வியாழன், 7 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – ஆனந்த பஜார் – உலகின் மிகப்பெரிய உணவகம்…


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 28

பகுதி 27 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


மஹாபிரசாதம் - மண்பாண்டங்களில்....
பூரி ஜகன்னாத் மந்திர்....

கடந்த மூன்று பகுதிகளாக, பூரி ஜகன்னாத் கோவில் பற்றிய சில சிறப்புத் தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. கோவிலுக்குச் சென்றபோது எங்களுக்குக் கிடைத்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் சற்றே விவரமாக எழுதி இருக்கிறேன் என்றாலும் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். கோவிலில் தரிசனம் செய்து கொண்ட பிறகு கோவிலின் ஒரு பகுதியாக, வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கும் ஆனந்த பஜார் எனும் இடத்திற்குச் சென்றோம். இந்த ஆனந்த பஜார் எனும் பகுதியை உலகின் மிகப்பெரிய உணவகம் என்று அழைக்கிறார்கள்! ஏன் அப்படி? ஒரு லட்சம் பேர் வந்தாலும் இங்கே உணவு கிடைக்கும் – அதுவும் வந்த சில மணி நேரங்களில்! கோவில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பலர், தங்கள் வீட்டு விசேஷங்களுக்குக் கோவிலிலிருந்தே உணவு பெற்றுக்கொள்ள முடியும் என்றால் பாருங்களேன்.

இந்த இடத்திற்குச் சென்ற போது எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைச் சொல்வதற்கு முன்னர் ஒரு சில விஷயங்கள்…. விஷ்ணு பகவானின் கோவில்கள் அமைந்திருக்கும் தலங்களிலேயே அவருக்கும் மிகவும் பிடித்தமானது என்று நான்கு தலங்களைச் சொல்கிறார்கள். அவை முறையே பூரி, ராமேஸ்வரம், த்வாரகா மற்றும் பத்ரிநாத்! விஷ்ணு பகவான் ஒவ்வொரு நாளும் ராமேஸ்வரத்தில் குளித்து, பத்ரிநாத்-தில் தியானம் செய்து, பூரியில் உணவு உண்டு, த்வாரகாவில் ஓய்வு எடுப்பதாக ஒரு கதை. அதனால் பூரி ஜகன்னாத் கோவிலில் உணவு உண்பது என்பது மிகவும் விசேஷமான ஒரு விஷயம். எல்லா கோவில்களிலும் கிடைப்பது பிரசாதம் என்றால், இங்கே கிடைப்பது “மஹா பிரசாதம்!” விஷ்ணு பகவானுக்குப் பிடித்த, அவருக்கு படைக்கப்பட்ட உணவு நமக்கும் கிடைக்கிறது என்பதால் மஹா பிரசாதம் விசேஷமாகக் கருதப் படுகிறது.

கோவிலின் பிரசாதம் தயாராகும் இடத்திற்குக் கூட எங்களை, எங்களுடன் வந்த சிப்பந்தி அழைத்துச் சென்றார். தினம் தினம் ஒரு லட்சம் பேர் வரை இங்கே உணவு சமைக்க முடியும். சமையல் முழுவதும் விறகு அடுப்புகளில் மட்டுமே சமைக்கப்படுகின்றன. போலவே சமைப்பதற்கு மண் பாண்டங்கள் மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள். பானைகளில் சமைத்து, அதே பானைகளில் எடுத்துச் செல்லப்பட்டு, ஜகன்னாத் மற்றும் பிமலா தேவி ஆகியோருக்குப் படைத்த பிறகு ஆனந்த பஜார் பகுதிக்கு கொண்டுவரப்படும் அந்த உணவை பக்தர்கள் வாங்கி உண்கிறார்கள். கோவிலுக்குள் எடுத்துச் செல்லும்போது சாதாரணமாக இருக்கும் அந்த உணவு, இறைவனுக்குப் படைத்தபிறகு வெளியே கொண்டு வருகையில், உணவின் நல்ல நறுமணம் உங்கள் நாசிகளை அடையும் வண்ணம் இருக்குமாம்.

அரிசி சாதம், பருப்பு, காய்கறிகள், இனிப்புகள் என அனைத்தும் சேர்த்து நாம் வாங்கிக் கொள்ளலாம். பத்து இருபது ரூபாய் முதல், எவ்வளவு உணவு வேண்டுமோ அதற்குத் தகுந்த கட்டணம் கட்டினால் சமைத்த மண் பானையினை உடைத்து அதிலேயே தருகிறார்கள். இங்கே இருப்பவர்கள் அதில் சாப்பிட்டாலும் உடைந்த மண்பானையில் சாப்பிடத் தெரியாதவர்களின் வசதிக்காக, தையல் இலைகளும் கிடைக்கின்றன. நாங்களும் கொஞ்சம் உணவு வாங்கி அங்கேயே இருக்கும் மேடையில் அமர்ந்து சாப்பிட்டோம். ஆண்டவனின் மஹாபிரசாதம் எங்களுக்கும் கிடைத்தது. ஒரு சில பக்தர்கள் மற்றவர்களுக்கு உணவளிப்பதாக வேண்டிக்கொண்டு இங்கே இருக்கும் சிலருக்கு உணவளிக்கிறார்கள். நாங்கள் அங்கே இருந்தபோது ஒரு பெண்மணி அவரது குடும்பத்தினருடன் வந்து 21 பேருக்கு உணவளித்தார்.


 வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் மஹாபிரசாதம் - மண்பாண்டங்களில்....
பூரி ஜகன்னாத் மந்திர்....

உணவைத் தவிர இனிப்பு வகைகளும் இங்கே கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கிக் கொண்டு உங்களுக்குத் தெரிந்தவர்களுக்காக எடுத்துச் செல்லலாம். சில நாட்கள் வரை கெட்டுப்போகாத மைதாவினால் தயாரிக்கப்படும் காஜா எனப்படும் இனிப்பு இங்கே மிகவும் பிரபலம் என்று சிப்பந்தி சொல்லி, எங்களுக்கும் கொஞ்சம் வாங்கிக் கொடுத்தார். உணவு உண்ட பிறகு, கோவிலின் மற்ற பகுதிகளில் இருக்கும் சிற்பங்களையும் பார்த்து ரசித்த பிறகு கோவிலிலிருந்து வெளியே வந்தோம். எங்களுடன் வந்த சிப்பந்திக்கும் கொஞ்சம் அன்பளிப்பைத் தந்து, அவரை அனுப்பி வைத்த காவல் அதிகாரிக்கும் நன்றி கூறி கோவிலிலிருந்து புறப்பட்டோம்.  கோவிலிலிருந்து மண் பானைகளில் சமைக்கப்படும் மஹா பிரசாதம், எங்களுக்கு முன்னர் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தது! யார் வீட்டிலோ ஏதோ விழா! விழாவிற்கு வரும் அனைவருக்கும் மஹாபிரசாதம்!

இனிய நினைவுகளோடு அங்கிருந்து புறப்பட்டோம். இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பூரி ஜகன்னாத் கோவிலுக்குச் செல்கிறோம் என்று சொன்னவுடன், அங்கே சென்று வந்தவர்கள் கோவில் தரிசனம் பற்றிச் சொல்வதை விட அங்கே பண்டாக்கள் தரும் தொல்லைகள் பற்றியே அதிகம் சொல்வது வழக்கமாக இருக்கிறது. ”விரைவாக தரிசனம் செய்து வைக்கிறேன், கோவிலில் ஜகன்னாத் மஹாபிரசாதம் வாங்கித் தருகிறேன், நூறு பேருக்கு சாப்பாடு போட்டால் புண்ணியம், என நிறைய பேர் நம்மைச் சுற்றிக்கொள்வார்கள்” என்றெல்லாம் சொல்லியே அனுப்புகிறார்கள். அவர்களும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இங்கே மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இப்படித்தான். வெளியிலிருந்து வருபவர்களைக் குறிவைத்து இப்படியான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுக்குப் பிரச்சனை இல்லை என்றாலும், மற்றவர்களிடம் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் எனப் பார்க்க முடிந்தது.

பண்டாக்கள் பிரச்சனை, சுத்தமின்மை என சில தொல்லைகள் இருந்தாலும், நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய இடம் இந்த பூரி – கூடவே மற்ற இரண்டு தங்க முக்கோண நகரங்களான கோனார்க் மற்றும் புவனேஷ்வர். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று வரலாம். பூரி ஜகன்னாத் கோவில் அனுபவங்களுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட நாங்கள் எங்கே சென்றோம் என்பதை வரும் பகுதியில் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடங்களில் ஒன்று என்று தோன்றுகிறது. மஹா பிரசாதம் ஒரு ஆச்சர்யம். இப்படித் திறந்து வைத்து வண்டியில் வைத்து எடுத்துச் சென்றால் காக்காய் கொத்தி விடாதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காக்காய் கொத்தி விடாதோ..... //

      காக்காய்க்கும் மஹாபிரசாதம் கிடைக்கட்டுமே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பல கோயில்களில் இதுபோன்றதொல்லைகள் இருக்கின்றன
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  4. அருமையான அழகான படங்கள், செய்திகள் .

    //நான்கு தலங்களைச் சொல்கிறார்கள். அவை முறையே பூரி, ராமேஸ்வரம், த்வாரகா மற்றும் பத்ரிநாத்! விஷ்ணு பகவான் ஒவ்வொரு நாளும் ராமேஸ்வரத்தில் குளித்து, பத்ரிநாத்-தில் தியானம் செய்து, பூரியில் உணவு உண்டு, த்வாரகாவில் ஓய்வு எடுப்பதாக ஒரு கதை.//

    பூரி மட்டும் பார்க்க வில்லை பார்த்துவிட வேண்டும் ஆவல் ஏற்பட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூரி மட்டும்... முடிந்த போது பாருங்கள் அம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  5. தங்கள் பதிவைப் படித்ததும் ‘மஹா பிரசாதம்’ சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. விரிவாக விளக்கியமைக்கு நன்றி! இந்த பண்டாக்களின் தொல்லை கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலிலும் உண்டு.

    அடுத்து நீங்கள் சென்ற இடம் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்டாக்களின் தொல்லை - நிறைய இடங்களில் உண்டு ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கு இன்னும் செல்லவில்லை உங்கள் பதிவு ஆர்வத்தை தூண்டுகிறது உடல் ஒத்துழைக்குமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் சென்று வாருங்கள் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  8. அருமை! பல அரிய தகவல்களை அறிய தருகிறீர்கள். வாழ்க. பூரி ஜகந்நாதர் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. இப்படி ஒரு பஜார் நம்ம ஊரில் இல்லையே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி இல்லை என்றாலும் நம் ஊரில் இருப்பவை இங்கே இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  11. மட்பாத்திரத்தில் பிரசாதம் பார்க்க மிக அழகு.. காஜா இனிப்பு எப்படி இருந்தது..?.. மனதுக்கு மகிழ்வான சுற்றுலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க நன்றாக இருக்கிறது! சுவை ஓகே ரகம்.

      காஜா நன்றாகவே இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  12. பார்க்க நன்றாக இருக்கிறது சாப்பாட்டு அலங்காரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையும் ஓகே ரகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  13. கோவிலின் சுற்றுப்புற அசுத்தம் மிகும் அருவருப்பூட்டியது.. மறக்கவே முடியவில்லை. பூரி என்றாலே நினைவுக்கு வருவது அசுத்தமும் அடாவடிப் பண்டாக்களும் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தம் - இது அனைவரும் பராமரிக்க வேண்டிய ஒன்று! ஆனால் அடுத்தவர்கள் செய்வார்கள் என தொடர்ந்து அசுத்தப் படுத்திக்கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் பல பகுதிகள் அசுத்தம் தான்.... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  14. இந்துக்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் கோவில் அசுத்தங்களைக் கவனிக்கக் கூடாதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்.... :) அரசு, பொது மக்கள் என அனைவருக்கும் கடமை உண்டு. “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டுமே! இங்கே மனித மனங்களும் அழுக்கு நிறைந்தவையாக இருக்கிறதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  15. ஒரிசா பார்க்கவேண்டும் என்று லிஸ்டில் உண்டு....அதில் பூரி, கோனார்க் உண்டு..கடற்கரையும்...உண்டு...

    பூரி கோயில் பற்றி இங்கு சொல்லப்பட்ட அழுக்கு, பண்டாக்கள் பற்றி உறவினர்களும் சொன்னதுண்டு......நம் மக்கள் எங்கு சென்றாலும் அசுத்தப்படுத்தினால் என்ன செய்ய....மக்களுக்கும் பொறுப்பும், விழிப்புணர்வும் வேண்டும்....நல்ல தகவல்கள்..மகாபிரசாதம் கண்ணை பறிக்கிறது.ஆனால் சுவை நன்றாக இல்லை என்றுதான் உறவினர்களும் சொன்னார்கள்..ஜி

    தொடர்கிறோம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவை - ஓகே ரகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  16. நல்ல விளக்கமான பதிவுகள். துளசிதளத்தில் 'பூரி' வரும்போது உங்களிடமிருந்தே சிலபல விளக்கங்களை எடுத்துக்கப்போறேன். முன்கூட்டிய அனுமதிக்கு அப்ளை பண்ணி இருக்கேன். பார்த்துக்குங்க.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் துளசி டீச்சர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....