திங்கள், 4 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – மூன்று மரச்சிலைகள் – பிரம்மாண்டமான கோவில்!

அரக்கு பள்ளத்தாக்குபகுதி 25

பகுதி 24 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூரி ஜகன்னாத் மந்திர்
வெளிப்புறத் தோற்றம்

கோனார்க்-இல் அமைந்திருக்கும் சூரியனார் கோவில் பார்த்த பிறகு, சிற்பங்களின் அழகையும், அதைச் செதுக்கிய சிற்பிகளின் உழைப்பு, கலைநயம், நளினம் ஆகியவற்றை எண்ணி அதிசயத்தபடியே அங்கிருந்து மனமே இல்லாமல் புறப்பட்டோம். ஒவ்வொரு சிற்பங்களையும் பார்ப்பதற்கே அரை மணி நேரமாவது வேண்டும் – அத்தனை நெளிவு-சுளிவு, நுணுக்கமான வேலைப்பாடு! கோனார்க் நகரிலேயே தங்கிக் கொண்டு சில நாட்கள் சிற்பங்களைப் பார்த்து வியக்க வேண்டும்! வெகு சிலர் மட்டுமே இப்படி சிற்பங்களைப் பார்த்துப் பார்த்து ரசிக்கவே ஒரு வார காலம் இங்கே தங்குவதுண்டு! குறிப்பாக வெளிநாட்டவர்கள்! நம்மவர்கள் சிலர் “என்ன இங்கே இருக்கு! உடைந்து போன சிலைகள் தானே!” என்று சொல்கிறார்கள். அழிவுக்குக் காரணம் மனிதர்களும் தானே…. எதனையும் ரசிக்க ஏதுவாய் மனது வேண்டும். அது எல்லோரிடமும் இருப்பதில்லையே!


கடற்கரைச் சாலையில் பயணித்தபடியே எடுத்த கடல் புகைப்படம்

கோனார்க்கை அடுத்து, தங்க முக்கோணம் என அழைக்கப்படும் நகரங்களில் [புவனேஷ்வர் – கோனார்க் – பூரி] மூன்றாவது இடமான பூரி ஜகன்னாத் சென்றோம். கடற்கரை ஓரமாகவே பயணித்து, இடைவிடாது, அலுக்காது சலிக்காது கரைக்கு வந்து திரும்பும் கடலலைகளைப் பார்த்தபடியே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவு பயணித்தால், கோனார்க் நகரிலிருந்து பூரி வந்தடையலாம்! பூரி – என்றாலே கூடவே ஜகன்னாத்-உம் நினைவுக்கு வந்தே தீரும்! கூடவே இங்கே நடக்கும் ரத யாத்திரையும்! பூரி ஜகன்னாத் கோவிலுக்கு தனித்துவமான சில விஷயங்களும் உண்டு.  இங்கே இருக்கும் சிலைகள் மரத்தினால் ஆனவை!


மரத்தால் ஆன சிலைகள் - ஒரு ஓவியத்தில்....

கோவில் எத்தனை புராதனமானது?

கோவில் எவ்வளவு புராதனமானது? இந்த கேள்விகளுக்கு விடை சொல்ல நமக்கு வயதில்லை. ரிக் வேதத்திலேயே இக்கோவில் பற்றிய குறிப்புகள் இருக்கிறது என்றும், தற்போதைய கோவில் இராண்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்றும், இல்லை இல்லை ஒன்பதாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்றும் பல கருத்துகள். நாம் அதற்குள் போக வேண்டிய அவசியமில்லை. மிகவும் பழமையானது, புராதனமானது என்ற அளவிலேயே நிற்போம்!


கடற்கரைச் சாலையில் காத்திருக்கும் படகும் கடலும்...

பூரி ஜகன்னாத் கோவில் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. பூரி. ஸ்ரீமந்திரம், Bபடா தேவதா என்ற பெயர்களும் உண்டென்றாலும் பூரி ஜகன்னாத் என்ற பெயரே பிரபலமான ஒன்று. கோவிலுக்கு வெகு தொலைவிலேயே வண்டிகளை நிறுத்திவிடுகிறார்கள். சிலருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. கோவில் அருகே வரை வண்டியிலேயே செல்லலாம். எங்கள் வண்டியும் கோவில் அருகே வரை சென்றது. வண்டியை அதற்கான இடத்தில் நிறுத்தி ஓட்டுனர் காத்திருக்க, நாங்கள் கோவிலின் அலுவலகத்திற்குச் சென்று காவல் அதிகாரி ஒருவரைச் சந்தித்தோம். எங்களுக்காகக் காத்திருந்த அவர், தன்னுடைய உதவியாளர் ஒருவரை எங்களுடன் அனுப்பி வைத்தார். கோவில் பற்றிய விவரங்களைச் சொல்லியபடியே எங்களுடன் வந்தார் அந்த மனிதர்.


கோனார்க் - பூரி சாலையில் ஒரு பகுதி - இருபுறங்களிலும் மரங்கள் உடைய சாலைகள் மிக அரிதாகிவிட்டனவே!

தரை மட்டத்திலிருந்து சுமார் 214 அடி உயரம் இருக்கிறது இக்கோவில்.  10 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய கல் மேடையில் அமைந்திருக்கிறது கோவில். இரண்டு பெரிய சுற்றுச் சுவர்கள் – வெளிப்புறம் அமைந்திருப்பது மேகநாதா என்றும் இரண்டாவது கூர்மா என்றும் அழைக்கப்படும் பிரகாரங்கள். அற்புதமான சிலை வடிவங்கள் இங்கே இருக்கின்றன. என்றாலும் ஒரு குறைபாடு எனக்குண்டு. தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருக்கும் இக்கோவிலிலும் பராமரிப்பு அத்தனை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் சென்றிருந்த போதும் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன என்றாலும் இன்னும் அதிக கவனிப்பு தேவை என்று தான் சொல்ல வேண்டும். இதைத் தவிர புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள அனுமதி இல்லை என்பதும் ஒரு குறைபாடு தான்.


கோவிலின் ஒரு பகுதி - இதுவும் வெளியேயிருந்து எடுக்கப்பட்ட படமே...
பூரி ஜகன்னாத் மந்திர்

நீலகிரி எனும் மலையின் உச்சியில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் இக்கோவிலின் உள்ளே செல்ல நான்கு வழிகள் – சிம்ஹத்வார் [கிழக்கில்], அஸ்வத்வார் [தெற்கே], வ்யாக்ரத்வார் [மேற்கு] மற்றும் ஹஸ்தித்வார் [வடக்கு]. பொதுவாகவே சிம்ஹத்வார் எனச் சொல்லப்படும் கிழக்கு வாசல் வழியாகத்தான் நாம் கோவிலுக்குள் செல்லப் போகிறோம். வாசலைக் கடந்தால் மொத்தம் 22 படிகள். Bபாயிஸி பஹசா எனச் சொல்லப்படும் இந்தப் படிகள் எதைக் குறிக்கின்றன என்பதற்கு நிறைய கதைகள் உண்டு. இந்தப் படிகள் அனைத்தையும் தொட்டு வணங்கியபடியே மேலே செல்லும் பக்தர்களைப் பார்க்க முடியும். சிலர் படிகளிலேயே உருண்டு செல்கிறார்கள்!


பூரி ஜகன்னாத் மந்திர் - இன்னுமொரு படம்...

ஒவ்வொரு மனிதனுக்கும் 25 குணங்கள் – அவற்றில் மூன்று அகம், 22 புறம் அந்த இருபத்தி இரண்டையும் கடந்தால் தான் கடவுளை அடைய முடியும் என்பதைக் குறிக்க இந்த 22 படிகள் என்று ஒரு கதை. இல்லை இல்லை, வைகுந்தத்தில் இருக்கும் விஷ்ணுபகவானைத் தரிசிக்க, ஏழு லோகங்கள், ஏழு பாதாளங்கள், எட்டு வைகுந்தங்கள் கடந்தால் தான் தரிசிக்க முடியும் என்பதைக் குறிக்கவே இந்த 22 படிகள் என்றும் சொல்வார்கள்.  இருபத்தி இரண்டு படிகளைக் கடந்து உள்ளே சென்று முக்கிய சன்னதியான ஜகன்னாத்-பாலபத்ரா-சுபத்ரா ஆகியோரைத் தரிசித்தோம். கோவிலின் மற்ற பகுதிகளுக்கும் எங்களை அழைத்துச் சென்று விவரங்கள் தந்தார் எங்களுடன் வந்த சிப்பந்தி. அவர் உடன் வந்ததால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தனியாக வந்திருந்தால் இத்தனை விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்திருக்குமா என்பது சந்தேகமே. கோவில் பற்றிய தகவல்கள் நிறையவே உண்டு. ஒரே பதிவில் அடக்கி விடமுடியாத அவற்றை வரும் பகுதிகளில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

26 கருத்துகள்:

  1. கோவில் பற்றி இன்னும் இன்னும் தெரிந்துகொள்ள ஆவல். அவ்வளவு பழமையான கோவிலா அது! அட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமையான கோவில் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அருமை, கோயிலுக்கு அருகேயே செல்ல முடிந்ததும் உங்கள் அதிர்ஷ்டம். எங்களுக்குப் போக முடியவில்லை. மற்றபடி நீங்கள் சொல்லி இருப்பனவற்றை நாங்களும் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த பண்டா மூலம் அறிந்தோம். மற்றத் தொடர்களையும் அவ்வப்போது பார்த்துப் படித்து வந்தாலும் உடன் வந்து கருத்துச் சொல்ல முடியவில்லை கோனார்க் நாங்க புரி ஜகந்நாத தரிசனம் முடித்துக் கொண்டு போனோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் அருகே வரை செல்ல முடிந்ததும் ஒரு விதத்தில் எனக்கு நஷ்டம்! வழியில் புகைப்படங்கள் எடுக்க இயலவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. காணக் கிடைக்காத காட்சி. கோயில். ஒவ்வொரு முறையும் விழா நடக்கும்போது நாளிதழ்களில் ஆர்வமாய் படிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது முடிகிறதோ சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி! மிகப் பெரும் பழைய கோயில் போல இருக்கிறதே!! தகவல்களும் அருமை. மேலும் அறிந்துகொள்ள ஆவல்.

    கீதா: வெங்கட்ஜி //எதனையும் ரசிக்க ஏதுவாய் மனது வேண்டும். அது எல்லோரிடமும் இருப்பதில்லையே!// உண்மைதான் ஜி! எனக்கும் பல சமயங்களில் நான் செல்லும் குழுவைப் பொருத்து இருக்கிறது கிடைக்கும் நேரமும், புகைப்படம் எடுப்பதும். அப்படிப்பட்ட சமயங்களில் நான் நினைப்பேன் தனியாகவே வந்திருக்கலாமோ என்று...ஹாஹாஹா. எங்கள் குடும்பத்தில் ஒரு குழு இருக்கிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பம். மிகவும் எஞ்சாய் செய்யும், ரசிக்கும் நபர்கள். அவசரப்படுத்தாமல் நிதானமாகப் பார்ப்பார்கள் எல்லாமே. இவர்களுடன் சென்றால் பயணம் மிகவும் இனிதாக இருக்கும் எனக்கு. இப்போது அவ்வளவாக வாய்ப்பதில்லை.

    படங்கல் சூப்பர்ப்! கடலும், படகும் செம...அது போன்று கோயில் படங்களும்...அந்தச் சாலை மிக அழகாக இருக்கிறது. பாண்டிச்சேரி, ஈசிஆரில் செல்லும் போதும் ஒரு பகுதி இப்படி வரும்...அழகாக இருக்கும்.

    தகவல்கள் அருமை...இன்னும் அறிய ஆவல். தொடர்கிறோம் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் பழமையான கோவில் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. மிகப்பெரிய தேரோட்டம்....

    மரத்தாலான விக்கிரகம்ன்னு ஆச்சர்யப்படுத்த நிறைய விசயங்கள் உண்டுதானே!

    தொடருங்கள். காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய விஷயங்கள் இங்கே உண்டு. எல்லாவற்றையும் எழுதினால் தனிப் புத்தகமே போடலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  7. // மிகவும் பழமையானது, புராதனமானது என்ற அளவிலேயே நிற்போம்! // ஆமாமாம்.... ரிஷி மூலம்.. நதி மூலம்... கோவில் மூலம் இதெல்லாம் பாக்காம இருக்கிறதுதான் நம்ம லெவலுக்கு நல்லது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம லெவலுக்கு நல்லது! அதே அதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.

      நீக்கு
  8. பூரி ஜகன்னாதர் என்றாலே juggernaut என்ற வார்த்தையை ஆங்கிலத்துக்கு கொடுத்த தகவல் தான் என் நினைவுக்கு வரும்! பல புதிய தகவல்களை தந்திருக்கிறீர்கள்! புகைப்படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் இன்னும் உண்டு. தொடர்ந்து சில பதிவுகள் இக்கோவில் பற்றியே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  9. அங்கு பண்டாக்களின் தொல்லை தாங்கமுடியாது என்கிறார்களே உண்மையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்டாக்களின் தொல்லை - உண்மையே. மொய்த்து எடுத்துவிடுவார்கள். எங்களுடன் அலுவலகச் சிப்பந்தி இருந்ததால் தொல்லை இல்லை. மற்றவர்களை பண்டாக்கள் படுத்தியதைப் பார்க்க முடிந்தது. அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடாமல் செல்வது நல்லது - கொஞ்சம் நேரம் எடுத்தாலும் பரவாயில்லை என்று சென்று கொண்டிருப்பது தான் சிறந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  10. கோவில் சுற்றுப்புறம் கண்டால் குமட்டிக் கொண்டு வரும்.. அதுவும் வெளிப்புறத் தெரு! பண்டா என்று வரும் குண்டாக்கள்.. என் அனுபவம் கொடுமை. அந்தப் பக்கமே போவதில்லை என்று முடிவு செய்வது மிக எளிதாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த வருஷம் போனீங்கனு தெரியலை. 2015 டிசம்பரில் நாங்க போனப்போ நன்றாகவே இருந்தது. கூட்டம் குறைச்சல்னு சொன்னாங்க. ஆனாலும் எங்களைப் பொறுத்தவரை கூட்டம் தான். ஏற்கெனவே ஒருவரை வழிகாட்டக் கூட்டிச் சென்றதாலோ என்னமோ எங்களுக்குத் தொந்திரவும் அதிகம் இல்லை. ஆனால் உறவினர்கள் எல்லோருமே அலைபேசி மூலம் எச்சரிக்கை கொடுத்த வண்ணம் இருந்தார்கள்.

      நீக்கு
    2. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் சுத்தம் என்றால் என்ன விலை என்றளவிற்குத் தான் இருக்கிறது. “பண்டா என்று வரும் குண்டாக்கள்” - உண்மை. இங்கே மட்டுமல்ல, காசி, ராமேஸ்வரம், அலஹாபாத் என எங்கே நீங்கள் சென்றாலும் இவர்கள் போன்ற இடைத்தரகர்கள் தொல்லை மிக மிக அதிகம். இயன்றவரை அவர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். காசு எவ்வளவு கொடுத்தாலும், இன்னும் அதிகம் கேட்பார்கள்.

      எங்களுக்குப் பிரச்சனை இல்லாமல் இருந்தது - எங்களுடன் இருந்தவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதால்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.

      நீக்கு
    3. இங்கே செல்லும்போது சென்றுவந்தவர்கள் அனைவருமே சொல்வது இந்த பண்டாக்கள் தொல்லை பற்றி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  11. ஆர்வத்துடன் படித்துவருகிறேன். பொதுவா புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்தா, பத்திரிகைக் காரங்க, தனியார்கள், படத்தைப் போட்டு, "எக்குத் தப்பா" விமரிசனம் எழுதி கோவில் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் சிக்கல் ஏற்படுத்திடறாங்க. ஏதேனும் மதப் பிரச்சனையும் வந்துடும்னு, யாரும் படமெடுக்க அனுமதி கொடுக்க பயப்படறாங்க. இப்படித்தான் என்னிடம் திருவட்டாறில் சொன்னார்கள். த ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படம் எடுக்க அனுமதி இருந்தால் பிரச்சனைகளும் உண்டு. இப்போதெல்லாம் “செல்ஃபி” எடுக்கும் மோகம் வேறு அதிகமாயிற்றே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....