அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
முகநூலில் எழுதிய சில இற்றைகள் இன்றைக்கு ஒரு தொகுப்பாக இங்கே - எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் என்னை தொடராத நண்பர்களின் வசதிக்காகவும்!
பீட்ரூட் துருவல் நினைவுகள் - 23 நவம்பர் 2025:
பீட்ரூட் துருவி, தேங்காய் சேர்த்த பொரியலாக அம்மா செய்யும்போது, சிறு வயதில் எனக்கு சாப்பிடப் பிடிக்காது...... இப்போது இல்லாள் செய்யும்போது, பிடிக்கிறதோ இல்லையோ, எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விடுகிறேன். எதுக்கு வீண் வம்பு என்ற எண்ணமில்லை your honour! கஷ்டப்பட்டு செய்யும்போது அந்த உழைப்பிற்கு மரியாதை தர வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான். ஸ்ஸப்பா.... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு! 😀
நான் வேண்டாம் என்று சொல்லி விடுவதால் எனக்கு மட்டும் பீட்ரூட்டின் சத்து கிடைக்காமல் போய் விடும் என்று அம்மா அதனை துருவியவுடன், அதில் கொஞ்சம் எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு மேலே கொஞ்சம் சர்க்கரை தூவி, கலந்து வைத்து விடுவார்கள்..... சிறிது நேரம் கழித்து இன்னும் ஒரு முறை கலந்துவிட்டால் போதும்.... சர்க்கரை கரைந்து பீட்ரூட் துருவலின் இனிப்புடன் சர்க்கரை இனிப்பும் சேர்ந்து சுவைக்க நாவில் அப்படி ஒரு ஆனந்த தாண்டவ உணர்வு வரும்.
இன்றைக்கு அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, சின்ன வயதில் சாப்பிட்ட அதே போல இன்றைக்கு நான் சாப்பிடப் போகிறேன் என்று சொல்ல, "சாப்பிட வேண்டியது தானே...." , என்று சொல்லியபடி ஒரு சிறு கிண்ணமும் எடுத்துத் தந்தார். உடனடியாக துருவிய பீட்ரூட் சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து, அதனை கண் முன்னால் வைத்துக் கொண்டு இதோ தட்டச்சு செய்து கொண்டு இருக்கிறேன்.....
அம்மாவின் நினைவுகள் மறக்கக்கூடியவை அல்ல...... பீட்ரூட் கூட நினைவுகளைத் தூண்டலாம். அம்மாவின் நினைவுகளில் ஆழ்ந்தபடி, கண்முன் இருக்கும் பீட்ரூட் சாப்பிடுகிறேன்..... பீட்ரூட் அல்வா, பர்ஃபி என விதம் விதமாக சுவைத்து இருந்தாலும் இந்த சர்க்கரை மற்றும் சேர்த்த துருவலில் இருக்கும் சுவைக்கு ஈடு ஆகாது...... ஆஹா..... என்ன சுவை...
உங்களுக்கு பீட்ரூட் எப்படி பயன்படுத்தினால் பிடிக்கும்? சொல்லுங்களேன்.
*******
கோணங்கள் - 24 நவம்பர் 2025:
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வாழ்க்கை அவ்வப்போது நமக்கு பல விஷயங்களை புரிய வைத்துக் கொண்டேதான் இருக்கிறது. பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பல கோணங்கள் இருக்கமுடியும் என்பதையும் உணர்த்திய வண்ணமே இருக்கிறது. நமக்குச் சரியாகத் தோன்றும் ஒரு செயல் மற்ற ஒருவருக்குத் தவறானதாகத் தோன்றலாம். சென்ற வாரம் கூட, பெயர் தெரியாத ஒரு இளைஞனை ஹலோ என்று சொன்னது அவனுக்குத் தவறாகப் பட்டது..... அதில் தவறொன்றும் இல்லை என்பதே என் எண்ணம்.... எனது இல்லாளையே நான் பல சமயங்களில் அப்படி அழைப்பதுண்டு 😃.
அதிகாலை நேரத்தில் ஏன் இந்த சிந்தனைகள்?
நேற்று மாலை நேரத்தில் மகளுடன் வாகனத்தில் உலா சென்று வந்தேன். அப்போது சில்லென்று காற்று.... "மழை வரட்டுமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்து. மேகங்களையும் அதன் முன்னே வெள்ளை கோபுரத்தையும் அவளது அலைபேசியில் படம் எடுத்துக் காண்பித்தாள்..... அழகாய் இருக்கிறது என்று சொல்லி, நான் வேறு கோணத்தில் படம் எடுத்து அவளுடன் பகிர்ந்து கொண்டேன்.... கோணம் பற்றிய சிந்தனைகள் அப்போது தான் தோன்றியது..... நிழற்படத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையைப் பார்க்கும் விதத்திலும் எத்தனை எத்தனை கோணங்கள்......
மழையும் சில்லென்ற காற்றும் காலை நேர நடையில் தடையைக் கொண்டு வந்திருக்கிறது.... நேரம் கடந்து செல்லலாம் என்றால் அலுவலகம் செல்ல தாமதம் ஆகிறது..... கடந்த ஒரு வாரமாக நடைக்குத் தடை...... இதோ இன்று கூட நான்கு மணிக்கு விழித்து விட்டேன். வேலைகளை முடித்துக் கொண்டு, அரங்கனின் வீதிகளில் உலா வரலாம் என்றால் மழை பெய்த வண்ணம் இருக்கிறது. எனவே இன்றைக்கும் நடை ரத்து....
நடை தடையானது மட்டுமல்லாது நடை குறித்து இங்கே பகிர்வது கூட அதனால் தடை..... பரவாயில்லை..... எது நடந்தாலும் அது நல்லதாகவே நடந்ததாகக் கருதுவோம்....
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
27 நவம்பர் 2025



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....