சனி, 8 ஜனவரி, 2022

காஃபி வித் கிட்டு - 138 - தொடக்கம் - முன்னோடி - ஃப்ரூட் சாலட் - ஆலு ட்விஸ்டர் - கொடைக்கானல் காணொளி - தமிழ் - ஒட்டுக் கேட்பதே வேலை



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


EVERY SUNSET REDUCE ONE DAY FROM LIFE… BUT EVERY SUNRISE GIVES ONE MORE DAY OF HOPE.


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - தொடக்கம் :





சொல்வனம் தளத்தில் ரசி(படி)த்த கவிதை ஒன்று உங்கள் ரசனைக்கு!


தொடக்கம்


பேயாய் எரிந்து கொண்டிருக்கிறது காடு

வான் நோக்கி

கரும்புகை கூட்டங்களை

அனுப்பிக் கொண்டிருக்கிறது

இந்த தீ


பறவைகள் கூட்டைப் புறந்தள்ளி

உயிரே போதுமென

பறந்து வெளியேறுகின்றன


வன விலங்குகள்

தீயின் எதிர் திசை நோக்கி

ஓட்டம் பிடிக்கின்றன


இன்னும்

ஒரு சில மணி நேரங்களில்

காட்டின் முழு உருவமும்

மாறியிருக்கும்


அப்போது

அங்கெங்கோதான் கிடக்கும்

இத்தனையும் நிகழ்த்திய

அந்த ஒற்றைச் சருகின்

சாம்பல்.


******


இந்த வாரத்தின் நிழற்படம் - முன்னோடி :





அலுவலக அறையின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து எங்களில் ஒருவர் கொடுத்த ரொட்டித் துண்டை சாப்பிடும் நம் முன்னோடியான குரங்கு ஒன்றின் நிழற்படம் - உங்கள் பார்வைக்கு! எடுத்தது அலுவலக நண்பர் ஒருவர்!


******


பழைய நினைப்புடா பேராண்டி: ஃப்ரூட் சாலட்


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஃப்ரூட் சாலட்–121: மரம் வளர்ப்போம் – வாழ்க்கை – குடியும் குறட்டையும்


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 


அவன் ஆசிரியரானதும், என்னை வீட்டில் ஓய்வெடுக்கும்படி கூறினான்; என் மனைவியும் வற்புறுத்தினாள்.மகன் அனுப்பும் பணத்தில் சாப்பிட்டு, 25 நாட்கள் ஓய்வெடுத்தேன். அதற்கு மேல், என்னால் சும்மா இருக்க முடியவில்லை.


அன்னை தெரசாவின் பொதுச் சேவை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்; நாமும் அப்படி ஏதாவது செய்யலாம் என, சிந்தித்தபோது, மரம் வளர்க்கும் யோசனை வந்தது. என் 65வது வயதில், 2002ல், முதன் முதலாக, மகன் அனுப்பும் பணத்தில் மிச்சம் செய்து, 500 ரூபாய்க்கு மரக்கன்றுகளை வாங்கி, ஊரின் பொது இடங்களில் நட்டு வளர்க்க ஆரம்பித்தேன்.


இந்த நாட்டு நலப்பணிக்கு, வீட்டுக்குள்ளும், ஊருக்குள்ளும் எழும்பிய ஏச்சுகளையும், எதிர்ப்புகளையும் மன தில் வைக்கவில்லை.அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு மாதமும், 300 ரூபாய் ஒதுக்கி, மரக்கன்றுகள் வாங்குவதற்கும், நட்ட மரங்களைப் பராமரிப்பதற்கும் செலவிடுகிறேன். ராஜபாளையம் வட்டாரத்தில் மட்டுமின்றி, சில வெளியூர்களுக்கும் சென்று மரக்கன்றுகளை நடுகிறேன்.


இதுவரை, 5,000 மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறேன்.அது மட்டுமின்றி, என் சொந்தச் செலவிலும், நன்கொடையாகவும் வாங்கிய, 2,500 கன்றுகளை, பொதுமக்களுக்கும் இலவசமாக அளித்துள்ளேன். ஆல், அரசு, மருதம், வாகை, புங்கை, நவ்வா, வேம்பு, பூசனம், பூவரசு போன்ற, நம் மண்ணின் பாரம்பரிய வித்துகளையே நடுகிறேன். வறட்சியான பஞ்ச காலத்தில், தண்ணீரை விலைக்கு வாங்கி, கன்றுகளுக்கு ஊற்றி வளர்க்கிறேன்.



******


இந்த வாரத்தின் உணவு - ஆலு ட்விஸ்டர்:





சமீபத்தில் எனது மூத்த சகோதரியும் அவரது மகன், மகள் என மூன்று பேராக தலைநகர் தில்லி வந்திருந்து எனது வீட்டில் தங்கி இருந்தார்கள்.  அந்தச் சமயத்தில் பெரும்பாலும் வெளியே தான் விதம் விதமாக உணவு வகைகளை ருசித்தார்கள்.  கூடவே நானும் சில இடங்களுக்குச் சென்று வந்தேன்.  அப்படிச் சென்ற ஒரு இடத்தில் சாப்பிட்டது தான் இந்த ஆலு ட்விஸ்டர்!  பாருங்களேன்!  ஆலு என்றால் உருளைக் கிழங்கு என்பதை முன்னரும் சொல்லி இருக்கிறேன்.  படம் எடுத்தது சகோதரியின் மகன்!


******


இந்த வாரத்தின் ரசித்த காணொளி - கொடைக்கானல் :


நண்பர் சுப்ரமணியன் அவர்களின் மகள் எடுத்த ஒரு காணொளி தொகுப்பு - சமீபத்தில் தமிழகம் வந்திருந்த போது எடுத்த காணொளிகளை அவரது யூட்யூப் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அப்படி நான் பார்த்து ரசித்த ஒரு காணொளி உங்கள் பார்வைக்கு.  இந்தக் காணொளியிலும் ஆலு ட்விஸ்டர் இருக்கிறது!


Travel Vlog 10 | kodaikanal and Pazhani - YouTube


******


ராஜா காது கழுதைக் காது - தமிழ் :


சமீபத்தில் கரோல் பாக் பகுதிக்குச் சென்றிருந்த போது ஒரு கடையின் வாசலில் சில தமிழர்கள் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு ஒரு எண்ணம் உண்டு - “இந்த ஊருல யாருக்கு தமிழ் தெரியப்போகுது, சத்தமா பேசினாலும் ஒரு ப்ரச்சனையும் இல்லை!” என்ற எண்ணம் தான் அது.  அப்படித்தான் ஒரு ஆணும் பெண்ணும் அவர்களது காதல் லீலைகளைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு தமிழர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்க, எனது அலைபேசியை எடுத்து நண்பருக்கு அழைத்து தமிழில் பேசினேன்! அடுத்த நொடி அந்த ஜோடி, அவ்விடத்திலிருந்து எஸ்கேப்! 


*****


இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் - ஒட்டுக் கேட்பதே வேலை




இந்த வாரத்தின் நிலைத்தகவல் - கல்லூரி நண்பர் ஒருவர் அவரது வாட்ஸப் நிலைத்தகவல் இப்படி இருந்தது! பாருங்களேன். சொல்ல வரும் விஷயம் மிகவும் உண்மை என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். 


*****


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


22 கருத்துகள்:

  1. கவிதை நன்று.  ஆனால் அந்த ஒற்றைச்சருகு கூட கருவிதானே?  காரணம் வேறு யாரோதானே?

    மரக்கன்றுகளை நட்ட அந்த நல்ல மனிதர் வாழ்க வாழ்கவே...

    இந்த ஆலு ட்விஸ்ட்டர் சென்னையிலும் கிடைக்கிறது.  என் இளையவன் ஏற்கெனவே ஒருமுறை சொல்லி இருக்கிறான்.

    ஒட்டு கேட்கும் புகைப்படம் தூள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சருகு ஒரு கருவிதான் காரணம் வேறு யாரோ - எனக்கும் இப்படித் தோன்றியது ஸ்ரீராம்.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பதிவினை நீங்களும் ரசித்தது அறிந்து மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. கவிதை வரிகள் மனதில் ரணத்தை உண்டாக்குகிறது.

    இது புகைப்படம் அருமை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  4. கவி வரிகள் அருமை...

    எங்கும் தமிழ்... வாழ்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவி வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. //அப்போதுஅங்கெங்கோதான் கிடக்கும்இத்தனையும் நிகழ்த்தியஅந்த ஒற்றைச் சருகின்சாம்பல்.//
    ஐயா சருகு தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதை யாரோ கொலை(தீ வைத்தல்) செய்தார்கள். அதற்கேற்றபடி புகைப்படத்திலும் தீ நரம்புகள்.ஆகவே சருகை குற்றம் சொல்லக் கூடாது.


    குரங்குகளுக்கு யார் செக்யூரிட்டி கிளியரன்ஸ் கொடுத்தார்கள். இது ரொம்ப டேஞ்சர். தற்கொலை குரங்குப் படையும் உண்டாகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சருகை குற்றம் சொல்லக்கூடாது என்ற தங்களது கருத்து எனக்கும் உடன்பாடு உடையதே ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தற்கொலை குரங்கு படை - ஹா ஹா ஹா நீங்கள் சொன்னபிறகு யாராவது ஆரம்பித்துவிடலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஒருபுறம் விசமிகளின் காடளித்தல் மறுபுறம் மரநடுகையை ஊக்குவிக்கும் மனிதர் என நெகரிவ் பொசிரிவ் செய்திகள்.

    ஒட்டுக்கேட்டல் செம ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆலு ட்விஸ்டர் படம் அருமை. வாட்ஸ்அப் நிலைதகவல் படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பெரியவர் கருப்பையா நட்டு வைத்த மரங்கள் இப்போது துளிர்த்து வளர்ந்து கொண்டிருக்கும். பாராட்டுக்குரியவர். ஒட்டுக் கேட்பதே வேலை... நமக்குப் பெரும் தொல்லை! தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியவர் நட்டுவைத்த மரங்கள் இப்போது வளர்ந்திருக்கும்.... வளர்ந்திருந்தால் நல்லதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலட்சுமி.

      நீக்கு
  9. ஆலு ட்விஸ்டர் செம...காணொளியிலும் அது கட் செய்யப்படும் விதம் அந்தக் கருவி பார்த்தேன்! ரசித்தேன்.

    வாசகம் அருமை. யதார்த்தம்.

    கவிதை நன்றாக இருக்கிறது. கடைசி வரி கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. காட்டுத் தீ என்பது கூட பெரும்பாலும் மனிதனின் கவனக்குறைவு என்றுதானே சொல்லப்படுகிறது என்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி.

      காட்டுத் தீக்கு மனிதனின் கவனக் குறைவு மட்டுமே பிரதான காரணமாக இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மரம் நடுபவர் அவர் அப்பதிவு வாசித்த நினைவு இருக்கிறது ஜி. அவர் உதவி கேட்டிருந்த நினைவும் இருக்கு. அவர் நட்ட மரங்கள் இப்போது நன்றாக வளர்ந்திருக்கும். பாராட்டப்பட வேண்டிய மனிதர்.

    ஒட்டுக் கேட்பது ஹாஹா...

    ஸ்வேதாவின் வீடியோ கண்டேன் ரொம்ப நன்றாக எடுத்திருக்கிறார். தொகுப்பும் நன்று. பாராட்டுகள் அவருக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் மகள் எடுத்த காணொளி உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி. அவரது பக்கத்தில் உங்கள் கருத்துரை கண்டேன். அவர் சார்பிலும் நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு வழக்கம் போல நன்றாக உள்ளது.

    கவிதை நன்றாக உள்ளது. ரசித்தேன். நிழற்படமும் அருமை. எதைப்பற்றியும் கவலை இல்லாத நம் முன்னோடி.

    5000 க்கும் மேலாக மரம் நட்ட 65 வயது மனிதர்.. நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய மனிதர். ஃப்ரூட்சால்டிலும் சென்று படித்தேன். அங்கும் நான் அனைத்தையும் ரசித்திருக்கிறேன்.

    ஆலு ட்விஸ்டர் ஒரே மாதிரி கண்களுக்கு விருந்தாக நன்றாக உள்ளது.

    காணொளியில் தங்கள் நண்பரின் மகள் இயற்கை காட்சிகளை அருமையாக தொகுத்துள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ராஜா காதுவில் இறுதியில் நகைத்து விட்டேன்.

    ஒட்டு கேட்பது சுவாரஸ்யம். (எனக்கு அல்ல..:) அந்த வாட்சப் நிலைத்தகவல் சுவாரஸ்யமாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....