தேவ்
பூமி ஹிமாச்சல் – பகுதி 1
”ஏழைகளின் ஊட்டி” என்ற
தலைப்பில் ஏற்காடு பயணத்தொடர் எழுதி முடித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.
அடுத்த பயணத் தொடர் எழுதுவது பற்றி யோசிக்கவே இல்லையா என அவ்வப்போது
கேள்விக்கணைகள் மனதிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும். இத்தனைக்கும் இரண்டு
பயணங்கள் சென்று வந்த அனுபவங்கள் காத்திருக்கின்றன – குஜராத் மற்றும் ஹிமாச்சல்
பிரதேசம் – இரண்டிலும் நான்கு நான்கு நாட்கள் பயணம்.
இப்பயணங்கள்
பற்றி எழுதுவதற்கு நிறைய விஷயங்களும் உண்டு.
ஆனாலும் கடந்த ஒரு மாதமாக இப்பயணத்தில் ஒன்று பற்றி கூட பதிவுகள்
எழுதவில்லை. குஜராத் பயணத்தில் சந்தித்த சில விஷயங்களை வலைச்சரத்தில் ஆசிரியராக
பொறுப்பேற்றிருந்த வாரங்களில் [10.11.2014 – 23.11.2014] வலைச்சரத்தில் எழுதி
இருக்கிறேன். இருந்தாலும் முழு பயணம்
பற்றிய குறிப்புகளை எனது தளத்தில் இன்னும் எழுதவில்லை.
நான் ஹிமாச்சலத்துச் சூரியன்!
அதற்கு
பின் சென்ற ஹிமாச்சல் பிரதேசப் பயணம் குறித்தும் இதுவரை எழுதவில்லை. முதலில் குஜராத்
பயணமா, இல்லை ஹிமாச்சலப் பயணமா, எதைப் பற்றி எழுதுவது என முடிவு செய்வதில் கொஞ்சம்
குழப்பம்.
ஹிமாச்சலப் பிரதேசம் - ஒரு முன்னோட்டம்
பேசாம
“இங்கி பிங்கி பாங்கி” போட்டு
முடிவு செய்யலாமா என நினைத்தால் முழுசும் நினைவுக்கு வரல! இன்னுமா
நினைவிலிருக்கும்! சரி போ, எதையாவது ஒண்ணை எழுதிடுவோம்னு ஒரு வழியா இதோ
வந்துட்டேன்!
குஜராத்
பற்றி கொஞ்சம் கொஞ்சம் முன்னரே வலைச்சரத்தில் பார்த்துவிட்டதால், இந்த
வாரத்திலிருந்து உங்களை “தேவ பூமி”
என்று அழைக்கப்படும் ஹிமாச்சல பிரதேசத்தின் ஒரு சில
இடங்களுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். நான் ரெடி நீங்க ரெடியா?
ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் மிகவும் புராதனமான ஒரு சிவன் கோவில்.....
ஹிமாச்சலப்
பிரதேசத்தினை தேவ பூமி என ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா? ஹிமாச்சலத்தில் மட்டும்
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் – ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில்
நிச்சயம் உண்டு – இதைத் தவிர கிராம தேவதைகள், குலதெய்வங்கள் என நிறையவே. இதைத்
தவிர நெடுஞ்சாலைகளில் கூட நிறைய சின்னஞ்சிறு கோவில்கள் – பெரும்பாலும்
நெடுஞ்சாலைகளில் ஆஞ்சனேயர் கோவில்கள் - அதனால் இந்த மாநிலத்தினை தேவ் பூமி என்று
அழைக்கிறார்கள்.
வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் என்று சொன்ன பாரதி நினைவுக்கு வருகிறானா!
”ஹிமா” எனும்
சமஸ்க்ருத வார்த்தைக்கு பனி என்ற அர்த்தம் உண்டு. முற்றிலும் பனிபடர்ந்த மலைகள்
கொண்டதால் இப்பகுதிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் என்று பெயர் சூட்டினார்களாம். அப்படி
பெயர் சூட்டியவர் ஆச்சார்யர் திவாகர் தத் ஷர்மா என ஹிமாச்சலத்தின் வரலாறு பற்றிய
குறிப்பொன்று கூறுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் எனக்கும் எங்கள் பகுதியில்
இருக்கும் சில நண்பர்களுக்கும் இப்படி பனி படர்ந்த மலைப்பிரதேசத்திற்கு செல்ல ஒரு
வாய்ப்பு கிடைக்க, பயணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம்.
எங்களைச் சுமந்து செல்லத் தயாராய் எங்கள் வாகனம்!
நவம்பர்
மாதத்திலேயே பயணம் பற்றிய முடிவு எடுத்துவிட்டதால் ஒவ்வொருவராக கேட்டு பயணிக்க
இருக்கும் நபர்களை முடிவு செய்தோம். 15 பேருக்கு மேல் வருவதாகச் சொல்ல, ஒரு Tempo Traveler அமர்த்திக்கொள்ளலாம்
என முடிவாயிற்று. நடுவில் ஒரு சிலர் வர முடியாத சூழல், வேறு சிலர் வருவதாகச்
சொல்ல, ஏற்கனவே முடிவெடுத்தபடி Tempo Traveler பயணம் தான்.
குளிர் நடுக்கத்தில் தில்லி!
கிறிஸ்துமஸ்
தினமான டிசம்பர் 25-ஆம் தேதி காலையில் தில்லியிலிருந்து தொடங்கியது எங்கள் பயணம்.
அதிகாலையில் அப்படி ஒரு பனிமூட்டம் – தில்லியிலேயே இத்தனை பனியும் குளிரும்
இருந்தால் ஹிமாச்சலத்தில் இன்னும் அதிக குளிரப் போகிறது என்று நண்பர்கள் சிலர்
சொன்னாலும் எதையும் தாங்கும் இதயமும், பலமும் எங்களுக்கு உண்டு என்று திடமாகப்
புறப்பட்டது எங்கள் குழு!
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தில்லி கோவில் - புறத்தோற்றம்
மார்கழி
மாதம் என்பதால், எங்கள் பகுதியில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில்
தினமும் காலையில் திருப்பாவை/திருவெம்பாவையோடு சேவை தொடங்கும். அதனால் பயணிக்கும்
முன்னர் ஏழுமலையானிடமும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு பயணத்தினை நல்லபடியாக முடித்துத் தர
வேண்டிக்கொள்வோம் எனச் சொன்னதற்கு இணங்க, அனைவரையும் சுமந்து கொண்டு புறப்பட்டது
எங்கள் ரதம்.
குளிர் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியே ஒரு ரவுண்ட் போலாம் வாங்க! படம் எடுத்தது காலை 08.45 மணிக்கு!
ஏழுமலையானை
தரிசித்து அங்கிருந்து புறப்பட்டோம். தலைநகரைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையைத் தொட
முயற்சி செய்தோம். அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை! யாருப்பா அத திருடிட்டு
போனது! என்ன ஆயிற்று? அடுத்த பகுதியில் சொல்லட்டா! இப்ப வர்ட்டா!
தொடர்ந்து பயணிப்போம்......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.


