அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காரிகர் காதா - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
அன்பின் நண்பர்களுக்கு மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் என்ற தலைப்பில் இந்த திங்கள் அன்று தொடங்கிய பயணத் தொடர் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். தொடரின் முதலாம் பகுதியினை இதுவரை நீங்கள் படிக்கவில்லை என்றால் இங்கே சென்று படிக்கலாம். இந்தத் தொடரில் மிகவும் ஸ்வாரசியமான விஷயங்களை நாங்கள் கண்டதோடு, பலவித அனுபவங்களையும் பெற்றோம். அவற்றையெல்லாம் தொடர்ந்து இங்கே எழுத இருக்கிறேன். முதலாவது பதிவில் தலைநகர் தில்லியிலிருந்து புறப்பட்டு தொடர்ந்து பயணித்து காலை உணவை சாப்பிட்டது வரை பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்தப் பகுதியில் இந்தப் பயணத்தில் முதன் முதலாக நாங்கள் சென்ற ஒரு ஆலயம் குறித்த தகவல்களையும் அங்கே கிடைத்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நாங்கள் சென்ற ஆலயத்தின் பெயர் dhதாரி தேவி ஆலயம். பெயரைப் படிக்கும்போதே கம்பீரமாக இருக்கிறது அல்லவா? தேவியும் கம்பீரமானவள் தான். இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரியமானவளும் பிடித்தமானவளும் கூட.
dhதாரி தேவி குறித்த நிறைய நம்பிக்கைகள் இந்தப் பகுதியில் நிலவுகிறது. dhதாரி தேவி காளியின் ஸ்வரூபம் என்றும் இந்த ஆலயத்தில் இருக்கும் தேவியின் சிலை ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகளும் விதம் விதமாக தோற்றமளிப்பவள் என்றும் இங்கே சொல்கிறார்கள். இங்கே இருக்கும் dhதாரி தேவியின் சிலை முகம் மட்டுமே கொண்டது. காலை வேளையில் தேவியின் முகம் சிறுமியாகவும், மதியத்தில் ஒரு பெண்மணியைப் போலவும், மாலை வேளையில் மூதாட்டியாகவும் தோன்றுவாள் என்று இங்கே சொல்கிறார்கள். அலக்நந்தா நதியின் கரையில் எழுந்தருளியிருக்கும் தேவி இந்தப் பகுதியில் இருக்கும் chசார் dhதாம் என அழைக்கப்படும் நான்கு ஆலயங்கள் மட்டுமல்லாது இந்தப் பிரதேசம் முழுவதையும் காக்கும் தேவியாக இருக்கிறார். அலக்நந்தா நதியில் மின்சாரம் தயாரிப்பதற்கென அணை கட்டிய போது இங்கே ஆலயத்தினை தூண்கள் மீது மாற்றி எழுப்பியதால் தேவியின் கோபத்திற்கு ஆளாகி பெரிய இயற்கை விபத்து உண்டானது - 2013 கேதார்நாத் மேக வெடிப்பு - யாரால் மறக்க முடியும் அந்த இயற்கைச் சீரழிவை - என்பது இங்கே உள்ள மக்களின் நம்பிக்கை. இயற்கையை எதிர்த்து நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. எத்தனை எத்தனை இயற்கையை சிதைக்கிறோமோ அத்தனை தூரம் இழப்பு நமக்கு தான் என்பதும் எனது நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்த ஆலயத்தில் முகம் மட்டுமே காண முடியும் என்று சொல்கிறபோது, தேவியின் மற்றபாகத்தினை எப்படிக் காண்பது என்கிற கேள்வி உங்களுக்குள் எழ வாய்ப்பிருக்கிறது அல்லவா? அதற்கான பதில் - ருத்ரப்ரயாக் பகுதியில் இருக்கும் காளிமட் எனும் இடத்தில் தேவியின் கீழ்பாகம் இருக்கிறது. இங்கேயிருந்துதான் இந்த உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் உருவாகின்றன என்பதும் இங்கே சொல்லப்படும் தகவல். இங்கே காணப்படும் தேவி, காளியின் ரூபம் என்றாலும், ”மா கல்யாணி” அல்லது ”கல்யாணேஸ்வரி” என்று அழைக்கிறார்கள் என்பதோடு இந்தப் பெயர்களை வைத்தது சாக்ஷாத் சிவபெருமானே என்பதும் இங்கே ஒரு நம்பிக்கை. இங்கே எப்படி dhதாரி தேவிக்கு ஆலயம் அமைந்தது என்பதற்கும் சில கதைகள் இருக்கின்றன. அப்படியான ஒரு கதையை மட்டும் இங்கே பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இப்படியான கதைகள் நம்பிக்கை சார்ந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். ஒரு விதத்தில் இங்கே நிலவும் பல கதைகள் நம்பிக்கை சார்ந்தவையே… நம்பிக்கை இருந்தால் கல்லும் கடவுளே… இல்லை என்றால் கல் மட்டுமே! அவரவருக்கு அவரவர் நம்பிக்கை.
தேவி உக்கிர ரூபம் கொண்டு ரக்த்பீஜன், சும்பன், நிசும்பன் போன்ற அரக்கர்களை அழித்த போது அவளது உக்கிரத்தினை கண்டு அனைவருக்கும் பயம் உண்டாகிறது - அவளை சாந்தமாக்குவது என்பது யாராலும் முடியாத காரியமாக இருந்தது. தீமைகளை ஒழித்து விட்டாலும் அவளது கோபம் அடங்காமல் இருக்க, சிவபெருமானே அதற்கு ஒரு வழி தேடவேண்டியிருந்தது. சிவபெருமான் பூமியில் நெடுஞ்சாண்கிடையாக படுத்துக் கொள்ள கோபஸ்வரூபத்தில் நடந்து கொண்டிருந்த தேவி தெரியாமல் சிவபெருமானின் வயிற்றில் கால் வைத்துவிடுகிறார். தான் தனது கணவன் மீதே கால் வைத்துவிட்டோமே என்ற அதிர்ச்சியில் நாக்கு வெளியே வர, மற்ற தேவதேவியர்களிடம் தனது உடலை தனித்தனியாக, இரு பாகங்களாகப் பிரிக்கும்படி கட்டளை இடுகிறார். உக்கிர ரூபத்திலிருந்து சாந்த ரூபியாக மாறுகிறார். அப்படி சாந்தி ரூபம் கொண்ட இடம் தான் தலைப்பகுதி வைக்கப்பட்டு இருக்கும் இந்த dhதாரோ என்ற பெயர் கொண்ட இடம். அதனால் தேவையின் பெயர் dhதாரி தேவி.
சாலையோரத்திலேயே இந்த ஆலயத்தின் நுழைவாயில் இருக்கிறது. பக்கத்திலேயே சிறு சிறு கடைகள் மற்றும் வாகன நிறுத்தங்கள், அவை கூடவே இருக்கும் கடைகளில் பூஜைக்கான பொருட்களை வாங்கிக் கொண்டால் வாகனம் நிறுத்துவதற்குக் கட்டணம் இல்லை! நாங்களும் அப்படியே 100 ரூபாய் கொடுத்து ஒரு பையில் போடப்பட்டிருந்த பூஜைக்கான பொருட்களை வாங்கிக் கொண்டோம். நுழைவாயில் நமது ஊர் கோபுரம் போலவே இருக்கிறது - ஆனால் அதில் பூசப்பட்டிருக்கும் வண்ணம் அத்தனை பிரகாசமாக இல்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம். நுழைவாயில் வழி நுழைந்து கீழே நோக்கிச் செல்லும் பாதைகளில் நடந்தால் நம் கண்களுக்கு, அலக்நந்தா நதியின் உள்ளே தூண்களில் தூக்கி நிறுத்தப்பட்ட அழகான ஆலயம் காட்சியளிக்கிறது. பார்க்கும்போது ஒரு வித பரவசம் நம்மை ஆட்கொள்கிறது. நடந்தபடியே சில படங்களும் ஒன்றிரண்டு காணொளிகளும் எடுத்துக் கொண்டோம். பாதையோரத்தில் உள்ளூர் வழக்கப்படி, அவர்களுக்குக் காசு கொடுத்தால் மேளம் கொட்டி நம் பெயரைச் சொல்லி இறைவியிடம் நம்மை கவனித்துக் கொள்ளும்படிச் சொல்லும் நபர்கள், பூக்கள் வாங்கிக் கொள்ளச் சொல்லும் வியாபாரிகள், பூஜைக்கான பொருட்களை வாங்கிக் கொள்ளச் சொல்லும் நபர்கள், விதம் விதமான பொருட்களை விற்கும் கடைகள் என நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே நுழைந்து பெரிய பாறையில் அமைந்திருக்கும் dhதாரி தேவியின் அழகிய முக ரூபத்தினைக் காண்கிறோம். அலங்காரம் செய்யப்பட்ட தேவி நம்மை கருணை முகம் கொண்டு காண்பதைப் போல ஒரு உணர்வு மனதுக்குள். ஒரு சில நிமிடங்கள் அங்கே கீழே அமர்ந்து மனதுக்குள் ஒரு சிறு தியானம் - எல்லோரையும் நல்லபடியாக வை தாயே! - இதைத்தவிர வேறு என்ன வேண்டுதல் செய்யத் தேவை? நமக்கு என்ன தேவை என்பதை அவள் அறியாதவளா என்ன? ஆலயத்திலிருந்து வெளியே வந்தபிறகு சுற்றுப் பிரகாரத்திலும் சில பல நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம். பிறகு மனதில் தேவியை நினைத்தபடி அங்கிருந்து வெளியே வந்தோம். காலணிகள் வைத்த இடத்திலிருந்து காலணிகளை எடுத்து அணிந்து கொண்டு மீண்டும் வந்த வழியே நடை. ஒரு இடத்தில் கீழே நதிக்கரைக்குச் செல்லும் பாதை இருக்க, அந்த வழி அலக்நந்தா நதியின் அழகை கிட்டத்தில் ரசிக்கவும், சில பல படங்களை எடுத்துக் கொள்ளவும் சென்று சேர்ந்தோம். எத்தனை தெளிவான நீர் இந்த அலக்நந்தா நதியில். பலப்பல தோரணைகளில் படங்களும், காணொளிகளும் எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மத்தியில் நாங்களும் சென்று படங்களை எடுத்து மகிழ்ந்தோம். நதிக்கரை, நதி, மலை, கடல் என இயற்கையின் பேரெழிலைக் காணும்போதெல்லாம் மனதில் ஒரு வித உற்சாக ஊற்று பீறிட்டுக் கிளம்புவது வழக்கம் தானே! எங்களுக்குள்ளும் அப்படி ஒரு உற்சாக ஊற்று!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
5 மார்ச் 2025
அலக்நந்தா என்கிற வித்தியாசமான பெயர் எப்படி வந்தது? கூகுளில் தேடிப் பார்க்க வேண்டும்! வடநாட்டு நதிகள் மட்டும் காய்வதேயில்லை. நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கிறது!
பதிலளிநீக்குஅவைகளுக்கு ஆதாரம் பனி சூழ்ந்த மலைகள். நமக்கும் பொதிகை மலையிலிருந்து, குடகு மலையிலிருந்து வரும் தாமிரவருணி, காவிரி உண்டே
நீக்குநதியின் படங்கள் அழகு. தேவியின் முகம் மூன்று விதமாக காட்சியளிக்கும் என்பது வியப்பான தகவல். படம் எதுவும் கிடைக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குகாணொளியில் நதி மிக அழகு. என்ன ஒரு இயற்கைக்கு கட்சி... படத்திலேயே இப்படி இருந்தால், நேரில் எப்படி இருந்திருக்கும்...
பதிலளிநீக்குஉஜ்ஜெயின் மாகாளி, தமிழகத்தில் உச்சினி மாகாளி கோயில்களாக உருவெடுத்தது. அதுபோல பிதாரி, பிடாரி தெய்வமாக உருவெடுத்திருக்கும். சோழப் படையெடுப்புகளில் வென்ற இடங்களிலிருந்து சிற்பங்களை, தெய்வங்களைக் கொண்டு வருவது உண்டு.
பதிலளிநீக்குஅழகிய காட்சிகள் ஜி.
பதிலளிநீக்குமகிழ்ச்சியான விடயங்கள்
படங்களும், காணொளியும் சிறப்பு.