வெள்ளி, 26 ஜூலை, 2019

காஃபி வித் கிட்டு – முதியோர் இல்லம் – ரசனை – யுகங்கள் – பதிவர் சந்திப்பு





காஃபி வித் கிட்டு – பகுதி – 38

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:


படித்ததில் நெகிழ்ச்சி தந்தது:



கீழே வரும் நிகழ்வு/கதை கில்லர்ஜி அவர்களின் “வெங்கடாஜலம் ஐயா” பதிவுகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது. படித்துப் பாருங்களேன்.

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன். மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். வருடங்கள் கடந்தன.

ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.காற்றுஇல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும், சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான். “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. உண்மையான சம்பவமாக இல்லாமல் இருக்கலாம் – ஆனால் இப்படியும் நடக்கலாம்!

அம்பியுடன் ஒரு சந்திப்பு:

பதிவர் அம்பி – ”அம்மாஞ்சி” என்ற தலைப்புடன் வலைப்பூவில் 2006-இல் எழுத ஆரம்பித்து கடைசியாக பதிவு எழுதியது 2010-ல்! கடைசியாக எழுதிய பதிவு – ப்ளே ஸ்கூல்.  இப்போதைய பதிவர்களில் கீதாம்மா போன்ற சிலர் இவரை அறிந்திருக்கக் கூடும்.  சில மாதங்கள் முன்னர் தில்லி-ஆக்ரா-அலஹாபாத்-வாரணாசி வரும் திட்டம் இருப்பதாகவும் அதில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எனது பழைய பதிவுகளைப் படித்து, பிறகு என்னையும் தொடர்பு கொண்டிருந்தார். தேவையான தகவல்களை அனுப்பி இருந்தேன். சமீபத்தில், சில நாட்களுக்கு முன்னர் குடும்பத்துடன் தில்லி வந்திருந்தார். தில்லியில் ஒரு மாலை வேளையில் இந்தியா கேட், ராஜ்பத் என சுற்றி வந்தோம். மாலை நேரம் என்பதால் சிறிது நேரம் அவர்களுடன் செலவிட முடிந்தது. அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவ்வப்போது இப்படி தில்லி வரும் பதிவர்களைச் சந்திப்பது ஒரு வித மகிழ்ச்சி தானே!  சந்திப்பின் போது நான் படங்கள் எதுவும் எடுக்கவில்லை என்பதால் இங்கே சேர்க்கவில்லை!

படித்ததில் ரசித்த கவிதை:  

மோகன்ஜி கவிதைகள் எப்போதும் ரசிக்க முடிந்தவை. அவர் எழுதிய கவிதை ஒன்றை சமீபத்தில் படித்து ரசித்தேன். அந்தக் கவிதையும் அதற்காக அவர் தேர்ந்தெடுத்து பதிவிட்ட படமும் இங்கேயும்… நீங்களும் ரசிக்க ஏதுவாய்.  மோகன்ஜி அவர்களுக்கு நன்றியுடன்…



யுகங்கள் கடந்து...

மொழிகள் பிறப்பதற்கு முன்னமே
நாமிருவரும் பிறந்து விட்டோம்.
இன்னமும்,
மௌனத்தைக் கண்டு என்னடி பயம்?

உன் இமை முடிகளின் எண்ணிக்கை
நானறிவேன்.
என் கண்களை விடவா பேசும் வாய் அறியும்?
இன்னும் மௌனத்தைக் கண்டு என்னடி பயம்?

பேசியதெல்லாம் போதும்.
சின்னச் சின்ன வார்த்தைகள்.....
காதல், அன்பு, பாசம்.....
யாருக்கு அவை வேண்டும்?

மெல்லத்தான் என் முகவாயைக்
கைகளில் ஏந்திக் கொள்.

என் முகத்தில் விழும் உன்
குழல் கற்றைகளை ஒதுக்காதே.

பார்க்க முடிந்தால்
என் கண்களைப் பார்.

பேதைப் பெண்ணே!
இன்னும் மௌனத்தைக் கண்டு என்னடி பயம்?

-    மோகன்ஜி, ஆகஸ்ட் 1982.

ரசித்த விளம்பரம்:

விளம்பரங்களில் வரும் பொருட்களை நாம் வாங்குகிறோமோ இல்லையோ, அவர்கள் விளம்பரம் செய்யும் விதம் நமக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும். அம்மாவிற்கு நடை அவசியம் என்பதற்காக தயிர் வாங்கி வரச் சொல்லும் மகன்… பாருங்களேன்.



பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

இதே ஜூலை மாதத்தின் கடைசி வாரம் – 2010-ஆம் ஆண்டு எழுதிய பதிவொன்று – ரசனை – நெய்வேலி நினைவொன்றினை பகிர்ந்திருக்கிறேன்.  இப்போது எனது பதிவுகளை வாசிக்கும் பலர் இப்பதிவினை வாசித்திருக்க வாய்ப்பில்லை. இதோ இங்கே அதன் இணைப்பு. படித்துப் பாருங்களேன்!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

56 கருத்துகள்:

  1. இன்றும் நிஜமாகவே இடது கையில் சூடான காஃபியுடன் உங்கள் தளம் திறக்கிறேன்!

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாசகங்கள் நம்பிக்கை ஊட்டுபவை. எதுவும் நிஜமாகும்வரை முழு நம்பிக்கை வருவதில்லை என்பதும் உண்மை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாகும் வரை முழு நம்பிக்கை வருவதில்லை.... ஹாஹா... உண்மை தான் ஸ்ரீராம். பல வாசகங்கள் படிக்க மட்டுமே நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தாய் படுத்திருந்த பாயை தூக்கிப் போட்டானாம் மகன், தாய் இறந்ததும். அவன் மகன் அதைப் பொறுக்கி வைத்துக் கொண்டானாம்- 'இது உனக்குத் தேவைப்படும் அப்பா' என்று! இப்படியும் ஒரு கதை படித்திருக்கிறேன். பார்த்துக்கொள்ள யாருமில்லை என்று ஆஸ்ரமத்தில் சேர்ப்பவன் மாதத்திற்கு ஒருமுறைதான் சென்று பார்த்திருக்கிறான். அல்லது அதாவது பார்தானே என்று பாசிட்டிவாக நினைக்க வேண்டுமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது உனக்குப் பயன்படும் அப்பா.... சாட்டை....

      பாசிட்டிவ் ஆக நினைக்க வேண்டுமோ? டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அம்பி - அறிவேன் நானும். அதாவது அவர் ஒரு பதிவர் என்று. அவர் சகோதரரும் பதிவர் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பியின் சகோதரரும் பதிவர் தான். பதிவர் தக்குடு. அவரும் இப்போதெல்லாம் பதிவுகள் எழுதுவதில்லை என்பது வருத்தம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. மோகன்ஜி கவிதையை நானும் ரசித்தேன்.

    அவருக்கென்ன,
    கவி ஆயிரம் சொல்வார்,
    கதை ஆயிரம் படைப்பார்
    ஆன்மீகத்தில் திளைப்பார்
    திளைக்கவைப்பார்
    பாசமாகப் பழகுவார்
    படப்பாடல்களும் பகிர்வார்...

    பிளாக்கை விட்டு விட்டாரே என்று தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா பதில் கவிதையா.... மோகன்ஜி Blog-ஐ விட்டு விட்டாரே என எனக்கும் வருத்தம் உண்டு ஸ்ரீராம். முகநூலில் அவ்வப்போது எழுதுவது உங்களுக்குத் தெரிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    முதல் வாசகம் அருமை ஜி. என் மகனுக்காக நான் எழுதி வீட்டில் ஒட்டி வைத்திருந்தேன் அவன் சிறு வயதில். விவேகானந்தரின் பொன்மொழி...அவன் அதை தன் நோட்புக்கில் எழுதி வைத்திருந்தது அவன் படிக்கச் சென்ற பிறகு புக் ஷெல்ஃபை க்ளீன் செய்த போதுதான் தெரிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்தது என்று தெரிந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. விளம்பரம் கண்கலங்க வைத்தது! இனி கடைக்கு செல்லும் முதியோரை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். அவர் மகன்/மகளைத் திட்டாமல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம்.... இது போன்ற விளம்பரங்கள் அவ்வப்போது தேடித் தேடி பார்ப்பது எனது வழக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.//

    நிச்சயமாக ஜி! அனுபவங்கள் பல கற்றுக் கொடுக்கின்றன. அது உண்மையோ இல்லையோ மனம் மிகவும் கஷ்டமாகிவிட்டது. இருவரும் சம்பாதிப்பவர்கள் என்றால் வீட்டில் நம்பகமாக ஆள் ஒருவரைப் பொட்டுப் பார்த்துக் கொள்ளலாம். ஆசிரமத்திற்கும் பணம் கொடுக்கத்தானே செய்கிறார்கள். அதைப் பார்த்துக் கொள்ளும் நபருக்குக் கொடுக்கலாமே. அட்லீஸ்ட் முதியவருக்கு வீட்டில் தன் குழந்தைகளுடன் இருந்தோம் என்ற ஒரு சந்தோஷம் கிட்டுமே. இப்படியும் தோன்றுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்கள் நமக்கு நல்ல பாடம் கற்பிக்கும் என்பது உண்மை கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அம்பி என்று கீதாக்காவின் தளத்தில் அவர் குறிப்பிட்டு அறிந்துள்ளேன் அவர் தளங்கள் வாசித்ததில்லை. அவர் தளங்கள் சென்று பார்க்கிறேன்.

    மோகன்ஜி அவர்களின் கவிதை அட்டகாசம். அவரைப் பற்றி தளங்களின் மூலம் அறிகிறேன். அவர் தளங்களும் கொஞ்சம் சென்றதுண்டு. அருமையான எழுத்து.

    விளம்பரம் அட்டகாசம்!!! மிகவும் ரசித்தேன்..

    உங்களின் முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு அப்புறம் வருகிறேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பி, அவர் தம்பி தக்குடு என இரண்டு பதிவர்களும் ஹாஸ்யமாக எழுதும் திறமைசாலிகள். முடிந்தால் படித்துப் பாருங்கள் கீதாஜி.

      பதிவின் மற்ற பகுதிகளும் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. //அவ்வப்போது இப்படி தில்லி வரும் பதிவர்களைச் சந்திப்பது ஒரு வித மகிழ்ச்சி தானே! //

    இல்லையா பின்னே !!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையா பின்னே.... :) அதே தான். உங்களுக்கும் இப்படி பதிவர்களைச் சந்திப்பது வழக்கம் ஆயிற்றே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  11. அந்த தாயாரின் கோரிக்கையை கேட்டு மனம் துடித்து விட்டது ஜி

    பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு

    மோகன்ஜி அவர்களின் கவிதை அருமை
    விவேகாநந்தரின் பொன்மொழி எனக்கு பிடித்தமானது.

    என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயாரின் கோரிக்கை -:( மனது கனத்தது இல்லையா கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.
    உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. அனைத்தும் அருமை.
    முதியோர் இல்ல தாயின் வேண்டுகோள் மனதை கலங்க வைக்கிறது.
    விளம்பரம் மிக அருமை.

    மோகன்ஜி அற்புதமாக எழுதுவார். மீண்டும் வலைத்தளம் வந்தால் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகன்ஜி மீண்டும் வலைத்தளம் வந்தால் மகிழ்ச்சி பலருக்கும் உண்டாகும் கோமதிம்மா. விட்டு விலகி முகநூலில் அடைக்கலம் ஆன பதிவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. தில்லிக்கு வந்த பதிவர் அம்பி இந்த ஊரில் அட்லாண்டாவில் இருக்கிறார்.
      நன்றாக இருக்கிறாரா. திருமண்மாவதற்கு முன்பிருந்தே எங்கள் எல்லோருக்கும் தெரியும். இரு குழந்தைகளோ.

      எல்லோரையும் வம்புக்கு இழுப்பார்.எனக்கும் கீதாவுக்கும் 65000 ரூபாய்
      பட்டுப்புடவை வாங்கித் தருகிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.
      தக்குடு திருமணத்திற்குப் போயிருக்கிறோம் 2010 என்று நினைக்கிறேன்.
      பெண் களூர் என்று பெயர் வைத்தது அவர்தான் என்று நினைக்கிறேன்.
      நன்றி வெங்கட்.

      அம்மா பாசம் கனக்க வைக்கிறது.
      நல்ல பிள்ளைகளும் இருக்கிறார்களே.

      தயிர் விளம்பரம் நல்லதுதான்.
      அதற்குப் பதில் தானே அம்மாவை அழைத்துச் செல்லலாம் மகன்.

      இரவு வேளையில் தடுக்கி விழுந்தால் என்னாவது.

      மோகன் ஜி கவிதை அருமை.
      வலைப்பதிவு எழுதாதது வருத்தமே.
      மிக மிக நன்றி வெங்கட்.






      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா... ஆமாம் தற்போது வாசம் அட்லாண்டாவில்! இந்தியாவிற்கு விடுமுறையில் வந்திருக்கிறார். அம்பியின் தம்பி தக்குடு தான் பெண்களூர் என எழுத ஆரம்பித்தார்.

      தயிர் விளம்பரம் - மகனும் கூடவே சென்று வந்திருக்கலாம் - எனக்கும் இந்த மாதிரி தான் தோன்றியது வல்லிம்மா....

      மோகன்ஜி வலைப்பூவில் எழுதாதது ஒரு இழப்பு தான் - என் போன்று முகநூலில் உலவாதவர்களுக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. அம்பிக்கு ஒரே பிள்ளைதான் ரேவதி. தக்குடுவுக்குத் தான் முதலில் பெண், இப்போது பிள்ளை!

      நீக்கு
    5. ஆமாம். அம்பி குடும்பத்துடன் இங்கே வந்திருந்தார். சந்தித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  14. முதியோர் இல்லத்தாயின் வேண்டுகோள் மனம் நெகிழ்த்திவிட்டது.

    விளம்பரம் ரசிக்க வைத்தது என்றாலும் கொஞ்சம் வருத்தமும் தந்தது. முதியவர்களுக்கு சமதளத்தில் நடப்பதைத்தான் மருத்துவர் பரிந்துரை செய்வார். இப்படி படியேறி இறங்குவதை அல்ல.

    மோகன்ஜியின் கவிதை ரசனை.

    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் - படிகளில் இறங்குவதை மருத்துவர் பரிந்துரை செய்வதில்லை! உண்மை. மூதாட்டி படியேறி வரும்போது பார்க்கும் நமக்கும் கொஞ்சம் வலித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  15. நீங்க பதிவு செய்யும்விளம்பரப் படங்களின் ரசிகன் நான். இதுவும் மிக நன்றாக உள்ளது. அதென்ன? ஹிந்தியில் போசுகின்றார்கள். இயல்பாகவே புரிகின்றது. அதே ஹிந்தி வார்த்தையை அப்படியே தங்கிலீஷ் போலவே கீழே போடுகின்றார்கள். ஆங்கிலத்தில் போடவில்லையே? அதென்ன அங்குள்ளவர்களின் பழக்கமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரப் படங்கள் - தேடித்தேடி நான் பார்ப்பது வழக்கம். சில ரொம்பவும் சிறப்பாக இருக்கும் - அவற்றை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பெரும்பாலான விளம்பரங்களின் கீழே வரும் வாக்கியங்கள் பிற்சேர்க்கை எனத் தோன்றுகிறது. விளம்பரத்தினை பகிரும் யூட்யூப் பயனாளர் இப்படிச் சேர்ப்பதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

      நீக்கு
  16. கதம்பம் நல்லா இருக்கு. முதியோர் இல்லத்தில் இருப்பவரின் கதையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. விளம்பரம் அருமை. உண்மையைச் சொல்லி, எதை விளம்பரம் பண்ணறாங்க என்பதை நாமே அறிந்துகொள்ளும்படிச் செய்திருக்கிறார்கள். (எனக்கு சுdhத்த பானி என்ற ஸ்போர்ட்ஸ் சேனலில் வரும் விளம்பரம் அறுவையாத் தோணும். இந்த போன்பே விளம்பரம் ரொம்ப ரசிப்பேன்).

    வயதானவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்துவிட்டால் (அதாவது வேலை செய்யாமல்) அதுவே அவங்களுக்கு இன்னும் கஷ்டத்தைக் கொடுத்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல விளம்பரங்கள் எனக்குப் பிடிப்பதில்லை. தேடித் தேடிப் பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம்.

      வயாதானவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பது நல்லதல்ல....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  18. நிகழ்வு அந்த மகனுக்கு ஒரு சாட்டையடி...

    கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  19. கதம்பம் அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  20. ரசித்த வாசகம் என்றுமே நிதர்சனமான வாசகம்!
    முதியவர் கதை தாய்மையின் சிறப்பை சொல்லும் கதை! எங்கிருந்தாலும் உண்மையான தாய் என்பவள் மனது அப்படித்தானிருக்கும்!
    கவிதைக்கான சிற்பம் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் உங்களுக்குப் பிடித்தவற்றை சுட்டிக் கருத்துரைத்தததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  21. அம்மாவின் வேண்டுகோள் மனதுக்கு வேதனை. நல்லதோர்விளம்பரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது.
    ரசித்த வாசகம் மிகவும் ரசிக்க வைத்தது.
    தாயின் தவிப்பு கதை மனதை நெகிழ வைத்தது. அம்மா என்றாலே என்னவொரு பாசம்...மனது கனத்தது.

    பதிவருடன் சந்திப்பும், மூத்த பதிவர் எழுதிய கவிதையும் மிகவும் நன்றாக இருந்தது. கவிதைகேற்ற சிற்பம் அழகாக உள்ளது.

    விளம்பரம் கருத்துடன் இருந்தது. ரசனை சென்று பார்க்கிறேன். கதம்பம் சுவையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் எல்லா பகுதிகளையும் ரசித்து கருத்துரைத்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  23. அம்மாக்கள் என்றுமே அம்மாக்கள்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  24. நன்றி வெங்கட்.அம்பி கல்லிடைக்குறிச்சி போகவில்லையோ? அவர் வந்து சென்றது குறித்துத் தகவல் ஏதும் கொடுக்கவில்லை. 3 வருடங்கள் முன்னர் மனைவி, பையரோடு வந்திருந்தார். தக்குடு பாலாஜி கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு மனைவியோடு வந்திருந்தார். இந்தப் "பெண்"களூர் என்னும் வார்த்தை சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பெண்களைப் பற்றி எழுதி சைட் அடிக்கும் அம்பியைக் கலாய்க்கவெனச் சொல்ல ஆரம்பித்தேன். அதே போல் தான் பையரும். தி.வா.வின் மகனை நான் "அவர், இவர்" என மரியாதையாகச் சொல்ல ஆரம்பிக்க அவர் "பையர்"எனக் கிண்டலாகக் குறிப்பிட அதுவே பழக்கம் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லிடைக்குறிச்சி, சென்னை, வட இந்தியா பயணம் முடிந்து யு.எஸ். திரும்பியாச்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  25. வலை உலகில் நான், ரேவதி, வேதா, மதுரையம்பதி மௌலி, தி.ரா.ச என எல்லோரும் எழுத ஆரம்பித்திருந்த நேரம். பொற்கொடினும் ஒரு பதிவர் உண்டு. ச்யாம், கார்த்திக், ராம், மணிப்ரகாஷ், கைப்புள்ள, நாகை சிவா, கோபி என எல்லோரும் சேர்ந்து கொண்டு என்னைக் கலாய்ப்பார்கள்! அது ஒரு கனாக்காலம். இன்று நானும் ரேவதியும் மட்டும் எழுதுகிறோம். அம்பி மட்டும் தொடர்பில். தி.ரா.ச. முகநூலில் இருக்கார். தக்குடுவும் அவ்வப்போது முகநூலில். மற்றவர்கள் போன இடம் தெரியவில்லை. நாகைசிவா என்னோட வலைப்பக்கத்தின் தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கொடுப்பார். இன்று எல்லோரும் எங்கெங்கோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”இன்று எல்லோரும் எங்கெங்கோ!” உண்மை தான் கீதாம்மா... அவரவர் வழியில் அவரவர். உற்சாகமாக இருந்த பதிவுலகம் இப்போது அந்த அளவில் இல்லை என்பது வருத்தமான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....