புதன், 3 ஜூலை, 2019

தாயுமானவன் - வாசிப்பனுபவம்


பரமசிவம் என்கிற பரமு, பிரபல மோட்டார் கம்பெனியில் பதினேழு வருடங்களாக வேலை செய்து வருகிறான். ஆரம்பத்தில் டயர்கள் மாற்றும் வேலை, பொருட்களை சரி பார்க்கும் வேலை என்று ஆர்வமுடன் வேலை செய்து இன்று தலைமை ஃபோர்மேனாக இருக்கிறான். யூனியன் லீடராகவும் மாறி உடன் வேலை பார்க்கும் ஊழியர்களின் நலனுக்காக பாடுபடுகிறான். தனிப்பட்ட முறையிலும் உதவுகிறான்.


பரமுவின் மனைவி சரஸ்வதி என்கிற சரசு. திருமணத்துக்கு முன்பு பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணம் நிச்சயம் ஆனவுடன் “பெண்கள் வேலை செய்து விட்டு, வீட்டுக்குச் சோர்ந்து வருவது கூடாது என்ற வருங்கால கணவனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வேலையை விட்டு விட்டாள். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் என கண்ணுக்கு நிறைவான குழந்தைகள். பெண் மூத்தவள். கணவனும் மனைவியும் அன்னியோன்யமாக குடித்தனம் நடத்துகிறார்கள்.

யூனியனில் விரிசல் ஏற்பட்டு, விற்பனைக்கு அனுப்பிய வண்டிகளில் ஏதோ ஒன்று கவனிக்கப்படாமல் பிரச்சனையாகி விட தலைமையிடத்திலிருந்து கேள்வி மேல் கேள்வி, தவறு பரமுவுடையது இல்லையென்றாலும், கெளரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் ராஜினாமா செய்து விட்டு வந்து விடுகிறான். குடும்பமும் தலைவன் மனது நோகாமல் நடந்து கொள்கிறார்கள். குழந்தைகளும் குடும்ப கஷ்டங்களை பக்குவமாக புரிந்து கொள்கின்றன. வேறு வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தும் யூனியனில் இருந்த காரணத்தை காட்டி தர மறுக்கிறார்கள். வெளிநாட்டு வாய்ப்புக்காக பணத்தை செலவழித்து ஏமாந்து விடுகிறான்.

இருக்கறதையெல்லாம் விற்று சாப்பிட ஆரம்பிக்க, மனைவி தான் முதலில் வேலை செய்த இடத்திலேயே பணியாற்றுகிறேன் என்று சொல்ல, ”நான் இருக்கற போது நீ எதுக்கு போய் கஷ்டப்படணும் என மறுக்க, சரசு பிடிவாதம் பிடித்து செல்கிறாள். ”இயந்திரங்களோடயே இருந்த நான் இப்போ என்ன செய்யட்டும் என பரமு விழிக்க ”என் ராசா நீங்க குழந்தைகளை பார்த்துக்கோங்க, கொஞ்ச நாள் நான் சுமை தூக்கறேன். என்கிறாள். அப்பாவிடம் எந்த வேலையும் சொல்லி சங்கடப்பட வைக்கக்கூடாது. நீங்களே செய்ய கத்துக்கோங்க என குழந்தைகளுக்கு சொல்லிச் செல்கிறாள். தந்தையின் உதவிகளை மறுத்த குழந்தைகள், பின்பு தந்தையாக செய்ய ஆச்சரியப்படுகிறார்கள். மகளிடமும் சில கற்றுக் கொள்கிறான் பரமு. மனைவியிடமும் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். முதலில் உப்பே இல்லாத கட்டி கட்டியான உப்புமா, ஃபில்டரில் டிகாஷன் எது என்று தெரியாத கீழ் பாத்திரத்தில் உள்ளதை கொட்டி விட்டு மேலே பொடியோடு உள்ளதை விட்டு கலப்பது, என்று செய்தவன் பின்பு ஒவ்வொன்றாக கற்றுத் தேறுகிறான்.

மனைவி முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்து விட்டு கணவனது உதவியை மறுத்தும், அவள் நகர்ந்ததும், அவளின் புடவையை காயப் போடுகையிலும், கொல்லையில் பாத்திரங்களை போட்டு தேய்க்கும் போதும் நடக்கும் கேலிகளையும், பிரச்சனைகளையும் சமாளிக்கிறான். பணிச்சுமையாலும், குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும் திட்டிய சரசுவோடு ஊடல் கொள்ளும் பரமு, குழந்தைகளை ஒரு வார்த்தை கூட சொல்ல விடாத தந்தையாக இருக்கிறான்.

இந்த நிலையில் மகளின் பள்ளியிலிருந்து ப்யூன் வந்து மகள் மயக்கம் போட்டு விழுந்ததாகவும் தாயை உடனே வரும்படி ஆசிரியர் சொல்லி விட்டதாகவும் சொல்ல, பதறியடித்து ஓடுகிறான் பரமு. பள்ளியில் மகள் பெரிய மனுஷியாகி விட்டதாக சொல்ல, ஒரு நிமிடம் மகளிடமிருந்து தான் அந்நியப்பட்டதாக உணர்கிறான். தந்தையுடன் அனுப்ப மறுக்கும் ஆசிரியரிடம், தான் தந்தையுடன் போக விரும்புவதாக சொல்லி வெட்கத்துடன் வரும் மகளை ஆச்சரியத்துடன் பார்த்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறான்.

என்ன செய்வது என்று தெரியவில்லை? நேராக லேடி டாக்டரிடம் அழைத்துச் சென்று தகவலை சொல்லி மகளுக்கு சொல்லித் தரும்படி சொல்கிறான். (இந்த இடத்தில் கண்ணீர் துளிர்த்தது!)

மாலையில் வீடு திரும்பிய மனைவியிடம் தகவலைச் சொல்லிவிட்டு, வேண்டிய பொருட்களை அவள் சொல்லும் முன் கையிலிருக்கும் மோதிரத்தை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு வாங்க கிளம்பும் தகப்பன். இனி மகளை தனியே விட்டு விட்டு வெளியே கூட போகக் கூடாது என மனதுக்குள் நினைத்து கொண்டு காபந்து பண்ணுகிறான்.

ஒரு நாள் எல்லோருமாக வெளியே போய் விட்டு வீடு திரும்பும் வேளையில், இவர்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனை காத்திருந்தது. பழுதான ஒரு காருடன் தவித்து கொண்டிருந்த ஒருவருக்கு பழுதுகளை சரி பார்த்து வேண்டிய உதவி செய்து தந்து உதவுகிறான் பரமு. அவன் குடும்பம் மொத்தமும் ஒத்துழைக்கிறது. இவர்களுக்கு பிரதி உபகாரமாக வீடு வரை வந்து விடும் அவர் குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்டு அவர் பரமுவுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். ஆறுமாதம் பம்பாயிலும், ஆறுமாதம் டெல்லியிலும் பணியாற்றியவுடன் சென்னையிலிலேயே பணியாற்றலாம் என சொல்ல மனைவியின் சுமையை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு பம்பாய்க்கு பறக்கிறான் பரமு. இனி அவர்கள் வாழ்வில் வசந்த காலம் தான்.


இது தான் நான் சமீபத்தில் வாசித்த பாலகுமாரன் அவர்களின் ”தாயுமானவன் கதைச்சுருக்கம். மனதை நெகிழ வைத்த கதை. அங்கங்கே கண்ணீர் துளியும் துளிர்த்தது. ”கல்லூரிப் பூக்கள் என்ற பதிவில் சொல்லியிருந்தது போல் பரணில் இருந்து எடுத்த என்னவரின் புத்தகங்களை ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் உடனேயே அவரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். இந்த கதை தொலைக்காட்சியில் நெடுந்தொடராக வந்திருந்ததாகவும் சொன்னார்.

இந்த புத்தகத்தில் உள்ள ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாவன, மோட்டார் துறையை ஆராய்ச்சி செய்தது போல் கதையெங்கும் அவ்வளவு நுணுக்கமான விஷயங்கள். படிக்கும் போது 1997லிருந்து 2000 வரை சென்று வந்தது போல் இருந்தது. ஆம்! அப்போ நான் இயந்திரவியல் துறை மாணவி. படிக்கும், பார்க்கும், வரையும் அனைத்துமே இயந்திரங்கள் தான். நெடுநாட்களுக்கு பிறகு நினைவூட்டி கொள்ளவும் உதவியது.

அதே போல் பரமு என்கிற இந்த கதாபாத்திரம் சட்டென்று நம் மனதில் பதிந்து விடுகிறார். இப்படியொரு கணவனும், தகப்பனும் அமைந்து விட்டால் உலகில் வேறு என்ன வேண்டும்! பெண்ணுக்கு எங்கிருந்து தீங்கு நிகழும்.

விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

ஆதி வெங்கட்

பின் குறிப்பு: என் கோவை2தில்லி வலைப்பூவில் எழுதிய பகிர்வு இது. இப்போது மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம் ஆதி.

    கதையும் தெரிந்துவிட்டதே!

    என் உறவினர் ஒரு பெண்ணும் இதை சிலாகித்துச் சொல்லியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாஜி, பாலகுமாரன் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை தாயுமானவன். முன்பெல்லாம் நிறைய படிக்க வாய்ப்பிருந்தது. இப்பொழுது படிப்பதும், எழுதுவதும் குறைந்து விட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. குட்மார்னிங். இந்தக் கதை நான் படித்திருக்கிறேன். என்னுடைய கலெக்ஷனிலும் இருக்கிறது. நீங்கள் சொல்லும் இடத்துக்கு முதல் வரியிலேயே (தந்தையுடன் செல்வதாகக் கூறி மகள் வருவது) கண்கலங்கி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      உண்மை. இக்கதையில் பல இடங்கள் மனதுக்கு நெருக்கமானவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பாலகுமாரன் வேலை செய்த துறை. எனவே நுண்ணிய விவரங்கள் இந்தக் கதையில் அவருக்கு தண்ணி பட்டபாடு! நாளை மறுநாள் அவருக்குப் பிறந்தநாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரன் வேலை செய்த துறை. இரும்புக் குதிரைகள் நூலில் நிறையவே சொல்லி இருப்பார். அவரது பல நாவல்களைத் தேடித் தேடி படித்தது ஒரு காலம். பின் நாட்களில் எழுதிய நாவல்கள் பிடிக்காமல் போனது ஸ்ரீராம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பாடல் வரிகளிலிருந்து கதைத்தலைப்பை வைத்து நிறைய கதைகள் எழுதி இருக்கிறார் பாலகுமாரன். இதுவும் அதில் ஒன்று. இசை ரசிகர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் - பல தலைப்புகள் சினிமா பாடல்களிலிருந்து தான் அவரது கதைகளில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பாலகுமாரனின் தாயுமானவன் நூல் பற்றிய திறமையான, உணர்வோடு கூடிய விமர்சனம்
    நன்று
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. தொடராக விகடனில் வந்தபோது வாசித்திருக்கிறேன். அருமையான பார்வை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. படிக்க தூண்டும் விமர்சனம் ....அருமை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. மனதில் நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது கதையின் சுருக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயுமானவன் நல்ல கதை கில்லர்ஜி. முடிந்தால் முழுவதும் படித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. விகடனில் தொடராக வந்த பொழுதும் படித்தேன். புத்தகமாகவும் வைத்திருக்கிறேன். இதில் தொழிற்சங்க தலைவராக இருக்கும் வரை நன்றாக இருந்த கதை, கதாநாயகன் அடுப்படியில் புகுந்து, காபி போட்டு, சாம்பார் வைக்க ஆரம்பித்ததும் தரம் குறைகிறது என்று விமர்சிக்கப்பட்டார். இதை தொலைக்காட்சி தொடராக பாலகுமாரனே இயக்கினார். சந்திரசேகர் நடித்தார் என்று நினைக்கிறன். அப்போது நான் மஸ்கட்டில் இருந்ததால் பார்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடராக வந்த போது நான் படித்ததில்லை. தொலைக்காட்சியில் சீரியலாக வந்தது - சந்திரசேகர் தான் நடித்தார். சில நாட்கள் பார்த்திருக்கிறேன். முழுவதும் பார்த்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

      நீக்கு
  12. இதுவரை நாங்கள் படிக்காத நூலை, நீங்கள் படித்து பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைத்தால் படித்துப் பாருங்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. பாலகுமாரன் கதைகளில் எனக்குப் பிடித்த சில கதைகளில் இதுவும் ஒன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வெங்கட்டை ரொம்ப நாளாகக் காணலையே...ரொம்ப பிஸியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு போட வேண்டியது தான்! :) அலுவலக்ப் பணி, வேறு சில பணிகள் என கொஞ்சம் பிசி. வலையுலகம் பக்கம் வந்து பத்து நாளுக்கு மேல் ஆச்சு! கடந்த இரண்டு மாதங்களாகவே தொடர்ந்து எழுதவோ, படிக்கவோ இயலாத சூழல். தங்களது விசாரிப்புக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....