சனி, 23 மே, 2015

பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்


தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 18

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

தேவி மற்றும் லிங்க ஸ்வரூப சிவனின் தரிசனமும் கண்டு அங்கிருந்து வெளியே வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். அப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு மூதாட்டி மிகவும் ஸ்வாரசியமாக அனுபவித்து பீடியை வாயில் வைத்து புகை விட்டுக் கொண்டிருந்தார்.  அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்களும், பற்கள் இல்லாது புகை இழுப்பதில் அவரது கன்னங்களில் ஏற்பட்ட பள்ளங்களும் அவரை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.



சரி அவரை புகைப்படம் எடுக்கலாம் என்றால் தெரியாத ஒருவரை, அதுவும் வேறொரு ஊரில் சுற்றுலா சென்றிருக்கும் போது அந்த ஊரில் இருப்பவரை புகைப்படம் எடுப்பதில் சில தொந்தரவுகள் வரலாம் என்பதால், ஒன்று அவரைக் கேட்ட பிறகு அவரது புகைப்படம் எடுக்க வேண்டும், அல்லது அவருக்குத் தெரியாமல் அவரது புகைப்படம் எடுக்க வேண்டும். அவரைக் கேட்டு அவரிடமிருந்து அனுமதி பெற்று புகைப்படம் எடுப்பது சாத்தியமல்ல என்று தோன்றியது.



பீடி பிடிக்கும் விதமும், அவர் இருந்த ஒரு மயக்க நிலையும், அவர் அவரது சுய நினைவில் இருப்பது போலத் தோன்றவில்லை. மேலும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, ஏதோ பேசவும் செய்தார்.  நடுநடுவே, பீடியை வாயில் வைத்து, “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என சார்மினார் சிகரெட் விளம்பரம் போல ஒரு நீண்ட இழுப்பு – அதன் பின்னர் புகையை சில வினாடிகள் உள்ளிருத்தி, நன்கு அனுபவித்த பிறகு மேலே பார்த்தபடி அபரீதமான ஒரு திருப்தியோடு புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தார்.



கேமராவில் பொருத்தியிருந்த 18-55 லென்ஸை மாற்றி 55-250 லென்ஸ் பொருத்தி, சற்று தொலைவிலிருந்து, அவருக்குத் தெரியாமல் அவரைப் புகைப்படம் எடுக்கலாம் என முடிவு செய்தேன். அவரது பக்கத்திலேயே எங்கள் குழுவினர் சிலரும் நின்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்க்க, குழுவினரை படம் எடுப்பது போல அந்த மூதாட்டியை படம் எடுக்கலாம் என முயற்சித்தேன்.  சில படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, திடீரென, எங்கள் குழுவினரில் ஒருவர் அவர் அருகே வரும்போது ஒரு புகைப்படம் எடுத்தேன்!

அந்தப் புகைப்படத்தை பார்த்தபோது பீடியை பாட்டி குடித்துக் கொண்டிருக்க, புகையோ குழுவில் இருந்தவரின் வாயிலிருந்து வருவது போல அமைந்து விட்டது! அந்தப் புகைப்படத்தைப் பார்த்து குழுவில் உள்ள அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்.



இது போன்று பயணங்களில் சிலரை புகைப்படம் எடுக்கத் தோன்றினாலும், அவரது முகவெட்டு புகைப்படத்தில் நன்றாக இருக்கும் என நினைத்தாலும் புகைப்படம் எடுக்க முடிவதில்லை. குழந்தைகளை படம் எடுக்க அவர்களது பெற்றோர்களிடம் அனுமதி கேட்டு எடுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இது போன்ற மூதாட்டி/பெரியவர்களை படம் எடுத்துக் கொள்ள சற்றே பிரயத்தனப் பட வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் அனுமதி பெற்றே படம் எடுக்கிறேன் என்றாலும், இப்படி மறைமுகமாக சில படங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.



கோவிலிலிருந்து வெளியே வந்து காலணிகளை அணிந்து கொண்டு அங்கே இருந்த கடைகளை நோட்டமிட்டபடி வந்து கொண்டிருந்தோம். தேநீர் அருந்தலாமென ஒரு கடையில் நிற்க, அவர் தேநீர் தயாரிக்கும் வரை பக்கத்துக் கடைகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம். ஒரு கடைக்காரர் மூங்கில்களைச் சீவி ஏதோ செய்து கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  மூங்கில்களில் ஹூக்கா செய்து வைத்திருந்தார். அதைக் கொண்டு புகை பிடிக்க முடியாது – ஷோவிற்காக வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.



பக்கத்திலேயே ஒரு சிறுமி ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நாய்க்குட்டியையும் அவரையும் புகைப்படம் எடுத்தபடியே அவருடன் பேசத் தொடங்கினோம். நாய்க்குட்டியின் பெயரைக் கேட்க, அந்தப் பெண் சொன்ன பெயர் யாருக்கும் புரியவில்லை. மீண்டுமொரு முறை கேட்க, அச் சிறுமி சொன்ன பெயர் – [B]பரவ்னி! வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று யோசித்தபடியே நாய்க்குட்டியைப் பார்க்க, வெள்ளை நிற நாய்க்குட்டியின் மேல் ஆங்காங்கே Brown திட்டுகள்! அட, இந்த நாய்க்குட்டியின் பெயர் Brownie!



[B]பரவ்னியையும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, அதற்குள் தேநீரும் தயாரானது. தேநீர் அருந்திய பின் எங்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தோம். அங்கே எனது காமெராவினைப் பார்த்த இரு இளைஞர்கள் தங்களை புகைப்படம் எடுத்துக் காண்பிக்கச் சொல்ல அவர்களையும் புகைப்படம் எடுத்தேன். எத்தனை தூரம் வரை இக் கேமரா மூலம் படம் எடுக்க முடியும் என்ற கேள்வியும் கூடவே அவர்களிடமிருந்து. 



சாலையின் எதிர் புறத்தில் ஹிமாச்சலப் பிரதேச அரசுப் பேருந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஓட்டுனரும் நடத்துனரும் வந்து நிற்க, ”அவர்களை இங்கிருந்தே புகைப்படம் எடுக்க முடியுமா?” என்று கேட்க, அவர்களையும் ஒரு புகைப்படம் எடுத்துக் காண்பித்தேன். இப்படி சில புகைப்படங்களை எடுத்தும், கூடவே பயணத்தினைத் தொடர்வதும் தொடர்ந்தது. கோவிலின் வெளியே உள்ள தகவல் பலகையில் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு சுற்றுலாத் தலம் இருப்பதாக எழுதி வைத்திருக்க, அவ்விடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று போக்குவரத்துக் காவலரிடம் விசாரித்துக் கொண்டு பயணித்தோம்.

அப்படி பயணித்த இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். ஓகே!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து

50 கருத்துகள்:

  1. பீடி குடிக்கும் பாட்டியைப் பார்த்தோம். வித்தியாசமான முறையில் இயல்பான வாழ்க்கை நிலையைப் பதிவு செய்துள்ள விதம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. வழக்கம் போல் பதிவும் படங்களும் நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  3. சுவாரஸ்யம்.

    சமீபத்தில் ராமலக்ஷ்மி கூட, அனுமதி பெற்று எடுக்கும் படங்கள், அனுமதி பெறாமல் எடுக்கும் படங்கள் பற்றி தனது பதிவொன்றில் சொல்லி இருந்தது நினைவுக்கு வருகிறது.

    உங்கள் கேமிரா என்ன மாடல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Canon DSLR - 600D.

      ராமலக்ஷ்மி அவர்கள் இந்த மாத PIT போட்டி அறிவித்த பிறகு இது பற்றி எழுதி இருந்தார். பல சமயங்களில் புகைப்படம் எடுப்பதில் இப்படி சில தடைகள் உண்டு. சமீபத்திய வட கிழக்கு மாநில பயணத்திலும் இப்படி சில அனுபவங்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. //அங்கே ஒரு மூதாட்டி மிகவும் ஸ்வாரசியமாக அனுபவித்து பீடியை வாயில் வைத்து புகை விட்டுக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்களும், பற்கள் இல்லாது புகை இழுப்பதில் அவரது கன்னங்களில் ஏற்பட்ட பள்ளங்களும் அவரை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.//

    பாட்டி தம்மடிப்பது அழகோ அழகு. அதைத்தாங்கள் படம் எடுத்துக்கொடுத்துள்ளது அதைவிட அழகு.

    இந்தப்பாட்டி போல நீண்ட நாட்கள் வாழ, அவசியம் அனைவரும் பீடி குடிக்க வேண்டுமோ என்னவோ என நினைக்கத் தோன்றுகிறது !

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாள் வாழ, பீடி குடிப்பது அவசியம் அல்ல! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  5. புகைப்படங்கள் அத்துனையும் அருமை. அடுத்த சுற்றுலா இடம் காண நாங்களும் காத்து இருக்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  6. அடுத்து நீங்கள் பார்த்ததை அறிய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    சுற்றுலா அனுபவத்தை மிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் ஒவ்வொரு படங்களும் மிக அழகு பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  8. பயணக் கட்டுரையில் கட்டுண்டு கிடக்கின்றோம். மிகவும் அருமையாக நேரடி ஒலிபரப்பை காண்பதை போன்று எழுத்தின் மூலமும் ரசித்தபடி படிக்க வைக்கும் விதம் வெகு சூப்பர் நண்பரே! அதுவும் பீடி குடிக்கும் அந்த பாட்டியை புகைப்படம் எடுத்து அசத்தி விட்டீர்கள்.
    ரசித்தோம்!
    ரசிக்கின்றோம்!
    ரசிப்போம்!
    எழுதுங்கள் வரவேற்று வாசிக்க காத்திருக்கின்றோம்! நன்றி!
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

      நீக்கு
  9. அழகான புகைப்படங்கள். தெரியாமல் எடுத்ததால் எதார்த்தமாக பாட்டி.....இருக்கிறார். அடுத்து பயணிக்க காத்திருக்கிறோம்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  10. பாட்டியின் முதல் படமும் அந்த குழந்தையும் சூப்பர். கட்டுரையும் அருமை.

    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  11. உளவுத்துறையினர் ரகசியமாக செய்திகள் சேகரிப்பது போல நீங்களும் ரகசியமாக போட்டோ எடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள்.... சந்தேகம் நீங்கள் என்ன இந்திய உளவுத்துறையிலா வேலை பார்க்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உளவுத் துறை! - நல்ல ஜோக்! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  12. இன்றைய பதிவு ஒரே புகை மூட்டமா இருக்கே !

    படங்கள் எல்லாம் பளிச்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகை மூட்டம் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  13. படங்கள் நன்றாக இருக்கின்றன. நாய்களுக்கு காரணப்பெயர்தான் வைப்பார்களோ. பிரவுனி, பிளேக்கி, இப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய்களுக்கு காரணப் பெயர் - இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. பாட்டியோடு நாங்களும் இருந்த உணர்வு அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. சிறுவயதில் சுருட்டு புகைக்கும் பாட்டிகளை பலரை பார்த்திருக்கிறேன் ஐயா
    தொடருங்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

      நீக்கு
  17. நல்லாருக்கு பாட்டி புகைப்பது. இன்றைக்கு சின்ன பதிவாகப் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் குறைவு என்பதால் அப்படித் தோன்றுகிறது. எப்போதும் எழுதும் அதே மூன்று பக்கங்கள் தான் இன்றும் [Word]

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  18. பாட்டி படங்கள் செம!

    உங்க நண்பர் வாயில் புகை வரும் படமெங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படம் வருவதை அவரும் விரும்ப மாட்டார்! நானும்! அதனால் தான் வெளியிடவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  19. நானும் இந்த ஊரில் சில நபர்களை பிட் புகைப்படப் போட்டிக்கு எடுக்க முயற்சி எடுத்தென். மகன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். உனக்குத் தெரியாமல் உன்னைப் படம் பிடித்துப் போட்டால் உனக்குப்
    பிடிக்குமா அம்மா என்றுசொல்லும்போது சரியெனப் பட்டதால்
    விட்டுவிட்டேன். நிறைய வயதானவர்கள் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால்
    கைகள் படம் எடுக்க ஆசைப்படும்.
    நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் அருமையாக வந்திருக்கின்றன.வாழ்த்துகள் மா வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  20. பிரமாதமான ஒளியமைப்புடன் கூடிய படங்கள். பாராட்டுகள். இங்கும் யாரையும் புகைப்படமெடுத்துவிட முடியாது. பெரும்பாலும் அனுமதி மறுத்துவிடுவார்கள். பள்ளிகளில் கூட பிள்ளைகளின் புகைப்படத்தை News letter - இல் போட விண்ணப்பம் மூலம் அனுமதி கேட்கிறார்கள். பெற்றோர் அனுமதிக்காவிடில் போடமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி!

      நீக்கு
  21. உப்க்கள் எழுத்து நடையும் உங்கள் புகைப்படங்கள் போலவே தெளிவாக,அழகாக இருக்கிறது.வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  22. பாட்டி சுவாரஸ்யம்.....அந்தக் குழந்தைப் படமும் அருமை....

    அட! ரகசியா காமெரா !!! பெரும்பான்மையான மால்கள், ரோடுகள் ...ஆனால் அங்கெல்லாம் காமெரா இருக்கின்றது என்று சொல்லப்பட்டிருக்கும் ஆனால் நமக்குத் தெரியாது எங்கிருக்கின்றது என்று.....அது போல...ஹஹஹ்

    நாங்களும் பெரும்பாலும் மனிதர்களை, எடுப்பது என்றால் அனுமதியுடன் தான்.....ஆனால் ஒரு சிலரை அவர்கள் நமக்கு பதில் அளிக்கும் மன நிலையில் இல்லை என்றால் ரகசியமாகத்தான்....

    அடுத்து என்ன இடம்...ஆவல்....தொடர்கின்றோம்....வேலைச் சுமை கூடியதால் வலைப்பக்கம் வர இயலவில்லை...பொருத்தருள்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  23. பாட்டியின் புகைப்படத்தில் காணப்படும் details பிரமாதம்! பாட்டியின் பரவசநிலை அப்படியே உங்கள் காமெராவில் பதிவு செய்திருக்கிறீர்கள்! அற்புதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      நீக்கு
  24. புகைபிடிக்கும் மூதாட்டி அனுபவித்து பிடிக்கிறார்போல! ப்ரவ்னி நாய்க்குட்டி அழகு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  25. பாட்டியும் ப்ரௌனியும் அழகோ அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....