னர் நண்பர்கள்.....

த்வாரகாதீஷ் – கோவில் பற்றி என்னுடைய முந்தைய பயணக்கட்டுரைத் தொகுப்பில் எழுதி இருக்கிறேன் – அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் கீழே…. முழுப் பதிவும் படிக்க விருப்பம் இருந்தால் – இங்கே படிக்கலாம்….

இதோ த்வாரகா நகரினுள் பிரவேசித்து விட்டோம். நேராக த்வாரகாநாதன் குடிகொண்டிருக்கும் கோவிலுக்குத் தான் செல்லப் போகிறோம். போர்பந்தர் நகரிலிருந்து காலையில் புறப்பட்டதால் சில மணி நேரத்திற்குள் இடைப்பட்ட தொலைவினை கடந்து கோவிலின் அருகே வந்து விட்டோம். வழியெங்கிலும் கடைகளும், கடைகளில் த்வாரகாநாதனை அலங்கரிக்க விற்கப்படும் பொருட்களும் நிரம்பி இருக்கிறது. மக்கள் ஸ்ரீகிருஷ்ணனை தங்களில் ஒருவராகவே நினைத்து விதம் விதமாய் அலங்கரித்து பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவ்விடத்தில் கிருஷ்ண பரமாத்மாவிற்கு கோவில் இருந்திருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கிறது என கோவில் தகவல் மையம் தெரிவிக்கிறது.  பல்வேறு கால கட்டத்தில் இக்கோவில் சில அழிவுகளை கண்டாலும் வெவ்வேறு அரசர்களாலும், மக்களாலும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது.  1903-ஆம் ஆண்டு மஹாராஜா கெய்க்வாட் அவர்கள் தங்கத்தில் கலசம் வைத்து கும்பாபிஷேகம் நடத்த, 1958-ஆம் வருடம் சங்கராச்சார்யா தலைமையில் மீண்டும் ஒரு கும்பாபிஷேகம். 1960-ஆம் ஆண்டு கோவில் குஜராத் மாநில அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகு பல்வேறு முன்னேற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

காலை 06.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரையும், மாலை நேரத்தில் 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.  அப்படி இருந்தாலும், நடுநடுவே கோவில் நடை மூடி இருக்கும். அதிக பட்சமாக காலை 08.00 மணி முதல் 09.00 மணி வரை நடை மூடி இருக்கும். இது மட்டுமல்லாது த்வாரகாநாதனுக்கு நைவேத்தியம் செய்யும் வேளைகளான ஸ்னான் [Bh]போக்[G], ஷ்ருங்கார் [Bh]போக்[G], [G]க்வால் [Bh]போக்[G], ராஜ் [Bh]போக்[G], உத்தப்பன் [Bh]போக்[G], சந்த்யா [Bh]போக்[G], ஷயன் [Bh]போக்[G], [Bh]பண்டா [Bh]போக்[G] என அவ்வப்போது பத்து பதினைந்து நிமிடங்களுக்கு நடை மூடி இருப்பார்கள்.


த்வாரகாதீஷ் கோவில் முன்னர் அடியேன்.....

நிம்மதியான தரிசனம் முடிந்து வெளியே வந்த பிறகு வயிறு சப்தம் கொடுக்க ஆரம்பித்தது! கோவில் நகரம் என்பதால் பக்தர்களுக்கு பல வகை உணவுகள் கிடைக்கிறது – என்றாலும் நாங்கள் குஜராத்தி தாலி [தட்டை தான் தாலி என்று சொல்வார்கள்!] தான் சொன்னோம்! Limited Gujarati Meals! 80 ரூபாய் மட்டுமே! பரவாயில்லை ரகம் தான். கேரள நண்பர்கள் தோசைக்கு ஆசைப்பட்டு சொல்ல, வந்தபிறகு சாப்பிட முடியாமல் திண்டாடினார்கள் – அப்படி இருந்தது அதன் சுவையும் தரமும்! நல்ல வேளை நான் குஜராத்தி தாலியே சொல்லி இருந்தேன். உணவு உண்ட பிறகு பொடிநடையாக தங்குமிடம் வந்து சேர்ந்தோம். காலையில் விரைவாக எழுந்து மீண்டும் ஒரு முறை தரிசனம் செய்ய வேண்டும் – முக்கியமாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் விரைவில் உறங்கச் சென்றோம்.

அடுத்த நாள் என்ன செய்தோம் என்பதை வரும் பதிவுகளில் சொல்கிறேன்……

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

24 கருத்துகள்:

  1. படங்கள் பழைய பதிவிலிருந்தும் எடுத்துக் போட்டிருக்கிறீர்கள் போல... கண்ணனைச் சுமந்து செல்லும் புகைப்படம் பழைய பதிவிலேயே இருக்கிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணனைச் சுமந்து செல்லும் படம் - அது மட்டுமே பழைய பதிவிலிருந்து... மற்றவை இந்தப் பயணத்தில் எடுத்தவை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படம் பார்த்த நினைவும் உங்களின் பழைய பதிவும் நினைவுக்கு வந்தது....

    அந்தந்த ஊருக்குச் செல்லும் போது அந்த ஊர் (வெஜிட்டேரியன்) சாப்பாடு சாப்பிடுவதுதான் சாலச் சிறந்தது என்பது அனுபவத்தில் உணர்ந்தது. நானல்ல என்னுடன் பயணித்தவர்களின் அனுபவத்தினால். வடக்கே சென்று இப்படி தோசை இட்லிக்கு ஆசைப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆனார்கள். நான் அந்த இடத்தில் என்ன ஃபேமஸ் என்று அல்லது பாரம்பரியம் என்று தெரிந்து கொண்டு சாப்பிட்டுப் பார்க்கும் வழக்கம்...எனவே தப்பித்துவிடுவேன்...

    தொடர்கிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சொன்ன படி ஒரு படம் மட்டுமே பழைய பதிவிலிருந்து.....

      அந்தந்த ஊர் உணவினை சாப்பிடுவதே நல்லது. நம்ம ஊர் உணவு தான் வேண்டுமென அடம் பிடித்தால் சரி வராது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. விபரங்கள் நன்று அடுத்தநாள் நிகழ்வுகளை காண ஆவல் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. உங்கள் மூலமாக மறுபடியும் ஒரு கோயில் உலா. புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா....

      நீக்கு
  5. புகைப்படங்கள் பார்க்கும் ஆவலுடன் உள்ளேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. படங்களுடன் பதிவு மிக சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  7. த்வாரகீஷ் கோவில் தரிசனம் பற்றி விவரித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு
  8. பயண அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  9. பகவானுக்குத் தான் உங்களிடம் எத்தனை பிரியம் வெங்கட்.
    இரண்டாம் தடவை கூப்பிட்டு இருக்கிறானே.
    அனுபவம் மிக சுவாரஸ்யம்.
    படங்களுக்காகக் காத்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      நீக்கு
  10. பழமையான கோவில்களை நேரில் பார்த்த உணர்வு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    த்வாரகாதீஷ் கோவில் தரிசனம் மிக அருமை. படங்களும் நன்றாக இருந்தது. தங்களுடன் நாங்களும் நிம்மதியாக தரிசித்த பேறு அடைந்தோம்..அடுத்து தொடர்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  12. அந்தப் பக்கம் போகும் வாய்ப்பு கிடைக்க வில்லை இனியும் கிடைகாது என்றே தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....