புதன், 6 டிசம்பர், 2017

சுக் எனும் ஊறுகாய் – வித்தியாசமாக ஒரு பீன்ஸ் - அருங்காட்சியகம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 16

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


வித்தியாசமான ஒரு பீன்ஸ்!
இதன் பெயர் லுங்டூ.... வித்தியாசமா இருக்குல்ல!


மாயமானை ராமன் துரத்திச் சென்ற காட்சி!
சம்பா ஓவியமாக....

லக்ஷ்மி நாராயண் மந்திரில் இருந்து புறப்பட்டு chசம்பா நகரின் பிரதான வீதி வழியே நடந்து கொண்டிருந்த போது, ஒரு கடையின் பதாகை நிற்க வைத்தது.  CHசம்பா நகர் பற்றி சொல்லும் போது மூன்று விஷயங்களைச் சொல்வது இவர்களது வழக்கம்.  சுக் என அழைக்கப்படும் மிளகாய் ஊறுகாய், சம்பா ஓவியங்கள் மற்றும் சம்பாவின் செருப்பு – நாங்கள் பார்த்த கடையின் பதாகையில் சுக் விற்பனை பற்றி எழுதி இருக்க நின்று விட்டோம். இந்த chசுக் எப்படிச் செய்வது என்பது பற்றி எனது பக்கத்தில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் வசதிக்காக இங்கே அதன் இணைப்பு மீண்டும் தந்திருக்கிறேன்.



அருங்காட்சியகத்தில் ஒரு ஆயுதம் - காட்சிக்கு... 

விஷ்ணுவின் சிலை ஒன்று....


இசைக்கருவிகள் - பார்வைக்கு...

சாதம், சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் இந்த [ch]சுக்[kh] வைத்து சாப்பிடலாம்.  ஹிமாச்சலப் பிரதேசத்தின் [ch]சம்பா மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது அனைத்து உணவகங்களிலும் இந்த [ch]சுக்[kh] தருவது வழக்கம். அங்கே சாப்பிட்டபோது பிடித்திருக்கவே கடையில் கிடைத்த இந்த CHசுக் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். சில நிமிடங்களில் சாலையோர கடை ஒன்றில் பார்த்த காய்கறி வித்தியாசமாக இருந்தது – பெயர் லுங்டூ! - பீன்ஸ் வகைகளில் ஒன்று என்றும் உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம் எனச் சொன்னார் அந்த வியாபாரி. மேலே நூல் நூலாக, பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. அரை கிலோ வாங்கிக் கொண்டோம். தில்லி திரும்பியதும் சமைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்கியது! காகிதப் பைகளில் மடித்துக் கொடுத்தார் அந்த கிராமத்து வியாபாரி. அதையும் வாங்கிக் கொண்டு இன்னும் நடக்க நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்தது. அந்த இடம்…..


க்ருஷ்ணருக்கும் ருக்மனுக்கு நடந்த யுத்தம்...
சம்பா ஓவியமாக....


சிற்பங்கள் - ஒரு தொடராக....

அந்த இடம் – Bhuri Singh Museum! 1908-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம். வாயிற்பகுதியில் இருந்த வெள்ளை புத்தர் சிலை வெகு அழகு. அப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த ராஜா புரி சிங் அவர்கள் தன்னுடைய சேமிப்பில் இருந்த அனைத்து பொக்கிஷங்களையும் இந்த அருங்காட்சியகத்திற்கு தந்து விட்டாராம். CHசம்பா பகுதியில் இருந்த கலை, ஓவியங்கள், சிற்பங்கள் என கிட்டத்தட்ட 8500 அரிய பொருட்களை இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். மலைவாழ் மக்களின் ஓவியங்கள், சிற்பங்கள், தாமிர, வெள்ளி பாத்திரங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க பத்திரங்கள், நாணயங்கள், பழைய புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள், நகைகள், மரத்தில் குடைந்து செய்யப்பட்ட சிலைகள், துணி வகைகள், வீரர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் என இங்கே வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஏராளம். பார்க்கப் பார்க்க வியப்பூட்டும் பல விஷயங்கள் இங்கே உண்டு. 


ராமனும் லக்ஷ்மணனும் ஜடாயுவிற்கு இறுதி காரியங்கள் செய்வது....
சம்பா ஓவியமாக....


மஹிஷாசுரமர்த்தினி சிற்பமாக...

மொத்தம் ஏழு பகுதிகளாகப் பிரித்து பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். புகழ்பெற்ற chசம்பா ஓவியங்கள் இருக்கும் பகுதியை விட்டு விலக மனதே வரவில்லை. நுண்ணியமாக வரையப்பட்ட ஓவியங்களில் சரித்திர காட்சிகளும், ராமாயண மஹாபாரத காட்சிகளும் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. சிறு கைகுட்டையில் வரையப்பட்ட ஓவியங்களும் இங்கே பார்க்க முடிந்தது.  நீறூற்றுகளில் பயன்படுத்தப்பட்ட பலகைகளில் கூட சிறப்பான கலை வடிவத்தை பயன்படுத்தி இருப்பதையும் இங்கே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். பழங்காலத்தில் பயன்படுத்திய இசைக்கருவிகள் கூட இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் ஏழு பகுதிகளையும் பார்த்து வந்தால் பல வருடங்களுக்கு முன் சென்று வந்த உணர்வு.  எல்லாவற்றையும் பார்த்து, பிடித்த சில ஓவியங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.


கருடன் - வெண்கலச் சிலையாக!


நீறூற்றில் வைக்கப்படும் பலகைகளிலும் சிற்பங்கள்...

புகழ்பெற்ற CHசம்பா ஓவியங்களை படம் பிடித்து, அவற்றை முன்னரே ஒரு முறை உங்களுடன் ஞாயிற்றுக் கிழமையில் புகைப்பட உலாவாக பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஓவியங்கள் ஹாலிடே நியூஸ் மாத இதழிலும் வெளி வந்தது.  முந்தைய பதிவினை பார்க்காதவர்கள் வசதிக்காக இங்கேயும்….



கழுத்தணி ஒன்று....


வனவாசம் முடிந்து இராமன் திரும்பும் காட்சி...
சம்பா ஓவியமாக.....

அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் ஒரு சிறிய அறை – அங்கே தான் நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். அங்கேயே ஒரு விற்பனை நிலையமும் இருக்கிறது. உள்ளே பார்த்த ஓவியங்களின் புகைப்படங்களை தபால் அட்டைகளாகவும், A4 அளவு பிரதிகளாகவும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். தற்போதைய ஓவியக் கலைஞர்கள், கைக்குட்டைகளில் வரைந்த chசம்பா ஓவியங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.  ஒரு கைக்குட்டையின் விலை – அதிகமில்லை – ஆயிரம் ரூபாய் மட்டுமே! – ரொம்பவே அழகா இருக்கு எனப் பாராட்டி நகர்ந்தேன். நண்பர் சில புகைப்படங்களை வாங்கிக் கொண்டார். அவருக்கு ஓவியங்கள் மீது அலாதி ஈடுபாடு உண்டு. எங்கே சென்றாலும் ஓவியங்களை வாங்கி விடுவார் – வீட்டில் சுவர்களில் ஃப்ரேம் செய்து மாட்டி வைப்பது அவருக்கு வழக்கம். 


அருங்காட்சியகத்தின் வாயிலில் இருந்த புத்தர் சிலை....


எமதர்ம ராஜாவின் இடத்தில்....
சம்பா ஓவியமாக!

அருங்காட்சியகத்தின் வாயிலில் இருந்த புத்தர் சிலைக்கு அருகே நிறைய பூஞ்செடிகளும் உண்டு. அச்செடிகளில் பூத்துக் குலுங்கிய வண்ண வண்ண பூக்களையும் படம் எடுத்துக் கொண்டு, எங்கள் ஓட்டுனரை அழைத்தோம். எங்களை விட்ட இடத்திற்கு வர வேண்டாம் எனச் சொல்லி, அருங்காட்சியகத்தின் வாயிலுக்கு வரச் சொல்ல, அவர் வரும் வரை மேலும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  ஓட்டுனரும் வந்து சேர, சம்பாவிலிருந்து எங்கள் அடுத்த இலக்கை நோக்கி புறப்பட்டோம். சம்பாவிலேயே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் உண்டென்றாலும், நாங்கள் செல்லும் அடுத்த இடத்தில் தான் இரவு தங்க வேண்டும் அங்கே விரைந்து சென்று, வசதியான தங்குமிடத்தினை தேட வேண்டும். அடுத்த இடம் நோக்கி பயணித்தோம் – அந்த இடம் மிகவும் ரம்மியமான இடம்… என்ன இடம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

23 கருத்துகள்:

  1. ஓவியங்கள் நன்றாய் இருக்கின்றன. சுக் பற்றி என்ன பழைய பதிவு என்று க்ளிக்கி (அதை தனி ஜன்னலில் திறக்கும்படி அமைப்பது உத்தமம். நானும் சமயங்களில் இங்கேயே திறக்கும்படி வைத்துவிடுவேன். பின்னர் மாற்றிக் கொள்வேன்!) சென்று பார்த்து வந்தேன். அந்த ஊரின் மூன்று சிறப்புகள் பற்றிச் சொல்லி, இரண்டு சிறப்புகள் படம் மட்டுமே கொடுத்திருக்கிறீர்கள்!!

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது சிறப்பை படம் எடுக்க வில்லை! :)

      லிங்க் தனி ஜன்னலில் திறக்கும்படி இப்போது மாற்றிவிட்டேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அந்த பீன்ஸ் கூட அப்புறம் சமைத்து பதிவு ஒரு போட்டீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீன்ஸ் சமைத்த போது படம் எடுத்துக் கொள்ளாததால் பதிவு போட வில்லை ஸ்ரீராம்....

      நீக்கு
  3. ஓவியங்கள் அருமை வெங்கலச்சிலையின் வேலைப்பாட்டை ரசித்தேன் ஜி
    சில படங்கள் எனக்கு இணையம் பிரச்சனை காரணமாக திறக்கவில்லை மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!

      நீக்கு
  6. சம்பா ஓவியங்கள்...வெகு அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  7. மனங்கவரும் சம்பா ஓவியங்களுடன் பதிவு அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. வெங்கட்ஜி படங்கள் வெகு சிறப்பு. ஓவியங்கள் சிற்பங்கள் என்று எல்லாமுமே மிக அழகு. தொடர்கிறோம்

    கீதா: ஜி துளசியின் கருத்துடன், படங்கள் எலலமே அழகு. அந்த நெக்லஸ் செமையா இருக்கு. பீன்ஸ் முன்பே ஹிமாச்சல் தொடர்ல படம் போட்டிருந்தீங்க...சுக் ரெசிப்பியும் சொல்லியிருந்தீங்க. அப்பவே குறித்தும் கொண்டுவிட்டேன் செய்து பார்த்து சொல்லறென்நு சொல்லி...செய்ய நினைத்து விடுபட்ட ஒன்று. இப்போ கண்டிப்பா செய்துடுவேன்...

    அப்போவே கேக்க நினைத்து விட்டுப் போச்சு ஜி ஒரு கப் என்பது என்ன அளவு? ஏனென்றால் அதற்கு ஏற்றாற் போலத்தான் மற்ற அளவும் இருக்கணும்...டீ கப் அளவா?
    ரைஸ் குக்கர் கப் அளவா? அல்லது 200 மில்லி அல்லது 200 க்ராம் அளவு என்று கேக் செய்ய எல்லாம் பயன்படுத்தறது உண்டு இல்லையா அந்தக் கப் அளவா? சும்மா உத்தேசமா சொன்னா போதும் ஜி...நீங்கள் செய்துருந்தா இல்லை ஆதி செய்திருந்தால்...
    மிக்க நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கப் அளவு - உத்தேசமாகத் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. இங்கு ஒரு பன்னம் வகையைச் சேர்ந்த குட்டிக் குட்டி மரம் வளரும் தன்பாட்டில், அதன் நடுக்குருத்து இப்படித்தான் சுருண்டு சுருண்டு இருக்கும்.. அட்டை சுருண்டிருப்பதைப்போல.. அதுவாக்கும் என நினைச்சேன்ன்:)) பீன்ஸ் ஐ.

    பதிவு ரசித்துப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.

      நீக்கு
  10. சம்பா ஓவியங்கள் ரசித்தேன் சுக் பற்றி படிக்கணும் லுங்டூ பார்ப்பதர்கு பெரிய தன்டை சுருட்டி வைத்தது போல் இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  11. படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. அருமையான பதிவு. சுக் பற்றிப் படிக்க வேண்டும். ரத்த அழுத்தம் கன்னா பின்னவென்று ஏறுவதில் நிறைய நல்ல செய்திகளை விட்டுவிடுகிறேன். மன்னிக்கணும்
    வெங்கட். ஓவியங்களின் அழகும், நுண்ணிய வேலைப்பாடுகளும் மனசைக் கொள்ளை அடிக்கின்றன. லுங்க்டு எப்படி செய்தீர்கள் என்று சொல்லவும்.நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....