புதன், 5 செப்டம்பர், 2012

புதுதில்லி 2 திருச்சி




புதுதில்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணிக்குக் கிளம்பும் தமிழ்நாடு சம்பர்க்கிராந்தி வண்டி 06.50க்கே நடை மேடைக்குள் (platform) வந்தது.  மயிலாடுதுறையிலிருந்து அமர்நாத் சென்று திரும்பிக் கொண்டிருக்கும் கோஷ்டியால் S1 கோச் நிரம்பி வழிந்தது. மொத்தம் 40 பேர் கொண்ட குழுவில் ஆண்கள் மட்டுமே!

நிலையத்துக்கு வந்ததிலிருந்தேஅண்ணே, என் பேக் எங்கண்ணே?”, “வாளி எடுத்து வைச்சீங்களா?”, ”ட்ரையின்ல இட்லி சாம்பார் கிடைக்குமாண்ணே?” ”சீட்டுக்கட்டு எடுத்தீங்களா? சென்னை வரை பொழுது போகணுமில்ல!” என்ற பலவித  குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. வெளியே இருக்கும் ரயில்வேயின் Comesum உணவகத்திலிருந்து ஆட்கள் வந்துபூரி-மசாலா, இட்லி-வடை-சாம்பார்என்று குரல் கொடுத்தார்களோ இல்லையோ, பலாப் பழத்தை மொய்க்கும் ஈக்கள் போல குரல் கொடுத்தவர்களை பயணிகள் கூட்டம் மொய்த்தது.


[பட உதவி: கூகிள்]

அமர்நாத் பயணத்தில் பனி லிங்கத்தினைக் கண்டு இவர்கள் பரவசம் அடைந்தார்களோ இல்லையோ, வட இந்தியாவில் இட்லி-வடை-சாம்பார் கிடைத்ததால் பெரும் பரவசமடைந்தனர்.  எல்லோரும் இட்லி-வடை உண்டு களித்திருக்க, சம்பர்க்கிராந்தி வடக்கிற்கும் தெற்குக்கும் சம்பந்தம் ஏற்படுத்த புறப்பட்டது.  அப்பொழுதிலிருந்தே மயிலாடுதுறை மக்களின் ஆட்டமும் தொடங்கியதுவேறென்ன, சீட்டாட்டம் தான்.  காசு வைத்து ஆடுவதால் சத்தமும் கோச்சினை வேகமாய் நிரப்பியது.

சிலர் சீட்டாடிக்கொண்டிருக்க, வேறு சிலரோ அமர்நாத் அனுபவத்தினை, “உள்ளே போனவுடனே, அட என்னப்பா, இதைப் பார்க்கவா, இவ்வளவு கஷ்டப்பட்டோம்னு நினைச்சேன்.  மேலும் முன்னேறிப் பார்த்தபோது தான் கண்கொள்ளாக் காட்சி கண்டு பரவசம் அடைந்தேன்எனப் பேசிக்கொண்டிருந்தார்கள்

அடுத்து ஆரம்பித்தது குளியல் படலம்.

வாளி எடுத்து வைச்சீங்களா?” என்று வண்டியில் ஏறியவுடன் கேட்ட கேள்வியின் முக்கியத்துவம் இப்போதுதான் புரிபட்டது.  72 பேர் பயணம் செய்யும் ஒரு கோச்சில் 4 கழிப்பறைகள்அதில் ஒன்று Western.  நான்கிலும் நான்கு பேர் குளித்தபடியே இருக்கிறார்கள் பயணம் முழுவதும்.  ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிப்பார்கள் அதுவும் பயணத்தின் போது?

இந்த வண்டி கடக்கும் மாநிலங்களில் ஓரிடத்தில் தான் நிற்கும். தில்லியில் கிளம்பினால் அடுத்து மதியம் 01.20- க்கு ஜான்சியில்தான். அங்கு மீண்டும் தண்ணீர் நிரப்புவார்கள்.  வண்டி ஜான்சி சென்று சேர்வதற்குள்ளாகவே கோச்சில் தண்ணீர் தட்டுப்பாடு.  இன்னும் பலர் குளிக்கக் காத்திருக்கிறார்கள். ஆங்காங்கே தண்ணீர் ஏற்றுவதும் இவர்கள் காலி செய்வதுமாக தொடர்ந்தது பயணம்.  மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு செய்கிறோமே என்ற எண்ணம் சிறிதளவுமில்லை.


[பட உதவி: கூகிள்]


இப்படிப்பட்ட நீண்ட பயணங்களில் குளிப்பதற்கு வசதி இருப்பதில்லை. எப்போது வீடு செல்வோம் என்ற எண்ணத்துடன் தான் வந்து கொண்டிருப்பார்கள் பயணிகள்.  மாறாக இவர்கள்  ஜாலியாக வந்து கொண்டிருந்தார்கள். பொதுவாகவே குறைவான லக்கேஜ், நிறைவான பயணம் என்றிருந்தால் சுகம் தான்.  இவர்களே 40 பேர். ஆனா கொண்டு வந்த லக்கேஜ் 150-க்கும் மேல்.  சென்னை எழும்பூர் நிலையத்தில் இவர்களது பொருட்களை இறக்கி வைத்தபோது ஏதோ Warehouse-ல் இருக்கும் உணர்வு.

தமிழகத்தில் ஏதோ பனிக்கட்டி மழை பொழிவது போல தடியான கம்பளிகள், குழந்தைகளுக்கு உல்லன் ஜாக்கெட்டுகள் என குளிர்கால உடைகளைத்தான் அதிகம் அள்ளிக்கொண்டு வந்திருந்தனர்.  ஒருவர் எல்லோருக்கும் ஒரு படி மேலாக, 6 பிளாஸ்டிக் சேர் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்.  தமிழகத்தில் பிளாஸ்டிக் சேர் கிடைப்பதில்லையோ?

பயணம் சுகமானதோர் ஒரு அனுபவமாக இருப்பது நம்முடன் பயணிக்கும் சக பயணிகளைப் பொறுத்திருக்கிறது.  எத்தனை நேரம்தான் புத்தகம் படிப்பது, சாப்பிடுவது.  நீண்ட பயண நேரத்தினைப் போக்க வேண்டாமா. அதுவும் தனியாகச் செல்லும்போது சக பயணிகளையும் அவர்கள் செய்யும் செயல்களையும் கவனிப்பது ஒரு இனிய பொழுதுபோக்கு.  இவர்களை நான் கவனித்து வெறுப்பானது தான் மிச்சம்.  

இன்னும் சில கேரக்டர்களைப் பற்றி பிறிதொரு பகிர்வில்... அங்கே உங்களைச் சந்திக்கும்வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 கருத்துகள்:

  1. இன்னும் விரிவாய் எழுதி இருக்கலாமோ

    பதிலளிநீக்கு
  2. குறைந்த சுமை கூடுதல் சுகம்
    எவ்வளவுதான் விளம்பரம் செய்தாலும்
    அதைப் படிப்பவர்கள் அனைவரும் அது
    அவர்களுக்கில்லை என
    நினைத்துக் கொள்வார்களோ என்னவோ ?
    அடுத்த பதிவுக்கான லீட் அடுத்த பதிவை
    ஆவலோடு எதிர்பார்க்கவைத்துப்போகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குறைந்த சுமை கூடுதல் சுகம்
      எவ்வளவுதான் விளம்பரம் செய்தாலும்
      அதைப் படிப்பவர்கள் அனைவரும் அது
      அவர்களுக்கில்லை என
      நினைத்துக் கொள்வார்களோ என்னவோ ?//

      அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது ஜி!

      தங்களது வருகைக்கும் சுவையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு

  3. சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  4. சுவையான பயணக்கட்டுரை. பாராட்டுக்கள் வெங்கட்ஜி. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

      நீக்கு
  5. ஒரு பக்கம் ரயில்வேதுறை பயணிகளுக்கு வசதி செய்யவில்லை என்று திட்டுவோம். மறுபுறம் இது போல misuse செய்வோம்.

    ’மக்கள் எவ்வழி அரசும் அவ்வழி’

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பக்கமும் மோசம் தான் சீனு. ரெண்டுமே ஒவர்... :(

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

      நீக்கு
  6. ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க

    தலைப்பை பார்த்ததும் எனக்கும் நினைவுக்கு வந்தது உங்க மனைவி தான். கோவை டு டில்லி ஆக இருந்தவர் இப்போது டில்லி டு திருச்சி ஆகியதை தான் சொல்கிறீர்களோ என நினைத்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறு விஷயம்.... :))

      வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி மோகன்.

      சென்னைக்கு வரும் 19 இரவு வருகிறேன். சந்திப்போம்....

      நீக்கு
  7. பயணம் சுகமானதோர் ஒரு அனுபவமாக இருப்பது நம்முடன்
    பயணிக்கும் சக பயணிகளைப் பொறுத்திருக்கிறது.

    பயணம் இனிப்பதற்கும் , கசப்பதற்கும் காரணமாகிவிடுகிறார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.

      நீக்கு
  8. தில்லி - சென்னை ரயில்ப் பயண வாழ்க்கையில் இதெல்லாம் சாதா ரணமப்பா!

    (ஆனாலும் அழகான இட்லி, சட்னி படத்தப் போட்டு வயித்தெரிச்சலை - இல்லை இல்லை - வயித்துப் பசியைக் கிளப்பியிருக்க வேண்டாம்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணாச்சி. இத்தனை வருடமா இதைத்தானே பார்த்துட்டு இருக்கோம்! :))

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

      நீக்கு
  9. // இன்னும் சில கேரக்டர்களைப் பற்றி பிறிதொரு பகிர்வில்... அங்கே உங்களைச் சந்திக்கும்வரை…//
    தங்களின் அடுத்த பதிவில் மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிகமிக நன்றி தமிழ் இளங்கோ ஜி!.

      நீக்கு
  10. முதல் முறை அயோத்திக்குச் சென்றபோது மிகவும் மோசமான அனுபவம். ஒரு பயணச்சீட்டில் நான்கு பேர் பயணம் செய்ததைப் பார்த்து அசந்து போனோம். லக்னோ ரயில் நிலையம் முழுக்க 'துப்பு' ரவாக இருந்தது! ஒவ்வொரு மூலையும் பான் கலரில்......!

    புது தில்லியில் பார்த்து வியந்த இடம் 'அக்ஷர்தாம்'.

    இப்போதெல்லாம் வட இந்தியப் பயணம் என்றால் ரொம்ப யோசிக்கிறோம்.

    உங்களுக்குப் பழகி இருக்கும் இல்லையா?

    பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது வெங்கட். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //லக்னோ ரயில் நிலையம் முழுக்க 'துப்பு' ரவாக இருந்தது! ஒவ்வொரு மூலையும் பான் கலரில்......!// இப்போதும் துப்போ துப்பு ரவு தான்!

      //உங்களுக்குப் பழகி இருக்கும் இல்லையா?//

      பழகிவிட்டதம்மா...

      தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. ஆமாம். ஒவ்வொரு முறையும் இது போன்ற அனுபவங்கள் கிடைத்தபடியே.....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

      நீக்கு
  12. கும்பலாக கூட்டுப் பிரயாணம் செய்பவர்கள் இப்படிதான் ஒருவர் செய்தமாதிறியே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கம்பார்ட்மென்டையே அவர்களது ஆக்கிக் கொண்டு விடுவார்கள். தனி ஆஸாமிகளுக்கு ஏதோ திருட்டுத்தனமாக நாம் பிரயாணம் செய்வதுபோலாக்கிவிடுவார்கள். இதெல்லாம் எனது பழைய அனுபவம்தான். உங்கள் கட்டுரையைப் பார்த்தால் இந்த விஷயங்கள் எப்போதும் எவர் கிரீன்தான்போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகை?

      உண்மை தான் காமாட்சி ஜி! கடந்த இருபத்தியொரு வருடங்களாக தில்லிக்கும் தமிழகத்திற்கும் அவ்வப்போது பயணிக்கிறேன். இதுபோன்ற அனுபவங்கள் தான் பெரும்பாலும்... பழகிவிட்டது. ஆனாலும் சில சமயங்களில் கஷ்டம் தானே....

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சி ஜி!

      நீக்கு
  13. அன்பு நண்பரே !

    தாங்களின் புது தில்லி 2 திருச்சி பயணம் - பகிர்வு மிகவும் அருமை. இதைபோல பலருக்கும் பல அனுபவங்கள் உண்டு ஆனால் அதனை எல்லோராலும் எழுதுவது கடினம். தாங்களின் பகிர்வை படித்தவுடன் நான் ஸ்கூல் பையனாக இருக்கும் போது திருச்சி வானொலியில் time adjustmentக்காக ஒரு பாட்டு வரும் " மூட்டை முடிச்சை குறையுங்கள் வண்டி பயணம் சுகமாகும் - குடும்ப அளவை குறையுங்கள் வாழ்க்கை பயணம் சுகமாகும்" அது எவ்வளவு உண்மை என்பது இப்போது புரிகிறது.

    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //" மூட்டை முடிச்சை குறையுங்கள் வண்டி பயணம் சுகமாகும் - குடும்ப அளவை குறையுங்கள் வாழ்க்கை பயணம் சுகமாகும்" //

      அட இது நல்ல பாட்டா இருக்கே... பழைய கால விளம்பரங்கள் யாராவது சேர்த்து வைத்திருக்கிறார்களா தெரியவில்லை...

      தங்களது வருகைக்கும் சுவையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  14. // மொத்தம் 40 பேர் கொண்ட குழுவில் ஆண்கள் மட்டுமே!//

    " ச்...ச்...ச்... ரொம்ப பாவமா இருக்குங்க...
    அது சரி. !!
    ஒரு வேளை , எல்லாமே இந்தக்குழுவில்.....! "

    " சீ ! இந்தக் கேள்வி கேட்கற வயசா இது !
    வாய மூடிக்கினு கம்னு கட கிழமே !! "

    "இல்ல... ஒரு வேளை .. எல்லாமே இந்தக்குழுவில்......பெ..."

    " யோவ் பெரிசு ! செத்த சும்மா இருக்க மாட்டே !!"

    " இல்லீங்கய்யா ! அப்ப இந்த பதிவோட தலைப்பு எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேங்க .."

    " பெரிசு !! நீ படா ஆளா கீது !! அப்படி என்னய்யா தலைப்பு இருக்கும்னு நீ நினைக்கிற சொல்லு."

    " சொல்லிப்பூடுவேன்.."

    " சொல்லுங்களேன்..."

    " காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். "

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... என்னமா யோசிக்கிறீங்க சுப்பு ஜி! :))

      எல்லோரும் காதலிப்பவர்களை வீட்டில் விட்டு வந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் - :)))

      உங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  15. அருமையான நினைவலைகளை கொடுத்திருக்கீங்க, வாழ்த்துகள் & நன்றி!

    ***

    டிரெயினில் ஏன் கழிவறையில் மக் கூட வைப்பதில்லை? 3 - ஏசியில் இருப்பது ஸ்லீப்பரில் இருப்பதில்லை :(

    ***

    குளிக்கறதை விடுங்க, சில பேர் மொபைலில் பாட்டு வைத்துக்கொண்டு சத்தமாக ஸ்பீக்கரில் கேட்பாங்க பாருங்க.. லோக்கல் சைனா மொபைல் மாடல்.. டப்பாங்குத்து பாடல்.. கொரகொரன்னு சத்தம்போட்டு எல்லார் மூடையும் கெடுக்கும்.. நமது மக்களுக்கு ப்ரைவேசி, அடுத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பது, இடைஞ்சல் செய்யாமல் இருப்பது போன்றவை இன்னும் நிறைய சிறிய வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்ங்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சில பேர் மொபைலில் பாட்டு வைத்துக்கொண்டு சத்தமாக ஸ்பீக்கரில் கேட்பாங்க பாருங்க..//

      உண்மை பழூர் கார்த்தி. பாட்டுக்குப் பாட்டு போட்டி வேற நடக்கும்! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. பயணத்தின்போது இது மாதிரியான மனிதர்களைக் கவனிப்பதே சுவாரஸ்யமான அனுபவம்தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பயணத்தின்போது இது மாதிரியான மனிதர்களைக் கவனிப்பதே சுவாரஸ்யமான அனுபவம்தான்..//

      அதானே நமக்கு டைம்பாஸ்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  17. ஒவ்வொரு பயணத்திலும் ஒரு வித்த்யாசமான அனுபவம்தான்.பகிர்ந்தவிதம் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை குட்டன்... தினம் தினம் ஒரு புதிய அனுபவம்.....

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  18. ஒருமுறை குர்லா - கல்கத்தா என்ற பாடாவதி வண்டியில் குர்லா முதல் கல்கத்தா வரை நாற்பது மணி நேரப்பயணம். அதில் வண்டி மத்ய பிரதேஷ் முதல் பீகார் தாண்டும் வரை ஒரே அடாவடி தான்! முக்கா வாசி பேர் டிக்கட் வாங்காதவர் என்று சொல்லவே தேவையில்லை. நான் பாத்ரூம் சென்று திரும்புவதற்குள் என் இருக்கையில் நான்குபேர் உட்கார்ந்திருந்தார்கள்! கேட்டதற்கு, 'ஆப் பி பய்டியே!' என்றார்கள்! கொடுமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வண்டி மத்ய பிரதேஷ் முதல் பீகார் தாண்டும் வரை ஒரே அடாவடி தான்! முக்கா வாசி பேர் டிக்கட் வாங்காதவர் என்று சொல்லவே தேவையில்லை. நான் பாத்ரூம் சென்று திரும்புவதற்குள் என் இருக்கையில் நான்குபேர் உட்கார்ந்திருந்தார்கள்! கேட்டதற்கு, 'ஆப் பி பய்டியே!' என்றார்கள்! //

      வடக்கில் இது நடப்பது சர்வ சாதாரணம். எழுந்து வந்து திரும்பி பார்த்தால் நமக்கே குழப்பம் வரும் - இது நம்ம சீட்தானா :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bandhu ஜி!

      நீக்கு
  19. பயணக் கட்டுரை அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ரயில் பயணங்களில் தேவையான சுமையை மட்டும் எடுத்து சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும், அதிகப்படி சுமை மகிழ்ச்சியை கெடுக்கும் சகபயணிகளுக்கும் இடைஞ்சல். தண்ணீர் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும் ரயில் பயணங்களில்.
    நல்ல கட்டுரை வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  21. தமிழகத்தில் பிளாஸ்டிக் சேர் கிடைப்பதில்லையோ?//:))))

    உள்ளூர்த் திருவிழாவிலும் தொலைதூர‌ ஆன்மீக‌ப் ப‌ய‌ண‌த்திலும் த‌த்த‌ம் அடுத்த‌ நாள் தேவையொன்றையே வாங்கி ம‌கிழும் ம‌னோநிலை! எங்கு சுற்றியும் ப‌க்குவ‌ம‌டையாத‌ ம‌ன‌சின் சுமையையும் ச‌ம‌ப்ப‌டுத்துவ‌தில்லை இவ‌ர்க‌ள்.

    பதிலளிநீக்கு
  22. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

    வெளியூரிலிருந்து எதையாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு!... என்ன செய்வது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....