வெள்ளி, 6 ஏப்ரல், 2018

குஜராத் போகலாம் வாங்க – நாகேஷ்வர் – ஜில் ஜில் ரமாமணி – மதிய உணவு….



இரு மாநில பயணம் – பகுதி – 22

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நாகேஷ்வர் - பிரம்மாண்ட சிவன் சிலை....

Bபேட்t த்வாரகாவிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய் சென்று சேர்ந்த இடம் நாகேஷ்வர்! பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் இந்த நாகேஷ்வர் எனும் இடமும் ஒன்று. இந்த இடத்திற்கு நிறைய புராணக் கதைகள் உண்டு. இந்த இடமும் எனது முதல் குஜராத் பயணத்தில் சென்றதுண்டு. அது பற்றி எழுதியும் இருக்கிறேன் என்பதால் கோவில் பற்றிய முழு விவரங்களை இங்கே எழுதப் போவதில்லை. அப்பதிவின் சுட்டி மட்டும் கீழே தருகிறேன். அனைவரும் படிக்கலாம்! தேவதாரு மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் இருக்கும் கோவில் மிகவும் சிறப்பான ஒன்று. நாங்கள் சென்றபோது அத்தனை கூட்டம் இல்லை என்பதால் நிம்மதியான தரிசனம். சில நிமிடங்கள் நின்று நிதானித்து தரிசனம் செய்து வெளியே வந்தோம். கோவில் பற்றிய ஒரு சிறு கதை மட்டும் இங்கே….
 
இங்கே இருக்கும் சிவலிங்கம் தெற்கு நோக்கியும் [GH]கோமுகம் கிழக்கு நோக்கியும் இருக்கிறது. இதற்கு ஒரு கதை உண்டு. அந்த கதை என்ன? பார்க்கலாம் வாங்க....

பெரும்பாலான கோவில்களில் சில பக்தர்கள் இறைவனுடைய திருவுருவத்திற்கு நேரே நின்று கொண்டு அவருக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு இறைவனின் திருவுருவம் தெரியாமல் செய்து விடுவதுண்டு. அப்படித் தான் இங்கேயும் நடந்திருக்கிறது. நாமதேவர் அப்படி ஒரு நாள் இறைவனின் திருவுருவத்திற்கு எதிரே நின்று கொண்டு பஜனைப்பாடல்களை பாடிக்கொண்டிருந்தாராம்.  அவருக்குப் பின்னால் நின்ற மற்ற பக்தர்கள், அவரை தள்ளி நிற்கும் படிச்சொல்ல, அவரோ, “எத்திசையில் கடவுள் இல்லையோ, அத்திசையைச் சொல்லுங்கள் நான் அங்கே நின்று கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.

சினம் கொண்ட பக்தர்கள் அவரை தூக்கிக் கொண்டு போய் தெற்கு திசையில் விட்டு விட்டு உள்ளே வர, சிவபெருமானின் ஜ்யோதிர்லிங்க ஸ்வரூபம் தெற்கு திசை நோக்கி திரும்பி, நாமதேவருக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தாராம்!



நாகேஷ்வர் - கோவில் வளாகம்....

கோவில் வளாகத்தில் மிகப்பெரிய சிவன் சிலை ஒன்று உண்டு. சென்ற முறையும் அங்கே புகைப்படம் எடுத்தாலும், இப்போதும் எடுத்தேன். கூடவே புறாக்களுக்கு இரை தருவதும் இங்கே உண்டு. சின்னச் சின்னதாய் கடைகள், சிவபெருமான் வழிபாட்டுக்கான பொருட்கள் விற்கும் கடைகள், நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடைகள் என கொஞ்சமே கொஞ்சம் கடைகள் தான். ஜோதிர்லிங்க ஸ்தலம் என்றாலும் அத்தனை பெரிய ஊர் இல்லை. ஜுஹாட் வண்டிகளில் வந்து செல்லும் பக்தர்கள் நிறைய பேர்.  சிறு கிராமம் என்று தான் சொல்ல வேண்டும். Bபேடியா இன மக்களை பார்க்க முடிகிறது.


குனிந்த தலை நிமிராத ஜில் ஜில் ரமாமணி...

வெளியே நின்று கொண்டிருந்தபோது ஜில் ஜில் ரமாமணியைப் பார்த்தேன் – அட நம்ம ஜில்லு மனோரமா இல்லை! இந்த ஜில்லு – அழகாய் பாவாடை சட்டை அணிந்து கொண்டிருந்த நாலு கால் செல்லம்! நீண்ட வாலும் உண்டு! குரங்கு வித்தை காண்பிக்கும் நாடோடிப் பெண்மணி ஜில்லுவை இழுத்துக் கொண்டு சென்றார். குனிந்த தலை நிமிராது ஒரு நடை – ”ரொம்பவே அடக்க ஒடுக்கமானவ இந்த ஜில்லு” என சொல்லாமல் சொல்லிக் கொண்டு போனாள்! காட்சிகளையெல்லாம் பார்த்து ரசித்தபடியே அங்கிருந்து புறப்பட்ட நாங்கள் நேராகச் சென்று சேர்ந்த இடம் – கிருஷ்ணா டைனிங் ஹால் – அன்றைக்கு நேராக மதிய உணவு தான்! வழக்கம் போல குஜராத்தி தாலி – இங்கே ஆள் ஒருவருக்கு 120 ரூபாய்! ஆனால் நன்றாகவே இருந்தது.


நாகேஷ்வர் - ஜுஹாட் வாகனம்....

உணவகத்தில் அமர்ந்திருந்தபோது பக்கத்தில் இருந்த வங்கியின் வெளியே கொட்டகை போட்டு, நாற்காலிகள் போட்டு வைத்திருந்தார்கள் – வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் காத்திருக்க! – Demonetization அறிவித்து ஒரு வாரம் ஆகிவிட்டது – வங்கிகளில் கூட்டம் குறைந்த பாடில்லை. பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டார்கள் என்றாலும், வண்டி இல்லாதவர்கள் பேங்கில் தானே மாற்றிக் கொள்ள முடியும். உணவகங்களில் கூட பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளவில்லை. கிருஷ்ணா டைனிங் ஹாலில் சாப்பிட்ட பிறகு பழைய ரூபாய் நோட்டைக் கொடுத்துப் பார்க்க, “சிரித்தபடியே, இது செல்லாது, உங்களுக்குத் தெரியாதா?” என்றார்!


அலைந்து திரியும் ஒட்டகம் - என்றைக்கு வேண்டுமானாலும் வெட்டப்படலாம்....

சரி Card Payment ஓகேவா எனக் கேட்க, பக்கத்து ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருக்கும் Machine-ல் Card-ஐத் தேய்த்து பணம் செலுத்திய பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  வழியெங்கிலும் காட்சிகளைப் பார்த்தபடியே சென்று சேர வேண்டிய இடம் சுமார் 400 கிலோமீட்டர்! முந்தைய தினமும் நீண்ட பயணம், இந்த தினமும் நீண்ட பயணம் தான். நடுவில் கொஞ்சம் நிறுத்தி வேறு ஒரு இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும். அது எந்த இடம், அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.


34 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம்!

      ஒரு நாள் கழித்து சொல்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பிரம்மாண்ட சிவனின் கண் - என்னமோ சரியில்லை! சிற்பி இன்னும் கொஞ்சம் அருள் சேர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் வட இந்திய கோவில் சிலைகள் அவ்வளவு அழகு இருப்பதில்லை - பெரும்பாலும் பளிங்குக் கல் சிலைகள்! சிவனும் அப்படித்தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஒரு பக்தருக்காக தெற்கு திசை திரும்பிய சிவபெருமானின் ஓரவஞ்சனை! மற்ற பக்தர்கள் எல்லாம் தொக்கா!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மற்ற பக்தர்கள் எல்லாம் தொக்கா! :)))//

      இதற்கு என்ன பதில் சொல்ல சொக்கா! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
  4. பாவம் அடிமைராணி ஜில்ஜில் ரமாமணி! அதன் இயற்கையான சுதந்திர வாழ்வு பறிபோனது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் தான். கட்டுப்பட்டிருக்கும், கூண்டுக்குக்குள் அடைபட்டிருக்கும், எந்த விலங்கினம் பார்த்தாலும் மனதில் வலி உண்டாகும்! ஜில் ஜில் ரமாமணி பார்க்கும் போதும் உண்டானது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அலைந்து திரியும் ஒட்டகம்....

    அடுத்த வரியில் சிறு அதிர்ச்சி!

    'என்றைக்கு வேண்டுமானாலும் வெட்டப்படலாம்' ..

    பாவம்.

    கொன்றால் பாவம் தின்றால் போச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொன்றால் பாவம் தின்றால் போச்சு!

      அதே தான். குஜராத்திகளில் பெரும்பாலானவர்கள் சைவம் என்றாலும் அசைவம் சாப்பிடுபவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களிலும் ஒட்டகத்தின் இறைச்சி சாப்பிடுவதாகத் தகவலுண்டு.... பாவம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆஹா இவர் தான் ஜேக்சன் துரையோ? என்ற கேள்வியைப் போல் படித்துப் பார்த்தேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. நாகேஷ்வர் என்றதுமே பழைய பதிவில் ஒரு நாகர் விக்ரக சிலை நீங்கள் போட்டிருந்தது நினைவுக்கு வந்தது...என் நினைவு சரியா என்று அந்தச் சுட்டியைப் பார்த்தேன் ஆஹா பரவால்ல நினைவு இருக்கே என்று நினைத்துக் கொண்டேன்.

    சிவன் சிலை அழகு! ஜில் ஜில் பாவம்...சுதந்திரமாய் இருந்தா என்ன விளையாட்டு விளையாடுவாள்!! இங்கு இவரிடம் அடங்கி ஒடுங்கிப் பொட்டிப் பாம்பாய்...பாவம் தான் இல்லையா.

    ஒட்டகமும் பாவம் நீங்கள் சொல்லியிருப்பது நடக்கலாம்..குஜராத்திலும் வெட்டுகிறார்களா?
    அடுத்த இடம் பற்றி அறிய ஆவல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய நாகேஷ்வர் பதிவினை தேடிப் பிடித்து மீண்டும் படித்தீர்களா? மகிழ்ச்சி.

      ஜில் ஜில் சுதந்திரமாய் இருந்திருந்தால்..... ஜாலியாக இருந்திருப்பாள்... என்ன செய்ய.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. ஒட்டகத்தை காணும்போது பாவமாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயன்படும் வரை வைத்திருந்துவிட்டு பிறகு தன்னிச்சையாக திரிய விடுகிறார்கள் - பாவம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. நம்ம குட்டீஸ்களுக்கு கூட இம்புட்டு ஃபிட்டிங்கா இப்படி உடை அமையாதுண்ணா. செம ஜோர் ரமாமணி சாரி ஜில் ஜில் ரமாமணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபிட்டிங் உடை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  11. ஜில் ஜில் ரமாமணி முடிக்கும் வண்ணம் தீட்டி இருக்கிரார்கள் போலும்.

    நாடோடிப் பெண்மணியும் ராணி போல் கம்பீரமாய் இருப்பார் என தெரிகிறது.
    ஒட்டகம் பற்றிய செய்தி கவலை அளிக்கிறது.
    பயன்படும் வரை உயிருக்கு மதிப்பு, பயன் இல்லை என்றால் வெட்டுபடும் பாவம்.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரங்கை மட்டுமே படம் எடுத்தேன் - அந்த நாடோடிப் பெண்ணை எடுத்து பிரச்சனையில் மாட்ட விருப்பமில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. பிரமாண்டமாக வீற்றிருக்கும் நாகேஷ்வர் சிவன் கவருகிறார். தகவல்களுடன் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. கோவில் பற்றி அறிவதை விட அதைச் சுற்றி புனையும் கதைகள் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. கடந்த முறை இந்தியாவிற்கு மனைவி மகளுடன் வந்த போது பெங்களுரில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றேன். அங்கு இது போன்ற மிக பிரமாண்டமான் சிவன் சிலையும் இருந்தது. அங்கு அந்த சுவாமியின் முன் எல்லோரும் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர். அந்த சிவன பார்க்க மிக அழகாக இருக்கும் என் மனதிற்கு பிடித்தது நானும் படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் என்ன எல்லாம் கேம்ராவின் உள்ளேயே இன்னும் இருக்கிறது பாவம் சிவன் என் கேமிராவீர்கு உள்ளயே சிறைபட்டு கொண்டு இருக்கிரார் கூடிய சிக்கிரம் அவரை இங்கு ரிலீஸ் செய்ய வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எடுத்த படங்களையும் ரிலீஸ் செய்யுங்கள். நாங்களும் பார்க்கலாமே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  15. கோவிலும் பிரம்மாண்ட சிவன் சிலையும் அருமை பார்க்க மிகவும் அழகாக இருந்தது.கதையும் சுவாரஸ்யம்.

    ஜில் ஜில் ரமாமணி பெயர் சூட்டல் சிரிப்பை தந்தது. அவரும் அழகாய்தான் இருக்கிறார்.

    தன் முடிவு தெரியாத அந்த ஒட்டகம் பாவம் என்ன செய்ய...விதி..வலியதுதான்..

    அடுத்த நிகழ்வுகளை காண ஆவலோடிருக்கிறேன். நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  16. படங்களும் அழகு.தகவல்களும் சிறப்பு. தொடர்கிறேன் வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  17. சிவனுக்குக் கழுத்தில் வீக்கமாய் இருக்குப் போலவே! :)))) பகிர்வுக்கு நன்றி. இந்தக் கோயில் போனதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த்வாராகா அருகில் தான். சென்றிருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....