இந்த வார செய்தி: படிப்பதற்கு மனது தான் அவசியம். வயதோ, இருக்குமிடமோ முக்கியமானதல்ல. அந்த எண்ணமிருந்தால் சிறையிலிருக்கும்போது கூட முடியுமென நிருபித்திருக்கிறார் கொல்கத்தா அலிப்பூர் சிறையில் 18 வருடங்களாக இருக்கும் உத்தன் பால்.
பதினெட்டு வருடங்களுக்கு முன் [B]பர்த்வான் நகரில் நடந்த ஒரு அரசியல் தகராறில் ஒரு வியாபாரியைக் கொன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற கைதியான இவர் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். நேதாஜி சுபாஷ் திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்திய பட்டப் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாது தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.
கடந்த பதினெட்டு வருடங்களில் சிறையில் இவர் காட்டிய நன்னடத்தையாலும், எல்லாவிதமான விதிமுறைகளைக் கடைப்பிடித்ததாலும் இவரை விடுவிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருந்தாலும் [B]பர்த்வான் போலீஸ் இது ஒரு மோசமான எடுத்துக்காட்டாக இருக்கும் என விடுதலை செய்ய மறுக்கிறதாம். இதை விடக் கொடுமை என்னவெனில் முனைவர் பட்டம் பெற முயற்சி செய்த இவருக்குக் கிடைத்த தோல்வி தான்.
ரபீந்த்ர பாரதி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற எழுதிய தேர்வில் வெற்றி பெற்று, நேர்காணலிலும் தேர்ச்சி பெற்று காத்திருந்த இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. காரணம் இவர் ஒரு ஆயுள் கைதி என்பது தானாம். படிக்க ஆசைப் படுபவருக்கு கிடைக்கும் மரியாதை இது தான். அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கச் சொன்னால், பல பல்கலைக்கழகங்களும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வரும்.
இந்த சிறைச்சாலையில் இவரைப் போலவே இன்னும் சில படிப்பாளிகள் இருக்கிறார்கள். உத்பால் மண்டல் எனும் 49 வயதுக்காரர் இரண்டு எம்.ஏ. பட்டங்களும், பிஸ்வநாத் சர்கார் எனும் 38 வயது நபர் ஒரு எம்.ஏ. பட்டமும் பெற்றவர்கள். இதில் சர்கார் தனது இரண்டாவது எம்.ஏ. பட்டத்திற்கு முயற்சித்து வருகிறார். இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு 74 வயது இளைஞர் ஒருவர் சிறைக்கு வரும்போது ஒரு எம்.ஏ. டிகிரியுடன் வந்தவர், இரண்டாவது எம்.ஏ. பட்டத்தினை சிறையில் முடித்திருக்கிறார். இப்போது மூன்றாவதாக வங்காள இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற முயற்சித்து வருகிறாராம்.
ஒரு சிறிய தடுமாற்றத்தினாலோ, கோபத்தினாலோ குற்றங்கள் புரிந்து, சிறையில் திருந்தி வாழும் இவர்களுக்கு சீக்கிரமே விடிவுகாலம் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?
இந்த வார முகப்புத்தக இற்றை:
உன் மௌனம் அழகானது தான்… எனினும் உதிரும் ஓரிரு வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன் – தாள் பிரித்து மிட்டாய் பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தோடு!
ராஜா காது கழுதைக் காது!
சிறுவயதில் ஒரு படம் பார்த்திருக்கிறேன். தங்கமலை ரகசியம் படத்திலென நினைக்கிறேன். அந்தப் படத்தில் ஒட்டுக் கேட்பவர்களுக்கு காது கழுதைக் காது மாதிரி ஆகிவிடும். ராஜாவுக்கே ஒரு முறை கழுதைக் காது ஆகிவிட, “ராஜா காது கழுதைக் காது எனச் சொல்வார்கள் எல்லோரும். சரி அது எதுக்கு இப்பன்னு கேட்கறீங்களா, எங்கேயாவது பயணம் செய்யும் போது, பேருந்திற்காகக் காத்திருக்கும்போது பக்கத்தில் உள்ளவர்கள் பேசுவதைக் கேட்டால் சில சமயங்களில் நல்ல விஷயங்கள் கிடைக்கும். அப்படி கேட்ட சில விஷயங்கள் இப்பகுதியில் அவ்வப்போது வெளி வரும். இந்த வாரம்…
ஒரு நாள் காலணிக்கு பாலிஷ் போடக் கொடுத்துக் காத்திருந்தேன். அங்கே என்னைப் போலவே வேறொருவரும் காத்திருக்கும்போது அலைபேசியில் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஹிந்தியில் அவர் பேசியதன் தமிழாக்கம்….
“நீ யாரைப் பத்தி வேணா சொல்லு, ஆனா எங்க அம்மாவைப் பத்தி ஒண்ணும் சொல்லாத, ஏன்னா அவங்க உலகத்திலேயே நம்பர் 1 அம்மா”
இந்த வார குறுஞ்செய்தி:
நல்ல நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்களை எப்போதும் பார்க்கமுடியாத போதிலும், நமக்குத் தேவையானபோது நமக்காக இருப்பார்கள்!
படித்ததில் பிடித்தது:
ஒரு ஏழை மனிதன் கடவுளிடம் ”ஓ கடவுளே, எனக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், நான் அதில் பாதியைத் தருவேன்” என எப்போதும் வேண்டிக் கொண்டே இருப்பார். எந்த பிரார்த்தனை தலத்துக்குச் சென்றாலும் இதே வேண்டுதல் தான். கடவுள் இவரது வேண்டுதலுக்கு செவிமடுப்பதாய்த் தெரியவில்லை. இப்படி வேண்டுதல் செய்து வரும் போது ஒரு நாள் அவருக்கு ஒரு ஐம்பது பைசா நாணயம் கீழே கிடைத்தது. கீழே குனிந்து கையில் எடுத்த அவர் சொன்னார், “கடவுளே உனக்கு நன்றி. உன் பாதியை நீயே வைத்துக் கொண்டு என் பாதியை எனக்குத் தந்து விட்டாயே, என்னே உனது கருணை” என்று சொல்லியபடியே சென்றார்.
மீண்டும் வேறொரு ஃப்ரூட் சாலட்டோடு சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.