திங்கள், 11 ஜூன், 2018

கதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி



ஓலா ஆட்டோ:

ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற கிழங்கினை விற்றுக் கொண்டிருந்தார்கள். குண்டு குண்டாக வால் போன்ற நுனியுடன் இருந்தது. யாரேனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா???

Ola ஆட்டோ புக் செய்து விட்டு காத்திருந்தோம். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கட்டணம் காட்டுகிறது. இன்று கொஞ்சம் கூட இருந்தும் புக் செய்து விட்டுக் காத்திருந்தோம்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று பாடாத குறை!!! எத்தனை முறை ஓட்டுனருக்கு அழைத்தாலும் இதோ வருகிறேன் என்கிறார். ஆனால் வரவில்லை. எனவே கேன்சல் செய்து விட்டு, மறுபடியும் புக் செய்யப் பார்த்தால் கட்டணம் இன்னும் அதிகம் காட்ட, வேண்டாம் என்று யோசிப்பதற்குள் பேருந்து வரவே அதிலேயே வீடு வந்து சேர்ந்தோம்.




ராஜகோபுரத்தை இரண்டு விதமாக இன்று புகைப்படமெடுத்தோம். ஒன்று நானும் இன்னொன்று மகளும்.

ஒரு சம்படத்தின் கதை!!


சமீபத்தில் என் மாமியார் தன்னிடமிருந்த ஒரு எவர்சில்வர் சம்படத்தை காணவில்லை என்றும், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பல வருடங்களாக தன்னிடம் இருப்பதாகவும், கிழங்காட்டம் ( நல்ல கனமாக ) இருக்கும் என்றும் ஒருபுறம் மூடியில் நசுங்கி இருக்கும் என்றார்.

நானும் என்னிடமுள்ள, அவர் தந்த பாத்திரங்களை எடுத்துக் காண்பித்தேன். அதில் அந்த சம்படம் இருந்தது. "உன்கிட்ட கொடுத்தேனா! மறந்து போயிடுத்து! இப்போ தான் நிம்மதியாச்சு!” என்றார்.

எவ்வளவு வருஷமா என்கிட்ட இருக்கு. ஒருதடவை நெய்வேலியிலிருந்து கடலூர் வரைக்கும் பஸ்ல போனோம். குழந்தைகள்லாம் அப்போ சிறுவயசு. அப்போ எங்க இரண்டு பேருக்கும், என் மூணு குழந்தைகளுக்கும் அந்த சம்படம் நிறைய எலுமிச்சை சாதம் எடுத்துப் போனேன். இறங்கினதும் சாப்பிட.

பஸ் விட்டு இறங்கும் போது பார்த்தா சம்படத்தை காணலை. கண்டக்டர்ட்ட கொஞ்சம் இருப்பா! குழந்தைகளுக்கு பசிக்கும்! டப்பாவைக் காணலைன்னு சொன்னேன். தேடிப் பாருங்கன்னு சொன்னான். குனிஞ்சு பொறுமையா பார்த்துண்டே வந்தேன்.

பஸ் ஆட்டத்துல நகர்ந்து போய் கடைசில ஒரு இடத்துல சம்படம் மாட்டிண்டு இருந்தது. அதில் தான் அந்த நசுங்கல். இப்போ தான் நிம்மதியாச்சு. உன்கிட்ட தான் இருக்கு. தொலைஞ்சு போகலை! என்றார்.

ஒரு எவர்சில்வர் சம்படத்தின் பின்னே இருக்கும் பசுமையான "தாயுள்ளம்" பொதிந்த நினைவு. இது முப்பது வருடத்து நினைவு. உங்களுடனும் இதை பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

உலக சுற்றுப்புற சூழல் தினம்:

ஒவ்வொருவரும் அவரவர் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். மண்ணின் வளம் கெடாமலும், நீர் வளம் கெடாமலும் பாதுகாப்போம். பிளாஸ்டிக் அரக்கனை முடிந்தவரை தவிர்ப்போம்.

மரக்கன்றுகளை நட்டு வைத்து வரும் தலைமுறைக்கு நல்லது செய்வோம். விதைப்பந்துகளை விழாக்காலங்களில் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் பரிசளிப்போம்.

குழந்தைகளின் பிறந்தநாளில் அவர்கள் கையால் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்கச் சொல்லி சமுதாயத்துக்கு நல்லதொரு பிரஜையாக வளர்ப்போம்.

ஒவ்வொருவரும் தன் வீடு துவங்கி சுத்தத்தை ஆரம்பித்தால் தான் நம் சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கும். நாம் ஏன் செய்ய வேண்டும் என்று நினைத்தால்..... எதுவும் சாத்தியமில்லை.

எங்கள் குடியிருப்பிலும் என்னால் இயன்ற முயற்சிகளை அன்றாடம் செய்து கொண்டே இருக்கிறேன். முதல் முயற்சியாக மாநகராட்சிக்கு குப்பைகளைப் பிரித்துத் தர இதுவரை முயன்று கொண்டே இருக்கிறேன்.

பெரும்பாலும் ஒத்துழைப்பு இருந்தாலும் ஓரிருவரால் 100 சதத்தை எட்ட முடிவதில்லை. அவர்களும் கூடிய விரைவில் ஒத்துழைப்பு தந்து எங்கள் குடியிருப்புக்கும் மாநகராட்சியின் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நீங்களும் உங்களால் இயன்ற முயற்சிகளை செய்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள்.

இப்படியும் மனிதர்கள்!!!

வேலைகளை முடித்து விட்டு சற்றே கண்ணயர்ந்தேன். வாசலில் அழைப்பு மணியின் அலறல்!!

கதவைத் திறந்தால் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். ஆண்ட்டி!! வாடகைக்கு இருக்கீங்களா?? இல்லை ஓனரா?? என்றாள். யாருப்பா நீ?? என்றேன்.

இந்த தளத்தில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்குப் பார்க்க வந்தோம் என்றாள். இங்க கார்ப்பரேஷன் தண்ணீரா?? போர் தண்ணீரா?? என்று அடுத்தடுத்து கேள்விக்கனைகளைத் தொடுத்தாள்.

இரண்டுமே இருக்கு என்றேன். இல்ல ஆண்ட்டி!! போர் தண்ணீர்னா முடியெல்லாம் நரை வந்துடும், கொட்டிப் போயிடும், தோல் கறுத்துப் போகும், பொலிவு போயிடும். அதனால தான் கேட்டேன் என்றாள்.

நான் எவ்வளவோ சொல்லியும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தாள். நான் அவளின் கேள்விகளுக்கு நடுவில் தான் அவளைப் பற்றிய தகவல்களை பிடுங்கி இழுக்க வேண்டியிருந்தது!

அப்போதும் அவளுக்கு கிளம்பும் வரை சந்தேகங்கள்!!! என்னை விட சற்றே வயது குறைந்து இருப்பாள், அதற்காக வார்த்தைக்கு வார்த்தை ஆண்ட்டியா!!!...:)))

எவ்வளவோ பேர் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்...:( கார்ப்பரேஷன் தண்ணீர் தான் வேண்டுமென்றால் என்ன செய்வது??? வீடு வாங்கும் போது கூட நாங்கள் இவ்வளவெல்லாம் கேட்கவில்லை!! தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இருந்தா சரி, என்று தான் நினைத்தோம்...

படமும் கவிதையும்…

என்னவர் எடுத்த படம் ஒன்றிற்கு நான் பகிர்ந்து கொண்ட கவிதை!



குழலால் ஒலியெழுப்பி
குழந்தைகள் மனம்
கவர்ந்து, சந்தோஷத்தால் நிறைவது போல..

காலஓட்டத்தில் இந்த
மனிதனின் வயிறும்
மனமும் நிறைவது
என்றோ?????

சாம்பார் பொடி:

இரண்டு நாட்களாக சாம்பார்ப்பொடிக்கு மாடியில் காயவைத்து, நேற்று மாலை அரைத்து வர மிஷினுக்குச் சென்றேன். வழக்கமாக அரைக்கும் இடத்திற்குச் சென்றால், மிஷின் சரியில்லம்மா!! நாளைக்கு வா! என்றார்.

மீண்டும் நாளைக்கும் வரணுமா??? என்று நினைக்கும் போதே, அங்கிருந்த பெண்மணி, பக்கத்துல இன்னொரு இடத்துல அரைப்பாங்க! அங்க போங்க! என்றார். அவருக்கு என் நன்றியைச் சொன்னேன்.

அவர் சொன்ன இடத்தில் கொடுத்து விட்டு, நின்றேன். திடீரென சந்தேகம்!!! அந்த ஊழியரை அழைத்து, அண்ணே!! முதல் தடவையா இங்க குடுக்கறேன்!! சோம்பு போட்டு அரைப்பாங்களா??? என்றேன். இல்லம்மா!! வெறும் மிளகா தான் அரையுது!! என்றதும் நிம்மதியானேன்.

மிளகாய் நெடியில் கண்களிலும் மூக்கிலும் எரிச்சல்! புடவைத் தலைப்பால் மூக்கோடு போர்த்திக் கொண்டு, சற்று வெளியே நின்றதும், வெளிக்காற்று ஆறுதல் தந்தது.

என்னுடைய முறை வந்ததும், மூன்று தடவை மாற்றி மாற்றிப் போட்டு அரைத்து ஒரு பேப்பரில் கொட்டி, ஒரு குச்சியால் கிளறி இரண்டு நிமிடம் ஆறவைத்துக் கொடுத்தார். ஆச்சரியமாக இருந்தது. அரவைக்கூலியும் வழக்கமாக அரைக்கும் கடையை விட பத்து ரூபாய் குறைவு. வியாபார உத்தி!!!

எந்தத் தொழிலிலும் உத்திகளைக் கையாண்டு வெற்றி பெறலாம், முன்னேறலாம். அடுத்த தடவை இங்கேயே கொடுக்கலாம் என முடிவு செய்து என் நடையைத் தொடர்ந்தேன்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங். ராஜகோபுரத்தின் இரண்டு படங்களும் டாப். அழகு.

    ஓலா ஆட்டோ நீங்களாக கேன்சல் செய்தால் - அதுவும் சற்று நேரம் விட்டு - அடுத்த ட்ரிப்பில் (எத்தனை நாள் கழித்துப் போனாலும்) அபராதம் பிடித்து விடுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டுனர் மறுத்தார் என்ற காரணத்துடன் நாம் கேன்ஸல் செய்தால் அபராதம் பிடிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. வர வர ஓலா செய்யும் அராஜகம் கொஞ்சம் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. அதிகம் வசூலித்தார்கள் என்று நாம் புகார் செய்தல் உடனே திருப்பித் தந்து விடுகிறார்கள்.

      நீக்கு
    3. ஓலாவின் அராஜகம் - சில சமயங்களில் ரொம்பவே படுத்துகிறார்கள். தலைநகரில் ஓலா ஆட்டோ கிடையாது! மினி, மேக்ரோ என ஏதேதோ இருக்கிறது! கட்டணமும் அதிகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  2. சம்படம் பற்றிய சம்பவம் நெகிழ்வு. ஆண்ட்டி!!!! கவிதையை ரசித்தேன்.

    நாங்கள் நேற்று சாம்பார்பொடி அரைத்தோம். இதே எச்சரிக்கைகளுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்ட்டி! :)))) ஹாஹா.... நீங்களுமா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஓலா ஆட்டோ கூப்பிடுவதே இல்லை. இந்த அதிகப்படி சார்ஜ் எல்லாரிடமும் இப்படித் தான் மறைமுகமாக வசூல் செய்வதாகச் சொன்னார்கள். ஆகவே கூப்பிடுவது இல்லை. மற்றபடி இதில் வந்திருக்கும் செய்திகளை முகநூலிலும் படிச்சேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறைமுக வசூல்! பல நிறுவனங்களில் இப்படி உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  4. கதம்பம் மணத்தது, சம்படத்தின் கதை எல்லோர் வாழ்விலும் இப்படி ஏதோவொரு கதை உண்டு சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. கதம்பத்தை ரசித்தேன்.

    சம்படம், கோபுர வாசல், குழம்புப்பொடி, கேள்விக்குப் பிறந்த பெண் - எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. சென்னையில் இருந்தவரை மக்கும் குப்பைகளை உரமாக்க சில முயற்சிகள் எடுத்தும் மற்றவர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் எதுவும் பலனளிக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் பச்சை, சிவப்பு என்று இரண்டு பிளாஸ்டிக் குப்பை கூடைகளை கொடுத்து, குப்பைகளை பிரித்துப் போடச் சொன்னார்கள். என் வீட்டில் பணி புரிந்த பெண்ணோ, "யாருமே பிரித்துப் போடுவதில்லை அம்மா, நீங்கள் மட்டும் ஏன் பிரித்துப் போடுகிறீர்கள்?" என்று கேட்டு எல்லா குப்பைகளையும் ஒன்றாகத்தான் போடுவாள். என்ன செய்ய முடியும். இங்கு(பெங்களூரில்) அவர்கள் குப்பைகளை தனியாகத்தான் வாங்கிச் செல்கிறார்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகர் தில்லியில் எத்தனை சொல்லியும் யாரும் பிரித்துப் போடுவதில்லை. பிளாஸ்டிக் கவர்களில் போட்டு மேலிருந்து கீழே வீசி எறியும் பலரை இங்கே பார்க்கிறேன் - யார் தலையில் விழுந்தால் அவர்களுக்கென்ன! அவர்கள் வீட்டில் குப்பை இருக்கக் கூடாது - அவ்வளவு தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  8. அண்ணி! நீங்க ஏன் வண்டி ஓட்ட கத்துக்க கூடாது?! யாரையும், எதுக்கும் சார்ந்திருக்க வேண்டாமே! நீங்களும், ரோஷிணியும் எங்க வேணும்ன்னாலும் எப்ப வேணும்ன்னாலும் போகலாம்..

    அட்லீஸ்ட், ரோஷிணிக்காவது வண்டி ஓட்ட கத்து கொடுங்க .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி! ரோஷ்ணிக்கு இன்னும் லைசன்ஸ் வாங்கும் அளவு வயதாகவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  9. அழகிய படங்களும் கதம்பச் செய்திகளும் .. அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    நம் சௌகரியத்திற்காக முதலில் வந்தது.அது சௌகரியமானதும் நம்மை மிரட்டி பார்க்குது. வாழ்க்கையில் எல்லாமே இப்படித்தான். இரண்டு கோபுர படங்களும் மிக அழகு. எடுத்த உங்களுக்கு எனது பாராட்டுகள்.

    பாத்திர நினைவை பகிர்ந்த விதம் சிறப்பு. இது எனக்குள்ளும் சில மலரும் நினைவுகளை தூண்டியது.

    உலக சுற்றுப்புறத்தை பாதுகாக்க நல்ல யோசனைகளை செய்துள்ளீர்கள்.இங்கும் குப்பைகளை தனிதனியாகத்தான் வைக்க வேண்டும்.

    கவிதை மிகவும் அழகாய் படைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.

    சாம்பார் பொடி அரைக்கும் முன் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நான் மிஷினில் பொடி அரைத்து கொள்ளும் பழக்கத்தை விட்டு நிறைய வருடங்கள் ஆகி விட்டது.அவ்வப்போது மிக்ஸியில்தான் அரைத்துக் கொள்கிறேன். சோம்பு,மசாலா சேர்ந்த கலவையுடன் அரைப்பதால் ஒத்து வராமல் மிக்ஸிக்கு மாறி விட்டேன்.

    கதம்பம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
    2. //மிக்ஸிக்கு மாறி விட்டேன்.// அதே, அதே! என்னோட ஓட்டும் மிக்சிக்கே! :))))))

      நீக்கு
    3. அட நீங்களும் மிக்ஸிக்கு மாறி விட்டீர்களா? நல்லது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    4. @வெங்கட் நாகராஜ், நாங்க எப்போவோ உஜாலாவுக்கு மாத்திட்டோம். எண்பதுகள் நடக்கையிலேயே! அதுக்கு முந்திக் கைமிஷின், காப்பிக்கொட்டை மிஷின் போல் இருக்கும். அதில் திரிப்பேன். ;))))

      நீக்கு
    5. காப்பிக்கொட்டை மிஷின் போல சாம்பார் பொடி அறைக்க ஒரு கைமிஷின் - பார்த்ததில்லை.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. கோபுர தரிசனம்.. படங்கள் அருமை. நல்ல தொகுப்பு. சிலவற்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தபோது வாசித்திருக்கிறேன்.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  12. துளசி: கதம்பம் அருமை சகோதரி. கவிதை நன்றாக இருக்கிறது. ஓலோ இதெல்லாம் அவ்வளவு பரிச்சயமில்லை இங்கு இல்லாததால்...

    கீதா: எனக்கு ஓலா விட ஊபர் பெட்டரோனு தோணூம். சில சமயம் ஊபரை விட ஓலா குறைவா இருக்கும். ஓலா ஊபர் ரெண்டுமே ஆட்டோ சரியா இல்லை...

    கவிதை நல்லாருக்கு ஆதி. சம்புடம் கதை சூப்பர் இப்படி ஒவ்வொருவர் வீட்டிலும் சில சம்படங்கள் பாத்திரங்கள், பொருட்களுக்கு கதைகள்இருக்கும் இல்லையா...

    சரி சரி நான் ஜஸ்ட் ஃப்யூ டேய்ஸ் தான் நெல்லையை விட முன்னாடின்றதுக்காக நெல்லை என்னை அக்கானு கூப்பிட்டு கர்ர்ர்ர்ர் சொல்ல வைக்கறா மாதிரி உங்களை நான் ஆண்டினு எல்லாம் கூப்பிட்டு கர்ர்ர்ர்ர்னு சொல்ல வைக்க மாட்டேன் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன் இத ஏன்னு கேட்டீங்கனா நான் உங்களை விடப் பெரியய்வன்னு என்னை ஆண்டினு சொல்லிடக் கூடாது பாருங்க அதுக்குத்தான் ஒருஸேஃப் கேம் தான் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  13. தலைநகரில் ஓலா/ஊபர் ஆட்டோ இல்லை.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....