திங்கள், 26 மார்ச், 2018

குஜராத் போகலாம் வாங்க – புஜ் – த்வாரகாதீஷ் நெடுஞ்சாலையில் – மதிய உணவு



இரு மாநில பயணம் – பகுதி – 17

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை....
புகைபிடிக்கும் பெரியவர் - ரயில்வே க்ராஸிங் ஒன்றில் காத்திருந்தபோது.....

Bபுஜ் நகரில் இருக்கும் ப்ராக்g மஹால் மற்றும் ஆய்னா மஹால் பார்த்த பிறகு எங்கே போகவேண்டும் என ஓட்டுனர் முகேஷ்-இடம் கேட்க, அவர் இங்கே ஒரு பெரிய, பழமையான ஸ்வாமி நாராயண் மந்திர் இருக்கிறது – அங்கே போகலாம் என்று சொன்னார். சரி ஸ்வாமி நாராயண் மந்திர் பார்த்து விட்டுப் போகலாம் என்றால் நீண்ட நேரமெடுக்கும் என்றும் சொல்கிறார் முகேஷ். எங்களுக்கு அன்றைய இரவுக்குள் த்வாரகா செல்லும் திட்டம் இருந்தது. சரி கோவில் வாசல் வரை செல்வோம், அங்கே சென்று முடிவு செய்து கொள்ளலாம் என முகேஷிடம் புறப்படச் சொன்னோம். ஸ்வாமிநாராயண் Sect என்று தற்போது வழங்கப்படும் இயக்கத்தினை உருவாக்கிய ஸ்வாமிநாராயண் பகவான் அவர்களால் அமைக்கப்பட்ட ஆறு கோவில்களில் ஒன்று இந்த Bபுஜ் ஸ்வாமிநாராயண் மந்திர்.



Bபுஜ் ஸ்வாமி நாராயண் மந்திர்.....




Bபுஜ் ஸ்வாமி நாராயண் மந்திர்....
படம் - அவர்களது தளத்திலிருந்து....


1823-ஆம் வருடத்தில் அவரால் நிர்மாணம் செய்யப்பட்ட கோவில், Bபுஜ் நிலநடுக்கத்தில் சேதமடைய, அதன் பிறகு புதிதாகக் கட்டிய கோவில் தான் இப்போது இருப்பது. பிரம்மாண்டமான கோவில்! இப்போது இந்த ஸ்வாமிநாராயண் இயக்கம் உலகின் பல பாகங்களிலும் ஸ்வாமிநாராயண் கோவில்கள் கட்டி இருக்கிறார்கள் – அக்ஷர்தாம் என்ற பெயரில் இருக்கும் கோவில்கள் உங்களுக்கும் தெரிந்திருக்கும். Bபுஜ் கோவிலும் பிரம்மாண்டமான ஒன்று தான். உள்ளே சென்று பார்க்க வேண்டாம், வெளியிலிருந்து புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு புறப்படலாம் என கோவில் வளாகத்திற்குச் சென்று புகைப்ப்டங்கள் எடுத்துக் கொண்ட பிறகு புறப்பட்டோம்.  கோவில் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவை பார்க்க விருப்பமிருப்பின் அவர்களது இணைய முகவரி இங்கே…..   


பயணித்த பாதை.....

Bபுஜ் நகரிலிருந்து நாங்கள் பயணப்பட இருந்த த்வாரகா நகரம் சுமார் 400 கிலோமீட்டர். சற்றேறக்குறைய எட்டு மணி நேரம் ஆகலாம் – நிறுத்தாமல் சென்றால்! ஆனால் வழியில் சாப்பிடவும், இயற்கை உபாதைகளுக்கும் நிறுத்த வேண்டுமே! கூடவே ஓட்டுனர் முகேஷுக்கும், வாகனத்திற்கும் ஓய்வும் தர வேண்டும். நாங்கள் கோவில் வாயிலிலிருந்து புறப்பட்ட நேரம் மதியம் 01.15! அதனால் கோவிலுக்குள் செல்லாமல் புறப்பட்டுவிட்டோம். சாலைவழிப் பயணம் எனக்குப் பிடித்தமான ஒன்று. எப்போதும் ஓட்டுனர் அருகே தான் எனக்கு இருக்கை! உயர்ந்த மனிதன் என்பதால், கால்களை நீட்டிக்கொள்ள வசதியானது இந்த இருக்கை தான்! கூடவே பயணிக்கும்போது பார்க்கும் காட்சிகளைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் இந்த இருக்கை தான் வசதி!


ஆடு மேய்க்கும் கண்ணே...  நீ போக வேண்டாம் சொன்னேன்!.....
நெடுஞ்சாலைக் காட்சிகள்....

காலையில் விசாமோவில் சாப்பிட்டது. மதியம் இரண்டு மணியாகவே, வயிறு சபிக்க ஆரம்பித்தது. ஓட்டுனர் முகேஷிடம் உணவகத்தில் நிறுத்தச் சொல்ல, Bபச்சாவ் எனும் இடத்தில் இருந்த சாலை வழி உணவகமான ஹோட்டல் ஆஷீஷ் என்ற உணவகத்தில் நிறுத்தினார். குஜராத்தி தாலி – ஆளொன்றுக்கு நூறு ரூபாய்! கொடுத்த காசுக்கு பரவாயில்லை – என்ன கொஞ்சம் காரம் தான் அதிகம். ஹிந்தி படங்களில், வில்லனிடம் மாட்டிக்கொண்ட கதாநாயகி ”முஜே Bபச்சாவ்” என்று கதற, அந்த கதறல் கேட்டு, பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்த கதாநாயகன் பாய்ந்து வருவாரே, அப்படி கத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை – ஊர் பெயரே Bபச்சாவ்! குஜராத் சாலைவழி உணவகங்கள் நன்றாகவே இருக்கின்றன. உணவு உண்ட பிறகு பயணத்தினைத் தொடர்ந்தோம்.


தடையில்லா மின்சாரம் வழங்க காற்றாலைகள்.....
நெடுஞ்சாலைக் காட்சிகள்....


இந்த வண்டி, பெரியவர் - இரண்டில் யாருக்கு வயது அதிகம்!.....
நெடுஞ்சாலைக் காட்சிகள்....


உருட்டுக் கட்டைகள்....


உணவகம், சிறு கடைகளில் பார்த்த ஒரு விஷயம் உறுத்திக் கொண்டே இருந்தது. பெரும்பாலான இடங்களில் மரத்தில் உருட்டுக் கட்டைகள் – இரண்டு பக்கங்களிலும் இரும்பு/வெண்கலப் பூண்கள் போட்டு, நடுநடுவே வெண்கலம் பதிக்கப்பட்டு விற்பனைக்கு இருந்தது. எதற்கு இப்படி விற்பனை செய்கிறார்கள் – சாதாரண Walking Stick போல இல்லையே என்ற சந்தேகம். ஓட்டுனர் முகேஷ்-இடம் கேட்க விடை கிடைத்தது. நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவருமே தங்களது வண்டியில் இப்படி உருட்டுக் கட்டைகளை வைத்திருப்பது வழக்கம். வழியில் ஏதாவது பிரச்சனை, விபத்து என்றால், பாதுகாப்புக்கு வைத்திருப்பது வழக்கம். இல்லை தகராறு என்றால் அடிக்க வசதியாக இருக்கும் என்கிறார். ஓட்டுனர் முகேஷ் வண்டியிலும் அப்படி ஒரு கட்டை காலடியில் கிடந்தது! ”சொழட்டி சொழட்டி அடிப்பேன்னு” வீரப் பிரதாபம் வேறு! வன்முறை – இதிலிருந்து எப்போது விடுதலை!



உப்பு வாங்கலையோ உப்பு.....
நெடுஞ்சாலைக் காட்சிகள்....




காது மடலுக்குள் தோடு!.....
நெடுஞ்சாலைக் காட்சிகள்....

. 
இந்தப் பக்கங்களில் ஆட்டோவினை ”டீட்டிக்கோலா” என்றும் அழைக்கிறார்கள். புதிய பெயர். பயணத்தின் நடுநடுவே ஓட்டுனர் முகேஷிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்கள் இப்படியானவை நிறையவே உண்டு.  இந்தப் பிரயாணத்தின் ஆரம்பத்திலேயே நாங்கள் சென்றது, Demonetisation முடிந்த உடனேயே என்று எழுதி இருந்தேன். அதனால் விளைந்த நன்மையாக, நாங்கள் எங்கேயும் டோல் கட்டணம் கட்டவில்லை. வாகன எண்ணை மட்டும் பதிவு செய்து கொண்டு வாகனங்களை மேலே பயணிக்க அனுமதித்தார்கள். இப்படி நிறைய சேமிப்பு! அந்தப் பயணம் முழுவதுமே நாங்கள் டோல் கட்டணம் கட்டவில்லை! இல்லையென்றால் அந்தப் பயணத்தில் டோல் கட்டுவதற்கே நிறைய செலவாகியிருக்கும்! அதுவும் நீண்ட நெடிய பயணங்கள் என்பதால் டோல் எண்ணிக்கை அதிகம்!


குடும்பத்தோடு அடுத்த ஊருக்குச் செல்லும் நாடோடிகள்.....

நெடுஞ்சாலைக் காட்சிகள்....


பருத்தி தோட்டங்கள்.....
நெடுஞ்சாலைக் காட்சிகள்....


இந்தப் பயணத்தில் பார்த்த இன்னுமொரு விஷயம், சாலையோரங்களில் இருந்த பருத்தி விவசாயம். குஜராத் மாநிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவது அதிகம் எனத் தெரியும். போலவே பருத்தியும் நிறையவே பயிரிடுகிறார்கள். ஒரு பருத்தித் தோட்டத்தின் அருகே வாகனத்தினை நிறுத்தி சில பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். கேட்பதற்கு யாருமே இல்லை என்பதால் கேட்காமலேயே நிலத்தில் இறங்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். “பருத்தி எடுக்கையிலே என்ன பல நாளும் பார்த்த மச்சான்!” பாட்டு ஏனோ சம்பந்தமில்லாமல் மனதுக்குள் வந்து போனது!  

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

42 கருத்துகள்:

  1. என்ன நடுவுல ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று இரவு காரணம் சொல்லி ஒரு பதிவு எழுதி இருக்கேன் பாருங்க ஸ்ரீராம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. பார்த்து, படித்து, கருத்திட்டு விட்டேன் வெங்கட்....

      நீக்கு
    3. மீள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஸ்வாமி நாராயண் மந்திர பார்க்க சர்க்கரை பொம்மை மாதிரி இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளி சமயத்தில் இங்கே கோவில் மாதிரியும் சர்க்கரை பொம்மை கிடைக்கும். நீங்கள் சொன்னதும் நினைவுக்கு வந்தது. நிஜத்தில் பிரம்மாண்டம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பச்சாவ் வரிகளை ரசித்தேன். ஆடு மேய்க்கும் கண்ணே.. ஹா... ஹா... ஹா..

    பதிலளிநீக்கு
  4. தோடு தவறுதலாக காதுக்குள் சிக்கிக் கொண்ட மாதிரி இருக்கிறது! டோல் கட்டணம் செலுத்தாத சேமிப்பு - நல்ல தகவல்.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதுக்குள் சிக்கிக் கொண்ட மாதிரி ! ஆமாம். காது மடலுக்குப் பின்னால் காண்பிக்கச் சொல்லி பார்த்தேன்! வெளியே திருகு இருக்கிறதா எனப் பார்க்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வெங்கட்ஜி...பதிவு பார்த்துவிட்டேன்..நிதானமாக வாசிக்க வேண்டும்...இன்று கொஞ்சம் பிஸி..மதியம் வருகிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே... முடிந்த போது வந்து வாசியுங்கள் கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சுவாரசியமான தகவல்கள்.மற்ற பகுதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக படித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படியுங்கள் முரளிதரன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. பதிவை ரசித்தேன். அதிலும் நான் புகைப்படங்களை, அதிலும் மனிதரின் படங்களை ரசிப்பவன். அவர்கள் முகத்தைப் பார்ப்பதற்கு, அவர்களுக்கும் தமிழர்களுக்கும்தான் எவ்வளவு வேறுபாடு? அந்தப் பூண் கைப்பிடியைக் காணவில்லையே.

    தொடர்ந்து பயணிக்கிறேன். (உருத்திக் - உறுத்திக்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூண் போட்ட கைத்தடி - இப்போது படம் சேர்த்திருக்கிறேன்.

      உறுத்திக் - மாற்றி விட்டேன்... தவறைச் சுட்டியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை...அவ்வாறே படிக்க படிக்க இன்பம் நிறைவு வரை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    நலமா? நெடுஞ்சாலை காட்சிகளும் அதற்கேற்ற வர்ணனை விமர்சனங்களும் அருமை. ஸ்வாமி நாராயணன் தரிசனம் (படங்கள்) நன்று பயணம் தொடரட்டும நாங்களும் கூடவே . தொடர்கிறொம் நன்றி

    தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என் வலைத்தளம் வந்தால் மகிழ்வடைவேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம்.... உங்கள் பதிவுகளைப் படிக்க வேண்டும். சில நாட்களாக கணினியில் பிரச்சனை. நேற்று தான் திரும்பியது! உங்கள் வலைத்தளத்திற்கும் வருவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  13. பச்சாவ்!! ஹா ஹா ஹா ஹா அதைப்பற்றி எழுதியிருந்ததை ரசித்தேன் ஜி...

    சூரியநாராயணன் கோயில் அக்ஷர்தாம் ஆமாம் சமீபத்தில் அமெரிக்காவில் கூட இருப்பது வாட்சப்பில் வந்தது....பிரம்மாண்டம் என்றால் பிரம்மாண்டம்...இழைத்திருக்கிறார்கள்...எங்கிருந்து பணம் வருது என்று தெரியவில்லை...

    படங்களருமை....நீங்கள் எடுக்கும் மனிதர்களின் படங்கள் செமையா இருக்குஜி...லைட்டிங்க் எல்லாமே....

    .காதுமடலில் தோடு வினோதமாக இருக்கிறது...ஆட்டோ அங்கு அழைக்கபப்டும் பெயரும் புதியது...

    //கூடவே பயணிக்கும்போது பார்க்கும் காட்சிகளைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் இந்த இருக்கை தான் வசதி!// ஆம் வெங்கட்ஜி எனக்கும் முன் இருக்கைதான் பிடிக்கும்..படம் எடுக்கவும் சௌகர்யமாக இருக்கும்..ஆனால் சில சமயங்களில் தான் கிடைக்கும்.

    அருமையான பயணம் தொடர்கிறோம் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கிருந்து பணம் வருது என்று தெரியவில்லை! :)))) பேங்கிலிருந்து தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  14. அமெரிக்காவில் ஹாலிவுட் அருகில் அமைந்து இருக்கும் ஸ்வாமி நாராயண் மந்திர் பார்த்தோம். லாஸ்ஏஞ்சல்ஸ் அருகில் மூன்று இடத்தில் இருக்கிறது என்றார்கள்.

    அக்ஷர்தாம் பார்த்து இருக்கிறேன்.

    ஆட்டுக்கு அடையாளம் வைக்க அதன் உடம்பில் கலரா அல்லது அதும் ஹோலி கொண்டாடி இருக்கா?
    சாலைக்காட்சி படங்கள் அழகு.
    காதுமடலுக்குள் தோடு அங்கு இருபாலர்களும் அணிவார்கள் தானே?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படம் எடுத்தது நவம்பர் மாதத்தில் மா.... அதனால் ஹோலி கொண்டாடி இருக்க வாய்ப்பில்லை. அடையாளமாகத் தான் இருக்க வேண்டும்.

      காதுமடலுக்குள் தோடு - ஆண்கள் அணிவார்கள். எப்பொழுதும் போல பெண்கள் - காது முழுவதும், எண்ணிக்கை அதிகமாக இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  15. படங்களே பதிவாகவும்,பதிவுகளே படங்களாயும்
    விரிந்திருக்கிற காட்சிகள் வாழ்க்கை அழகு,,,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

      நீக்கு
  16. சில ஆண்டுகளுக்கு முன் அக்‌ஷர்தம்கோவிலில் தீவிர வதிகள் தாக்குதல் நடத்தியது நினைவுக்கு வந்ததுஅது என்ன செக்ட் வைணவர்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த தாக்குதல் நடந்தது வேறு ஒரு இடத்தில்! நான் இங்கே பகிர்ந்திருப்பது Bபுஜ் கோவில். நிறைய இடங்களில் அக்ஷர்தாம் இருக்கின்றது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. //குஜராத் போகலாம் வாங்க//

    ரிக்கெட் அனுப்புங்கோ வாறோம்.. அதுவும் பிஸ்னஸ் கிளாஸ் ஆ புக் பண்ணுங்கோ:)..

    அழகான மந்திர்.

    அதென்னது குதிரையா? என்னா உயரம்.. அதிலே ஒரு குடும்பமே சவாரி போகிறார்களே.. ஏன் அங்கு பஸ் வான் இல்லையோ?..

    அவை செம்மறி ஆடுகள்போல தெரியுது ஆனா உயரமா இருக்கே.. இங்கிருக்கும் செம்மறிகள்.. நிலத்தோடுதான் அசைவினம்:).. காலின் உயரம் அரை அடிதான் வரும்.. ஆனா நல்ல குண்டூஸ்ஸ்:)).

    பருத்தி பெரிய மரம் எல்லோ? எங்கள் வீட்டிலும் நின்றது.. இது செடிகளாக இருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் தானே - அனுப்பிட்டா போச்சு - அதிராவுக்கு இல்லாததா!

      குதிரை அல்ல. ஒட்டகம். இவர்கள் நாடோடிகள். உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இப்படி ஊர் ஊராகப் போவது வழக்கம்.

      செம்மறி ஆடுகள் தான்.

      பருத்தி - நீங்கள் சொல்வது இலவம் பஞ்சு - நீண்டு நெடிதுயர்ந்த மரங்கள். எங்கள் வீட்டிலும் இருந்தது. இது செடி வகை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
  18. காதில் இருப்பது தோடா அல்லது ஹியரிங் எய்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோடே தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  19. மிக அழகிய படங்கள் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  20. புஜ் ஸ்வாமி நாராயண் மந்திர் மற்றும் 400 கி.மீ சாலைப்பயணம். சிறப்பான வர்ணனை மற்றும் அழகான புகைப்படக் காட்சிகள். எல்லாமே சிறப்பாக இருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....