புதன், 23 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்



இரு மாநில பயணம் – பகுதி – 42

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஆஸ்ரமத்தின் நுழைவாயில்....

சபர்மதி ஆஸ்ரமம்....



அமைதியான சூழலில்...
சபர்மதி ஆஸ்ரமம்....

முதல் நாள் இரவு வந்து தங்குமிடத்தில் படுத்ததும் உறங்கி விட்டோம். அடுத்த நாள் காலை எழுந்த போது மணி 7-க்கு மேல் ஆகியிருந்தது. அனைவரும் குளித்து தயாரான பிறகு தங்குமிடத்தின் உள்ளேயே இருந்த உணவகத்திற்குச் சென்றோம். இந்த தங்குமிடத்தில் [ஹோட்டல் க்ரிஸ்டல்] காலை உணவும், WIFI-யும் Complimentary என்பதால் தனியாக அதற்குக் கட்டணம் தேவையில்லை – தங்குமிடக் கட்டணத்திலேயே சேர்த்திருப்பார்கள் – சும்மாவா கொடுக்க முடியும்! இதெல்லாம் ஒரு வித வியாபார தந்திரம். Buffet உணவு தான் – வேண்டியதை எடுத்துச் சாப்பிடலாம் –பரோட்டா, தயிர், ஊறுகாய், மிக்ஸ் சப்ஜி, ப்ரெட்-பட்டர் டோஸ்ட், கார்ன் ஃப்ளேக்ஸ் [பாலுடன்], மற்றும் தேநீர் – வேண்டியதை எடுத்துச் சாப்பிடலாம். அவரவர்களுக்குத் தேவையானவற்றை போட்டு எடுத்துக் கொண்டு அமர்ந்து சாப்பிட்டோம்.



விநோபா - மீரா குடிர்....

சபர்மதி ஆஸ்ரமம்....
 

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நண்பர் குருவிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு – எங்கே தங்கி இருக்கிறீர்கள், நான் சில நிமிடங்களில் அங்கே வந்து விடுகிறேன் என்று சொன்னார். காலை உணவு முடித்துக் கொண்டு தயாராக இருக்க, மீண்டும் அழைப்பு குருவிடமிருந்து – அவசர வேலை வந்து விட்டதால், மாலைதான் சந்திக்க முடியும் – மாலையில் அழைக்கிறேன் என்று சொல்ல, நாங்கள் ஓட்டுனர் முகேஷ்-ஐ அழைத்தோம். அவர் வீட்டில் உண்டு உறங்கி புத்துணர்வோடு வந்து சேர்ந்தார். அவரை அழைத்துக் கொண்டு நாங்கள் நேராகச் சென்ற இடம் சபர்மதி ஆஸ்ரமம் – இது என்ன இடம் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை – இருந்தாலும் சொல்லி விடுகிறேன் - காந்திஜி அமைத்த சபர்மதி ஆஸ்ரமம் தான் நாங்கள் சென்றோம்.


ஹ்ருதய் குஞ்ச்....

சபர்மதி ஆஸ்ரமம்....
 

சபர்மதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட இந்த ஆஸ்ரமம் தன்னுள் பல விஷயங்களை பூட்டி வைத்திருக்கிறது – இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட பல விஷயங்கள் இங்கே நடந்திருக்கின்றன. ஆஸ்ரமம் இன்றைக்கும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே – அவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம் – மகன் நிவாஸ் – மகன்லால் காந்தி – காந்திஜியின் சொந்தம் இவர் – இந்த ஆஸ்ரமம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர். இராட்டையில் புதிய விதங்களை உருவாக்கி காதி உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். இவர் இறந்த போது மஹாத்மா காந்தி – நான் விதவையாகி விட்டேன் என்று சொல்லி இருக்கிறாராம்!


காந்திஜி பயன்படுத்திய பொருட்கள்...

சபர்மதி ஆஸ்ரமம்....
 

ஹ்ருதய் குஞ்ச்: ஆஸ்ரமத்தில் காந்திஜி தங்கிய குடில். இங்கே தான் 1918-ஆம் வருடம் முதல் 1930-ஆம் வருடம் வரை தங்கி இருந்தார் காந்திஜி! இங்கே தான் அவர் தேசியத் தலைவர்களையும் வேற்று நாட்டு தலைவர்களையும் சந்த்தித்தார். 1930-ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் அடையும் வரை இங்கே திரும்புவதில்லை என்ற சபதத்துடன் சென்றாராம். குடில் என்று சொன்னாலும், இதில் மொத்தம் ஆறு அறைகள்! காந்திஜியின் அறை, கஸ்தூரிபா காந்தியின் அறை, விருந்தினர் அறை, சமையல் அறை, பொருட்கள் வைக்கும் அறை மற்றும் அலுவலகம். காந்திஜி பயன்படுத்திய பல பொருட்கள் – சில அசல், சில நகல் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.


இராட்டை.... வேறு வடிவம்

சபர்மதி ஆஸ்ரமம்....
 

வினோபா-மீரா குடிர்: வினோபா பாவே இந்த இடத்தில் தான் 1918-ஆம் வருடம் முதல் 1921-ஆம் வருடம் வரை தங்கியிருந்தார். Bபூதான் அந்தோலன் இங்கிருந்து தான் ஆரம்பிக்கப்பட்டது அவரால். அதன் பிறகு ஆங்கிலேய அட்மைரல் ஒருவரின் மகளான Madeline Slade – காந்தியால் மீரா என அழைக்கப்பட்டவர் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இங்கேயே 1925 முதல் 1933-ஆம் ஆண்டு வரை தங்கி ஆஸ்ரமத்தின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.


சபர்மதி ஆற்றங்கரையும் ஆறும்....

சபர்மதி ஆஸ்ரமம்....
 

காந்தி நினைவு அருங்காட்சியகம்: இந்தியாவின் முதல் பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர் லால் நேரு அவர்களால் 1963-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது இந்த அருங்காட்சியகம். இதற்குள் மூன்று பிரிவுகள் – Gandhi in Ahmedabad Gallery, Painting Gallery மற்றும் My Life is My Message Gallery – கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம்.


காந்திஜியின் கையெழுத்து வெவ்வேறு மொழிகளில்...

சபர்மதி ஆஸ்ரமம்....
 

நிறைய விஷயங்கள் இங்கே பார்க்கலாம். அமைதியான சூழலில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த ஆஸ்ரமத்தில் இன்றைக்கும் பலவித பயிற்சிகள், நடவடிக்கைகள் இருக்கின்றன. ஒரு பெரிய நூலகமும் இங்கே உண்டு. ஒவ்வொன்றாகப் பார்த்து வரலாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் இராட்டை கூட சுற்றலாம்! ஒரு பெண்மணி அமர்ந்து இராட்டையைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். நீங்கள் விரும்பினால் அவர் உங்களுக்கும் சொல்லித் தருவார். இப்படியான காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.


காந்திஜியின் வித்தியாசமான சிற்பம்...

சபர்மதி ஆஸ்ரமம்....



மோஹனிலிருந்து மஹாத்மா.....
சபர்மதி ஆஸ்ரமம்....


இங்கே கிடைத்த வேறு சில அனுபவங்களும், இன்னும் சில விஷயங்களும் அடுத்த பதிவில் சொல்கிறேன். ஒரே பதிவில் அனைத்து விஷயங்களையும் அடக்கமுடியவில்லை!

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து....

18 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். சபர்மதி ஆஸ்ரம் பற்றி படித்துக்கொண்டேன். சமீபத்தில் நண்பர் நீலகண்டன் தினமணி கதிரில் எழுதிய காந்தியின் செயலாளர் பற்றிய வரலாறு நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      தினமணி கதிரில் வந்த கட்டுரை படிக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நாங்க போனது 94 ஆம் வருடம். எனக்கு அகமதாபாதில் ஹிந்தித் தேர்வுக்கான சென்டர் அங்குள்ள கேந்திரிய வித்யாலயாவில் போட்டிருந்தார்கள். அதுக்குக்குடும்பத்தோடு ஜாம்நகரிலிருந்து கிளம்பிப் போய்ப் பரிட்சை முடிந்ததும் ஊரையும் சுத்திப் பார்த்தோம். சபர்மதி ஆற்றங்கரை அப்போது பார்த்ததற்கும் இப்போ 2018 மார்ச்சில் பார்த்ததற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இம்முறை சுற்றிப் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - ஆற்றங்கரை இப்போது வெகு அழகாக மாற்றி இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. இவைகள் காந்திஜி அவர்கள் உபயோகப்படுத்திய கையெழுத்தா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்திஜி பல மொழிகளில் கையெழுத்துப் போட்டதாகத் தெரிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. மிக அருமை..

    இருநாள் முன்பு தான் travel xp என்னும் சேனலில் பார்த்தோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் செந்தில் குமார் அவர்களின் யூ ட்யூப் சேனல் பெயரும் அது தான். அதிலா பார்த்தீர்கள்?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  5. அப்பா, அம்மா போன மாசம்தான் போய் வந்தாங்க. படங்களை பார்த்தேன். அதன் விவரங்களை இங்க தெரிஞ்சுக்கிட்டேன்.

    பகிர்வுக்கு நன்றிண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க எப்போ போகப் போறீங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  6. படங்களும் விவரங்களும் அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. சபர்மதி ஆஸ்ரமம் பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை. காந்திஜியின் கை எழுத்தா அது?!!

    சபர்மதி ஆறு மிக அழகாக இருக்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் காந்திஜியின் கையெழுத்து தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தேசப்பிதா காந்திஜியின் சபர்மதி ஆசிரம படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. ஆசிரமம் பற்றிய விபரங்கள் அனைத்தும் விரிவாக தெரிந்து கொண்டேன். சபர்மதி ஆறு மிகவம் அழகாக உள்ளது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆற்றங்கரையை வெகு அழகாக வைத்திருக்கிறார்கள் இப்போது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  9. இந்தியாவில் நான் பார்க்க ஆசைப்பட்ட இடங்களில் ஒன்றான இந்த ஆசிரமத்திற்கு பதிவு மூலமாக அழைத்துச்சென்றமைக்கு நன்றி. பல மொழிகளில் காந்தியின் கையொப்பம், வியந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் ஐயா. நிறைய விஷயங்கள் அங்கே உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....