சனி, 18 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – பியாஸ் நதிக்கரையோரம்….


ஹனிமூன் தேசம் – பகுதி 3

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!



மலைகளுக்கு இடையே அமைதியாய் ஓடும் பியாஸ்...
 
பஞ்சாப் எனும் சொல்லுக்கு ஐந்து நதிகள் என்ற அர்த்தம் – பஞ்சாபிகளை தில்லிவாலாக்கள் ஐந்து நதிக்காரர்கள் என்று சொல்வதுண்டு! பஞ்சாப் மாநிலத்தில் ஓடும் ஐந்து நதிகளில் ஒன்று தான் இந்த பியாஸ்! ஆங்கிலத்தில் Beas என எழுதினாலும், இதைப்படிப்பது பியாஸ் என்று தான். பஞ்சாப் வழியாக பாகிஸ்தான் வரை சென்று சட்லெஜ் நதியோடு இணைந்து அரபிக்கடலில் கலந்தாலும் இந்த பியாஸ் தனது ஓட்டத்தினை ஆரம்பிக்கும் இடம் ஹிமாச்சலப் பிரதேசம்! கிட்டத்தட்ட 470 கிலோமீட்டர் ஓட்டம்! அதுவும் இடைவிடாத ஓட்டம்!

பியாஸ் நதி...
அமைதியான நதியிலே..... 

ரோஹ்தாங்க் என அழைக்கப்படும் ரோஹ்தாங்க் பாஸ் அருகே, கடல்மட்டத்திலிருந்து 14300 அடி உயரத்தில் துவங்குகிறது பியாஸ் நதியின் ஓட்டம்! ரோஹ்தாங்க் பாஸ் வருடத்தின் பெரும்பாலான சமயத்தில் பனி உறைந்து கிடக்கும் இடம். ஆதிகாலத்தில் இந்த நதி விபாசா என அழைக்கப்பட்டது.  இப்போது பியாஸ் என அழைக்கப்பட்டாலும், இதன் பெயர் வியாசா, இதை உருவாக்கியது வேத வியாசர், வியாஸ் குண்ட் என்ற இடத்தில் தான் இந்த நதி துவங்குகிறது. வியாஸ் என்பது தான் பியாஸ் ஆகிவிட்டது! மணாலியில் இருக்கும் சோலாங்க் பாஸ்-ல் துவங்கி 14 கிலோமீட்டர் Trek செய்து இந்த பியாஸ் குண்ட் வரை செல்ல முடியும்! Trek செய்ய விருப்பமிருப்பவர்கள் அதற்காக இரண்டு நாட்கள் ஒதுக்குவது நல்லது!

துள்ளித் துள்ளி ஓடும் பெண்ணே...

அங்கிருந்து உருவாகி குலூ பள்ளத்தாக்குப் பகுதிகள் வழியாக மலைப்பகுதிகளில் இருந்து வரும் உபநதிகள் சேர்ந்து கொள்ள பிரம்மாண்டமாக கீழ் நோக்கி செல்கிறது! இந்த ஆற்றின் குறுக்கே ஹிமாச்சல் பகுதிகளில் அணைகள் உண்டு – Pபோங்க் அணை மற்றும் Pபண்டோஹ் அணை! போங்க் அணை முதலில் பாசனத்திற்காக அமைக்கப்பட்டது என்றாலும், பிறகு மின்சார உற்பத்திக்காகவும் என்றானது! தண்ணீர் அவ்வப்போது திறந்து விடுவார்கள் – போதிய அறிவிப்புகள் செய்த பிறகு.


மலைகளுக்கு இடையே அமைதியாய் ஓடும் பியாஸ்...


பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறதா...

மலைப்பகுதியிலிருந்து கீழ் நோக்கி அசுர வேகத்துடன் வரும் வெள்ளத்தில் சிக்கினால் அவ்வளவு தான்….. பியாஸ் நதிக்கரை ஓரமாகவே குலூ மணாலி செல்லும் பாதை என்பதால் நிறைய சுற்றுலாப் பயணிகள் அமைதியாக இருக்கிறதே இந்த நதி என குளிக்க இறங்குவதுண்டு. எப்போதுமே, பெரியவர்கள் சொல்வதுண்டு – வெளியூர்களில் ஆற்றில் குளிக்கப் போகும்போது, அந்த ஊர் மக்களின் துணையோடு செல்வது நல்லது என்று. இங்கே இன்னும் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! சில வருடங்களுக்கு முன்னர் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்துவிட, அது தெரியாமல் ஆற்றில் இறங்கிய பல ஹைதை கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் அடித்துக் கொண்டு செல்லப்பட்ட விபத்து உங்களுக்கு நினைவில் இருக்கலாம்….


மலைகளுக்கு இடையே அமைதியாய் ஓடும் பியாஸ்...



பாறை மேல் உட்காராமல் காலை வைத்து நிற்பது ஏனடா!...
நண்பருடன் அடியேன்! 

சில இடங்களில் நதிப்பெண் ரொம்பவே அமைதியாக, “நான் ரொம்ப நல்லவ, யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன்” என்று சொல்வது போலவே அமைதியாக இருக்கிறாள்! ஆனாலும் இது ஆபத்தான அமைதி என்பது நமக்குப் புரிவதில்லை. அப்படி ஒரு சாலை வளைவில் நதிக்கரை ஓரமாக ஒரு View Point! ஒரு பெரிய பாறை இருக்க அதன் மேல் நின்றபடி மலைகளுக்கு நடுவே ஓடிவரும் பியாஸ் நதியை ரசித்துக் கொண்டிருந்தோம். அந்த பாறை மீது நின்றபடி, அமர்ந்தபடி, தனியாக, ஜோடிகளாக, குழுவாக என நிறைய புகைப்படங்கள் – ஒரு Photo Session!

 இந்த இடம் ரொம்பவே வசதியா இருக்கோ!...

அந்தப் பாறை மீது அமர்ந்து நதியையும் இயற்கையையும் ரசித்து, சிறிது நேரம் கழித்து புறப்பட்டோம். அங்கேயே அமர்ந்து விடலாம் எனத் தோன்றினாலும் மேலே முன்னேறினோம். சில கிலோமீட்டர்கள் நதிக்கரை ஓரமாகவே வழியில் கண்ட காட்சிகளை படம் எடுத்தபடியே பயணித்தோம். முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் ஒரு சிறுவன் படுத்துக் கொண்டிருந்த இடம் எங்கே எனப் பாருங்களேன்! இப்படியே தொடர்ந்து பயணித்து ஒரு த்ரில் அனுபவத்திற்காக நதியின் ஓரத்தில் வண்டியை நிறுத்தினோம்.


தொங்கு பாலத்தின் மேல்.....

தொங்கு பாலம்....

இந்த பியாஸ் நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட ஒரு தொங்குபாலம் அருகே வண்டியை நிறுத்தி, தொங்குபாலத்தில் நடந்து சென்றது மறக்கமுடியாத அனுபவம்! மனிதர்கள் தவிர பொதி சுமக்கும் கழுதைகளும் அந்த தொங்குபாலத்தில் நடக்கிறது! மூன்று அல்லது நான்கடி அகல தொங்குபாலத்தில் நடக்கும்போதே, ஒரு வித ஆட்டம் – பாலம் ஆட, நடக்கும் நாமும் நடனமாட, ஒரு வித உள்ளுணர்வு – மனதுக்குள் பாலம் உடைந்தால் என்ன ஆகும் என்று எண்ணம் வருகிறது! நாங்கள் நடக்கும்போதே கழுதைகளும் அந்தப் பாலத்தில் நடக்க பாலம் மொத்தமும் ஆடுகிறது!


நீங்க மட்டும் தான் நடப்பீங்களா...  நாங்களும் நடப்போம்!....

இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளி.....
ஆனால் குரல் கொடுக்க எந்த கழுதையும் வரப்போவதில்லை... :( 

இந்த அனுபவமே த்ரில் என்றால், இதற்கு அடுத்த அனுபவம் அதை விட பயங்கர த்ரில் அனுபவம்…. அந்த அனுபவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

24 கருத்துகள்:

  1. இன்ரெஸ்டிங்காக செல்லுகிறது இந்த தொடர்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  2. நாங்களும் ரசித்துக் கொண்டே வருகிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பள்ளியில் படித்த பியாஜ் நதியை கண்ணுறக் காணும் போது மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. செம சுவாரஸ்யம் ஜி!! பார்க்கக் கிடைக்காத இடங்களை எல்லாம் உங்கள் தொடர் வழி பார்க்க முடிகிறது! போவதற்கு முயற்சி செய்யணும்...தொடர்கிறோம்

    கீதா: ஜி!!சான்ஸே இல்லை! என்ன ஒரு அழகு நதி இல்லையா...நானும், மகனும் அப்படியே அதில் சொக்கி அங்கேயே அமர்ந்து அதுவும் போகும் இடத்தில் ஆங்காங்கே இறங்கி உட்கார்ந்து ரசித்து இறங்க முடிந்த இடத்தில் இறங்கி சும்மா கால்களையும், கைகளையும் மட்டும் தண்ணீரில் தொட்டு களித்தோம்.

    நாங்கள் மணலியில் தங்கியிருந்த ஹோட்டல் அப்போது ஆஃபர் கொடுத்து அதுவும் நதியின் கரையோரத்தில் ரூமிலிருந்து வெளியில் வந்தால் துள்ளித் துள்ளி பேரிரைச்சலுடன் அடித்துச் செல்லும் நதியைக் காணலாம். நதியின் அருகில் சத்தம் கேட்கும் என்பதாலும், ஹோட்டலிலிருந்து சாலை திரும்பும் இடத்தில் பாலம்..அதன் வழி ரோத்தாங்க் பாஸ் செல்லும் வழி பாலம் இருந்ததால் வண்டிகள் செல்லும் போதெல்லாம் சத்தம் கேட்கும் என்பதாலும் ரேட் கம்மி. நாங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தண்ணீர் சத்தம் இனிமையாக நாங்கள் ரசிப்போம் என்ப்தால் அங்குதான் தங்கினோம். அதுவும் நதி அருகில் இருக்கும் அறை....பெரிய ஃபேமிலி ரூமே கிடைத்தது...6 பேர் தங்கும் அளவிற்கு..ஒரு நாள் வாடகை.ரூ 1000 தான்.....காம்ப்ளி மென்ட்ரி ப்ரேக்ஃபாஸ்டுடன்.....வருடம் 2008 ஆகஸ்ட் இறுதி வாரம்...அந்த வருடம் .செப்டம்பர் முதல் வாரத்திலிருந்தே ரோத்தாங்க் பாஸ் செல்ல க்ளோஸ்ட் என்று அறிவித்திருந்தார்கள் நாங்கள் ஆகஸடில் சென்றோம். மகனுக்கும் அப்பொது மட்டுமே விடுமுறை என்பதால். நானும் மகனும் ரிவர் க்ராசிங்க், பாரா க்ளைடிங்க், செய்தோம். த்ரில்லிங்க் அனுபவம். ட்ரெக்கிங்க் போனோம்.. ரிவர் ராஃப்டிங்க் போக புக் செய்திருந்தோம் ஆனால், இறுதியில் தண்ணீர் அதிகமானதால் முடியாது என்று போர்ட் வைத்து பணத்தைத் திரும்பத் தந்துவிட்டார்கள். சோலாங்க் சென்றோம். மலைச்சரிவு நிகழ்ந்ததால் வியாஸ் குன்ட் அனுமதி கிடைக்கவில்லை.

    நாங்கள் ஒரு முறை சென்ற போது ஷிம்லா டு மணாலி சென்றதால் வழியில் வைஷ்ணவி தேவி குகை கோயில் சென்றோம் (இப்போது நிறைய மாறி நிறைய கட்டி இருக்கிறார்கள்...) .

    முதல் முறை சென்ற போது ஏப்ரலில்....அது மகனுக்கு 3 வயது....பனியில் விளையாடினோம்...அப்போதும் வைஶ்ணவை கோயில் சென்றோம்... பியாஸ் நதிக் கரையில் படித்துறை இருக்கும். அங்கு பிரசாதமாகச் சாப்பாடும் அளித்தார்கள்..தர்ம்சாலை ஹாலில்..கீழே நதியின் ஓரத்தில் ஒரு மண்டப ஹாலில்..கடி, சாதம் என்று நன்றாகத்தான் இருந்தது. 25 வருடங்களுக்கு முன் ....

    பியாசின் அழ்கை மீண்டும் உங்கள் மூலம் காணக் கிடைக்கிறது. மிக்க நன்றி தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான நேரங்களில் ரோஹ்தாங்க் பாஸ் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை - பனிப்பொழிவு அதிகம், ஆபத்தும் அதிகம் என்பதால். நாங்கள் சென்றபோதும் ரோஹ்தாங்க் பாஸ் செல்ல அனுமதிக்கவில்லை. குழுவினருடன் சென்றதால் வியாஸ் குண்ட் ட்ரெக் செய்யமுடியவில்லை. ட்ரெக் செய்வதற்கென்று ஒரு முறை செல்ல வேண்டும். பார்க்கலாம் வாய்ப்பு எப்போது கிடைக்கிறது என...

      இப்பதிவு மூலம் உங்களுக்கும் உங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  5. முதல் முறை 25 வருடங்களுக்கு முன் சென்ற போது கேமரா இல்லை நண்பர் ஒருவரின் கேமராவின் மூலம் படங்கள் எடுத்தேன்.

    2008 ல் எடுத்த படங்கள் அனைத்தும் மகனினிடம் இருக்கு. கேட்டுக் கொண்டே இருக்கிறேன் இன்னும் அனுப்பியபாடில்லை....அனுப்பினால் எழுதலாமே என்றுதான்....உங்கள் படங்கள் அனைத்தும் அருமை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் கிடைத்த பிறகு உங்கள் வலைப்பூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. பியாஸ் நதி...அழகு..

    தொங்கும் பாலம்...பார்க்கவே அருமையா இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  7. பாலம் அறுந்தால் என்னாகும்? தொபூக்கடீர் என கீழே இருக்கும் புல்லில் விழுவீர்கள். படத்தில் பார்க்கும் போது பாலத்துக்க்கும் நிலத்துக்கும் இடையில் அத்தனை உயரமாக இல்லையே?

    இங்கே சுவிஸர்லாந்தில் நான் இருமலைகளுக்கிடையிலான தொங்கு பாலம் ஒன்றில் நடந்திருக்கின்றேன். அப்பாலத்தில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே வரவோ போகவோ முடியும், காத்திருந்து வரிசையாக நடக்கவேண்டும். ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டே நடக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலத்துக்கும் நதிக்கும் அத்தனை உயரம் இல்லை என்றாலும், ஆட்டம் அதிகம். சண்டிகர் அருகே இப்படி இரண்டு மலைகளுக்கு இடையில் ஒரு தொங்கு பாலம் சென்றதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஜி!

      நீக்கு
  10. த்ரில் அனுபவத்துக்குத் தொடர்ந்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  11. //வியாஸ் என்பது தான் பியாஸ் ஆகிவிட்டது//
    ஒருவேளை பெங்காலிகள் வியாஸை பியாஸ் ஆக்கியிருப்பார்கள் என எண்ணுகிறேன். ஏனெனில் அவர்கள் தான் V க்கு பதில் B ஐயை பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக வைத்யநாத் என்பதை Baidyanath என எழுதுவார்கள்.
    புகைப்படங்கள் அருமை! பாராட்டுகள்! அந்த பயங்கர அனுபவம் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்காலிகள் மட்டுமல்ல, இங்கே வடக்கிலும் சிலருக்கு வ வருவதில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. //இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளி.....
    ஆனால் குரல் கொடுக்க எந்த கழுதையும் வரப்போவதில்லை... :( //

    பரவாயில்லை! குறைந்தபட்ஷம் உங்கள் குரலாவது ஒலிக்கிறதே...!:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....