திங்கள், 31 ஜனவரி, 2022

கதம்பம் - மதிப்புரை - ஓவியம் - வரம் - மண்டலா - மின்னூல் - குலதெய்வம் - அப்பாவின் கடிதம்


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

முந்தைய பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

THE GREATEST VALUE OF HAVING GOOD PEOPLE AROUND YOU IS NOT WHAT YOU GET FROM THEM; BUT THE BETTER PERSON YOU BECOME JUST BECAUSE OF THEM.

 

******


அவரும் நானும் - மின்னூலுக்கு ஒரு மதிப்புரை

 

'அவரும் நானும்' மின்னூலுக்காக மதிப்புரை எழுதித் தர முடியுமா என்று கேட்ட போது, 'கண்டிப்பா எழுதித் தரேன் ஆதி' என்று சொல்லி அழகான மதிப்புரையை  எழுதியனுப்பி இருந்தார். அன்பான தோழி! குடும்பப் பொறுப்புகளுடன் இணைய இதழையும் திறம்பட  நடத்தி வருகிறார் என்பது சிறப்பு. பெயரில் ஒற்றுமை என்பதோடு மட்டும் அல்லாமல் ஏதோ ஒரு பந்தமும் இருப்பதைப் போன்ற உணர்வு. அவ்வப்போது மனதில் உள்ள உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உள்ள நட்பு. தோழிக்கு என் அன்பும் நன்றியும். 

 

தோழியின் மதிப்புரையில் சிறு பகுதி இங்கே..

 

ஆதி வெங்கட்டின் "அவரும் நானும்" நூலுக்கான மதிப்புரை

 

"I'm wearing the smile you gave me"

 

இது மேற்கத்திய கலாச்சாரத்தில் சிறந்த தம்பதியரைப் பற்றிக் கூறப்படும் ஒரு மேற்கோள். ஆதி வெங்கட் எழுதிய "அவரும் நானும்" நூலை வாசித்த போது, இந்த மேற்கோள் தான் என் நினைவுக்கு வந்தது

 

"என் சிரிப்புக்கும், அழுகைக்கும், அன்புக்கும், ஆனந்தத்துக்கும், ஆளுமைக்கும் இன்னும் நான் என்னவெல்லாமாய் இருக்கிறேனோ, அனைத்துக்கும் காரணம் நீயே" என்பது தான் இந்த தொடரின் சாராம்சம். இது ஆதிக்கு மட்டுமல்ல, திரு. வெங்கட் அவர்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்

 

தோழனாய் வாழ்க்கை துணை அமைவது வரமெனில், அன்னையின் இடத்தை எடுத்துக் கொள்ளும் துணை அமைவது பெரும் பேறு. அந்த பேற்றை பெற்றவள் நானென, வெவ்வேறு சம்பவங்களின் மூலம் இந்த நூலில் சொல்கிறார் ஆதி...

 

என்றும் நட்புடன்

 

புவனா கோவிந்த் (அப்பாவி தங்கமணி)

 

*****

 

ரோஷ்ணி கார்னர் - ஓவியம்:

 

மகள் செய்த க்ளாஸ் பெயிண்டிங் ஒன்று உங்கள் பார்வைக்கு!



 

*****

 

தேசிய_பெண்_குழந்தைகள்_தினம்:

 

மகள் என்னும் வரம்!

 

மகள் என்பவளால் அழகாகிறது அனைத்தும்! அவளின் ஆளுமையில் அப்பா குழந்தையாகி விடுகிறார்! அதிகாரம் செய்யவும், அன்பால் அடக்கவும் அவளுக்கு இயல்பாகவே தெரிந்து விடுகிறது. வரமாய் கிடைத்து நம்மை வழி நடத்துபவள். அன்பு சூழ் உலகிற்கு அடித்தளம் அமைப்பவள் மகள்!

 

*****

 

ரோஷ்ணி கார்னர் - ஓவியம்:

 

மகள் வரைந்த Mandala Art ஒன்று உங்கள் பார்வைக்கு!



 

*****

 

அவரும் நானும் - மின்னூல்(eBook)


 

அடடா! இத எழுதாம போய்ட்டோமே!

 

இத இப்படி எழுதியிருக்கலாமே!!

 

இங்க பிழைத்திருத்தம் செய்யாம விட்டுட்டோமே!

 

நான் தானா இப்படியெல்லாம் எழுதியிருக்கேன்!! மனசு சோர்வா இருக்கும் போது இந்தப் பகுதிய ஒருதடவ படிச்சுப் பார்க்கலாம்!

 

நடுநடுவிலே வண்ணப்படங்கள சேர்த்தா நல்லா இருக்குமே!

 

முன்னுரையாக என்ன எழுதுவது!!!

 

இவங்களோட கமெண்ட்ஸ் எல்லாத்தையும் சேர்த்துக்கணும்!

 

இப்படி புத்தகத்துக்கான எடிட்டிங்கில் சிறு சிறு மாற்றங்களை சேர்த்தும், நீக்கியும் ஒருவழியாக இறுதியில் தயாராகி விட்டது 'அவரும் நானும்' மின்னூல்!

 

முகப்புத்தகத்திலும், வலைப்பூவிலும் இந்தத் தொடரை எழுதி வந்த போது அதைத் தொடர்ந்து வாசித்து வரவேற்பு தந்த உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களால் தான் இந்த மின்னூல் சாத்தியமாயிற்று.

 

புத்தகத்துக்காக மதிப்புரை கேட்டதும் உடனே எழுதித் தந்த ரிஷபன் சாருக்கும், தோழி புவனா கோவிந்துக்கும் இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

புத்தகத்துக்கான அட்டைப்படம் வடிவமைத்துத் தந்த மகளுக்கும், இந்தத் தொடரை புத்தகமாக உருவாக்கித் தந்த என்னவருக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

 

'அவரும் நானும்' மின்னூல் அமேசானில் வெளிவரும் என்னுடைய ஏழாவது மின்னூல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மின்னூலை கீழ் கண்ட முகவரியைச் சுட்டினால் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

அவரும் நானும் (Tamil Edition) eBook : Venkat, Adhi, Nagaraj, Venkat: Amazon.in: Kindle Store

 

******

 

எங்கள் குலதெய்வம்:


 

அரை நூற்றாண்டுக்கு முன் நம் மூதாதையர் நின்ற இடத்தில் நாம் நிற்பது என்பது எவ்வளவு சிலிர்ப்பூட்டும் அனுபவம்!! இதை எப்போதாவது  உணர்ந்திருக்கிறீர்களா!! அவர்கள் விண்ணுலகிலிருந்து நம்மைப் பார்த்து ரசிப்பார்கள் என்றும் உணர்ந்தால்!!! குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபடும் போது தான் இத்தகைய அனுபவங்கள் நமக்கு கிட்டும். 

 

எங்கள்  குலத்தை காக்கும் தெய்வத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை இன்றைய பாகீரதி இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. பிரசுரம் செய்தது குறித்து மிக்க மகிழ்ச்சி!

 

கட்டுரையை வாசிக்க கீழே உள்ள இணைப்புக்குச் சென்று பாருங்களேன்.

 

எங்கள் குலதெய்வம் சாஸ்தா அபிராமேஸ்வரர் - பாகீரதி (bhageerathi.co.in)

******

 

அப்பாவின் கடிதம்:


 

கடிதங்கள் எழுதுவது என்பது உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் கருவி எனலாம். எந்த சூழ்நிலையில் எழுதத் துவங்குகிறோமோ, அப்போதுள்ள உணர்வுகளையோ, நடந்த சம்பவங்களையோ கடிதமாக எழுதி அதைத் தபாலில் அனுப்பி அது சென்றடைய வேண்டிய தூரத்தை அடைந்ததும், அதை வாசிப்பவர் முகத்தில் ஏற்படும் உணர்வை அவருக்கு நேரம் கிடைக்கும் போது பதிலாக எழுதி நமக்கு அனுப்புவார். அந்த பதில் கடிதம் நம்மிடம் வந்து சேரும் போது அதை ஆவலுடன் படித்துத் தெரிந்து கொள்வோம். 

 

இந்த விதமாய் கிடைக்கும் பதிலின் பின்னணியில் காத்திருப்பும், ஆவலும், யோசனைகளும், அன்பும், காதலும் என பலவிதமான உணர்வுகள் சங்கமித்து இருக்கும். கடிதங்கள் வாயிலாக தொடர்ந்த நட்பும், காதலும், அன்பும் வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும்.

 

கடிதங்கள் வழக்கொழிந்து விட்ட இந்நாளிலோ எதுவானாலும் உடனே அதை மெசேஜாகவோ அல்லது ஃபோன் செய்தோ விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் அவை நம்முடன் எப்போதும் இருக்குமா?? என்றால் இல்லை என்பது தான் நம் பதிலாக இருக்கும்.

 

நேற்றைக்கு மாலை வாட்ஸப்பில் என் மாமா அனுப்பி வைத்த அப்பாவின் கடிதத்தைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை சொல்லிட வார்த்தைகள் இல்லை! 2001ஆம் ஆண்டு மாமாவுக்கு அப்பா எழுதிய கடிதம் அது! தன் மச்சினன் குடும்பத்தையும், மாமியாரையும் விசாரித்து எழுதியிருக்கிறார். அதில் என்னுடைய வேலை வாய்ப்பு குறித்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் எழுதியிருக்கிறார்.

 

21 வருடங்கள் கழித்து அப்பாவின் கையெழுத்தில் இருந்த அந்தக் கடிதத்தை மகளுக்கு வாய் விட்டு வாசித்துக் காண்பித்த போது அப்பாவே என்னுடன் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது! கண்கள் குளமாகியது! அப்பா இந்த உலகத்தில் இல்லையென்றாலும் அவருடைய எழுத்தின் வாயிலாக அவரை ஸ்பரிசித்த உணர்வு ஏற்பட்டது. இவை தான் எழுத்துக்கு இருக்கும் ஆற்றல் என்பதை உணர்ந்த நாள்!

 

அப்பாவோட லெட்டரை அனுப்பினால் நான் சந்தோஷப்படுவேன் என்று நினைத்து அனுப்பிய மாமாவுக்கு என் அன்பான நன்றிகள். இத்தனை வருடங்களாய் இந்தக் கடிதத்தை பாதுகாப்பாக வைத்திருந்ததை எண்ணி வியந்தேன்!

 

முடிந்த போதெல்லாம் யாரேனும் ஒருவருக்காவது மீண்டும் எழுதுவோம் ஒரு கடிதம்!

 

*****

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

  1. முடிந்த போதெல்லாம் யாரேனும் ஒருவருக்காவது மீண்டும் எழுதுவோம் ஒரு கடிதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போதெல்லாம் யாரேனும் ஒருவருக்காவது கடிதம் எழுதுவோம்..,. நல்ல விஷயம் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதிவு மிக அருமை.
    அப்பாவின் கடிதங்களை நானும் பத்திரபடுத்தி வைத்து இருக்கிறேன்.
    மாமா பத்திரபடுத்துஇ வைத்து இருந்து கொடுத்தது மகிழ்ச்சி.
    ரோஷ்ணியின் ஓவியங்கள் அருமை.
    மின் புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்!

    புத்தகத்துக்காக மதிப்புரை கேட்டதும் உடனே எழுதித் தந்த ரிஷபன் சாருக்கும், தோழி புவனா கோவிந்துக்கும் இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். //

    இருவரும் நன்றாக எழுதி இருந்தார்கள் படித்தேன். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்குப் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. ரோஷ்ணியின் க்ளாஸ் படம் சூப்பர். மின் புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ராமசாமி ஜி. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. மின்நூலுக்கு வாழ்த்துகள். ரோஷ்ணி படம் அழகு.
    அப்பாவின் கடிதம் உணர்வு பூர்வமானது.மிகுந்த மகிழ்சியாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கு பிடித்தது அறிந்து மகிழ்ச்சி ஸ்ரீராம். மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. அனைத்தும் சிறப்பு. அப்பா கடிதம் மிகவும் ரசித்தேன். இன்னும் நான் அவ்வப்போது அஞ்சலட்டையில் கடிதம் எழுத்வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அவ்வப்போது கடிதம் எழுதி வருவது சிறப்பான விஷயம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. இணைப்பை பகிர்ந்தமைக்கும் கட்டுரைக்கும் நன்றி

    இன்னும் புத்தகத்தை படிக்கலை. படித்துவிட்டு எழுதறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி எல்.கே. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. ரோஷ்ணி ராக்ஸ்!!!!! பாராட்டுகள் வாழ்த்துகள்!

    மின்னூலுக்கு வாழ்த்துகள் ஆதி! ஆம் நாம் எழுதியதில் இன்னும் சேர்த்திருக்கலாமோ திருத்தியிருக்கலாமோ என்று நினைப்பது தோன்றுவது சகஜம். பதிவில் எழுத விட்டுப் போனதைக் கூட மின்னூலாக்கும் போது சேர்க்கலாமே ஆதி. புதிய வடிவமாகவும் இருக்குமே.

    கடிதங்கள் உணர்வுபூர்வமான ஒன்று.

    பாகீரதி சுட்டி சென்று வாசிக்கிறேன் ஆதி. இன்னும் நிறைய எழுதுங்கள் ஆதி! வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது மேலான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. கதம்பம் சிறப்பு.

    நீங்கள் எழுதிய தொடர் மிக அருமையான தொடர் அது மின்னூலாக வருவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    மகளின் கைவண்ணம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள்!

    உங்கள் அப்பாவின் கடிதம் கண்டு என் அப்பாவின் நினைவுகள் மேலெழுந்தன.

    குலதெய்வம் பற்றிய கட்டுரையை வாசிக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....