புதன், 7 பிப்ரவரி, 2018

சாப்பிட வாங்க: கட்டா மீட்டா எலுமிச்சை ஊறுகாய்



ஊறுகாய் என்றதுமே காரமும், புளிப்பும் தான் நினைவுக்கு வரும் இல்லையா?? இது ஒரு வட இந்திய ஊறுகாய். ஏற்கனவே ஒருமுறை என்னுடைய பகிர்வில் "ஆம் கா சுண்டா" என்ற மாங்காய் இனிப்பு ஊறுகாய் பற்றி பகிர்ந்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


இதுவும் அது போல எலுமிச்சையில் செய்த ஊறுகாய். என்னவர் டெல்லியில் தன்னுடைய நண்பரின் வீட்டில் அவரின் அம்மா பரிமாறிய ஊறுகாயைப் பற்றி பிரமாதமாகச் சொன்னார். நீயும் அது போல செய்து பாரேன். இணையத்தில் தேடிப் பார். இல்லையென்றால் அவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றும் சொன்னார். நானும் "சரி செய்கிறேன்” என்று சொல்லி மறந்து விட்டேன்...:)

மீண்டும் சொல்லவே, இணையத்தில் தேடியதில் இந்த ஊறுகாய் செய்முறையை பலரும் பதிந்துள்ளனர். அதில் ஒன்றைப் பார்த்து செய்துவிட்டேன். உப்பில் ஊறிய எலுமிச்சை இருந்ததால் உடனே செய்ய முடிந்தது.

உப்பில் ஊறிய எலுமிச்சையுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஓமம், காலா நமக் என்று சொல்லப்படுகிற கறுப்பு உப்பு.. இவற்றுடன் வெல்லம் சேர்த்தால் கட்டா மீட்டா ஊறுகாய் தயார்.

சுவை அபாரம்!! நீங்களும் செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 10
வெல்லம் - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
ஓமம் - 1/2 ஸ்பூன்
கறுப்பு உப்பு - 1/2 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்

எப்படிச் செய்வது?

எலுமிச்சையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

அதனுடன் உப்பு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். அல்லது முன்னரே உங்களிடம் உப்பில் போட்ட எலுமிச்சை இருந்தாலும் பயன்படுத்தலாம்!

ஊறிய எலுமிச்சையுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஓமம், கறுப்பு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

வெல்லத்தை பொடித்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.

பாகுப்பதம் தேவையில்லை. கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

ஆறியபின் வடிகட்டி ஊறுகாயில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இனிப்பும், உரைப்பும், புளிப்பும் சேர்ந்த ஊறுகாய் தயார்.

காற்றுபுகாத பாட்டிலில் பத்திரப்படுத்தி வைக்கவும்.

இது சப்பாத்தி மற்றும் பராட்டாக்களுக்கு ஏற்றது.

நட்புடன்

ஆதி வெங்கட்


20 கருத்துகள்:

  1. இனிப்பாய் ஒரு ஊறுகாய்! சென்னை வர்த்தக மையத்தில் ஒருமுறை இரு வகை ஊறுகாய் வாங்கி அதில் இனிப்புச் சுவையைப் பார்த்திருக்கிறேன். என் பாட்டி தயிர் சாதத்துக்கு வெல்லம் சிலசமயம், மாம்பழம் சில சமயமும் தொட்டுக் கொள்வார். அதுவும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிர் சாதத்திற்கு வாழைப்பழம் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சிலரைப் பார்த்திருக்கிறேன். :)

      பயணம் முடிந்து சென்னை திரும்பியாச்சா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கட்டா மிட்டா - இங்கே வட இந்திய உணவகங்களில் பரிமாறப்படுகின்றது..

    தவிர,

    சிறுவயதில் கொதிக்கும் கரும்பஞ் சாற்றை ஆற வைத்து
    அந்தச் சாற்றில் இட்லி தோசை தொட்டு சாப்பிட்டதுண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரும்பஞ் சாற்றை ஆற வைத்து இட்லி தோசைக்கு தொட்டுக்கொண்டது - இப்படி நாங்கள் சாப்பிடதில்லை. இது எனக்குப் புதியது. சாப்பிட்டுப் பார்க்க ஆசை வருகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
    2. ஆஹா! கரும்புச் சாரில் இட்லி தோசை தொட்டுக் கொண்டா...சாப்பிட்டுப் பார்க்கணுமே...

      கீதா

      நீக்கு
    3. எனக்கும் புதிது தான். சாப்பிட்டுப் பார்க்கணும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. கட்டா மீட்டா எலுமிச்சை ஊறுகாய் - எனக்குப் பிடிக்கும்னு தோணலை. ஆனாலும் செய்முறை சுலபம்.

    வடநாட்டுல ஊறுகாயை சாப்பாட்டுக்கு (பரோட்டா போன்றவற்றிர்க்கு) நிறைய உபயோகப்படுத்துகிறார்கள்னு தோணுது. நான் சப்பாத்திக்கு கார எலுமிச்சை ஊறுகாய் தொட்டுப்பேன். மற்றபடி பரோட்டா போன்றவற்றிர்க்குச் சரிப்பட்டுவராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்பு ஊறுகாய் - ஒரு சிலருக்கு பிடிக்காது.

      இங்கே பரோட்டவுக்கு ஊறுகாய் நிச்சயம் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. கட்டா மீட்டா ஊறுகாய் நல்லாருக்குமா? இனிப்பாக இருக்கும் போலத் தெரியுதே. இதுவரை ஊறுகாய் காரமாகத்தான் சாப்பிட்டிருக்கேன். இப்படியானது சாப்பிட்டது இல்லை. பார்க்க வேண்டும்...

    கீதா: ஹை!! கட்டா மீட்டா...சாப்பிட்டதுண்டு. பிடிக்கும். ஆனால் ஸ்வீட்னு கொஞ்சமாத்தான்...வீட்டிலும் செய்ததுண்டு...எங்கள் வீட்டில் சிலருக்கு காரம் இனிப்பு கலவை பிடித்தவர்கள் உண்டு...என்னையும் சேர்த்து...செய்ததுண்டு..ஆனால் ஓமம் போட்டுச் செய்ததில்லை....அதுவும் சேர்த்துச் செய்துவிடுகிறேன்...

    ஆரஞ்சுத் தோலில் இப்படி ஊறுகாய் செய்து ஆரஞ்சுப் பச்சடினு சொல்லுவாங்க கிட்டத்தட்ட மாங்காய்ப்பச்சடி போலத்தான்....ஆரஞ்சும், நார்த்தாங்காயும் குழம்பு போலச் செய்து வைத்திருக்கேன்...வெல்லமும் சேர்த்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரஞ்சுத் தோலில் பச்சடி - அட இது கூட நல்லாத்தான் இருக்கும் போல.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  5. முதல் படமே நா ஊறவைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    நல்ல இனிப்பும் காரமும் சேர்ந்த எலுமிச்சை ஊறுகாய். என்னைப் பொறுத்த வரை எலுமிச்சை எப்போதுமே ஊறுகாய்களில் முதலிடம் பிடிப்பது. இந்த பக்குவமும் நன்றாய் இருக்கிறது. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  7. சாப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. ஒரு சிலருக்கு காரம் பிடிக்கும். ஒரு சிலருக்கு இனிப்பு. இது இரண்டும் கலந்த கலவை. எண்ணெய் துளியும் கிடையாது. வித்தியாசமாக இருந்தது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி.

      நீக்கு
  9. செய்முறை புதுசா இருக்கு. செஞ்சு பார்க்குறேன் அண்ணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....